மெய்யறம் (அரசியல்)
61. அரசு நலம்[தொகு]
- 601. அரசுயிர் கட்கு சிரசென நிற்பது.
- அரசாங்கம் குடிமக்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
- 602. அதனலன் மாணவ ரருநல னாளுதல்;
- அதன் சிறப்பு மாணவர்களின் நலனைப் பேணுவதில் உள்ளது.
- 603. இல்வாழ் வியலெலா மியைந்துநன் கொழுகல்;
- இல்லறத்தாரின் தேவைகளைப் புரிந்து நன்முறைப்படி ஆட்சி செய்தல் வேண்டும்.
- 604. சுற்றம் பெருக்கல் சூழ்ச்சி புரிதல்;
- சுற்றத்தாரை அதிகரித்தும் அறிஞரோடு ஆலோசித்தும் ஆட்சி செய்தல் வேண்டும்.
- 605. தெரிந்து தெளிதல் செய்வினை யாளுதல்;
- ஒருவன் குணத்தை நன்கு ஆராய்ந்து அவனை நம்ப வேண்டும். ஒரு செயலைச் செய்வதினால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து அதனைச் செய்ய வேண்டும்.
- 606. ஒற்றுரை நூலமைச் சொருங்குட னாளுதல்;
- ஒற்றர்கள், புகழ் பெற்ற நூல்கள், அமைச்சர்கள் கூறும் நல்ல ஆலோசனைகள் இவற்றை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தல் வேண்டும்.
- 607. பெரியமன் னரைச்சார்ந் தரியவை பெறுதல்;
- வலிமை வாய்ந்த அரசரைச் சென்றடைந்து சிறந்தவற்றைப் பெறுதல் வேண்டும்.
- 608. நாடரண் பொருள்படை நட்பினி தாளுதல்;
- ஓர் அரசன் நாடு, கோட்டை, செல்வம், படை, நட்பு, இன்சொல் இவற்றைக் கொண்டு ஆட்சி செய்தல் வேண்டும்.
- 609. வினைத்திற னனைத்து நினைத்தறிந் தாற்றல்;
- செயல்களைச் செய்யும் அனைத்துத் திறமையையும் எண்ணி அதை அறிந்து செயல்பட வேண்டும்.
- 610. முறைசெய் தறம்புரிந் திறையென நிற்றல்.
- அறநெறிப்படி நீதி தவறாது ஆட்சி செய்யும் அரசன் கடவுள் எனப் போற்றப்படுவான்.
62. சுற்றம் பெருக்கல்[தொகு]
- 611. சுற்றமென் பதுதனைச் சூழ விருப்பது.
- சுற்றத்தினர் என்பவர் நம்முடன் இருக்கும் உறவினர் ஆவர்.
- 612. சுற்றமு மறிவுபோ லற்றங் காக்கும்.
- அறிவு நம்மைத் துன்பத்திலிருந்து காப்பது போல சுற்றத்தினரும் காப்பர்.
- 613. சுற்ற மின்மை யற்றமுறு விக்கும்.
- சுற்றத்தினர் இல்லாமை அழிவை ஏற்படுத்தும்.
- 614. சுற்ற முடையார் சூழ்வன முடிப்பர்.
- சுற்றத்தினரை உடையவர் நினைத்ததைச் செய்து முடிப்பார்.
- 615. சுற்ற மிலார்க்கு சூழ்ச்சியே யில்லை.
- சுற்றத்தினர் இல்லாதவர்களுக்கு மற்றவர்களுடன் ஆலோசிக்கும் வாய்ப்பில்லை.
- 616. குற்றம் விடுதலாற் சுற்றுறுஞ் சுற்றம்.
- மற்றவர்களின் குறைகளை எண்ணாதவர்கள் சுற்றத்தினர் சூழ இருப்பர்.
- 617. கொடையா லின்சொலாற் கூடிடுஞ் சுற்றம்.
- கொடுத்தலினாலும் இன்சொலினாலும் சுற்றத்தினர் அதிகரிப்பர்.
- 618. வாய்மையாற் பொறுமையாற் றூய்மையாஞ் சுற்றம்.
- உண்மை, பொறுமை மற்றும் ஆசையின்மையால் சுற்றத்தினர் பெருகுவர்.
- 619. கொள்ளல் கொடுத்தலாற் குலாவுறுஞ் சுற்றம்.
- பெண் கொடுப்பதாலும் பெண் எடுப்பதாலும் சுற்றத்தினர் மகிழ்வர்.
- 620. உணர்ச்சி பழகலாற் லுதவுஞ் சுற்றம்.
- ஒற்றுமையாக இருப்பதால் சுற்றத்தினர் நமக்கு உதவுவர்.
63. கண்ணோட்டம்[தொகு]
- 621. கண்ணோட்டஞ் சுற்றமேற் கண்ணோடி வீழ்தல்.
- கண்ணோட்டம் என்பது சுற்றத்தினரிடம் காட்டும் பரிவு ஆகும்.
- 622. சுற்றங் கண்டுழிக் குற்ற மறத்தல்;
- சுற்றத்தினரைக் கண்ட உடன் அவர்கள் குற்றங்களை மறந்துவிட வேண்டும்.
- 623. சுற்றங் கண்டுழி யுற்றன செய்தல்.
- சுற்றத்தினரைக் கண்ட உடன் அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும்.
- 624. கண்ணிற் கழகு கண்ணோட்ட மென்க.
- கண்ணிற்கு அழகு பரிவான பார்வை ஆகும்.
- 625.உளத்தொடு சேர்ந்தகண் ணோட்ட முயர்ந்தது.
- முழு மனதுடன் காட்டும் பரிவு உயர்ந்த்தது ஆகும்.
- 626. தீவினை யாளர்பாற் றீதுகண் ணோட்டம்.
- தீயவர்களிடம் காட்டும் பரிவு தீமையைத் தரும்.
- 627. கண்டுநஞ் சுணல்கரை கடந்தகண் ணோட்டம்.
- தமக்குத் தீங்கு செய்பவரையும் பொறுத்துக் கொள்வது அளவு கடந்த பரிவு ஆகும்.
- 628. கருமம் கெடாவகை கண்ணோடல் தக்கது.
- தமது தொழில் பாதிக்காத விததில் பரிவு காட்ட வேண்டும்.
- 629. சிறுவர்பா லென்றுஞ் சிறிதுகண் ணோடுக.
- சிறுவர்களிடம் எப்பொழுதும் பரிவுடன் இருக்க வேண்டும்.
- 630. முறைசெயும் பொழுததை முற்றுமே விடுக.
- நீதியை நிலை நாட்டும் போது பரிவு காட்டுவதை முற்றிலுமாக விட்டுவிட வேண்டும்.
64. சூழ்ச்சி புரிதல்[தொகு]
- 631. இயற்றுவ தெல்லா மெண்ணியே யியற்றுக.
- எச்செயலையும் ஆராய்ந்தே செய்ய வேண்டும்.
- 632. எண்ணா தியற்றுதல் கண்ணிலார் நடையாம்
- ஆராயாமல் ஒரு செயலைச் செய்வது கண்ணில்லாமல் நடப்பதற்குச் சமம்.
- 633. இயற்றத் தொடங்கி யெண்ணுத லிழுக்காம்.
- செய்யத் தொடங்கிய பிறகு ஆராய்வது குற்றம் ஆகும்.
- 634. இயற்றுமுன் செயலி னியல்பினை யாய்க.
- செய்யத் தொடங்குவதற்கு முன்பு அச்செயலின் இயல்பினை ஆராய வேண்டும்.
- 635. அறமெனிற் சுற்றுரு மறிஞரோ டெண்ணுக.
- செய்யத் தகுந்த நற்செயல் எனில் அது குறித்து அறிவுடையவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
- 636. வரவு செலவு வரும்பய னெண்ணுக.
- அச்செயலினால் வரக்கூடிய வருமானம், அதற்குச் செய்ய வேண்டிய செலவு மற்றும் பயன் இவை குறித்து ஆராய வேண்டும்.
- 637. செய்வலி செய்வழி செய்பவர்க் கருதுக.
- செய்வதற்குத் தேவையான வலிமை, செய்யும் வழிமுறைகள், செய்பவர்களின் திறமை இவை குறித்தும் ஆராய வேண்டும்.
- 638. வரவிற் செலவு வளருமேல் விடுக.
- வருமானத்தை விட செலவு அதிகம் எனில் அச்செயலைச் செய்யக் கூடாது.
- 639. பெரும்பயன் றராதெனிற் பேணா தொழிக.
- சிறந்த பயன் கிட்டாது என்றாலும் அச்செயலைச் செய்யக் கூடாது.
- 640. செய்வலி நெறியாள் சீரின்றேல் விடல்.
- செய்வதற்குத் தேவையான வலிமை, செய்யும் வழிமுறைகள், செய்பவர்கள் ஆகியவை சிறப்பாக இல்லாவிடில் அச்செயலைச் செய்யக்கூடாது
65. தெரிந்து தெளிதல்[தொகு]
- 641. செயல்செய் வாரிய லுயர்குடிப் பிறப்பே;
- செயல் செய்வது உயர்குடியில் பிறந்தவர்களின் இயல்பு ஆகும்.
- 642. செம்மையே வாய்மையே தீவினை யின்மையே;
- நடு நிலைமை,நேர்மை, தீய செயல்கள் செய்யாமை ஆகியவை அவர்களின் குணங்கள் ஆகும்.
- 643. அறிவே யன்பே யழகே யாற்றலே;
- அறிவு, அன்பு, மேன்மை, ஆற்றல் ஆகியவையும் அவர்களின் குணங்கள் ஆகும்.
- 644. பண்பே பொறையே பணிவே யின்சொலே;
- நன்னெறி, பொறுமை, பணிவு, இனிமையான பேச்சு ஆகியவையும் அவர்களின் குணங்கள் ஆகும்.
- 645. மறவி நெடுநீர் மடிதுயி லிலாமையே;
- மறதி, காலம் தாழ்த்துதல், சோம்பல், உறக்கம் ஆகியவை அவர்களிடம் இருக்காது.
- 646. அவாஅ வின்மையே தவாவினை யுண்மையே;
- ஆசையின்மை, அறம், உண்மை ஆகியவை அவர்களிடம் இருக்கும்.
- 647. பொதுச்சிறப் பெனுமிரு மதிவளர் கல்வியே.
- அறிவை வளர்க்கக் கூடிய கல்வியான மொழி, கணிதம் மற்றும் பொருள் ஈட்டும் முறைகள் ஆகியவற்றை அறிந்திருப்பார்கள்
- 648. இவையெலா மியைந்துள வினமெலாந் தெறிக
- இக்குணங்களெல்லாம் பொருந்தியுள்ளவர்களை எல்லாம் கண்டறிய வேண்டும்.
- 649. அறம்பொரு ளின்புயி ரச்சத்தாற் றெளிக.
- அவர்களை அறம், பொருள், இன்பம், உயிர் பொருட்டால் அஞ்சும் அச்சம் இவை நான்கு வகையிலும் ஆராய்ந்து நம்ப வேண்டும்.
- 650. தெளியுமுன் கொண்டிடேல் தெளிந்தபி னையுறேல்.
- ஒருவனை ஆராயாமல் நம்புவதும் நம்பிய பிறகு சந்தேகப்படுவதும் கூடாது.
66.செய்வினை யாளுதல்[தொகு]
- 651. நன்றுதீ தெண்ணி நலம்புரிவா னாள்க.
- ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து நல்லது செய்பவனே செயலுக்கு உரியவன்.
- 652. வருவாய் பெருக்கி வளஞ்செய்வா னாள்க.
- பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து அவற்றால் வளம் ஏற்படுத்துபவனே செயலுக்கு உரியவன்.
- 653. ஊறுறா தாற்று முணர்வோனை யாள்க.
- செயல் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை அறிந்து நீக்குபவனே செயலுக்கு உரியவன்.
- 654. உறுமூ றொழிக்கு முரவோனை யாள்க.
- செயல் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை நீக்கும் வலிமை உடையவனே செயலுக்கு உரியவன்.
- 655. வினையினிற் றிரியா மெய்யனை யாள்க.
- தான் எடுத்துக் கொண்ட செயலிலிருந்து நீங்காமல் இருப்பவனேசெயலுக்கு உரியவன்.
- 656. இதையிதான் முடிப்பனென் றதையவன் பால்விடல்
- இந்தத் தொழிலை இக்காரணங்களால் இவன் முடிப்பான் என்று அறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
- 657. அதன்பி னவனையே யதற்குரிய னாக்குக.
- பிறகு அவனையே அத்தொழிலிற்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.
- 658. வினைக்கண் வனைசெயும் வீரனை யையுறேல்.
- எப்பொழுதும் தன் தொழிலில் முயற்சி உடையவரை சந்தேகப்படுதல் கூடாது.
- 659. செயல்செயும் பலரையுந் தினந்தொறு நாடுக.
- தொழில் செய்பவர்களை நாள்தோறும் கவனிக்க வேண்டும்.
- 660. செயன்முறை செய்தவன் சிந்தைகண் டாற்றல்.
- செயலைப் பற்றியும் செய்பவனைப் பற்றியும் அறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
67. ஒற் றாளுதல்[தொகு]
- 661. ஒற்றுவினை ஞர்பகை சுற்றமறைந் தறிவது;
- ஒற்றர் சுற்றத்தினர், பகைவர் என அனைவரையும் மறைந்திருந்து ஆராய்பவர் ஆவார்.
- 662. கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தறிவது;
- பார்த்தவர் சந்தேகப்படாத மாற்று உருவுடனும் அஞ்சாமலும் இருப்பவர் ஒற்றர்.
- 663. உறுப்பெலாஞ் சிதைப்பினு முகாஅமை வல்லது.
- உறுப்பெல்லம் சிதைத்தாலும் பார்த்ததை வெளியில் சொல்லாதவர் ஒற்றர்.
- 664. உலகெலா நிகழ்பவை யொற்றினா லறிக.
- எல்லா இடங்களிலும் நிகழ்பவற்றை ஒற்றர்களின் மூலம் அறிய வேண்டும்.
- 665. ஒற்றுரை சான்ற நூல் கொற்றவன் கண்களே.
- ஒற்றரின் கூற்றும் புகழ் பெற்ற நீதி நூல்களின் கருத்தும் அரசனின் கண்கள் ஆகும்.
- 666. ஒற்றிலார் கொற்றமும் வெற்றியு மிழப்பர்.
- ஒற்றர்கள் இல்லாத மன்னன் செல்வத்தையும் வெற்றியையும் இழப்பான்.
- 667. ஒற்றுரைத் ததனைவே ரொற்றினா லொற்றுக.
- ஓர் ஒற்றரின் கூற்றை மற்றொரு ஒற்றரின் கூற்றுடன் ஒப்பிட்டு உண்மை அறிய வேண்டும்.
- 668. ஒற்றுமூன் றொத்திடி னுண்மையென் றறிக.
- இவ்வாறு மூன்று ஒற்றர்கள் சொல்வது ஒன்றாக இருந்தால் உண்மை என்று அறிய வேண்டும்.
- 669. ஒற்றொற் றயிரா துணரா தாள்க.
- ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாமல் சந்தேகியாமல் ஆள வேண்டும்.
- 670. ஒற்றிற் கயலா ருணர்ந்திடா தீக.
- ஒற்றர்களுக்கு மற்றவர் அறியாத வண்ணம் பொருள் அளித்தல் வேண்டும்.
68. உரைநூ லாளுதல்[தொகு]
- 671. உரைநூல் புரைதவிர புகழ்சால் நூல்கள்.
- உரை நூல் என்பது குற்றமற்ற புகழ் பெற்ற நீதி நூல்களாகும்.
- 672. அழியாப் பொருள்களை யறைபவே புகழ்பெறும்.
- எந்நாளும் அழியாத பொருள்களைப் பற்றிக் கூறும் நூல்களே புகழ் பெறும்.
- 673. அவைமெய்ப் பொருளே யதிற்சே ரறனே.
- எந்நாளும் அழியாதவை உண்மை, பொருள் மற்றும் அதைச் சார்ந்த அறம் ஆகியவை ஆகும்.
- 674. பொருளிலா தறனிலை புணர்விலா தொழிவிலை.
- பொருளே அறத்திற்கு அடிப்படை. இல்வாழ்க்கையே வீடு பேற்றிற்கு அடிப்படை.
- 675. ஆதலா லவையு மழியாப் பொருள்களே.
- ஆதலால் இவையும் அழியாப் பொருள்களே.
- 676. அவ்வைம் பொருளிலு மடங்காப் பொருளில்லை;
- இந்த ஐந்து பிரிவுகளிலும் அடங்காத பொருளே இல்லை.
- 677. புது நூ லுடனே புகழ்பெற லரிது;
- புதிய நூல்கள் உடனே புகழ் பெறுவது கடினமான விஷயமாகும்.
- 678. ஆதலா லுரைநூ லவைசொலுந் தொன்னூல்.
- ஆதலால் உரை நூல்கள் என்பவை அழியாதப் பொருள்களைப் பற்றிக் கூறும் பழமையான நூல்கள் ஆகும்.
- 679. அவைபல மொழியிலு மமைந்துள மறைகள்;
- அவை பல மொழிகளிலும் உள்ள வேதங்களாகும்.
- 680. இனியநந் தமிழி னிலக்கிய மிலக்கணம்.
- இனிய நம் தமிழ் மொழியின் இலக்கிய இலக்கண நூல்கள் உரை நூல்கள் ஆகும்.
69. அமைச் சாளுதல்[தொகு]
- 681. அமைச்சர சிற்கினி தமைவன சொல்வது;
- அமைச்சர் அரசருக்கு இனிமையாக பொருத்தமானவற்றைச் சொல்ல வேண்டும்.
- 682. அரசுசொல் வனவு மமைத்துத் தருவது;
- அரசர் சொல்பவற்றையும் செய்து முடித்துத் தர வேண்டும்.
- 683. அரசின் செயற்கெலாஞ் சிரசென நிற்பது;
- அரசின் செயல்களுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பது அமைச்சர்.
- 684. அரசின் குடிக்கெலா மன்னையா நிற்பது;
- குடிமக்களுக்கு ஓர் அன்னையைப் போல் தேவை அறிந்து செயல்பட வேண்டும்.
- 685. அரசுயிர்த் துணையா வறனெலாஞ் செய்வது.
- அரசருக்குத் துணையாக இருந்து அறச் செயல்கள் செய்ய வேண்டும்.
- 686. அதனல மரசிய லனைத்துநன் காளுதல்;
- அமைச்சரின் சிறப்பு ஆட்சிக்குத் தேவையான அனைத்தையும் செய்து நன் கு ஆட்சி செய்வது ஆகும்.
- 687. நூலிய லுலகிய னுண்ணறி வுடைமை;
- நூலறிவும் உலகியல் நடை முறைகளும் நுட்பமாக அறிந்து இருக்க வேண்டும்.
- 688. காமமும் வெகுளியுங் கைக்கொளா தமைதல்.
- ஆசை, கோபம் ஆகியவை இருத்தல் கூடாது.
- 689. அமைச்சுபட் டியைப்போ லமைந்தறம் புரிக.
- பட்டி என்ற அமைச்சரைப் போல நீதி நெறிகளை அறிந்திருக்க வேண்டும்.
- 690. அரசுவிக் கிரமனி னன்புகொண் டாள்க.
- விக்கிரமாதிதன் என்ற அரசனைப் போல் அன்புடன் ஆட்சி செய்ய வேண்டும்.
70. அறிந்து சொல்லல்.[தொகு]
- 691. நாநல மழியா நலமென மொழிப.
- ஒருவனுக்கு நாவன்மை அழியாத சிறப்பைக் கொடுக்கும்.
- 692. ஆக்கமுங் கேடு மதின்வரு மென்ப.
- ஒருவனுக்கு நன்மையும் தீமையும் தம் சொற்களால் ஏற்படும்.
- 693. அறனும் பொருளு மதின்வரு மன்ற.
- நாவன்மை ஒருவனுக்கு அறத்தையும் பொருளையும் கொடுக்கும்.
- 694. அகிலநிற் பதுமஃ தமைதலா னன்றே.
- சொல்வன்மையால் உலகம் நிலைத்து நிற்கிறது.
- 695. சொல்லு மியலெலா மொல்லும் வகைசொலல்.
- சொல்லும் சொற்களைச் சொல்வதற்கு உரிய முறைகள் அனைத்தும் பொருந்தும்படி சொல்லுதல்
- 696. அவையறம் பொருடர வமைத்துச் சொல்லல்;
- சொல்லும் சொற்கள் அறத்தை விளக்குவதாகவும் பொருள் ஈட்ட உதவுவதாகவும் இருக்கும் படி சொல்லுதல்.
- 697. கேட்போர்க் கின்பங் கிளைக்கச் சொல்லல்;
- கேட்பவர்க்கு இன்பம் பெருகுமாறு சொல்லுதல்.
- 698. சுருங்கத் தொகுத்து விளங்கச் சொல்லல்;
- தாம் சொல்வதை குறைவான சொற்களினால் பிறர் அறியும்படி சொல்லுதல்
- 699. வரிசைப் படுத்தி மனங்கொளச் சொல்லல்;
- தாம் சொல்வதை வரிசைப்படுத்திக் கேட்பவர் மனதில் பதியும்படி சொல்லுதல்.
- 700. மறுக்கா விதத்து மாணுறச் சொல்லல்.
- தாம் சொல்வதைப் பிறர் மறுக்காத வகையில் சிறப்பாகச் சொல்லுதல்.
71. பண்பு செய்தல்[தொகு]
- 701. பாடறிந் தொழுகலே பண்பென மொழிப.
- பிறர் பெருமையை அறிந்து நடப்பதே பண்பு ஆகும்.
- 702. பண்பா லுலக முண்டெனும் பொதுமறை.
- பண்புடைமையால் உலகம் நிலைத்து நிற்கிறது என்று குறள் கூறுகிறது.
- 703. மக்களுட் பண்பிலார் மரமெனப் படுவர்.
- மக்களில் பண்பு இல்லாதவர் மரத்திற்கு ஒப்பானவர்.
- 704. பெரியார்க் கடங்கி யுரியவை வழங்குக.
- பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து கொடுக்க வேண்டியவற்றைக் கொடுக்க வேண்டும்.
- 705. சிறியரை யடக்கிச் செய்வன செய்க.
- சிறியவர்களை வழி நடத்திச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும்.
- 706. மெல்லியன் மகளிருண் மென்மைபா ராட்டுக.
- மென்மையான தன்மை உடையவர்களான பெண்களிடம் மென்மையாக நடக்க வேண்டும்.
- 707. நண்பருள் ளுவப்புற நண்ணிநின் றொழுகுக.
- நண்பர்களின் உள்ளம் மகிழ்ச்சியடையுமாறு அவர்களுடன் நெருங்கி இருக்க வேண்டும்.
- 708. பகைவருள் ளுட்கமே னகைபுரிந் தொழுகுக.
- பகைவர்களின் உள்ளம் நடுங்க வெளியில் மட்டும் சிரித்துப் பழக வேண்டும்.
- 709. சலவருட் சாலச் சலஞ்செய் தொழுகுக.
- வஞ்சகரிடம் மிகுந்த வஞ்சகத்துடன் பழக வேண்டும்.
- 710. பண்பர சின்பெலா மெண்பதத் தாலாம்.
- எளிதில் கண்டு பேசுவதற்கு ஏற்ற நிலையில் இருத்தலே பண்புடைமையின் இன்பம் ஆகும்.
72. பெரிய வரசரைச் சேர்தல்[தொகு]
- 711. பெரிய வரசர் பெரியநா டாள்பவர்;
- பேரரசர் என்பவர் பெரிய நாட்டை ஆள்பவர் ஆவார்.
- 712. சிறிய வரசர்பாற் றிறைநனி கொள்பவர்;
- சிற்றரசர்களிடம் அதிக அளவு கப்பம் பெறுபவர் ஆவார்.
- 713. எவ்வர சர்க்கு மிளையாத் திறத்தினர்;
- எல்லா அரசர்களையும் விட அதிக வலிமை உடையவர்.
- 714. திறனெலாம் பெருக்கி யறனெலாஞ் செய்பவர்;
- செல்வத்தைப் பெருக்கி அறச்செயல்கள் செய்பவர்.
- 715. மறஞ்செயு மரசரின் றிறஞ்சிதைத் தொழிப்பவர்.
- தீய செயல்கள் செய்யும் அரசர்களின் வலிமையைக் குறைப்பவர்.
- 716. பெரிய வரசர் பெரியார்க் கடுத்தவர்.
- பேரரசர் ஞானிகளுக்கு அடுத்ததாக மதிக்கத் தகுந்தவர்கள்.
- 717. அவரைச் சேர்தலா லரும்பெரு மாக்கமாம்.
- பேரரசரை அணுகினால் மிகச் சிறந்த செல்வத்தைப் பெறலாம்.
- 718. அமைச்சராய்ப் புலவரா யவரவை சேர்க.
- அமைச்சராகவோ புலவராகவோ அவரது அமைச்சரவையில் சேர வேண்டும்
- 719. அருவனைத் தலைவரா யவர்பாற்சேர்க.
- சிறந்த படைத் தலைவராக அவரிடத்தில் சேர வேண்டும்
- 720. அவருள கொளநடந் தரியவை பெறுக.
- அவர் மனம் திருப்தியடையும்படி நடந்து சிறந்தவற்றைப் பெற வேண்டும்.
73. அவர்பா லொழுகல்[தொகு]
- 721. அகலா தணுகா தனற்காய்வார் போல்க.
- நெருப்பில் குளிர் காய்பவர் போல் அரசரை விட்டு மிகவும் விலகாமலும் அரசரை மிகவும் நெருங்காமலும் இருக்க வேண்டும்.
- 722. அன்பொடு மெய்யொடு மடங்கிநின் றொழுக.
- அன்போடும் உண்மையோடும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
- 723. அவர்முன் செவிச்சொ லயனகை பொருந்தேல்.
- காதோடு காதாகப் பேசுவதையும் பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- 724. அவர்சொலி னலாலொன் ற்றிந்திட விரும்பேல்.
- அரசராகச் சொன்னாலன்றி எதையும் அறிய விரும்பக் கூடாது.
- 725. அவர்க்கா வனவு மமையங்கண்டியம்புக.
- அரசருக்குத் தேவையானவற்றை தகுந்த நேரம் பார்த்துக் கூற வேண்டும்.
- 726. அவர்விழை பவற்றை யகத்தினும் விழையேல்.
- அரசர் விரும்புபவற்றை உள்ளத்தினாலும் விரும்பக் கூடாது.
- 727. அவரை யுறாவகை யாங்கணு மொழுகுக.
- எந்த இடத்திலும் அரசர் சந்தேகப்படாத வண்ணம் நடக்க வேண்டும்.
- 728. இளைய ரினத்தின ரெனநினைந் திகழேல்.
- இளையவர் என்றும் உறவினர் என்றும் நினைத்து இகழக் கூடாது.
- 729. பழையவ ரெனினும் பண்பிலா தனசெயேல்.
- அரசர் தமது பழைய நண்பர் என்று நினைத்துத் தகாதவற்றைச் செய்யக் கூடாது.
- 730. தனக்குவேண் டுவவவர் சாற்றெனிற் சாற்றுக.
- தனக்கு வேண்டியவற்றை அவர் அனுமதித்தால் மட்டுமே கூற வேண்டும்.
74. குறிப்புணர் வுடைமை[தொகு]
- 731. குறிப்புணர் விரண்டு கூறா கும்மே.
- கூறாமல் குறிப்பால் உணர்வது இரண்டு விதமாக நடைபெறும்.
- 732.குறிப்பி னுணர்த்தலே குறிப்பி னுணர்தலே.
- அவை குறிப்பால் உணர்த்துவது மற்றும் குறிப்பினை உணர்வது ஆகியவை ஆகும்.
- 733.குறிப்பி னுணர்த்தல் கூறா துணர்த்தல்.
- குறிப்பால் உணர்த்துவது என்பது கூறாமலேயே புரிய வைப்பது ஆகும்
- 734.குறிப்பி னுணர்தல் கூறா துணர்தல்.
- குறிப்பினை உணர்வது என்பது கூறாமலேயே புரிந்து கொள்வது ஆகும்.
- 735.இவையர சமைச்சிற் கின்றியமை யாதவை.
- இவை அரசர் மற்றும் அமைச்சருக்கு இன்றியமையாத குணங்களாகும்.
- 736. அகதினி லுள்ளது முகத்தினிற் றெரியும்.
- மனதில் நினைப்பதை முகம் காட்டிவிடும்.
- 737. மொழியான் மறைப்பினு முகமதைக் காட்டும்.
- வாயால் கூறாமல் மறைத்தாலும் முகம் காட்டிவிடும்.
- 738. முதுவர் குறிப்பினான் மொழிகுவ ரறிகுவர்;
- அறிஞர்கள் குறிப்பினால் மற்றவர்கள் கூற விரும்பியவற்றை அறிவர்.
- 739. முகங்கண் களினான் மொழிகுவ ரறிகுவர்;
- முகம் மற்றும் கண்களினால் மற்றவர்கள் கூற விரும்பியவற்றை அறிவர்.
- 740. முன்சொல் குறிப்பினு மொழிகுவ ரறிகுவர்.
- முன்னால் சொல்லிய கருத்தின் மூலமும் மற்றவர்கள் கூற விரும்பியவற்றை அறிவர்.
75. அரியவை பெறுதல்[தொகு]
- 741. அரியவை நட்புநா டரண்பொருள் படையே.
- நண்பர்கள், நாடு, கோட்டை, பொருட் செல்வம், படை ஆகியவையே அரிய பொருட்கள் ஆகும்.
- 742அவையொருங் கெய்தின்வா யமிழ்தடைந் தற்றே.
- இவையனைத்தையும் அடைவது அமிழ்த்தை அடைவது போன்று இன்பம் தரக் கூடியது ஆகும்.
- 743. ஒன்றெய் தினும்பிற வுண்டா மெளிதே.
- இவற்றில் ஒன்றை அடைந்தால் மற்றவற்றை அடைவது எளிது ஆகும்.
- 744. ஒன்று மிலாது நன்றுற லரிது.
- இவை ஒன்றுமில்லாமல் நன்மை அடைவது கடினம் ஆகும்.
- 745. அவைபெரு மன்னர்க் கரியன வல்ல.
- பேரரசருக்கு இவை அரிய பொருட்கள் அல்ல.
- 746. அவருளங் கொளச்சொலி னவரவை யளிப்பர்.
- அவரது மனதை கவரும்படி கூறினால் அவர் இவற்றை அளிப்பார்.
- 747 அவரையோர் தந்தையா வறிந்திட வுடன்படல்;
- அவரைத் தந்தையாக எண்ண உடன்படவேண்டும்.
- 748. அவர்பின் வேண்டுவ ளித்திட வுடன்படல்;
- அவருக்குத் தேவையானவற்றை அளித்திட உடன்படவேண்டும்.
- 749. அவரது பகையை யழித்திட வுடன்படல்;
- அவரது பகைவர்களை அழித்திட உடன்படவேண்டும்.
- 750. பிறவுமொத் தியைவன பெற்றெலாம் பெருக்குக.
- பிறகு பொருத்தமானவற்றை எல்லாம் பெற்று அவற்றைப் பெருக்க வேண்டும்.
76. நாடு[தொகு]
- 751. நாடு நாடுவ நல்குநா னிலத்தது.
- நாடு என்பது நான்கு வகையான நிலங்களை உடையதாகும்.
- 752. மலைகாடு வயல்கடல் மருவிய நானிலம்.
- மலைகள், காடுகள், வயல்கள், கடல் இவை நான்கும் அடங்கியதே நானிலம் ஆகும்.
- 753. அவை குறிஞ்சி முல்லை மருத நெய்தல்.
- மலைப்பகுதி குறிஞ்சி எனவும்,காட்டுப்பகுதி முல்லை எனவும், வயல் பகுதி மருதம் எனவும், கடல் பகுதி நெய்தல் எனவும் அழைக்கப்படும்.
- 754. அவைபல வுயிருணா மரமுதற் றாங்கும்.
- அவை பல வகையான உயிரினங்கள், உணவுப் பொருட்கள், மரங்கள் முதலியவற்றால் நிறைந்திருக்கும்.
- 755. ஒருமொழி வழங்குவ தொருதனி நாடு.
- ஒரு மொழி பேசும் பகுதி ஒரு தனி நாடாகும்.
- 756. ஒருபெருங் கண்டத் துறுவவக நாடு.
- ஒரு பெரிய கண்டத்தினுள் உள்ளவை உள்நாடுகளாகும்.
- 757. பிறபெருங் கண்டத் துறுவபுற நாடு.
- மற்ற கண்டத்திலுள்ளவை அயல் நாடுகளாகும்.
- 758. பெருங்கடன் மலையாற் பிரிவது கண்டம்.
- பெரிய கடற்பரப்பாலோ மலைப்பகுதியாலோ பிரிக்கப்படும் நிலப்பரப்பு வெவ்வேறு கண்டங்களாகும்.
- 759. கடலுந் தீவுமயற் கண்டமொடு சேரும்.
- கடலும், தீவும் பக்கத்தில் உள்ள கண்டத்தின் பகுதிகளாகக் கருதப்படும்.
- 760. பலபெருங் கண்டமு முலகெனப் படுமே.
- பல பெரிய கண்டங்கள் சேர்ந்த்ததே உலகம் ஆகும்.
77. நாட்டுச் சிறப்பு[தொகு]
- 761. நாட்டுச் சிறப்புநல் வளன்பல வமைதல்;
- ஒரு நாட்டின் சிறப்பு என்பது அந்நாடு பல வளங்களால் நிறைந்து இருப்பது ஆகும்
- 762. உயிகளு முணாக்களு மொக்க நிறைதல்;
- அந்நாட்டில் உயிர்களும் அவற்றிற்குத் தேவையான உணவும் சரியான அளவில் நிறைந்து இருப்பதாகும்.
- 763. நிலநதி மலைகட னலநிதம் வளர்தல்;
- நிலம், ஆறு, மலை, கடல் இவற்றின் பயன்கள் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும்.
- 764. அரும்பொருள் பெரும்பொரு ளாலய மிகுதல்;
- அரிய பொருட்களாலும் பொன், முத்து போன்ற மதிப்பு மிக்க பொருட்களாலும் நாடு நிறைந்து இருக்கவேண்டும்.
- 765. அரணு மரசு மமைந்துநடு நிற்றல்;
- நாடு சுற்றிலும் அரண் சூழ நடுவில் இருக்க வேண்டும்.
- 766. உறுபசி யரும்பிணி செறுபகை யிலாமை;
- நாடு மிகுந்த பசியும். நீங்காத நோயும், அழிக்கும் பகையும் இல்லாமல் இருக்க வேண்டும்.
- 767. செல்வமு மின்பமுஞ் சீரும் பெருக்கல்;
- நாட்டின் செல்வமும், இன்பமும், புகழும் பெருக வேண்டும்.
- 768. ஒழுக்கமுங் கல்வியு முயர்நிலை நிற்றல்;
- நாட்டில் ஒழுக்கமும் கல்வியும் உயந்தநிலையை அடைய வேண்டும்.
- 769. திறந்தகை வாய்மை யறந்தவம் வளர்தல்;
- நாட்டில் பெருந்தன்மை, நேர்மை, அறம், தவம் ஆகியவை அதிகரிக்க வேண்டும்.
- 770. அருளுமெய் யறிவு மமைந்து பரவல்.
- நாட்டில் கருணையும், கடவுள் ஞானமும் நிரம்பியிருக்க வேண்டும்.
78. அரண்[தொகு]
- 771. அரணுயிர் பொருள்களை யளிக்குமோர் காப்பு.
- அரண் என்பது உயிர்களையும் பொருள்களையும் காக்கக் கூடிய ஒரு வேலி ஆகும்.
- 772. இயற்கையுஞ் செயற்கையு மியைந்தர ணாகும்.
- இயற்கையாக உள்ளதும் மனிதனால் கட்டப்பட்டதும் இணைந்து அரண் ஆகிறது.
- 773. அரண்புற வரணக வரணென விரண்டு.
- அரண் புறவரண், அகவரண் என இரு வகைப்படும்.
- 774. புறவரண் புறநா டுறாவகை காப்பது.
- புறவரண் அயல் நாடுகளால் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பது ஆகும்.
- 775. அகவர ணரசுயி ரரும்பொருள் காப்பது.
- அகவரண் இராச்சியம், உயிரினங்கள், செல்வம் ஆகியவற்றைக் காப்பது ஆகும்.
- 776. கண்டத்தைச் சூழ்ந்துள கடனீர் புறவரண்.
- நாட்டினைச் சுற்றியுள்ள கடல் ஒரு புறவரண் ஆகும்.
- 777. அதனை யடுத்துள வருநிலம் புறவரண்.
- பகைவரைக் கொல்லக் கூடிய கருவிகள் கொண்டுள்ள நிலம் ஒரு புறவரண் ஆகும்.
- 778. நிலத்தை யடுத்துள மலைத்தொடர் புறவரண்.
- மலைத்தொடர் ஒரு புறவரண் ஆகும்.
- 779. மலையை யடுத்துள மரக்காடு புறவரண்.
- மரங்கள் நிறைந்த காடு ஒரு புறவரண் ஆகும்.
- 780. நாட்டகத் தமையுமிந் நான்கு மகவரண்.
- நாட்டினுள் இந்நான்கும் அமைந்தால் அது அகவரண் ஆகும்.
79. அர ணமைத்தல்[தொகு]
- 781. அரணிலார்க் கரசிலை யரசிலார்க் கரணிலை.
- அரண் நன்கு அமையாவிடில் நாடு பறி போய்விடும். சொந்த நாடு இல்லாவிடில் பாதுகாப்பில்லை.
- 782. அரணன் கமைந்திடி னரசெலாங் கொள்ளும்.
- அரண் நன்கு அமைந்துவிட்டால் நாடு எல்லா செல்வங்களும் பெற்று விளங்கும்.
- 783. அரணன் கமைத்தலோ ரரும்பெருஞ் செயலே.
- அரணை நன்கு அமைப்பது என்பது அரிய, பெரிய செயல் ஆகும்.
- 784. அரணெலா முரியரா லமைத்திடல் வேண்டும்.
- அரண் திறமை உடையவர்களால் அமைக்கப்பட வேண்டும்.
- 785. புறவர ணான்கையும் பூரண மாக்குக.
- புறவரண்கள் நான்கையும் முழுமை பெறச் செய்ய வேண்டும்.
- 786. நாட்டி லகவர ணலம்பெற வியற்றுக.
- அகவரண்கள் சிறப்பாக விளங்கும்படி செய்ய வேண்டும்.
- 787. அவற்று ளகழ்மதி லரசில மாக்குக.
- அவற்றுள் அகழ், மதில் மற்றும் அரண்மனை ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.
- 788. புறவக நெறிகளைத் திறனுடன் பொருத்துக.
- வெளிப்புற வழிகளையும் சுரங்க வழிகளையும் திறமையுடன் பொருத்த வேண்டும்.
- 789. அவைகணத் தடைக்கவும் திறக்கவும் வேண்டும்.
- அவை நினைத்த உடன் மூடவும் திறக்கவும் வேண்டும்.
- 790. நெறியுள விடனெலாம் பொறிகளை நிரப்புக.
- வாய்ப்புகள் உள்ள இடத்தில் எல்லாம் கொல்லக் கூடிய கருவிகளை அமைக்க வேண்டும்.
80. அர ணளித்தல்[தொகு]
- 791. அரண்படை யளிக்குமஃ தளிப்பது படையே.
- அரண் படையைக் காக்கும். அதைக் காப்பது படை ஆகும்.
- 792. நீரி லரும்படை நெடுங்கல நிறுத்துக.
- சிறந்த படைக்கப்பல்களை நீரில் நிறுத்த வேண்டும்.
- 793. நிலத்தி லருந்தொழில் வலப்படை நிரப்புக.
- மேன்மையான திறமையான வலிமையான படைகளை நிலத்தில் நிரப்புதல் வேண்டும்.
- 794. மலைமதில் களிலரு வினைப்படை நாட்டுக.
- மலைகளிலும் மதில்களிலும் தொழில் திறமை மிக்க படைகளை நிறுத்த வேண்டும்.
- 795. காட்டுட் பகைகொலுங் கரவெலா மாக்குக.
- காட்டினுள் பகைவர்களைக் கொல்லக் கூடிய படுகுழிகளை ஏற்படுத்த வேண்டும்.
- 796. அரணுட் புறனெலா மாம்விளை வாக்குக.
- அரணின் உட்புறத்தில் தேவையான உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டும்.
- 797. உடைபடைக் கலமெலாந் தடைவரா தியற்றுக.
- அழிக்கக் கூடிய படைக்கருவிகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்தல் வேண்டும்.
- 798. அவரவர் வசிப்புக் காமில மாக்குக.
- அந்தந்த படை வீரர்கள் வசிப்பதற்கு ஏற்ற இல்லங்கள் உருவாக்க வேண்டும்.
- 799. அகழ்மதில் சூழிலத் தரசினம் வாழ்க.
- அகழ், மதில் இவை சூழ்ந்த அரண்மனையில் அரச குடும்பத்தினர் வாழ வேண்டும்.
- 800. அகவரண் களையர சனுதினங் காண்க.
- உட்புற அரண்களை அரசர் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.
81. பொருள்[தொகு]
- 801. விற்கத் தக்க விலையுடை யதுபொருள்.
- விற்கப்படக் கூடியதும் விலை மதிப்பு உடையதும் பொருள் எனப்படும்.
- 802. பொருளின் பறம்புகழ் பொருந்திடச் செய்யும்.
- பொருள் இன்பம், அறம் மற்றும் புகழ் இவற்றை அடையும்படி செய்யும்.
- 803. பயனழ கருமையா லுயர்வஃ தடையும்.
- பொருளின் மதிப்பு அதன் பயனாலும் அழகாலும் பெருமையாலும் அதிகரிக்கும்.
- 804. விலையிடம் பொழுதால் வேறுபா டுற்றிடும்.
- பொருளின் விலை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறும்.
- 805. பொருண்மண் முதனாற் பூதங்கள் பிராணிகள்;
- பொருள் என்பது மண் முதலிய நான்கு பூதங்கள் (மண், நீர், நெருப்பு, காற்று), விலங்குகள்;
- 806. அவற்றினின் றாவன வாக்கப் படுவன.
- மற்றும் அவற்றிலிருந்து உருவாகின்றவை, உருவாக்கப்படுபவை ஆகியன.
- 807. உத்தம மவற்றுண் முத்தாதி மணிகளே;
- அவற்றுள் மிகச் சிறந்தவை முத்து, பவளம் போன்ற மணிகள்;
- 808. வயிரமுதல் ரத்நமே பொன்முத லுலோகமே;
- வயிரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், கோமேதகம், நீலம், புஷ்பராகம் முதலிய விலை உயர்ந்த கற்கள் மற்றும் பொன் முதலிய உலோகங்கள்;
- 809. நவதா னியமே நன்மரஞ் செடிகளே;
- நவ தானியங்கள்(நெல், கோதுமை, துவரை, உழுந்து, பயறு, கடலை, அவரை, எள், கொள்), நன்மை தரும் மரம் மற்றும் செடிகள்;
- 810. உணவுடை யிலஞ்செல வணியமர்க் குரியவே.
- உணவு, உடை, இருப்பிடம் இவற்றிற்காகும் செலவு அனைத்தும் மாறுதலுக்கு உரியது.
82. பொருட் சிறப்பு[தொகு]
- 811. பொருளிற் சிறந்தது புகலவொன் றில்லை.
- பொருட்செல்வத்தைவிடச் சிறந்தது என்று எதையும் கூற இயலாது.
- 812. அதுநினைத் தவையெலா மளிக்குந் திறத்தது;
- அது நினைத்ததை எல்லாம் அளிக்கும் திறமை உடையது.
- 813. நீர்சூ ழுலகெலா மோர்நொடி யிற்றரும்;
- நீர் சூழ்ந்த இந்த உலகத்தையே ஒரு நொடியில் தந்துவிடும்.
- 814. மன்னர்மன் னவரையுந் தன்னடி வீழ்த்தும்;
- பேரரசரையும் நம் காலடியில் விழச் செய்யும்.
- 815. அருளையு மெய்யையு மடைந்திடச் செய்யும்.
- கருணையையும் இறைவனையும் அடைய வழிவகுக்கும்.
- 816. பொருளிலா ரின்பறம் புகழ்மெய் யிழப்பர்;
- பொருள் இல்லாதவர் இன்பம், அறம், புகழ் மற்றும் இறைவனருள் ஆகியவற்றை இழப்பர்.
- 817. மடையராய்த் தம்மரு நடையெலாம் விடுவர்;
- அறிவை இழந்து தம்முடைய நல்லொழுக்கத்தைக் கைவிடுவர்.
- 818. அடியராய்ச் சிறியரா யலக்கணுற் றுழல்வர்;
- அடிமையாக இழிந்தவராக துன்புற்று அலைவர்.
- 819. பசியினும் பிணியினும் பட்டுழந் தழிவர்;
- பசியாலும் நோயாலும் பாதிக்கப்பட்டு அலைந்து அழிவர்.
- 820. பழியுளு நரகுளு மழியா துறைவர்.
- பழிச் சொல்லை ஏற்று நரகத்தில் நீங்காது வாழ்வர்.
83. உழவு[தொகு]
- 821. உழவு தொழினில விளையுளைச் செய்தல்.
- உழவுத் தொழில் நிலத்திலிருந்து விளைபொருளை விளையச் செய்வது ஆகும்.
- 822. உழவ ருயிர்க்கெலா முயிரெனத் தக்கவர்.
- உழவர்கள் உயிர்களுக்கு எல்லாம் உணவு கொடுப்பதால் உயிர்களுக்கு உயிர் எனப் போற்றப்படுவர்.
- 823. உழவுசெய் முறைநிலங் கிழவர்தாங் காண்டல்;
- நிலத்துக்கு உரியவன் உழவுத் தொழிலைக் கவனிக்க வேண்டும்.
- 824. காடுநன் கழித்துக் கோடையி லுழுதல்;
- அடர்ந்தசெடிகளைக் கோடை காலத்தில் அழித்து அந்நிலத்தை உழ வேண்டும்.
- 825. நிலத்திற் கிசைவன விதைத்திடத் துணிதல்;
- நிலத்திற்கு ஏற்ற விதை விதைத்திட எண்ண வேண்டும்.
- 826. வித்திற் காமெரு மெத்த விடுதல்;
- விதைக்கு ஏற்ற உரம் அதிகம் இட வேண்டும்.
- 827. வேர்செலு மாழ மேர்செல வுழுதல்;
- செடியின் வேர் செல்லும் ஆழத்திற்கு ஏரினால் உழ வேண்டும்.
- 828. பதநன் கறிந்துநல் விதைசெல விதைத்தல்.
- நிலத்தின் ஈரப்பதத்தை நன்கு சோதித்து தரமான விதையை மண்ணின் உள்ளே செல்லுமாறு விதைக்க வேண்டும்.
- 829. களைகட்டு நீர்பாய்ச்சிக் காத்துப் பயன்கொளல்.
- களை பிடுங்கி நீர்ப் பாய்ச்சி பயிரைக் காத்து பயன் அடைய வேண்டும்.
- 830. ஒருபலன் றருநிலத் திருபல னாக்குதல்.
- ஒரு பங்கு விளையும் நிலத்தில் இரு பங்கு விளையும்படி செய்ய வேண்டும்.
84. வாணிகம்[தொகு]
- 831. வாணிகம் பண்ட மாற்று நற்றொழில்.
- வாணிகம் பொருளைக் கொடுத்துப் பொருளை வாங்கும் சிறந்த தொழில் ஆகும்.
- 832. அஃதெஞ் ஞான்று மரசிற் கடுத்தது.
- அது எப்பொழுதும் அரசாட்சிக்கு அடுத்த நிலையில் உள்ளது ஆகும்.
- 833. அஃதிலார்க் கரசிலை யரசிலார்க் கஃதிலை.
- வாணிகம் இல்லை எனில் அரசாட்சி இல்லை. அரசாட்சி இல்லை எனில் வாணிகம் இல்லை.
- 834. அதன்முறை யதைநித மதிபர்தா நோக்கல்;
- வாணிகத்துக்கு உரியவர் அதனை தினமும் கவனித்தல் வேண்டும்.
- 835. கணிதமெப் பொழுதுநா நுனிவைத் தாளுதல்;
- பொருளின் விலை போன்ற விவரங்களைத் தெய்வாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- 836. கொள்ளிடங் கொடையிட முள்ளுணன் கறிதல்;
- பொருட்களை வாங்கும் இடம், விற்கும் இடம் இவற்றை நன்கு அறிந்து இருக்க வேண்டும்.
- 837. செலவெலாங் கூட்டிச் சிறிதேற்றி விற்றல்;
- பொருட்களை வாங்கியதிலிருந்து விற்கும் வரை ஆகும் செலவுடன் சிறிது கூட்டி விற்க வேண்டும்.
- 838. எவர்க்கு மொருசொலே யின்புறச் சொல்லல்;
- எல்லோரிடமும் இனிமையாகப் பேசவேண்டும்.சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும்.
- 839. கடனனி கொடுக்கு மடனனி யொழித்தல்;
- கடனுக்கு வாணிகம் செய்வது அறிவற்ற செயல் ஆகும்.
- 840. பிறரது பொருளையுந் தமதெனப் பேணல்.
- பிறரது பொருளையும் தம்முடைய பொருளைப் போல் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
85. கைத் தொழில்[தொகு]
- 841. கைத்தொழில் பொருடரு மெய்த்தொழி லாகும்.
- கைத்தொழில் நமக்கு வருமானம் தரக்கூடிய உடல் உழைப்பு ஆகும்.
- 842. மற்றைய விரண்டையும் வளர்ப்ப தத்தொழில்.
- கைத் தொழில் வாணிகம், உழவுத் தொழில் ஆகியவற்றை வளர்க்கும்.
- 843. அத்தொழில் பேணா ரடைகுவர் வறுமை.
- கைத்தொழில் செய்யாதவர் ஏழ்மை நிலையை அடைவர்.
- 844. அத்தொழில் பல.அவை யாடை நெய்தல்;
- கைத்தொழில் பல. அவை நெசவுத் தொழில்;
- 845. உணற்குஞ் செயற்கு முதவுவ செய்தல்;
- 846. வீடரண் முதலிய மேம்பட வியற்றல்;
- வீடு, கோட்டை முதலிய கட்ட உதவும் கட்டிடத் தொழில்:
- 847. நிலத்திற் செல்பல வலத்தே ராக்கல்;
- தரையில் செல்லும் பல வகை வாகனங்கள், வலிமையான தேர் முதலியன செய்தல்;
- 848. நீரிற் செல்பல நாவா யாக்கல்;
- நீரில் செல்லக்கூடிய பல வகைக் கப்பல்கள் செய்தல்:
- 849. நிலநீ ருள்ளுள பலபொரு ளெடுத்தல்;
- நிலத்திற்கும் நீருக்கும் அடியில் சுரங்கம் தோண்டி பல பொருட்கள் எடுத்தல்:
- 850. காப்பிற் காம்பல கருவிக ளியற்றல்.
- பல வகை பாதுகாப்புக் கருவிகள் செய்தல்.
86. படை[தொகு]
- 851. பகையுயிர் படுத்தலாற் படையெனப் பட்டது.
- படை என்பது பகைவர்களின் உயிரைக் கொல்லும்.
- 852. உலகெலா மளிப்பதோ ருத்தம வரசே.
- சிறந்த அரசு குடிமக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்.
- 853. அரசரண் பொருள்களை யளிப்பது படையே.
- இராச்சியம், அரண் மற்றும் பொருள்களைப் பாதுகாப்பது படை ஆகும்.
- 854. இன்பமும் புகழு மீவது படையே.
- இன்பமும் புகழும் கொடுப்பது படைதான்.
- 855. மெய்யிய லடையச் செய்வதும் படையே.
- கடவுள் தன்மை அடையச் செய்வதும் படைதான்.
- 856. படையிலா ரரசரண் படுபொரு ளிழப்பர்;
- படை இல்லாதவர் இராச்சியம், அரண் மற்றும் சிறந்த பொருள்களை இழப்பர்.
- 857. அறம்புக ழின்பறி வருண்மெய் யிழப்பர்;
- அறம், புகழ், இன்பம், அறிவு, அருள், உடல் நலம் ஆகியவற்றை இழப்பர்.
- 858. அடியராய்ச் சிறைபுகுந் தலக்கணுற் றுழல்வர்;
- அடிமையாக சிறையில் துன்புற்று வருந்துவர்.
- 859. பிணியொடும் பசியொடும் பிணக்குற் றழிவர்;
- நோயாலும் பசியாலும் சண்டையிட்டு அழிவர்.
- 860. நரகமும் பழியுங் கிருகமாக் கொள்வர்.
- பழிச்சொல்லை அடைந்து நரகத்தை இருப்பிடமாகக் கொள்வர்.
87. படை வகை[தொகு]
- 861. படைவகை நான்கெனப் பகருவர், அவைதாம்.
- படை நான்கு வகைப்படும், அவை.
- 862. முன்னோர் வழிவரு மூலப் படையே;
- பரம்பரையாக வரும் படை மூலப்படை எனப்படும்;
- 863. நாட்டுளார்க் கூட்டு நாட்டுப் படையே.
- நாட்டில் வசிப்பவர் உதவியினால் வரும் படை நாட்டுப்படை எனப்படும்;
- 864. காட்டுளார்க் கூட்டுங் காட்டுப் படையே;
- காட்டில் வசிப்பவர் உதவியினால் வரும் படை காட்டுப்படை எனப்படும்;
- 865. கொடைநட் பால்வருங் கூலிப் படையே;
- பணத்திற்காகவும் நட்புக்காகவும் வரும் படை கூலிப்படை எனப்படும்;
- 866. நான்கிலொவ் வொன்று நால்வகைப் படும்அவை;
- இப்படைகள் ஒவ்வொன்றும் நான்கு வகைப்படும். அவை;
- 867. நிலமிசை யமர்செயும் வலமிகு படையே;
- நிலத்தில் போர் செய்யும் வலிமை மிகுந்த படை;
- 868. நிலக்கீ ழமர்செயு நேரிலாப் படையே;
- நிலத்தின் கீழ் பதுங்கு குழிகளில் இருந்து போர் செய்யும் தன்னிகரில்லாத படை;
- 869. நீர்மிசை யமர்செயு நீர்க்கலப் படையே;
- நீரில் போர் செய்யும் கப்பல் படை;
- 870. வானிற் றிரிதரும் விமானப் படையே.
- வானில் போர் செய்யும் விமானப் படை;
88. படைக்கலம்[தொகு]
- 871. படைக்கலம் பகைசெறப் படைகை யெடுப்பன.
- படைக்கலம் என்பவை எதிரிப் படையை அழிக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகும்.
- 872. படைக்கல மில்லெனிற் படையுமின் றாகும்.
- படைக்கலம் இல்லை எனில் படையினால் பயன் இல்லை.
- 873. படைக்கல மீட்டல் பயப்பொரு ளீட்டலே.
- படைக்கலங்களைத் திரட்டுவது பயனுள்ள பொருள்களைச் சேகரிப்பது ஆகும்.
- 874. பகைத்திற னெண்ணியே படைக்கல மியற்றுக.
- பகைவர்களின் வலிமையை அறிந்து அதற்கேற்ப படைக்கலங்களை உருவாக்க வேண்டும்.
- 875. விசையெரி கூருரம் விடமிக வியற்றுக.
- அம்பு, வாள் போன்றவை மிகவும் விஷமுள்ளதாகவும் மிகவும் கூர்மையாகவும் உருவாக்க வேண்டும்.
- 876. வெடிப்பன தெறிப்பன விசைமிகல் வேண்டும்.
- வெடிகுண்டுகள் போன்றவை மிகவும் விசையுடன் வெடிக்க வேண்டும்.
- 877. எறிவன விடுவன வெரிமிகல் வேண்டும்.
- எறியும் கருவிகளான ஈட்டி, வில்லில் இருந்து விடுபடும் அம்பு போன்றவை மிகுந்த வேகத்துடன் செல்ல வேண்டும்.
- 878. குத்துவ வெட்டுவ கூர்மிகல் வேண்டும்.
- குத்தவும் வெட்டவும் பயன்படும் வாள் மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும்.
- 879. உடைப்பன வறுப்பன வுரமிகல் வேண்டும்.
- உடைக்கவும் அறுக்கவும் பயன்படும் கருவிகள் வலிமையாக இருக்க வேண்டும்.
- 880. படைகொலும் படைக்கலம் விடமிகல் வேண்டும்.
- படையை அழிக்கும் படைக்கலங்கள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும்.
89. படை யமைத்தல்[தொகு]
- 881. பகைத்திற னழிக்கும் வகைத்தே ரியற்றுக.
- பகைவர்களின் வலிமையைத் அழிக்கும் திறனுடைய தேர்களை உருவாக்க வேண்டும்.
- 882. பகைக்குழுச் சிதைக்கும் வயக்களி றீட்டுக.
- பகைவர்களைச் சிதறி ஓடச் செய்யும் வலிமை உடைய யானைகளைத் திரட்ட வேண்டும்.
- 883. குறித்த நெறிசெலுங் குதிரைகள் கொள்ளுக.
- குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லும் குதிரைகளை வாங்க வேண்டும்.
- 884. இறத்தலி னின்புறூஉ மறத்தினர்க் கூட்டுக.
- போரில் இறப்பதை விரும்பும் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- 885. தேர்மா பரியாள் சேனையா வகுக்க.
- தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்று படைகளைப் பிரிக்க வேண்டும்.
- 886. அறைப்படுத் தேகுதற் காஞ்சில வியற்றுக.
- நிலத்தின் கீழிருந்து போர் செய்வதற்கு ஏற்றவற்றைச் செய்ய வேண்டும்.
- 887. கடல்செலும் பலவகைக் கலங்களு மியற்றுக.
- கடலில் செல்லக்கூடிய பலவகைக் கப்பல்களை உருவாக்க வேண்டும்.
- 888. விண்செலும் பலவகை விமானமு மியற்றுக.
- வானத்தில் செல்லக்கூடிய பலவகை விமானங்களை உருவாக்க வேண்டும்.
- 889. அவையாள் படைபடைக் கலமொடு வழங்குக.
- அவற்றிற்குத் தேவையான ஆட்கள், படைக்கருவிகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
- 890. வரிசைத் தலைவரா வுரியரை யுயர்த்துக.
- தகுதியானவரை படைத் தளபதியாக நியமிக்க வேண்டும்.
90. படை யளித்தல்[தொகு]
- 891. படைதன் னுயிரெனப் பார்த்துமன் னோம்புக
- அரசன் படைகளைத் தன்னுடைய உயிர் போலப் பாதுகாக்க வேண்டும்.
- 892. தினம்படை நோக்கித் திறன்மிகுந் திடச்செயல்.
- நாள்தோறும் படைகளைக் கவனித்து அவற்றின் திறமையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
- 893. அவரவர் திறனறிந் தளிக்க வேதனம்.
- ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப சம்பளம் அளிக்க வேண்டும்.
- 894. படையுவப் புறச்சீர் பரிசிலும் வழங்குக.
- படைகள் மனம் மகிழும்படி பட்டங்கள், வெகுமதிகள் வழங்க வேண்டும்.
- 895. அமரிற் படுபவர் தமர்தமை யோம்புக.
- போரில் இறப்பவர்களின் உறவினர்களைப் பாதுகாக்க வேண்டும்.
- 896. படைகளின் கடன்தாம் பகைகொளல் கொலப்படல்;
- பகைவர்களை கொல்லுவதும் அவர்களால் கொல்லப்படுவதும் படைவீரர்களின் கடமை ஆகும்.
- 897. கூற்றையு மெதிர்த்திடு மாற்றலொடு செல்லல்;
- எமனையும் எதிர்த்துப் போரிடும் ஆற்றலோடு போருக்குச் செல்ல வேண்டும்.
- 898. இழைத்த திகவாஅ திறந்துபுகழ் கொள்ளல்;
- செய்த சபதம் நிறைவேற்றிப் புகழ் அடைய வேண்டும்.
- 899. தலைவரின் சொல்லெலா நிலையுறப் பணிதல்;
- அரசரின் சொற்களை நிறைவேற்ற வேண்டும்.
- 900. தலைவரைத் தமதுநற் றாயினும் பேணுதல்.
- அரசரைத் தமது தாயைவிடப் பாதுகாக்க வேண்டும்.
91. நட்பு[தொகு]
- 901. நட்பெனப் படுவது பெட்புறு கேண்மை.
- நட்பு என்பது அன்பு மிகுதியால் ஏற்படுவது ஆகும்.
- 902. அதுநன் மகாருளத் தலரு நன்மலர்.
- நட்பு சான்றோர்(noble)களின் உள்ளத்தில் மலரும் சிறந்த மலராகும்.
- 903. அதனிய லடுத்தவ ரகநக விரும்பல்;
- அவர்கள் அடுத்தவர் மனமும் மகழ்வதை விரும்புவர்.
- 904. இடித்துக் கூற லிடுக்கண் களைதல்.
- தவறு செய்யும்போது கண்டித்துக் கூறுவதும் துன்பம் வந்தபோது அதை நீக்குவதும் நட்பாகும்.
- 905. புணர்ச்சி பழகுத லுணர்ச்சியா னட்பாம்.
- அடிக்கடி சந்தித்தலும், பேசுதலும், ஒத்த உணர்ச்சியும் நட்பாகும்.
- 906. ஆய்ந்துநன் னட்பறிந் ததன்பின் கொள்ளுக.
- ஆராய்ந்து நல்ல நட்பு என்று அறிந்தபின் நட்புக் கொள்ள வேண்டும்.
- 907. ஆய்ந்தறி யாதுறல் சாந்துயர் தருமே.
- ஆராயாது கொண்ட நட்பு இறப்பையும் கொடுக்கும்.
- 908. மருவிப் பன்னா ளொருவா தாய்க.
- பழகிப் பல காலம் தொடர்ந்து ஆராய வேண்டும்.
- 909. வாய்க்கா லனைய மாந்தரை நட்டல்.(வாய்க்கால் மற்றவர்களுக்குப் பயன்படும். ஓர் இலக்கை நோக்கிக் கட்டுப்பாடுடன் ஓடும்)
- உதவும் குணமும் கட்டுப்பாடும் உடையவர்களை நண்பர்களாகக் கொள்ள வேண்டும்.
- 910. சூட்டுக் கோனிகர் துணைவரைக் கொள்க.(சூட்டுக் கோலினால் நமக்குத் துன்பம் ஏற்படும். ஆனால் அதனால் நன்மையே உண்டாகும். அது ஒரு வகை வைத்தியம்)
- நம்மைச் சிரமப்படுத்தியும் நமக்கு நன்மை செய்பவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
92. பழமை[தொகு]
-முதிர்ந்த நட்பு
- 911. பழமையெத னாலுங் கிழமைகுன் றாதது.
- நண்பரின் உரிமையை எதனாலும் குறைக்காத நட்பு பழமை எனப்படும்.
- 912. அஃதுயர் நட்பி னருங்கனி யாகும்.
- அது சிறந்த நட்பினால் உருவாவது ஆகும்.
- 913. பழமையி னின்பம் பயப்பதொன் றில்லை.
- பழைய நட்பை விட இன்பம் தருவது எதுவிமில்லை.
- 914. பழயவர் பிழைப்பினும் பழமைமா றற்க.
- பழைய நட்பினர் தவறுகள் செய்தாலும் அவரின் நட்பை விடக்கூடாது.
- 915. அழிவந்த செய்யினு மன்பறா ராகுக.
- பழைய நட்பினர் நமக்கு அழிவு தரும் செயல்களைச் செய்தாலும் நாம் அன்பு மாறாமல் இருக்கவேண்டும்.
- 916. பழமையை மறப்போர் பாம்பினுங் கொடியர்.
- பழைய நட்பை மறப்பவர்கள் பாம்பைவிடக் கொடியவர்கள் ஆவர்.
- 917. அலக்கணுங் கேடு மழிவு முறுவர்.
- அவர்கள் துன்பமும் கேடும் அழிவும் அடைவர்.
- 918. பழமையை விடாரைப் பாரும் விடாது.
- பழைய நட்பைத் தொடர்பவரை இந்த உலகம் கைவிடாது.
- 919. பழையார்ப் பிரியாரை விழையாரும் விழைப.
- பழைய நட்பினரைப் பிரியாதவர்களைப் பகைவர்களும் விரும்புவர்.
- 920. பழமையைப் புதுமையிற் பார்ப்போர் பெரியர்.
- சான்றோர் பழைய நட்பினரைக் கண்டவுடன் விரும்புவர்.
93. ஆகா நட்பு[தொகு]
- 921. ஆகா நட்பிவ ணழிவுபழி தருவது.
- தீயவரது நட்பு அழிவையும் பழிச் சொல்லயும் ஏற்படுத்தும்.
- 922.அவைநனி தருபவ ரறிவில் பேதையர்;
- அவற்றை மிகுதியாகத் தரும் அறிவற்றவர்;
- 923. உறுவதே தூக்குஞ் சிறுமைமிகு மாந்தர்;
- தனக்கு வரும் ஆதாயத்தையே எண்ணும் இழிமக்கள்;
- 924. வினையொடு தஞ்சொல் வேறுபடு வஞ்சகர்;
- சொல்வது வேறாகவும் செய்வது வேறாகவும் உள்ள வஞ்சகர்;
- 925. ஒல்லுங் கரும முஞற்றாக் கள்ளர்;
- செய்ய இயலும் வினையைச் செய்யாத கள்ளர்;
- 926. மிகைபல விழைத்து நகைசெய்யும் பகைவர்;
- குற்றங்கள் பல செய்துவிட்டு வெளியில் மட்டும் சிரிக்கும் பகைவர்;
- 927. பக்கத் துறைந்து பதம்பார்த் திருப்பவர்;
- பக்கத்திலேயே இருந்து அழிப்பதற்குத் தக்க காலத்தை எதிபார்த்திருப்பவர்;
- 928. அட்டைபோ லொட்டிநின் றரியவை கவர்வோர்;
- அருகிலேயே இருந்து நமது அரிய பொருட்களைக் கவர்பவர்;
- 929. கள்ளுங் கவறுங் கைவிடாப் பதகர்;
- கள் அருந்துதலையும் சூதாடுவதையும் கைவிடாத கொடும்பாவி;
- 930. விடருந் தூர்த்தரு நடருமுள் ளிட்டோர்.
- காமுகன், கொடியவன், பொய்யன் ஆகிய இவ்வனைவரும் தீயவர் ஆவர்.
94. இகல்[தொகு]
-பகை
- 931. இகலெனப் படுவ துளமாறு பாடு.
- இகல் என்பது எனப்படுவது உள்ளத்தில் ஏற்படும் வேறுபாடு ஆகும்.
- 932. நகறரு நட்பிற் கிகன்மறு தலையாம்.
- மகிழ்ச்சி தரும் நட்பிற்கு எதிரானது இகல் ஆகும்.
- 933. அதனிய லடுத்தவ ரழமனம் விரும்பல்;
- அதனுடைய இயல்பு அடுத்தவர் மனம் வருந்துவதை விரும்புவது;
- 934. இடருற மொழித லிடுக்கண் புரிதல்.
- அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுவது, துன்பம் செய்வது ஆகியவை ஆகும்.
- 935. எதிருணர் வழுக்கா றிறுகுளத் தால்வ கடுத்தது.
- அது எப்பொழுதும் அரசாட்சிக்கு அடுத்த நிலையில் உள்ளது ஆகும்.
- 936. இகலுள மென்று மெரிந்து துன்புறும்.
- இகல் கொண்ட உள்ளம் என்றும் பொறாமைப்பட்டு வருந்தும்.
- 937. அன்போ தட்பமோ வின்போ வுறாது.
- அதில் அன்போ, கருணையோ, மகிழ்ச்சியோ இருக்காது.
- 938. இகல்பா ராட்டுவார் தகல்காண் பரிது;
- இகல் உடையவர் மேன்மை அடைவது அரிது.
- 939. அருமைச் சுற்றமு மாக்கமு மிழப்பர்;
- அவர்கள் சிறந்த சுற்றத்தையும் செல்வத்தையும் இழப்பர்.
- 940. கேடு மழிவுங் கிளைகளாக் கொள்வர்.
- அவர்கள் கேட்டினையும் அழிவையும் சுற்றமாகக் கொள்வர்.
95. பகைமை[தொகு]
- 941. பகைமை யென்ப திகலது முதிர்வு.
- பகைமை என்பது நீண்ட நாள் பகை ஆகும்.
- 942. பழமையின் மறுதலை பகைமையென் றறிக.
- பழமையின் எதிரானது பகைமை ஆகும்.
- 943. பகைமையுட் கொடியதுட் பகைமையென் றறைப.
- பகைமையுள் கொடியது உட்பகைமை ஆகும்.
- 944. அதனினுங் கொடியதிங் கரியவை கவர்வது.
- அதைவிடக் கொடியது அரிய பொருட்களைக் கவர்வது ஆகும்.
- 945. பகைமையை யுட்கொள றகைமையன் றென்ப.
- பகைமை கொள்வது பெருந்தன்மை ஆகாது.
- 946. அதைவிடா தவர்பா லியாதிவண் செய்வது?
- பகைமை கொண்டவர்களிடம் என்ன செய்யலாம்?
- 947. அன்புபா ராட்டி யவரை வளர்ப்பதோ?
- அன்பு செலுத்தி அவரை வளர்ப்பதா?
- 948. ஈகையென் றவர்கரத் தின்னுயிர் விடுப்பதோ?
- ஈகை என்று நினைத்து அவரால் உயிரை விடுவதா?
- 949. அறமென வெண்ணித் துறவினைக் கொள்வதோ?
- அறச் செயல் என்று நினைத்து துறவினை மேற்கொள்வதா?
- 950. தம்மா ருயிரைத் தாமழித் தொழிவதோ?
- நம்முடைய உயிரை நாமே அழித்துக் கொள்வதா?
96. பகையடு நெறி[தொகு]
-பகைவரை வெல்லக்கூடிய வழிகள்
- 951. பகைமையை விடாரைப் பகைத்தடல் வழக்கு.
- பகைமையை விடாதவரை எதிர்த்து வெல்லுதல் உலக இயல்பு ஆகும்.
- 952. பகையினை யடற்குப் பலபல நெறியுள.
- பகைவர்களை வெல்லுவதற்குப் பல வழிகள் உள்ளன.
- 953. எதற்கும் பொருளறி வின்றியமை யாதவை.
- அனைத்து வழிகளுக்கும் பொருளும் அறிவும் இன்றியமையாதவை.
- 954. ஒல்லு மிடத்தெலாம் வெல்லு மமர்நலம்.
- போர் செய்து வெல்ல முடியும் என்றால் போர் செய்வது சிறந்தது.
- 955. ஒல்லா விடத்தினி லுபாய முறைநலம்.
- போரில் வெல்ல முடியாவிட்டால் அரசருக்கு உரிய வழிமுறைகளைக் கடைபிடிப்பது சிறந்தது.
- 956. முறையின் சொல்லே கொடைபிரிப் பழிப்பே.
- அவ்வழிமுறைகள் இன்சொல் கூறல், ஈதல், வேறுபடுத்தல், அழித்தல் ஆகியவை.
- 957. முன்னைய விரண்டுந் தன்னினாம் வகைசெயல்.
- முதல் இரண்டு வகைகளை அரசன் தனியாகவே செய்யலாம்.
- 958. பின்னைய விரண்டும் பெருந்துணை கொடுசெயல்.
- அடுத்த இரண்டு வகைகளை அரசன் சிறந்த துணையுடன் செய்ய வேண்டும்.
- 959. உட்பகை யினரை யுட்பகைத் தடுக.
- உட்பகைவர்களை அவர்களுக்குள் பகை ஏற்படுத்தி அழிக்க வேண்டும்.
- 960. ஒட்டிமேய் வாரை யொட்டிமேய்ந் தடுக.
- உறவாடி அரிய பொருட்களைக் கவர்பவர்களை உறவாடி வெல்லவேண்டும்.
97. அமர்வகை[தொகு]
- 961. அமர்வகை நான்கென வறைகுவ ரவைதாம்.
- போர் நான்கு வகைப்படும் என்று புறப்பொருள் நூல்கள் கூறுகின்றன. அவை
- 962. வெட்சியே வஞ்சியே யுழிஞையே தும்பையே.
- வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை ஆகியவை.
- 963. வெட்சிநல் லுயிர்களை விரோதிபாற் கவர்தல்;
- வெட்சி என்பது பகைவர்களின் ஆநிரைகளைக் கவர்தல்;
- 964.அதனிக ழும்பல வமருஞ் செயலும்.
- அதற்காக நிகழும் போர் மற்றும் அதைச் சார்ந்த செயல்கள் ஆகியன.
- 965. வஞ்சிமண் ணசைமன் னஞ்சவடல் குறித்தல்;
- வஞ்சி என்பது பகைவர் நாட்டை வெற்றி கொள்ளச் செல்லுதல்;
- 966. அதனிக ழும்பல வமருஞ் செயலும்.
- அதற்காக நிகழும் போர் மற்றும் அதைச் சார்ந்த செயல்கள் ஆகியன.
- 967. உழிஞையரண் முற்றி யுரத்தினாற் கோடல்;
- உழிஞை என்பது பகைவர்களின் அரணைச் சுற்றி வளைத்தல்;
- 968. அதனிக ழும்பல வமருஞ் செயலும்.
- அதற்காக நிகழும் போர் மற்றும் அதைச் சார்ந்த செயல்கள் ஆகியன.
- 969. தும்பைமுன் வந்தமன் மைந்துதலை யழித்தல்;
- தும்பை என்பது போருக்கு வந்த மன்னரின் வலிமையை நெருங்கி அழித்தல்;
- 970. அதனிக ழும்பல வமருஞ் செயலும்.
- அதற்காக நிகழும் போர் மற்றும் அதைச் சார்ந்த செயல்கள் ஆகியன.
98. அமர்த் திட்பம்[தொகு]
- 971. அமர்த்திட்ப மொருவ ரகத்திட்ப மென்ப.
- அமர்த் திட்பம் என்பது ஒருவரின் மனவலிமை ஆகும்.
- 972. ஊறுறா தாற்றுக வூறுறிற் றளரேல்.
- இடையூறு வராமல் விலக்குதலும் இடையூறு ஏற்பட்டால் மனம் தளராமல் இருத்தலும் வேண்டும்.
- 973. அமர்க்கெழும் வரையய லறியா தமைக.
- போரைத்தொடங்கும் வரை அயலார் அறியாமல் வைத்திருக்க வேண்டும்.
- 974. சொல்லுத லெளிது செய்தலோ வரிது.
- சொல்லுதல் எளிது. செய்தல் அரிது.
- 975. அமரின்மாண் டாரை யனைவருந் துதிப்பர்.
- போரில் இறந்தவரை அனைவரும் வணங்குவர்.
- 976. திண்ணியா ரெண்ணிய வெண்ணியாங் கடைவர்.
- மனத்திட்பம் உடையவர் எண்ணிய பொருள்களை எண்ணியவாறு அடைவர்.
- 977. உளிபோல் வாருள ருருக்கண் டிகழேல்.(உளி சிறியது, ஆனாலும் மரத்தையே பிளந்துவிடும்.அதனால்)
- பகைவர் உருவத்தால் சிறியர் என்று இகழக்கூடாது.
- 978. துணிந்தநல் லமரினைத் தூங்கா தாற்றுக.
- ஆராய்ந்து துணிந்த போரினைக் காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும்.
- 979. பெரும்பயன் றருமமர் வருந்தியுஞ் செய்க.
- முடிவில் பெரும் பயன் தரும் போரை துன்பப்பட்டாவது செய்ய வேண்டும்.
- 980. அமர்த்திட்ப மிலாரை யாருமே வேண்டார்.
- போருக்கு அஞ்சுபவரை யாரும் விரும்ப மாட்டார்.
99. வலி யறிதல்[தொகு]
- 981. தனது படையையுந் தனத்தையு மறிக.
- தான் கருதிய போரைச் செய்தற்கு வேண்டிய படை, பொருள் ஆகியவற்றின் வலிமையை அறிய வேண்டும்.
- 982. பகையது தனத்தையும் படையையு மறிக.
- பகைவரின் படை, பொருள் ஆகியவற்றின் வலிமையை அறிய வேண்டும்.
- 983. தன்றுணைப் படையையுந் தனத்தையு மறிக.
- தனது துணைவரின் படை, பொருள் ஆகியவற்றின் வலிமையை அறிய வேண்டும்.
- 984. பகைத்துணை தனத்தையும் படையையு மறிக.
- பகைவரது துணைவரின் படை, பொருள் ஆகியவற்றின் வலிமையை அறிய வேண்டும்.
- 985. இருதிறப் படைகளி னேற்றத்தாழ் வறிக.
- இரு பக்கப்படைகளின் வலிமையைச் சீர் தூக்கி அவற்றின் ஏற்றத்தாழ்வு அறிய வேண்டும்.
- 986. இருதிறப் படைக்கல வேற்றத்தாழ் வறிக.
- இரு பக்கப்படைக்கலங்களின் வலிமையைச் சீர் தூக்கி அவற்றின் ஏற்றத்தாழ்வு அறிய வேண்டும்.
- 987. எவ்வமர் செயறனக் கெளிதென் றறிக.
- எந்த வகையான போர்முறை தனக்கு எளிது என்று அறிய வேண்டும்.
- 988. அதுகொளும் பொருள்படை யாதிய வறிக.
- அதற்குத் தேவையான பொருள், படை முதலியவற்றை அறிய வேண்டும்.
- 989. அயன்மன் வரினா டளிக்குமா றறிக.
- அயல் நாட்டு மன்னன் படையெடுத்து வரும்போது தம் மக்களைப் பாதுகாக்கும் வழிமுறையை அறிந்திருக்க வேண்டும்.
- 990. அனையவு மறிந்துபி னமர்செயத் துணிக.
- எல்லாவற்றையும் அறிந்த பின்னர் போர் செய்யத் துணிய வேண்டும்.
100. கால மறிதல்[தொகு]
- 991. வலிமிகு கூகையைப் பகல்வெலுங் காகம்.
- காகம் தன்னினும் வலிமையான ஆந்தையைப் பகல் பொழுதில் வென்றுவிடும்.
- 992. ஆகுங் காலத் தரியவு மாகும்.
- தக்க காலத்தில் செய்வதற்கு அரிய வினைகளையும் செய்ய இயலும்.
- 993. ஆகாக் காலத் தெளியவு மாகா.
- பொருத்தமற்ற காலத்தில் எளிய செயல்களையும் செய்ய இயலாது.
- 994. தனக்காங் காலஞ் சார்ந்தமர் தொடங்குக.
- தனக்குப் பொருத்தமான காலத்தில் போரைத் தொடங்க வேண்டும்.
- 995. பகைகெடுங் காலம் பார்த்தமர் தொடங்குக.
- பகைவருக்குப் பொருத்தமற்ற காலத்தில் போரைத் தொடங்க வேண்டும்.
- 996. பருவம் வரும்வரை பகைவர்க் கடங்குக.
- பகைவரை அழிப்பதற்குத் தக்க காலம் வரும் வரை பகைவருக்கு அடங்கி நடக்க வேண்டும்.
- 997. பருவம் வரினுடன் பகைவரை யடக்குக.
- பகைவரை அழிப்பதற்குத் தக்க காலம் வந்த உடன் பகைவரை அழிக்க வேண்டும்.
- 998. கூம்பும் பொழுது கொக்கொத் தமர்க.
- அடங்கியிருக்கும் காலத்தில் கொக்கைப் போல் அடங்கியிருக்க வேண்டும்.
- 999. அடர்க்கும் பருவத் ததுபோற் குத்துக.
- பகைவரை அழிப்பதற்கு ஏற்ற காலம் வந்த உடன் கொக்கு விரைந்து கொத்துவதைப் போல் பகைவரை அழிக்க வேண்டும்.
- 1000. காலமறிந் தேசெயின் ஞாலமுட னெய்தும்.
- பொருத்தமான காலம் அறிந்து செய்தால் உலகத்தையே வெல்லலாம்.
101. இட னறிதல்[தொகு]
- 1001. நெடும்புனலுண் முதலையா லடுங்களிறு படுமே.
- ஆழமான நீரினுள் முதலை யானையை வெல்லும்.
- 1002. முதனிலத் தெறும்பான் முதலையும் படுமே.
- கரை மீது முதலையை எறும்பும் வெல்லும்.
- 1003. கால்வ னெடுந்தேர் கடலோ டாதே.
- நிலத்தில் செல்லும் பெருந்தேர்கள் கடலின் மீது ஓடாது.
- 1004. நிலமிசை நாவாய் நின்றா டாதே.
- நீரில் செல்லும் கப்பல்கள் நிலத்தில் ஓடாது.
- 1005. முரண்சேர்ந் தவர்க்கு மரண்சேர்த னன்று.
- வலிமை உடைய அரசராக இருந்தாலும் பாதுகாப்பான இடத்தில் இருப்பது நன்மை அளிக்கும்.
- 1006. மேலிருந் தமர்செயல் வெல்வோர்க்கு நன்று.
- உயரமான இடத்தில் இருந்து போர் செய்தல் வெற்றி பெறுவோர்க்கு நல்லது.
- 1007. பெருமலை யரணுள பேடியும் வெல்லும்.
- பெரிய மலை மீதுள்ள கோட்டையினுள் வீரமற்றவனும் வெற்றி பெறுவான்.
- 1008. சிறுபகை தன்னிடத் துறுபகை யழியும்.
- சிறிய படையை உடைய அரசனும் தன்னுடைய இடத்தில் பெரிய படையை உடைய அரசனை அழிப்பான்.
- 1009. தெரியா விடத்துப் பெரியாரு மழிவர்.
- புதிய இடத்தில் பெரிய படை உடைய அரசனும் அழிவான்.
- 1010. இடங்கண் டல்லது தொடங்கிடே லமரே.
- போர் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்காமல் போரைத் தொடங்கக் கூடாது.
102. அமர் துணிதல்[தொகு]
- 1011. ஒருமா னிடவுயிர்க் குலகெலா மாற்றா.
- ஒரு மனிதரின் உயிருக்கு உலகம் கூட நிகராகாது.
- 1012. பலமா னிடர்தாம் படுமமர் நன்றோ?
- பல மனிதர்கள் இறக்கும் போர் நல்லதுதானா?
- 1013. படுமா னிடரிற் பலருயி னன்றாம்.
- இறக்கும் மனிதர்களில் பலர் உயிர் பிழைத்தால் அது மிகவும் நல்லது ஆகும்.
- 1014. இவ்வொன் றலாலமர்க் கேதுபிறி தில்லை.
- இதைத் தவிர போரினால் ஏற்படக்கூடிய அழிவு வேறு எதுவும் இல்லை.
- 1015.ஆன்றோ ரிதனையே யமர்க்கேது வென்ப.
- அறிஞர்கள் இதனையே போர்க்குற்றம் என்பர்.
- 1016. அளிக்கப் படுவன வழிவன வெண்ணுக.
- போரினால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் இழப்புகளையும் ஆராய வேண்டும்.
- 1017. அளிக்கப் படுவன வதிகமேற் றுணிக.
- நன்மைகள் அதிகம் கிடைக்கும் எனில் துணிந்து போரை மேற்கொள்ள வேண்டும்.
- 1018. பொருள்படை யமர்த்திறன் பொழுதிட னெண்ணுக.
- தன்னுடைய பொருள், படை, போர்த் திறமை, தக்க காலம், இடம் ஆகியவற்றை ஆராய வேண்டும்.
- 1019. அவைபகை யிற்றனக் கதிகமேற் றுணிக.
- அவை பகை அரசனைவிடத் தனக்கு அதிகம் எனில் துணிந்து போரை மேற்கொள்ள வேண்டும்.
- 1020. அன்றே லுலகெலா மழியினும் விடுக.
- இல்லை எனில் எந்தக் காரணத்தினாலும் போரை மேற்கொள்ளக்கூடாது.
103. தூது விடல்[தொகு]
- 1021. தூதொரு வர்க்குச் சொலச்சொலுஞ் சொல்லே.
- தூது என்பது வேற்றரசருக்குச் சொல்லி அனுப்பும் செய்தி ஆகும்.
- 1022. எதிரியை யிணைத்தற் கெண்ணிய சொல்லே.
- எதிரியுடன் சமாதானமாகப் போவதற்காகச் சொல்லப்படும் செய்தி ஆகும்.
- 1023. அறவர சமர்முன ரதுவிடல் வழக்கே.
- அறவழி நடக்கும் அரசர் போருக்கு முன்பு தூதூதுவிடுதல் வழக்கம் ஆகும்.
- 1024. அமையு மிடத்தெலா மதுவிடல் கடனே.
- சாத்தியப்படும் இடத்தில் எல்லாம் தூதுவிடுதல் அரசருக்குக் கடன் ஆகும்.
- 1025. அறியாப் பகைக்கறி வளித்தலுங் கடனே.
- அறிவற்ற எதிரி அரசனுக்கு அறிவு கொடுப்பதும் அரசருக்குக் கடன் ஆகும்.
- 1026. தூதுரைப் பாரிய றூய்மையே வாய்மையே;
- தூது சொல்பவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் தூய ஒழுக்கம், உண்மை;
- 1027. அன்பே துணிவே யழகே யாற்றலே;
- அன்புடைமை, அஞ்சாமை, அழகிய உருவம், ஆற்றல்;
- 1028. நூலெலா மறிந்துள நுண்ணறி வுடைமையே;
- நீதி நூல்களைக் கற்றுப் பெற்ற நுட்பமான அறிவுடைமை;
- 1029. அமையமும் பிறவு மறிந்துசொலுந் திறனே;
- காலத்தையும் மற்றவற்றையும் அறிந்து தூது சொல்லும் திறமை;
- 1030. அமைச்சர சியலெலா மமைந்துள தன்மையே.
- அமைச்சரைப் போன்ற அறிவும் அரசரைப் போன்ற தைரியமும் கொண்டுள்ள தன்மை ஆகியவை ஆகும்.
104. அமர் செய்தல்[தொகு]
- 1031. தூதினுந் தெருளாத் தீயரை யடன்முறை.
- தூது அனுப்பியும் அறிவு பெறாத தீயவரை வெற்றி கொள்வது நியாயம் ஆகும்.
- 1032. அவரை யறவடா தவர்தீ தடறலை.
- அவரைக் கொல்லாது அவர் குற்றத்தை வெற்றி கொள்வது சிறப்பு.
- 1033. அரும்படை பெருக்கி யவரஞ் சச்செயல்.
- படைபலத்தைப் பெருக்கி அவரை பயப்படச் செய்தல்.
- 1034. அறியா நெறியா லவரைச் சிறைகொளல்.
- அவர் அறியாத வழிமுறைகளால் அவரைச் சிறைபடுத்துதல்.
- 1035. அவரய லமர்செயு மமையத் தரண்கொளல்.
- அவர் அண்டை அரசருடன் போர் செய்யும் சமயத்தில் அவரது கோட்டையைக் கைப்பற்றுதல்.
- 1036. அவரது பகைகொண் டவர்மற வலியடல்.
- அவரது பகை அரசரைக் கொண்டு அவரது போர் வலிமையை வெற்றி கொள்ளுதல்.
- 1037. அவரிற் சிலர்கொண் டவர்மற வலியடல்.
- அவருடன் இருப்பவர்களைக் கொண்டு அவரது போர் வலிமையை வெற்றி கொள்ளுதல்.
- 1038. அவரிற் சிலர்பிரித் தவர்மற வலியடல்.
- அவரிடம் இருந்து சிலரைப் பிரித்து அவரது போர் வலிமையை வெற்றி கொள்ளுதல்.
- 1039. அமையு மமர்செய் தவர்மற வலியடல்.
- தக்க சமயத்தில் போர் செய்து அவரது போர் வலிமையை வெற்றி கொள்ளுதல்.
- 1040. அளவுக் கதிக மடுவது தீது.
- அளவுக்கு அதிகமாகப் போர் செய்வது தீமையையே விளைவிக்கும்.
105. வெற்றி யடைதல்[தொகு]
- 1041. வெற்றிதன் பொருளை மீட்டர சாளுதல்.
- வெற்றி என்பது தன் பொருளை மீட்டு அரசாட்சி செய்வது ஆகும்.
- 1042. பகைமறம் விடவும் பணியவுஞ் செய்தல்.
- பகையரசர் தனது குற்றத்தை விட்டுப் பணியும்படி செய்தல் வேண்டும்.
- 1043. பகையவை செயும்வரை பக்கநாட் டமர்த்தல்.
- பகையரசர் அவற்றைச் செய்யும்வரை அவரைப் பக்கத்து நாட்டில் வைத்திருத்தல் வேண்டும்.
- 1044. பகைமற வலிகெடும் வகையெலாந் திருத்தல்.
- பகையரசரின் படைவலிமை குறையும் வகையில் அவரைத் திருத்துதல் வேண்டும்.
- 1045. அறஞ்செயு மாறதற் கதனா டீதல்.
- அறவழி நடக்குமாறு பகையரசருக்கு அவரது நாட்டைக் கொடுத்தல் வேண்டும்.
- 1046. வேரொடும் பகையடல் வெற்றியென் றறைப.
- வேரொடு பகையை அழித்தல் வெற்றி என்று கூறுவர்.
- 1047. அஃதரும் பெருமற மாமென் றறிக.
- அது சிறந்த, பெரிய வீரம் என்று அறிதல் வேண்டும்.
- 1048. அமர்பகை யெச்ச மனலதா மென்ப.
- போர்ப்பகை மிச்சம் என்பது தீ மிச்சம் போல வளர்ந்து தன்னை அழிக்கும்.
- 1049. அனலற வொழிப்பவ ரியாங்கணு முளரோ?
- தீயை முற்றிலும் ஒழிப்பவர்கள் இங்கு யாராவது இருக்கிறார்களா?
- 1050. அடாஅ வகையதை யடக்கிவைத் தாளுக.
- பகையரசர்கள் தீங்கு செய்யாத வகையில் அவர்களை அடக்கி ஆள வேண்டும்.
106. அரசு கொள்ளல்[தொகு]
- 1051. அரசினைத் தருதற் கருகரந் தணரே.
- வெற்றி பெற்ற அரசினைப் பகையரசருக்குத் தருவதற்குத் துறவியே தகுதியானவர்.
- 1052. அருளறி வமைந்துள வறவோ ரந்தணர்.
- கருணையும் அறிவும் நிறைந்து அறச்செயல்கள் புரிபவர்கள் அந்தணர்கள் ஆவர்.
- 1053. அவரிலை யெனிற்றரற் கருக ரரசரே.
- அவருக்கு அடுத்து அரசினைத் தருவதற்குத் தகுதியானவர் அரசர் ஆவார்.
- 1054. மறத்தினைச் சிதைக்குந் திறத்தின ரரசர்.
- அரசர் பகையரசரின் வலிமையை அழிக்கும் திறமை உடையவர் ஆவார்.
- 1055. அவரிலை யெனிற்றரற் கருகர் வணிகரே.
- அவருக்கு அடுத்து அரசினைத் தருவதற்குத் தகுதியானவர் வணிகர் ஆவார்.
- 1056. பொருள்வே ளாண்மை புரிபவர் வணிகர்.
- பொருள்களை விற்பவர் வணிகர் ஆவார்.
- 1057. அவரிலை யெனிற்றரற் கருகர் பிறரே.
- அவருக்கு அடுத்து அரசினைத் தருவதற்குத் தகுதியானவர் மற்றவர்கள் ஆவர்.
- 1058. பிறர்பிற தொழிலெலாம் பேணியிங் காள்பவர்.
- மற்றவர்கள் உழவுத் தொழில், கைத்தொழில் போன்றவற்றைச் செய்பவர்கள் ஆவர்.
- 1059. அனைவருந் தரக்கொள லதிகநன் றென்ப.
- அனைவரும் தந்து பெற்றுக் கொள்ளுதல் மிகவும் சிறந்ததாகும்.
- 1060. அறஞ்செயத் தானர சாதலும் வழக்கே.
- அற வழியில் ஆட்சி செய்வதற்காக வெற்றி பெற்ற அரசரே அரசாளுவதும் வழக்கமே.
107. குடி புரத்தல்[தொகு]
- 1061. குடியெலா மகவெனக் கொண்டுமன் னோம்புக.
- குடிமக்களைத் தன்னுடைய குழந்தைகளாகக் கருதி மன்னன் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
- 1062. அவர்க ளியாவரு மறிவுறச் செய்க;
- அவர்கள் அனைவரும் அறிவு பெறும்படி செய்ய வேண்டும்.
- 1063. அரியகைத் தொழில்சில வறிந்திடச் செய்க;
- சிறந்த கைத்தொழில் சிலவற்றை அறியும்படி செய்ய வேண்டும்.
- 1064. படைக்கலப் பயிற்சியிற் பாடுறச் செய்க.
- அவர்கள் சிறந்த முறையில் படைக்கலங்களைக் கையாளும்படி செய்ய வேண்டும்.
- 1065. பொருளைக் குடியின் பொதுவெனப் பெருக்குக.
- நாட்டின் செல்வத்தை எல்லோருக்கும் பொதுவாக வைத்து அதனைப் பெருக்க வேண்டும்.
- 1066. குடிபொருள் செய்தற் கடிமுதல் வழங்குக.
- அவர்கள் பொருள் சம்பாதிக்க மூலதனம் வழங்க வேண்டும்.
- 1067. குடியில் வாழ்ந்திடக் குறைந்தன வழங்குக.
- அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் குறைந்தபட்சமாவது வழங்க வேண்டும்.
- 1068. குடிசெயூ தியத்துட் குடியினர் வாழ்க.
- அவர்கள் தங்கள் வருமானத்திற்குள் வாழ வேண்டும்.
- 1069. பொன்றுநாண் மிஞ்சிய பொதுவா மன்கொளல்.
- உரிமையாளர் இறந்து, வெகு நாட்களான சொத்துக்களை அரசன் பொதுச்சொத்தாகக் கொள்ள வேண்டும்.
- 1070. குடிபசித் துழலன்மன் குற்றமென் றறிக.
- குடிமக்கள் பசியால் வருந்தும்படி விடுவது மன்னவனின் குற்றம் ஆகும்.
108. இறை கொள்ளல்[தொகு]
- 1071. இறைகுடி யூதியத் திறைகொளு மளவே.
- இறைப்பணம் குடிமக்களின் ஊதியத்தில் அரசன் பெற்றுக் கொள்ளும் அளவு ஆகும்.
- 1072. அஃதறு பங்கிலொன் றாமென மொழிப.
- அது ஊதியத்தில் ஆறில் ஒரு பங்கு என்று கூறுவர்.
- 1073. இறையிலா றொன்றனு ளிறையினர் வாழ்க.
- இறைப்பணத்தில் ஆறில் ஒரு பங்கு பணத்தில் அரசாங்க ஊழியர்கள் வாழ வேண்டும்.
- 1074. ஒன்றிறை கொளநடு வுதவிட வழங்குக.
- ஒரு பங்கை இறைப் பணம் வசூலிக்க, நீதி வழங்கக் கொடுக்க வேண்டும்.
- 1075. ஒன்றினாட் டகம்புற மோம்பலை நடாத்துக.
- ஒரு பங்கினால் நாட்டின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பாதுகாக்க வேண்டும்.
- 1076. ஒன்றினூர் நிலநல முயர்ந்திடச் செய்க.
- ஒரு பங்கினால் ஊர் நலம் மற்றும் விவசாயத்தை மேம்படச் செய்ய வேண்டும்.
- 1077. ஒன்றினே கல்வியோ டுயரற மாற்றுக.
- ஒரு பங்கினால் கல்வி வழங்குதல் மற்றும் அறச் செயல்கள் செய்ய வேண்டும்.
- 1078. மிஞ்சுவ பொதுவொடு வேந்துவைத் தோம்புக.
- மீதம் உள்ளவற்றால் பொதுநலத்தையும் அரசர் நலத்தையும் பாதுகாக்க வேண்டும்.
- 1079. புவிநலங் குன்றிற் பொதுப்பொருள் வழங்குக.
- பஞ்சம் ஏற்பட்டால் மக்களுக்குத் தேவையானவற்றை வழங்க வேண்டும்.
- 1080. மறமன் னிலங்கொளத் திறஞ்செய வழங்குக.
- வீரமன்னன் நாடுகளைக் கைப்பற்ற, வலிமையைப் பெருக்க நிதி வழங்க வேண்டும்.
109. முறை செய்தல்[தொகு]
- 1081. குடியது குற்றமன் கடிவது முறையாம்.
- குடிகளின் குற்றத்தை மன்னன் களைவது நீதி ஆகும்.
- 1082. கடியு மியலதன் காரணம் போக்கல்;
- குற்றத்தை நீக்கும் முறையானது அதன் காரணத்தைப்(நோக்கம்) போக்குவது ஆகும்.
- 1083. காரணம் போம்வரை காப்பினுள் வைத்தல்.
- (நோக்கம்)காரணம் நீங்கும் வரை சிறையினுள் வைக்க வேண்டும்.
- 1084. எதற்குமோர் வகையறி விலாமையே காரணம்.
- அறிவில்லாமையே எல்லாவற்றிற்கும் காரணம் ஆகும்.
- 1085. செய்ததைச் செய்ய விடாமையே காப்பு.
- ஏற்கனவே செய்த குற்றத்தை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கே சிறை ஆகும்.
- 1086. இவையே யறமுறை நவையே பிறவெலாம்.
- இம்முறைகளே சிறந்த முறைகளாகும். மற்ற முறைகள் குற்றங்களாகும்.
- 1087. முறைகண் ணோடா துயிர்வௌவ லென்ப.
- மற்ற முறைகள் இரக்கம் இல்லாது உயிரைக் கவர்வது ஆகும்.
- 1088. அம்முறை யழிவுறு மரசுசெய் மறமுறை.
- அம்முறை அழியக் கூடிய அரசு செய்யும் தீங்கான முறை ஆகும்.
- 1089. களையறி யாமை நிலங்குடி யொக்கும்.
- நிலத்தில் களை விளைவது போல மக்களிடையே அறியாமை ஏற்படுகிறது.
- 1090. களையோ களையுடை நிலமோ களைவது.
- நாம் களையைத்தான் நீக்குகிறோம். நிலத்தை அழிப்பது இல்லை.
110. அறம் புரிதல்[தொகு]
- 1091. அறமன் னுயிர்த்துய ரறுக்கு நல்வினை.
- அறம் உலகத்து உயிர்களின் துன்பத்தை நீக்கக் கூடிய நற்செயல் ஆகும்.
- 1092. அவ்வினை யுயிர்தொறும் வெவ்வே றாகும்.
- நல் வினை என்பது ஒவ்வொரு உயிருக்கும் வேறுபடும்.
- 1093. அவையுடன் கண்டுநன் காற்றுதன் மன்கடன்.
- அவற்றைக் கண்டறிந்து நல்ல முறையில் செய்வது மன்னனின் கடமை ஆகும்.
- 1094. துயர்முத லுயிர்க்கெலாந் துப்புர விலாமை;
- உயிர்களின் தலையாய துன்பம் உணவு முதலியன இல்லாமை;
- 1095. அதனத னிடத்ததை யமர்த்திவை யாமை;
- அவற்றிற்குரிய இடத்தில் அவற்றை வைக்காமல் இருப்பது;
- 1096. ஆறறி வினர்க்குநல் லறிவில் லாமை.
- மனிதர்களுக்கு நல்லறிவு இல்லாமை -ஆகியவை ஆகும்.
- 1097. உயிரெலா மதனத னுணவுற வோம்புக.
- அரசன் எல்லா உயிர்களும் அதன் உணவைப் பெறுமாறு பாதுகாக்க வேண்டும்.
- 1098. அதனத னெல்லையு ளமர்த்திவைத் தாளுக.
- உயிர்களை அதன் எல்லை மீறாமல் வைத்து ஆட்சி செய்ய வேண்டும்.
- 1099. ஆறறி வினர்க்குநல் லறிவெலாம் வழங்குக.
- மனிதர்கள் நல்லறிவு பெறுமாறு செய்ய வேண்டும்.
- 1100. அறவிரி திருக்குற ளாதியா லறிக.
- அறத்தைப் பற்றி விரிவாக அறிய திருக்குறள் போன்ற நூல்களைக் கற்க வேண்டும்.