மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/11. அணிகலன்கள்

விக்கிமூலம் இலிருந்து
11. அணிகலன்கள்

அணிகலன்கள்

சிந்துப் பிரதேச மக்களின் உடை வகைகளை ஒவியங்கள், சிற்பங்கள் முதலியவற்றைக் கொண்டே அறிய வேண்டி இருக்கின்றன. ஆனால், அவர்கள் மகிழந்தேற்ற அணிகலன்கள் நிரம்பக் கிடைத்துள்ளமையால், அவற்றைப் பற்றித் தெளிவான உண்மைகளை உணர இடம் ஏற்பட்டுள்ளது. அம்மக்கள் பொன், வெள்ளி[1], வெண்பொன்[2], செம்பு, வெண்கலன், தந்தம், எலும்பு, மாக்கல், பலவகை இரத்தினக்கற்கள், களிமண், சங்கு முதலியவற்றைக் கொண்டு தத்தம் தகுதிக்கேற்ற அணிகளைவிதம் விதமாகச் செய்து அணிந்து வந்தனர். எளிய மக்கள் கறுப்பு-சிவப்புக் களிமண்ணால் நகைகள் செய்து சூளையிட்டு, அணிந்து வந்தனர். சிலர் ஒளிக்கற்களால் நகைகள் செய்து மெருகிட்டு, அவற்றில், வித விதமான நிறங்களைத் தீட்டி ஒளி வீசச் செய்து அணிந்துவந்தனர். செம்பு, சலவைக்கல், ஒருவகைக் கருங்கல், சங்கு எலும்பு, களிமண் இவற்றால் ஆன வளையல்கள் மிகப் பல கிடைத் துள்ளன. அவை இக்கால வடுக மகளிர் கால்களில் அணியும் வெள்ளிக் காப்புகளை ஒத்துள்ளன. மண், எலும்பு, சங்கு, சிவப்புக்கல் இவற்றால் ஆன மணிகள் பல கோக்கப்பட்டு மாலைகளாக இருக்கின்றன. அம்மணிகள் புன்னைக்காய் அளவிலிருந்து சுண்டைக்காய் அளவு வரை செய்யப்பட்டுள்ளன. அவற்றுட் சில தட்டையாகவும், சில வட்டமாகவும், சில நீளமாகவும் உள்ளன. எல்லா மணிகளும் இயன்றவரையிற் பளபளப்பாகவே காணப்படுகின்றன.

புதைக்கப்பட்ட நகைகள்

வெள்ளி, செம்பு முதலிய கலன்களில் இந்நகைகளை வைத்து, நிலத்தின் அடியிலும் கவர்களிலும் அப்பண்டை மக்கள் ஒளித்து வைத்திருந்தனர். இதனால், அம்மக்கள் தங்கள் நகரத்திற்கு உண்டாக இருந்த அழிவை எண்ணி இங்கினம் அணிகளை மறைத்து வைத்தனர் என்பதும், அச்சம் நீங்கிய பின்னர் வந்து அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என எண்ணினர் என்பதும், வெளியாம். ஆனால், அவர்கள் எண்ணியபடி திரும்பிவரக் கூடவில்லை போலும்!

புதையுண்ட வெள்ளிக் கலன்கள்

ஒரு வீட்டின் அடியில் தோண்டி எடுக்கப்பட்ட அணிகளுள் வெள்ளிப் பாத்திரம் என்று குறிப்பிடத்தக்கது. அதனுள் கழுத்து மாலைகள் பலவும், கடினமான உயர்தர மணிகள் பலவும் இருந்தன. அவ்வெள்ளிக் கலன் புதையுண்டிருந்த இடத்தில் வேறுபல அணிகள் மண்ணுள் புதையுண்டு கிடந்தன. அவற்றை எடுத்த இராய்பகதுர் தயாராம் சஹ்னி என்பவர், இந்த வெள்ளிக் கலனும் இதைச் சுற்றிப் பூமியிற் புதையுண்டு கிடந்த அணிகளும் ஒரு பருத்தித் துணியில் கட்டப்பட்டுப் புதைக்கப் பட்டிருத்தல் வேண்டும். அத்துணி அழிந்த பின்னர் இவை இங்ஙனம் மண்ணுள் புதையுண்டன என்று கூறியுள்ளார்.

பிறிதோர் வீட்டின் அடியில் இராய்பஹதூர் தீக்ஷஜித் என்பார் வெள்ளிக் கலன் ஒன்றைக் கண்டெடுத்தார். அதனுள் கழுத்து மாலைகளும் பளபளப்புள்ள கல்மணிகளும் உலோகத்துண்டுகளும் பொன்னாற் செய்யப்பட்டதலை நாடாக்களும் இருந்தன.

புதையுண்ட செம்புக் கலன்

வேறோர் இடத்தில் செம்ப்க் கலன் ஒன்று புதையுண்டு கிடந்தது.அதற்குள் தங்கக்கொண்டைஊசிகள், பெரிய வெள்ளிக் காதணிகள், சிவப்புக் கல் மணிகள், பிற அணிகலன்கள் இருந்தன. அந்தச் செம்புப் பாத்திரத்திற்கு உரிய முடியும் அகப்பட்டது. அம்மூடி கைப்பிடி கொண்டதாகக் காணப்படுகிறது.ஹரப்பாவில் ஆராய்ச்சி நடத்திய அறிஞர் வாட்ஸ் என்பார் பல நகைகளைக் கண்டெடுத்தார். அவற்றுட் பெரும்பாலன மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தவற்றை ஒத்திருந்தன. சில எங்குமே காணப்படாத வேலைப்பாடு பொருந்தியவையாக உள்ளன. அங்குக் கிடைத்த நகைகளும் தரையின் அடியில் புதையுண்டு கிடந்தனவே ஆகும்.

காட்சிக்கினிய கழுத்துமாலை

வெள்ளிப் பாத்திரம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நகைகளுள் கழுத்து மாலை ஒன்றே சிறப்பித்துக் கூறத்தக்க வேலைப்பாடு கொண்டது. அது பொன்னாலும் பச்சைக் கற்களாலும் செய்த மணிகள் கோக்கப்பட்டு நீண்ட அணிவடமாகக் காட்சியளிக்கிறது. தங்க மணிகள் தட்டையாகச் செய்யப்பட்டு அவற்றின்மீது குமிழ்கள் பற்றவைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி போன்ற கடினமான பச்சைக் கற்கள் பீப்பாய் வடிவில் செய்யப்பட்டிருந்தன. ஒரு பொன்மணியும் அடுத்து ஒரு பச்சை மணியுமாக அம்மாலை கோக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் ‘கடுத்தக்கல்’ என்னும் ஒருவகை வைடுரியத்தாலும், சூரிய காந்தம்’ எனப்படும் இரவைக் கல்லாலும் செய்யப்பட்ட ஏழு பதக்கங்கள் கோத்துத் தொங்கவிடப்பட்டுள்ளன. அதில் உள்ள பச்சைக்கல் வட பர்மாவிலும் திபேத்திலும் கிடைத்தலால், அவற்றுள் ஒன்றிலிருந்தே கொண்டுவரப்பட்டிருத்தல் வேண்டும்.[3]

மற்றும் இரு கழுத்து மாலைகள்

வேறொரு கழுத்து மாலையில் குழவி வடிவத்திலும் உருண்டை வடிவத்திலும் செய்யப்பட்ட தங்க மணிகளும், நீலப் பளிங்குக் கல்லாற் செய்யப்பட்ட மணிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பளிங்கு மணிகளுட் சில இன்றும் நிறங்குன்றாமல் பளபளப்பாகவே இருக்கின்றன. மற்றொரு மாலையில், தங்கத்தால் தட்டையாகச் செய்யப்பட்டு இரண்டு மணிகளைத் சேர்த்துப் பற்றவைத்துள்ளவை நீளமாகக் கோக்கப் பட்டுள்ளன. இவை போன்ற மணிகள் பாபிலோனியா, எகிப்து, ட்ராய் முதலிய இடங்களிலும் கிடைத்தன. இவ்வெழில் மிக்க அணிவடங்களின் வேலைப்பாட்டைக் கொண்டு அக்கால மக்களின் சிறந்த அறிவை நன்குணரலாம்.

ஹரப்பாவில் கிடைத்த கழுத்து மாலைகள்

ஹரப்பாவில் கிடைத்த மாலைகள் பலவாகும். அவை அனைத்தும் வியத்தகு வேலைப்பாடு கொண்டவை. 240 மணிகள் கோக்கப்பட்ட நான்கு சாரங்கள் கொண்ட மாலை, 27 தங்க மணிகள் பற்பல வடிவிற்செய்து கோக்கப்பட்டமாலை, பலவகை வடிவிற் செய்யப்பட்ட 70 தங்கமணிகள் கொண்ட மாலை, பலவகைக் கல்மணிகளும் பொண்மணிகளும் கோக்கப்பட்ட மாலை எனப் பலகை மாலைகள் கிடைத்துள்ளன. அவை இடையிடையே 7 பதக்கங்கள் முதல் 13 பதக்கங்கள் வரை கோக்கப்பட்டுள்ளன. இரத்தினக் கற்களால் ஆன மூன்று மாலைகளும் கிடைத்துள்ளன. சுருங்கக் கூறின், இத்துணை விதவிதமான மாலைகள் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தில. கழுத்தை இறுக்கிய முறையில் அணியப்படும் அட்டிகையும் அக்காலத்தில் இருந்தது. ஆடவரும் கழுத்துமாலைகள் அணிந்திருந்தனர் என்பது அறியத்தக்கது.[4]

அழகொழுகும் இடைப்பட்டைகள்

பிற நகைகளில் இடுப்பில் அணியப் பயன்படும் இடைப்பட்டைகளே (ஒட்டியாணங்களே) சிறப்பானவை. இவை பண்பட்ட வேலைப்பாட்டுடன் கூடியூவை. இவற்றுள் இரண்டேகுறிப்பிடத்தக்கவை; ஒவ்வொன்றும் ஆறு சரங்களைக் கொண்டது. ஒவ்வொரு சரத்திலும் பீப்பாய் போலச் செதுக்கப் பட்ட சிவப்புக்கல் மணிகள் கோக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மணியும் 12 செ. மீ. நீளம் இருக்கிறது. இச்சிவப்பு மணிகட் கிடையே வெண்கலமணிகளும் கோக்கப்பட்டுள்ளன. இவை உருண்டையாயும் மலர் மொட்டுகள் போலக் குமிழாகவும் செய்யப்பட்டுள்ளன. இவையன்றி வெண்கலச் சதங்கைகளும் முத்துக்களும் கோத்த இ ைப் பட் ைகளும் சில கிடைத்தன. இவை செந்நீல நிறத்துடனும் கண்கவர் வனப்புடனும் காணப் படுகின்றன. இப்பட்டைகளின் முடிவில் முகப்புகள் உள்ளன. அவை வெண்கலத்தாற் செய்யப்பட்டு, ஆறு சரங்களைக் கோத்தற்கு ஏற்றவாறு ஆறு துளைகளுடன் காணப்படுகின்றன. இவ்விடைப் பட்டைகள் களிமண் பதுமைகளிற் காணப்படும் இடைப்பட்டைகளைப் பெரிதும் ஒத்துள்ளன. ஒவ்வொன்றும் 100 செ. மீ. நீளம் இருக்கின்றது. இவற்றில் உள்ள கடினமான சிவப்புக் கற்கள் நன்கு மெருகிடப்பட்டுள்ளன. இவை ‘குருந்தக் கல்’ கொண்டு மெருகிடப்பட்டன என்று அறிஞர் அறைகின்றனர்.

துளை இட்ட பேரறிவு

மெருகிடப்பட்டமணிகளின் நடுவில் சரடு நுழைவதற்காகத் துளைகள் இடப்பட்டுள்ளன. அத்துளைகள் மிக்க ஒழுங்குடன் அமைந்துள்ளன. மணிகளின் இரண்டு பக்கங்களும் துளையிடப் பட்டுள்ளன. எல்லாத் துளைகளும் ஒரே அளவில் அமைந் திருத்தலே வியப்புக்குரியது. இங்ஙனம் திருத்தமான முறையில் துள்ையிடுவதற்கென்று அப்பேரறிஞர் பயன்படுத்திய நுட்பமான கருவி யாதென்பது விளங்கவில்லை. அங்குக் கிடைத்துள்ள செம்பாலான நுட்பமான துளையிடும் கருவிகளே இவ்வற்புத வேலைக்குப் பயன்பட்டிருக்கலாம். இவ்வற்புத வேலைப்பாடு அவ்வறிஞர் தம் நுண்ணறிவை நன்கு விளக்குவதாகும்.

ஆறு சரங்கொண்ட அழகிய கையணி

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த காப்புகள், வளையல்கள் முதலிய கையணிகளுள் சிறப்பித்துக் கூறத்தகுவன சில உள. அவையே உருண்டையான தங்கமணிகளை ஆறு சரங்களாகக் கோத்துச் செய்யப்பட்ட கையணிகள் ஆகும். உருண்டை மணிகட்கு இடையே தட்டையான தங்க மணிகளும் கோக்கப்பட்டுள்ளன. சரங்கள் முடியும் இடத்தில் அரைவட்ட வடிவில் தங்கத்தகட்டால் ஆன முகப்புகள் காணப்படுகின்றன. இவை போன்றவை ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.

உள்ளே அரக்கிட்ட காப்புகள்

கையணிகளில் பலவகை இருக்கின்றன. தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், பளிங்கு வெண்கல், கறுப்புக்கல், சங்கு, சிப்பி, களிமண் முதலியவற்றால் கையணிகள் செய்யப்பட்டுள்ளன. சில காப்புகளில் உட்புறம் அரக்கும் அரக்குப்போன்ற வேறொரு பொருளும் உருக்கி ஊற்றப்பட்டன என்பது தெரிகிறது. ஹரப்பாவில் பல காப்புகள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று முற்றும் செம்பினால் ஆனது ஒன்று உள்ளே அரக்கிடத்தக்கதாக வெள்ளியால் செய்யப்பட்டது. ஹரப்பாவில் தங்கக் கடகங்களும் கிடைத்துள்ளன.

பலவகைப்பட்ட வளையல்கள்

செம்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட கையணிகள், இப்போது செய்யப்படும் தங்க வளையல்கள் போலக் காட்சி அளிக்கின்றன. இவற்றுள் சில உருண்டையாகவும் சில தட்டையாகவும் செய்யப்பட்டுள்ளன. சில வளையல்களில் இரண்டு முனைகளும் பொருந்தியுள்ளன; சிலவற்றுள் வாய் விரிந்து காணப்படுகின்றது. சிப்பியால் செய்யப்பட்ட வளையல்கள் அகலமாக இருக்கின்றன. சிப்பித் துண்டுகள் இரண்டு மூன்று நூலால் இணைக்கப்பட்டுக் கைகளில் அணியப்பட்டன. பளிங்கு வளையல்கள் சிலவே காணப்படுகின்றன. அவை சிறிய பட்டாடையாகவும், பெரிய பட்டாடையாகவும் செய்யப்பட்டுள்ளன. களிமண் வளையல்கள் மிக்க கவனத்துடன் செய்யப்பட்டுச் சிறந்த முறையில் சூளையிடப்பட்டுள்ளன. இவற்றைச் செய்யப் பயன்பட்ட களிமண் மிகவும் உயர்ந்ததாகும் என்பது அறிஞர் கருத்து.

ஒவியம் திட்டப்பட்ட வளையல்கள்

களிமண் கொண்டு செய்யப்பட்ட வளையல்கள் வெவ்வேறு நிறங்களுடனும் ஒவியங்களுடனும் காணப்படுகின்றன. சில வளையல்கள் மீது புள்ளிகள் இடப்பட்டுள்ளன. இத்தகைய களிமண் வளையல்களை ஏழைப் பெண்மணிகளே அணிந்திருந்தனர் போலும்! இக்காலத்தும் ஏழை மாதர் செம்பு, வெண்கலம், பித்தளை, கண்ணாடி முதலியவற்றாற் செய்யப்படும் வளையல்களை அணிந்துள்ளனர் அல்லவா? இவர்களைப் போலவே, அக்கால ஏழை மகளிரும் இவற்றாலாய அணிகளை அணிந்தனர் என்று கோடல் பொருத்தமாகும்.

கால் காப்புகள்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த காப்பு வகைகளிற் கைக்குப் பயன்பட்டவை இவை, காலிற்குப் பயன்பட்டவை இவை, என்று உறுதியாகக் கூறுதற்கு இல்லை. ஆயினும், சில பதுமைகளின் கால்களில் வளைந்த கோணல் காப்புகள் இருப்பதாகத் தெரிவதால், அப்பழங்காலப் பெண்டிர் கால் காப்புகளை அணிந்திருந்தனர் என்று கூறுதல் தகும். இத்தகைய கால்காப்புகளையே சிம்லாவைச்சூழவுள்ள மலைப்பிரதேசத்தில் வாழும் பெண்டிர் அணிந்து வருகின்றனர். மேலும் கிரீட் தீவில் கண்டெடுக்கப்பட்ட மங்கிய உருவம் ஒன்றின் கால்களிலும் இத்தகைய கோணற்காப்புகள் காணப்படுகின்றன.[5] இவை போன்ற காப்புகளையே இன்றும் வடுக மகளிர் கால்களில் அணிகின்றனர்.

நெற்றிச் சுட்டிகள்

வட்டமாக முக்கோண வடிவத்திற் கூம்பியனவாகச் செய்யப்ட்டுள்ள நகைகள் சில மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.இவைகுழந்தைகளின் நெற்றியில் தொங்கவிடப்படும் பதக்கங்கள் போலக் காண்கின்றன. இவை, பஞ்சாபிலும் மார்வாரிலும் உள்ள பெண்கள் தலையைச் சுற்றிப் பொன் நாடா ஒன்றைக் கட்டி, அதிற் கோத்து அணியும் சுட்டி போலவே காணப்படுகின்றன. இச்சுட்டிகள் 5 செ. மீ. சுற்றளவுடனும் 6.10 செ. மீ. உயர்த்துடனும் காணப்படுகின்றன. இவை பொன், வெள்ளி, செம்பு, பீங்கான் முதலியவற்றால் செய்யப்பட்டுள்ளன. இவை தலைமயிருடன் இணைப்பதற்கும் நாடாவிற் கோப்பதற்கும் ஏற்றவாறு துளையுடன் கூடி இருக்கின்றன. சிப்பிகளில் மூன்று நான்கு அழகிய துண்டுகளைப் - பொருத்தியும் இத்தகைய சுட்டிகள் செய்யப்பட்டுள்ளன. இச்சுட்டிகளைக் கொண்ட களிமண் பதுமைகள் நிரம்பக் கிடைத்தமையால், இவை தலையணிகளே என்பது வெள்ளிடை மலை. இக்காலத்தில் ‘நெற்றிச்சுட்டி’ என்று சொல்லப்படுவதும் நம் பெண்களால் தலையில் அணியப்படுவதுமாகிய தலை யணியைப் போன்றனவே இச்சுட்டிகள் எனல் ஒருவாறு பொருந்தும். இம்மாதிரியுள்ள சுட்டிகள் பல ஹரப்பாவில் கிடைத்துள்ளன. அவை நெற்றி முதல் உச்சித்தலை வரை ஒன்றன் பின் ஒன்றாக வைத்துக் கூந்தல்மீது அலங்கரிக்கப்பட்டன. இங்ஙனம் அலங்கரிக்கப்பட்ட நிலையில் சில பதுமைகள் காணப்படுகின்றன. இச்சுட்டிகள் பல பொன்னால் இயன்றவை: அடிப்புறம் கூந்தல் இழைகள் நுழையத் தக்கபடி வெள்ளி இணைப்புடன் விளங்குகின்றவை. இவற்றுள் ஒன்று 3 செ. மீ. உயரமும் அடிப்பாகத்தில் 4 செ.மீ. அகலமும் உடையது.[6]

காதணிகள்

சில களிமண் பதுமைகள் காதணிகளுடன் இருக் கின்றன.அவற்றால், அக்கால மகளிர் பலவகையான காதணிகளை அணிந்து வந்தனர் என்பதை அறியலாம். சில காதணிகள், தங்கச் சுருள் போலக் காணப்படுகின்றன. சில சிறு குழாய்களையுடைய குமிழ்போலச் செய்யப்பட்டவை. அவை, காதுகளில் உள்ள துளைகளிற் செலுத்தப்பட்ட பின்னர் மற்றொரு துண்டு வைத்துத் திருகாணி போலப் பொருத்திவிடத் தக்கவாறு அமைந்துள்ளன. இவை தங்கத்தாற் செய்யப்பட்டவை; சிறிது கூம்பிய கோபுர. வடிவுடன் காணப்படுகின்றன. இக்கூம்பிய பகுதியிற்றான் குழாய் வைத்துப் பற்றவைக்கப்பட்டுள்ளது. வேறு சில காதணிகள் தங்கத்தால் வளையங்களாகச் செய்யப்பட்டுள்ளன. இவை, தமிழ்நாட்டு மகளிர் வடிகாதுகளில் அணிந்து கொள்ளும் வளையங்களாகக் காட்சி அளித்தல் கவனிக்கத் தக்கது.

மூக்கணிகள்

ஒரங்களிற் பற்களைக் கொண்ட சக்கரம் போன்ற தங்கத்தகடுகளும் பிறவும் அக்கால மூக்கணிகளாகப் பயன்பட்டன என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். ஆயின், தீக்ஷித் என்பவர், ‘மூக்கணிகள் அப்பண்டைக் காலத்தில் இருந்தன என்று உறுதியாகக் கூறக்கூடவில்லை. என்னை? களிமண் பதுமைகளுள் ஒன்றிலேனும் மூக்கணிக்கு உரிய அடையாளம் இன்மையின் என்க. மேலும் கி.பி.1200-க்குப் பின்னரே மூக்கில் துளையிடும் வழக்கம் முஸ்லிம்களால் இந்நாட்டிற் புகுத்தப்பட்டது’[7] என்று அறிவிக்கிறார். ஆனால், அறிஞர் சி. ஆர். இராய் என்பார், ‘சிந்துப் பிரதேச மகளிர் மூக்கணிகள் அணிந்திருந்தனர். அவ்வணிகள் காதில் உள்ள தோடுகளுடன் பொற்சங்கிலியால் இருபுறமும் இணைக்கப்பட்டிருந்தன’,[8] என்று கூறுகிறார். ‘சிந்துப் பிரதேச மகளிர் நீலக் கல் பதித்த முக்கணிகளை அணிந்திருந்தனர் எனக் கூறலாம்’ என்று பாட்ரிக் கார்லிடன் என்பார் அறிவிக்கிறார்.[9] சிந்துப்பிரதேச ஆராய்ச்சிக்கென்றே சிறப்பான ஆராய்ச்சியாளராக இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டாக்டர் மக்கே என்பவர், ‘அக்கால மாதர் மூக்கணிகளைப் பயன்படுத்தினர்; நீல நிறமுடைய பீங்கான் துண்டுகளையும் பயன்படுத்தினர்; ஒருவகை நீல அரக்கில் மேற்புறம் தட்டையாகச் செய்தோ, கற்கள், உலோகத் துண்டுகள், ஒவியங்கொண்ட துண்டுகள் முதலியவற்றைப் பொருத்தியோ மூக்கணிகளைப் பயன்படுத்தினராதல் வேண்டும்’ என்று துணுக்கமாக ஆராய்ந்து கூறுகின்றார்.[10] ‘ஹரப்பா நகரத்து மகளிர், சுற்றிலும் பற்களைக் கொண்ட சக்கரம் போன்ற அழகிய சிறிய தகடுகளை மூக்கணிகளாகப் பயன்படுத்தினர் என்று அறிஞர் வாட்ஸ் வரைந்துள்ளார்.[11]

மோதிரங்கள்

மோதிரங்கள் பலவாகக் கிடைத்துள்ளன. சில, கம்பிகளாகச் செய்து பட்டையாகத் தட்டப்பட்டுள்ளன. பல, உலோகத்தைச் சுருட்டி வைத்து மோதிரமாக அடித்துச் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான மோதிரங்கள் செம்பு, வெண்கலம், சங்கு சிப்பி இவற்றால் செய்யப்பட்டுள்ளன. ஹரப்பாவில் தங்கமோதிரம் ஒன்றும் வெள்ளி மோதிரம் ஒன்றும் கிடைத்தன. ஒரு மோதிரம் சதுர முகப்பு வைத்துச் செய்யப்பட்டுள்ளது. அம்முகப்பின் மீது குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. பீங்கான் மோதிரம் ஒன்றும் ஹரப்பாவில் கிடைத்தது.

பொத்தான்கள்

செம்பு, வெண்கலம், பீங்கான், மாக்கல் முதலியவற்றால் வட்ட வடிவத்தில் செய்யப்பட்ட பொத்தான்கள் பல கிடைத்துள்ளன. அவை பொதுவாக, மால்ட்டா, போர்ச்சுகல், தென் பிரான்ஸ் முதலிய நாடுகளிற் கிடைத்த பண்டைக் காலப் பொத்தான்களை ஒத்துள்ளன. அவை தட்டையாகச் செய்து சட்டை மீது பொருத்தித் தைப்பதற்கேற்றவாறு இரண்டு துளைகள் இடப்பட்டுள்ளன. உலோகத்தால் ஆன பொத்தான்கள் முன்புறம் குமிழாகச் செய்யப்பட்டு, அடியில் இரண்டு துளைகள் இடப் பட்டுள்ளன. சில பொத்தான்கள் பிறை வடிவத்தில் செய்யப் பட்டுத் துணியில் இணைத்துத் தைத்துக் கொள்ளத்தக்க வசதியுட்ன் காணப்படுகின்றன. ஹரப்பாவில் வெள்ளிப் பொத்தான்கள் சில கிடைத்துள்ளன. அவற்றின் நடுவே சிப்பித் துண்டுகள் அழகாக வைத்துப் பதிக்கப்பட்டுள்ளன. அவை பார்வைக்கு எழில் மிகுந்து காணப்படுகின்றன.

தலை நாடாக்கள்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த சில களிமண் பதுமைகள் வாயிலாக, அக்கால மக்கள் தலையில் ஒரு வகை நாடாவைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருந்தனர் என்பது வெளி யாகிறது. அக்கால ஆடவரும் பெண்டிரும், அந்நாடாக்களைப் பயன்படுத்தினர். இப்பழக்கம் சுமேரியரிடையும் மிகுந்திருந்தது. அந்நாடாக்கள் சுருணைகளாகச் சுற்றி வைக்கப்பட்டு, நகைக் குவியல்களுடன் கிடைத்தன. இவற்றுட் சில மங்கிவிடாமலும் உறுதி இழவாமலும் இருக்கின்றன. இவை 1 செ. மீ. அகலத்தில் மெல்லிய தங்கத் தகட்டால் சரிகைபோலச் செய்யப் பட்டுள்ளன. சில நாடாக்கள் 40 செ மீ நீளமாக இருக்கின்றன. அந்த நாடாக்களின் இருமுனைகளும் துளையிடப்பட்டு, இழுத்துக் கட்ட வசதி உடையனவாக இருக்கின்றன. சிலவற்றில் ஒருபுறம் முழுவதும் வரிசையாகத் துளையிடப்பட்டுள்ளது. இத்துளைகளில் பிற அணிகள் ஏதேனும் மாட்டித் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.[12] சுமேரியர் இத்தகைய நாடாக்கள் மீது விலங்குகளின் சித்திரங் களையும், வெறும் புள்ளிகளையும் தீட்டிப் பயன்படுத்தி வந்தனர்.

கொண்டை ஊசிகள்

ஆடவரும் பெண்டிரும் கூந்தலைக் கோதிக் கொண்டை இடுவுதும் சுருட்டிக் கட்டிக் கொள்வதும் வழக்கம். அக்கட்டுகள் நெகிழ்னமல் இருக்கக் கொண்டைஊசிகள் பயன்பட்டன. அங்குக் கிடைத்த படிவங்களைக் காண்கையில், அம்மக்கள் பலதிறப்பட்ட கொண்டை ஊசிகளைப் பயன்படுத்தினர் என்பது தெளிவாம். சிதறுண்ட ஊசிகள் பல கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் சிறப் புடையது வெண்கலக் கொண்டை ஊசி ஒன்றே ஆகும். அது 11 செ. மீ. நீளம் இருக்கிறது. அதன் உச்சியில் இரண்டு கறுத்த கலைமான் தலைகள் வெவ்வேறு திசையை நோக்குவனவாய் அமைந்துள்ளன. அக்கலைமான்களின் கொம்புகள் அழகுற முறுக்கிக் கொண்டிருப்பனபோலச் செய்யப்பட்டுள்ளன. மற்றொரு வெண்கல ஊசியில் சுருண்ட கொம்புடைய தலை ஒன்று காணப்படுகிறது. இவ்வகை ஊசிகள் சுமேரியர், எகிப்து, காகஸஸ், நடு ஐரோப்பா ஆகிய இடங்களிற் கிடைத்த ஊசிகளைப் போலவே இருக்கின்றன. தந்தம், எலும்பு முதலியவற்றால் ஆன கொண்டை ஊசிகளும் கிடைத்துள்ளன.சில ஊசிகள் தலைப்புறம் மட்டும் உலோகத்தாலும், குத்திக்கொள்ளும் பகுதி மரத்தாலும் செய்யப்பட்டுள்ளன. ஆயின், அவற்றின் தலைப்பகுதியே கிடைத்தது. மரப்பகுதி அழிந்துவிட்டது. இவ்வாறு கிடைத்த தலைப்பகுதி ஒன்று 1 செ. மீ. உயரம் இருக்கின்றது; அதன்மீது மூன்று குரங்குகள் தோள்களிற் கைகோத்துக் கொண்டு சுற்றி உட்கார்ந்திருப்பனபோலச் செய்யப்பட்டுள்ளன. மற்றொன்றின் தலைப்புறம் வெண்கல்லால் ஆனது. அஃது, இரண்டு குரங்குகள் ஒன்றை ஒன்று அணைத்துக்கொண் டிருப்பனபோலச் செய்யப்பட்டுள்ளது. மற்றுஞ் சில தலைப் புறங்கள் தாமரை வித்துகள் போலவும், வேறு பலவகையாகவும் செய்யப்பட்டுள்ளன.

சமயத் தொடர்புள்ள பதக்கம்

கழுத்து மாலைகளில் கோக்கப்பட்டன போல இன்றித் தனிப்பட்ட வேலைப்பாடு கொண்ட பதக்கம் ஒன்று மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளது. இது 7 செ. மீ. நீளமும் 6 செ.மீ அகலமும் உள்ளது; வட்ட வடிவமானது. இது வெண்மை கலந்த மஞ்சள் நிற மாக்கல்லில் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது பிறை போலச் செதுக்கப்பட்டுள்ளது. இப்பிறையில், ஒற்றைக் கொம்புடைய எருதின் உருவம் காணப்படுகிறது. அதன் எதிரில் தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது; பிறையின் முனைகள் சேருமிடத்தில் ஏதோ ஒன்று தொங்குதல் போலக் காணப்படுகிறது. இப்பதக்கத்தில் செதுக்கு வேலை நிரம்பியுள்ளது. இதனுள் பலநிறச் சாந்துகள் அப்பியிருத்தல் கூடியதே. இப்பதக்கம் தங்கத் தகட்டில் வைத்துப் பதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அத்தகட்டின் தலைப்புறத்தில் மாட்டிக்கொள்ளத் தக்கபடி வளையம் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இது சமயத் தொடர்புடைய பதக்கமாக இருத்தல் வேண்டும்.[13]

பலவகைக் கற்கள்

சிந்துப்பிரதேசத்திற் கிடைத்த பலவகைக் கையணிகள், கழுத்து மாலைகள், இடைப்பட்டைகள், மோதிரங்கள் இன்னபிற அணிகளில் பதிக்கப்பட்டுள்ளவையும் தனியே கிடைத்துள்ளவை யுமான பலவகை வியத்தகு மணிகள் யாவை? அவை இரவைக் கற்கள், சிவப்பு, மஞ்சள், நீலம், சூரிய காந்தக் கற்கள், வைடுரியம், இரத்தினக் கற்கள், தூய்மை செய்யப்படாத வைடூரியம், கோமேதகம், இரத்தம் போன்ற செந்நிறமுடைய மாணிக்கம், வயிரம், பாம்புக்கல், கூரிய ஒருவகைக் கற்கள், ‘அமெஸான்’ எனப்படும் ஒருவகைப் பச்சைக் கல், வேறு (பல்வேறுபட்ட) கற்கள்,[14] ஸ்படிகம், உலோகக் கலவைக்கல், பளிங்குக்கல் முதலியன ஆகும். நீலம் ஒன்றைத் தவிர, பிற கல் வகைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானம், காஷ்மீர், திபேத், வடபர்மா, பிற இந்திய மண்டிலங்கள் ஆகிய பல இடங்களிலிருந்தே வரவழைக்கப்பட்டவை.

இக் கல்மணிகள் இன்றிச் சங்கு, சிப்பி, பீங்கான், களிமண் முதலியவற்றாலும் மணிகள் செய்து பயன்படுத்தப்பட்டன.

மணிகள் செய்யப்பட்ட விதம்

சிந்துப் பிரதேச மக்கள் கற்களைச் சோதித்து அவற்றின் தன்மைக்கேற்ற முறையில் உருவாக்கி வழவழப்பாகத் தேய்தது மெருகிட்டுள்ளனர் இவ்வேலைப்பாட்டிற்குத் தேவைப்பட்ட கடைச்சல் இயந்திரங்கள் அவர்களிடம் இருந்திருத்தல் வேண்டும். அவை இன்றேல், இவ்வேலைப்பாடுகள் கற்களில் காணப்படா. கற்கள் உருவாக்கப்பட்ட பின்னரே நுண்ணிய கூர்மையான கருவிகளைக் கொண்டு துளையிடப்பட்டன. அங்குக் கிடைத்த பல மணிகள் துளையிடப்படாமல் இருப்பதைக்கொண்டு இங்ஙனம் கருதப்படுகிறது. அத்துளையிடப்படாத கற்கள் மொஹெஞ்சொ-தரோவின் இறுதிக் காலத்தினவாதல் வேண்டும். வேலை முடிவதற்குள் நகரம் துறக்கப்பட்டுவிட்டது. அம்மக்கள், சில சந்தர்ப்பங்களில் இரண்டு மூன்று வகையான கற்களை ஒட்ட வைத்து, அவற்றின் மணிகளைக் கடைந்திருக்கின்றனர். இத்தகைய மணிகளே மிக்க வேலைப்பாட்டுடன் காணப்படுகின்றன. இவ்வாறு பீப்பாய் போன்ற 1செ.மீ நீளத்தில் உள்ள மணி ஒன்று சிவப்பு, வெள்ளை, நீலம் முதலிய நிறங்களைக் கொண்ட ஐந்துவிதக் கற்களை ஒட்டவைத்துச்செய்யப்பட்டுள்ளது. ஆயின், இம்மணியைப் பார்த்தவுடன் இதன் கலப்பை உணர்ந்து கூறுதல் இயலாது எனின், இதன் வேலைப்பாட்டை என்னென்பது! இம்மணி இப்பொழுது உடைந்து கிடப்பதால் இதன் மர்மம் வெளிப்பட்டது. கோமேதகமோ என்று ஐயுறத்தக்கவாறு ஒரு மணி கிடைத்துள்ளது. அஃது ஒருபுறம் சிப்பி, மற்றொரு புறம் சற்றுச் சிவந்த சுண்ணக்கல் ஆகியவை கொண்டு பக்குவப்டுத்திப் போலிக் கோமேதக மணியாகச் செய்யப்பட்டுள்ளது வியத்தற் குரியதே இத்தகைய போலி மணிகள் மற்ற மணிகளைவிடச் சிறந்தனவாகக் காணப்படுகின்றன. இவை போன்ற போலி மணிகள் ‘நினவெஹ்’ என்னும் இடத்திலும் கிடைத்தன என்று அறிஞர் காம் பெல் தாம்சன் கூறுகின்றார்.

ஒவியம் அமைந்த மணிகள்

அறிஞர், ஒவியங்கொண்ட மணிகளே மிக்க சிறப் புடையவை என்று கருதுகின்றனர். சிவப்புக் கல்லில் பட்டை மணிகள், செய்து, அவற்றின்மீது வெள்ளை நிறங்கொண்ட சித்திரங்களைத் தீட்டித் தீயிலிட்டு, அச்சித்திரங்களைப் பதியச் செய்யும் முறை கையாளப்பட்டது. இத்தகைய மணிகள் பல மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளன. இவைபோன்ற பல, உர் நகரத்து அரச பர்ம்பரையினர் சவக்குழிகளிலிருந்து எடுக்கப் பட்டன. அவை அளவிலும் உருவிலும் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த மணிகளை ஒத்துள்ளன. எனவே, இம்மணிகள் சிந்து வெளியிற் செய்யப்பட்டனவா? சுமேரியாவிற் செய்யப்பட்டனவா? அன்றி வேறெங்கேனும் செய்யப்பட்டனவா? துணிந்து கூறுதற்கு இயலவில்லை. ஆயின், இம்மணிகள் சிந்து வெளியிற் கிடைத் திருப்பதாற்றான் இவற்றின் காலமும் சுமேரியரின் உயர் நாகரிகக் காலமும் ஒன்றெனக் கூறவும், அக்காலம் கி.மு. 3250 - கி.மு. 2750 என முடிவு கட்டவும் வசதி ஏற்பட்டது. மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த இம்மணிகள் போன்றனவும், 8 போன்ற அமைப்புடைய சிவப்பு மணிகள் சிலவும் சான்ஹு-தரோவில் கிடைத்தன. பின்னர்க் கூறப்பட்ட மணிகள் வெண்ணிற ஒவியங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு மணியும் 2 செ. மீ. உயரம் இருக்கின்றது. அங்கு, வெண் மணிகள் மீது செந்நிறம் தீட்டி, வெண்ணிற ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ள மணிகளும் சில கிடைத்துள்ளன.

பட்டை வெட்டப்பட்ட மணிகள்

மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் பட்டை வெட்டப்பட்ட மணிகள் கிடைத்துள்ளன. இத்தகைய மணிகள் எகிப்தைத் தவிர வேறு எந்நாட்டிலும் கிடைத்தில; எகிப்திலும் பிற்கால உரோமர் தம் கல்லறைகளிலேயே கிடைத்தன. இவை ஒவிய மணிகள் அல்ல; அறுகோணம், எண்கோணம் என்னும் முறையில் பட்டைகளாக அமைந்தவை.

கற்களிற் புலமை

சிந்து வெளியினர், இங்ஙனம் பல திறப்பட்ட கற்களைச் சோதித்து, அவற்றின் எழில் குன்றாமல் இருக்கும்படி அரிய வேலைப்பாடுகள் செய்து, பலவகை மணிகளாக்கி மாலைகளாகச் செய்தும், வேறு பல உலோகங்களாலான மணிகளுடன் சேர்த்தும், பொன் வெள்ளி முதலியவற்றால் ஆன பலவகை அணிகளிற் பொருத்தமுறப் பதித்தும் அணிந்து வந்தனர். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட அப்பழங்காலத்தில் - இன்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னர் - அப்பெரு மக்கள் கற்களிலும் புலமை சான்றவராக இருந்தனர் எனின், அம்மம்ம! அவர்தம் உயரிய நாகரிகத்தை என்னெனப் புகழ வல்லேம்![15]

'தங்கக் கவசம் கொண்ட மணிகள்'

இம்மணிகளுட் சில மாலையாகக் கோக்கப்பட்ட போது, மணிகளின் இருபுறத்தும் தங்க வில்லைகள் கவசம் போல ஒட்டவைக்கப்பட்டுள்ளன. இன்று நம்மவர் பலர் இம்முறைப்படி உருத்திராக்க மணிகளைக் கோத்து அணிந்துள்ளனர். இப்பழக்கம் ஹரப்பாவில் மிகுதியாக இருந்ததென்று அறிஞர் வாட்ஸ் அறிவிக்கிறார். இது சுமேரியரிடத்தும் இருந்ததாம்.

சீப்புகள்

அப்பண்டை மக்கள் பலதிறப்பட்ட சீப்புகளைப் பயன்படுத்தி வந்தனர்; அவை தந்தம், மாட்டுக்கொம்பு, எலும்பு, மரம் என்பனவற்றால் ஆனவை; பல வடிவங்களில் செய்யப் பட்டவை. அவற்றுள் சில தலையில் செருகிக் கொள்ளவும் பயன் பட்டன. இங்ஙனம் மகளிர் சீப்புகளைக் கூந்தலிற் செருகிக் கொள்ளும் பழக்கம் இன்று பர்மா நாட்டில் இருந்து வருகின்றது. மேனாட்டு மாதர் சிலர் மெல்லிய வளைந்த சீப்புகளை அணிகின்றனர். ஒரு கல்லறையில் இளம் பெண் ஒருத்தியின் மண்டை ஒட்டின் அருகில் இருபுறமும் பற்களைக் கொண்ட அழகிய சித்திரங்கள் தீட்டப்பெற்ற தந்தச் சீப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ‘V’ போன்ற வடிவில் செய்யப்பட்ட சீப்பொன்று மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தது. இது நீண்ட கூந்தலைச் சிக்கின்றிக் கோத உதவியதாகும். இச்சீப்பு நெருங்கிய பற்களையுடையதாய் அழகுறச் செய்யப்பட்டிருந்தமையால், தலையைச் சீவவும் தலையில் வைத்துக் கொள்ளவும் பயன்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். இதுபோன்ற சீப்பு எகிப்தில் ‘படரி’ என்னும் இடத்திற்றான் கிடைத்தது வேறு எங்கும் அகப்படவில்லை.

கண்ணாடிகள்

சிந்து வெளி மக்கள் முகம் பார்க்கக் கண்ணாடிகளாகப் பயன்படுத்தியவை யாவை? அவர்கள் செப்பு-வெண்கலத் தகடுகளை நன்கு மெருகிட்டுப் பளபளப்பாக்கிக் கண்ணாடிக ளாகப் பயன்படுத்திக்கொண்டனர்; அவற்றின் பளபளப்பு மங்கிவிடாமல் இருக்க, ஒரங்களை மடக்கி அரண் செய்திருந்தனர். இங்ஙனம் பகுத்தறிவுடன் செய்யப்பட்ட கண்ணாடிகள் பல அளவுகளை உடையவை; மரக் கைப்பிடிகளைக் கொண்டவை. மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்த சில கண்ணாடிகள் முட்டை வடிவில் அமைந்துள்ளன! சில வட்ட வடிவில் அமைந்துள்ளன. ஒரு கண்ணாடி 22 செ. மீ. உயரம் இருக்கிறது.இத்தகைய கண்ணாடிகள் எகிப்திலும் கிடைத்துள்ளன.

மகளிர் கூந்தல் ஒப்பனை

சிந்து வெளியிற் கிடைத்த பெண் படிவங்களைக் கொண்டு, அக்கால மகளிர் தங்கள் கூந்தலை எவ்வெம் முறையில் ஒப்பனை செய்துகொண்டனர் என்பதை ஒருவாறு உணரலாம். அம்மகளிர் கூந்தலை நன்றாகச் சீப்பிட்டு வாரிப் பின்னி விட்டிருந்தனர். கோதிச் சுருட்டி நாடாவால் கட்டி இடப்புறம் சாய்த்துக் கொண்டைபோலமுடிந்திருந்தனர். கூந்தலைப்பின்னிநாடாவைக் கொண்டு முடிந்திருந்தனர்; கூந்தலைப் பின்னி நாடாவைக் கொண்டு பூப்போல முடிப்பிட்டு, விதவிதமாக (கண்ணன் கொண்டை போட்டிருப்பதுபோல) மேலே தூக்கி முடிந்து, அம்முடிப்புகளில் பெர்ன், வெள்ளி, தந்தம், எலும்பு முதலிய வற்றால் ஆன கொண்டை ஊசிகளைத் தத்தம் தகுதிக் கேற்றவாறு செருகிக் கொண்டனர்; பலவகை நறுமலர்களைச் சூடிவந்தனர். மைந்தர் கூந்தல் ஒப்பனை

ஆடவர் சிலர் தம் சிகையைக் குறுகலாக வெட்டிக் கொண்டிருந்தனர்; சிலர் நீளமாக வளர்த்துச் சுருட்டிப் பின்புறம் முடிந்திருந்தனர்; அது சரிந்துவிடாமல் இருக்கக் கொண்டை ஊசிகளையும் நாடாக்களையும் பயன்படுத்தினர்; சிலர் தலை நடுவில் வடு எடுத்துமயிரை அலை அலையாகச் சீவிவிட்டிருந்தனர். வேறு சிலர் தலைமயிரைக் கோதிச் சுருட்டி உச்சியிற் கட்டிக் கொண்டிருந்தனர். இங்ஙனம் கூந்தலை முடிதல் சுமேரியாவிலும் பழக்கமாக இருந்தது. பொதுவாகச் சிந்துவெளி மக்களின் கூந்தல் அலை அலையாகவும் சுருண்டு சுருண்டும் தொங்கிக்கொண்டிருந்தது என்பது பல பதுமைகள் வாயிலாக அறியலாம். சிலர் கூந்தலைப் பின்னிப் பக்கங்களில் விட்டிருந்தனர்; இப்பழக்கம் பாபிலோனியரிடமும் இருந்ததேயாகும்.[16]

மீசை இல்லா ஆடவர்

சிந்து வெளியிற் கிடைத்துள்ள ஆண் பதுமைகள் பெரும்பாலான தெய்வங்களையோ - தெய்வமன்ன யோகியரையோ குறிப்பன. எனினும், மனிதன் தன்னை உள்ளத்திற்கொண்டே தெய்வங்களின் உருவங்களைச் சமைப்பது இயல்பு. அந்நிலையை நினைந்து ஆராயின், பண்டைச் சிந்து வெளி மக்கள் மீசையை வைத்திலர் தாடி ஒன்றையே வைத்திருந்தனர் என்பதை அழுத்தமாகக் கூறலாம். இத்தாடியும் பல வகையாகக் காணப்படுகிறது. காது முதல் வளர்ந்துள்ள மயிரும் கீழ் உதட்டடியில் வளர்ந்துள்ள மயிரும் ஒன்றாகத் தோற்றமளிக்குமாறு தாடி வைத்திருத்தல் ஒரு முறை; அதை ஒழுங்குபெறக் கத்திரித்திருத்தல் ஒரு முறை: முகவாய்க் கட்டையின் அடியில்மட்டும் சிறிதளவு தாடிவளர்த்தல் மூன்றாம் முறை. அத்தாடியின் நுனி உள்நோக்கி வளைந்திருக்கும் படி விடுதல் நான்காம் முறை. இம்முறைப்படியே சுமேரியரும் தாடிகளை வைத்திருந்தனர்; ஆனால் பலர் நீள வளர்த்துவிட்டிருந்தனர். மீசை வளர்ந்து மேல் உதட்டில் தொடுதலால் உட்கொள்ளும் உணவில் மாசுபடும் என்று எண்ணி, அவ்வறிஞர் மீசையை அடியோடு சிரைத்து வந்தனர் என்றே கருதவேண்டும். சுகாதார முறையில் உறைவிடங்களை அமைத்து வாழ்ந்த அப்பேரறிஞர்கள், உணவிலும் சுகாதார முறையைக் கையாண்டு மீசையை அறவே ஒழித்தனர் போலும்!

இந்த அளவோடேனும் அவர்கள் நின்றனரோ? இல்லை! இல்லை! ஆடவரும் பெண்டிரும் உடலின் பிற பகுதிகளில் வளரும் மயிரையும் களைந்து வந்தனர் என்பது சிந்து வெளியிற் கிடைத்த கணக்கற்ற மழித்தற் கத்திகளைக் கொண்டும் கூர்மையான சிறிய தகடுகளைக் கொண்டும் கூறலாம்’ என்று டாக்டர் மக்கே உரைக்கின்றார்.[17]

கண்ணுக்கு மை

அப்பண்டைக் கால மகளிர் எவ்வகையிலும் இன்றைய மகளிர்க்குப் பின்னிடைந்தவராகத் தெரியவில்லை. அவர்கள் கண்களில் கறுப்பு மை தீட்டிக் கொண்டனர். பெண்டிர் மட்டும் இல்லை. ஆடவரும் மை இட்டுக் கொண்டனர். இருபாலரும் கண்ணுக்கு மை இடச் செப்புக் குச்சிகளையும் பிற மெல்லிய குச்சிகளையும் பயன்படுத்தினர். மகளிர் சிறிய நத்தை ஒடுகளில் குங்குமம் போன்ற செங்காவிப் பொடிகளை வைத்துக்கொண்டு, அவற்றை நெற்றியில் பொட்டிடப் பயன்படுத்தினர். இவை போன்ற நத்தை ஒடுகளைச் சுமேரிய மகளிர் வைத்திருந்தனர். ஆயின், அவர்கள் அவ்வோடுகளில் முகத்திற் பூசும் பொடி வகைகளையே வைத்திருந்தனர்.

முகத்திற்குப் பொடி,

சிந்து வெளி மகளிர் ஒரு வகை வெண்பொடியைத் தங்கள் முகத்திற் பூசி வந்தனர். இப்பொடி மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளது. இதே பொருள் கண்ணுக்கு இனிய மருந்தாகவும் பயன் பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. ‘அரிதாரம் போன்ற ஒருவகைப் பொடியும் முகத்திற் பூசிக் கொள்ளப் பயன்பட்டது. ஒருவகைப் பச்சை மண்ணும் நன்றாய்ப் பொடி செய்யப்பட்டு முகத்திற் பூசப் பயன்பட்டதாம். இப்பச்சை மண் கட்டி கட்டியாக மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளது. இது கண்ணுக்கு மையாகவும், மட்பாண்டங்கள் மீது பச்சை நிறம் பூசவும் பயன்பட்டிருக்கலாம் என்று டாக்டர் மக்கே கருதுகிறார். இதுபோன்ற பச்சை நிறப்பொருளைப் பண்டை எகிப்தியர் கண்ணுக்கே பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு முகத்திற் பொடி பூசிக் கொள்ளும் பழக்கம் பண்டைக் கிரிஸ், சீனம் ஆகிய நாடுகளிலும் இருந்தன.


  1. வெள்ளி என்பது ஆப்கானிஸ்தானத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஈயத்திலிருந்து எடுக்கப்பட்டதாதலின், அவ்வரிய பொருளால் ஆன கலன்கள் அருகியே காணப்படுகின்றன.
  2. வெண் பொன் (Electrum) என்பது நம் நாட்டில் கிடைக்கிறது. இதில் வெள்ளியே மிகுதியாகக் கலந்திருக்கும். இதினின்றும் பொன்னைப் பிரிக்க வகை அறியாத அம்மக்கள், அப்படியே நகைகள் செய்துகொண்டனர்.
  3. Dr.E.J.H.Mackay’s ‘The Indus Civilization’, p. 109.
  4. M.S.Vats’s ‘Excavation at Harappa’, Vol.I. pp. 65,294,298.
  5. Dr.E. Mackay’s ‘The Indus Civilization’, p.117
  6. M.S.Vats’s ‘Excavations at Harappa’, Vol. I, p.64
  7. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the IV’, p.27
  8. His Article on ‘Mohenjo-Daro. In the ‘Indian World’.
  9. ‘His Buried Empires’, p.154.
  10. Dr.E.Mackay’s The Indus Civilization’ p. 115.
  11. M.S.Vat’s ‘Excavations at Harappa’, Vol. I pp.60-64.
  12. இந்நாடாக்களும் முன்சொன்ன தலைச்சுட்டிகளும் தமிழ்நாட்டுத் திருமணங்களில் மணமகள் அணியும் தலையணிகளைப் பெரிதும் ஒத்தனவே ஆகும். இவை மொத்தமாகத் தலைச் சாமான் (தலை அணிகள்) என்று இக்காலத்திற் சொல்லப்படுகின்றன.
  13. Dr.E.Mackay’s The Indus Civilization’, p.110.
  14. Haliotrope, Plasma, Lapis-lazuli, Tachylite, Chalcedony, Napheline-Sodalite. Ibid, p.110.
  15. ஒன்பது வகை மணிகளைச் சோதிப்பதில் பண்டைத் தமிழர் புலமை சான்றவர் என்பதை ‘மதுரைக் காஞ்சி’ முதலிய தொன்னூல்களால் அறிக.
  16. M.S.Vats’s ‘Excavations at Harappa’, Vol. pp.292, 293. Dr.E.J.H.Mackays’ “The Indus Civilization’, pp.104, 105.
  17. His ‘The Civilisation’, p. 120.