மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/17. சிந்துவெளி மக்கள் யாவர்?

விக்கிமூலம் இலிருந்து
17. சிந்துவெளி மக்கள் யாவர்?

இதுகாறும் படித்தறிந்த சரித்திர காலத்திற்கு முற்பட்ட வியத்தகு நாகரிகத்தை வளர்த்துவந்த பண்டைச் சிந்துவெளி மக்கள் யாவர்? இவ்வினாவைக் கேட்பது எளிது விடை அளிப்பது எளிதன்று; எனினும், இது பற்றிப் புதைபொருள் ஆராய்ச்சி யாளர், மண்டைப் புலவர், வரலாற்று ஆசிரியர், மொழிநூற் புலவர் ஆகியவர்கள் தத்தம் அறிவிக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டியவரை ஒருவாறு விடைகண்டுள்ளனர்; அவர் கருத்துகளை ஈண்டுக் காண்போம் :

பண்டைய இந்திய மக்கள்

ஆரியர் என்னும் மக்கள் இனத்தவர் இந்தியாவிற்கு வரு முன்னர் இந்தியாவில் இருந்த பண்டை மக்கள் யார் என்பதை மண்டைப்புலவர், இந்தியாவின் பல பாகங்களிற் கண்டெடுத்த, மண்டை ஒடுகளைக்கொண்டு ஆராய்ந்து அறிவித்துள்ளனர். திருநெல்வேலியைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர், வட இந்தியாவில் உள்ள சியால்கோட் பயனா, மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா, பலுசிஸ்தானத்தில் உள்ள ‘நால்’ என்னும் இடங்களில் பல மண்டை ஓடுகள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு நடத்திய சோதனையில், இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன் நீக்ரோவர், ஆஸ்ட்ரேலியர், மெலனேஷியர், மத்தியதரைக் கடலினர், மங்கோலியர், அல்பைனர் என்பவர் இருந்தனர் என்னும் செய்தி வெளிப்பட்டது.

நீக்ரோவர்

இந்தியாவின் பழைய குடிகள் நீக்ரோவரே ஆவர். இவர்தம் வழியினரே அந்தமான் தீவினர்; தென் இந்தியக் காடுகளில் உள்ள ‘காடர், இருளர்’ இவர்கள் குட்டையானவர்கள்; சுருண்ட மயிரினர்; முதன் முதல் வில்லைத் தோற்றுவித்தவர்கள்.

ஆஸ்ட்ரேலியர்

இவர்கள் நீக்ரோவர்க்கு அடுத்தபடி இந்தியாவிற் புகுந்தவராவர் . இவர்கள் ஆஸ்ட்ரேலியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பது பழைய கொள்கை. இவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து வந்தவர்கள் என்பதே பொருத்தமானது. இவர்கள் நெடுங்காலம் இந்தியாவில் தங்கிவட்டவராவர். முண்டர், கொலேரியர், கொண்டர் முதலியவர்கள் இவ்வினத்தவர்கள். இவர்கள் இன்று இந்தியாவில் உள்ள மலைப் பகுதிகளிலும் காடுகளிலும் வேடர்களாக வாழ்ந்து வருகின்றனர். இன்று இந்தியரிடமுள்ள கருமை நிறத்திற்குக் காரணர் இவரே என்பதை மறத்தல் ஆகாது. பிற்கால ஆரியர் இவர்களைத்தாம் ‘நிஷாதர்’ என்று அழைத்தனர்.

மெலனேஷியர்

மேற்சொன்ன இரண்டு இனத்தவர் கலப்பால் தோன்றிய புதிய இனத்தவரே மெலனேஷியர் என்பவர். இவர்கள் அஸ்ஸாம் - பர்மா எல்லைப்புறங்களிலும் நிக்கோபர் தீவுகளிலும் மலையாளக் கரையிலும் இருக்கின்றனர். பினங்களை எறிந்துவிடும் பழக்கம் இவர்களிடமே தோற்றமெடுத்ததாதல் வேண்டும்.

மத்தியதரைக் கடலினர்

இவர்கள் ஆஸ்ட்ரேலியா மக்கட்குப்பின் இந்தியாவிற் குடிபுகுந்தவர் ஆவர். இவர்கள் பலமுறை அணி அணியாகவந்தவர் ஆவர். முதலில் வந்தவர் கங்கைச் சமவெளியில் இருந்த ஆஸ்ட்ரேலியருடன் கலந்து, அவர்களது மொழியை மாறுதல் பெறச் செய்தனர்; தங்கள் கூட்டு மொழியை ஆஸ்ட்ரேலியரைப் பேசச் செய்தனர். இம்மக்கள் நீர்ச்செலவு, பயிரிடல், கற்கருவிகள் இவற்றை இந்தியாவில் தோற்றுவித்தனர். இவர்கட்குப் பின்னர் இவர் தம் இனத்தவரே அடுத்த அணியாக இந்தியாவிற்குள் வந்தனர். அவர்கள், மெசொபெர்ட்டேமியாவில் அர்மீனியரோடு கலந்து வளர்த்த நாகரிகத்தை இந்தியாவிற்குக் கொணர்ந்தனர். அவர்கள் புறப்பட்ட இடத்திலேயே அல்பைனர், அர்மீனியர் ஆகியவர்தம் இரத்தக்கலப்புடையவர்; நாகரிகக் கலப்பும் உடையவர் (அவர் கூட்டத்தினரே சுமேரியர் என்பவர்) அம்மக்கள் இந்தியா வந்து ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலந்து உறவாட வேண்டியவராயினர். இங்ஙனம் இரண்டாம் முறை வந்த மக்கள் மொழியும் முன் சொன்ன கூட்டுமொழியே ஆகும்.

மங்கோலியர்

அஸ்ஸாமில் காசி மலைகளில் ‘மான்-கெமர்’ மொழிகளைப் பேசும் மலைவாழ்நர் இவ்வினத்தினர் ஆவர். இவர்கள் பர்மாவில் உள்ள மலைப்பகுதிகளிலும் மலேயா தீபகற்பத்திலும் நிக்கோபர் தீவுகளிலும் உறைகின்றனர். தூய மங்கோலிய இனத்தவர் மிகச்சிலராக வடகிழக்கு வழியே வந்து அஸ்ஸாம், வங்காளம் முதலிய இடங்களில் தங்கினர் எனக் கோடலும் பொருந்தும்.

அல்பைனர்

இவர்கள் வலிய உடற்கட்டுடையவர்; பாமீர்ப் பீடபூமிப் பகுதிகளிலிருந்து வந்தவர் ஆவர். இவர்தம் கலப்பு மஹாராஷ்டிரரிடமும் பிரபுமாரிடமும் காணப்படுகிறது. இவர்கள் பேசியது இந்து- ஐரோப்பிய மொழி ஆகும். இவர்கள் சிந்து வெளியில் இருந்து மொஹெஞ்சொ-தரோ முதலிய நகரங்களை நிலைகுலையச் செய்து, மேற்கு இந்தியாவில் தங்கினவராதல் வேண்டும்; பின், ஆரியர் தாக்குதலால் அலைப் புண்டு வங்காளம் வரை பரவினர் என்பது தெரிகிறது.[1]

இதுகாறும் கூறியவற்றால், இந்தியாவில் இருந்த பண்டை மக்கள் நீக்ரோவர் என்பதும், அவர்களுக்குப் பின் வலிவுடன் இருந்தவர் ஆஸ்ட்ரேலியர் என்பதும், அவர்களுக்குப் பின் இந்தியாவிற் புகுந்து மிக்க, சிறப்புடன் இருந்தவர் மத்தியதரைக் கடலினத்தார் என்பதும், அவர்கள் நாளடைவில் ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலப்புண்டு விட்டனர் என்பதும், அதே காலத்தில் அல்லது சற்றுப் பின் மங்கோலியர், அல்பைனர் என்பவர் சிறு தொகையினராய் ஆங்காங்கு இருந்தனர் என்பதும் நன்கறியலாம். இது நிற்க.

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த எலும்புக் கூடுகள்

இந்திய ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த கர்னல் செவெல், டாக்டர் குஹா என்னும் அறிஞர்கள் மொஹெஞ்சொ - தரோவிற் கிடைத்த எலும்புக் கூடுகளையும் மண்டை ஒடுகளையும் நன்கு சோதித்து, ‘இந்நகரின் இறுதிக் காலத்தில் இங்கு, (1) ஆஸ்ட்ரேலியர், (2) மத்தியதரைக் கடலினர், (3) மங்கோலியர், (4) அல்பைனர் என்னும் நால்வகை மக்கள் இருந்தனராதல் வேண்டும்’ என்று கூறியுள்ளனர். (1) அங்குக் கிடைத்த ஆஸ்ட்ரேலியர் மண்டைஓடுகள் கிஷ், அல் உபெய்ட், உர் என்னும் மெசொபொட்டேமிய நகரங்களிற் கிடைத்த மண்டை ஒடுகளையும், ஆதிச்சநல்லூரிற்[2] கிடைத்த மண்டை ஒடுகளையும் பெரிதும் ஒத்துள்ளன. (2) மத்திய தரைக்கடல் இனத்தார். மண்டை ஒடுகள் நால், கிஷ், அநவு, சியால்காட், பயனா என்னும் இடங்களிற் கிடைத்த சில் மண்டை ஒடுகளை ஒத்துள்ளன. (3) மங்கோலிய அல்பைனர் எலும்பு ஒன்றே கிடைத்தது. (4) அல்பைனர் மண்டை ஒடு ஒன்றே கிடைத்தது.[3]

மங்கோலிய பண்டை ஓடு ஒன்றே கிடைத்திருப்பதாலும், அது நகர அடிமட்டத்தின் மேற்போக்கான இடத்திற்றான் கிடைத்திருப்பதாலும், அதைக் கொண்டு தவறாக எந்த முடிவும் செய்துவிடலாகாது. பிற்காலத்திற் பாரசீகத்தில் இருந்த மங்கோலியர் சிலர் மொஹெஞ்சொ-தரோவிற் குடிபுகுந்திருக்கலாம். மேலும், அத்தலை ஒடு கிடைத்த இடத்திலேயே மங்கோலியர் உருவம் கொண்ட பதுமைகளும் கிடைத்தமையால், அவ்விடம் அவர்கள் குடி புகுந்து இருந்த இடமாகலாம். அல்பைனர் ஒடு ஒன்றே கிடைத்ததால், அதைப் பற்றி என்ன கூறுவது? அது, வாணிபத்தின் பொருட்டு வந்த அல்பைனரையே குறிப்பதாகலாம். எலும்புக் கூடுகளுள் பல ஆஸ்ட்ரேவியரையும் மத்தியதரைக் கடலினரையுமே குறிக்கின்றன. முன்னர் உயரம் இன்றுள்ள ஆஸ்ட்ரேலியனது சராசரி. உயரமாகிய 152 செ.மீ. ஆகும். பின்னவருள் ஆடவர் உயரம் 161 செ.மீ. பெண்டிர் உயரம் 142 செ.மீ, 131 செ.மீ.ராக இருந்தது. இவ்வுயர அளவாலும், மொஹெஞ்சொ-தரோவில் இருந்த வீட்டு வாயில்களின் உயரம் 165 செ.மீ.க்கு மேல் இல்லை; பல வீடுகள் குட்டை மனிதர்க்கென்றே கட்டப்பட்டனவாகக் காணப்படுகின்றன என்னும் ஆராய்ச்சியாளர் கூற்று உண்மையாதல் காண்க.[4]

காலம் யாது?

எனவே, மொஹெஞ்சொ-தரோவில் பெரும்பாலும் அந்நகரத்திற்கே உரியவராக வாழ்ந்தவர் முன்னிருந்த ஆஸ்ட்ரேலியரும், அவர்களை வென்று உயரிய நாகரிகத்தைப் பரப்பிய மத்தியதரைக் கடலினருமே ஆவர் என்பது நன்கு விளங்குகின்றது அன்றோ? இங்ஙனம் காணப்பட்ட இம்மக்களது நாகரிக காலம் கி.மு.3250 கி.மு2750 ஆக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் முடிபாகும்.

இம்மக்கள் வாழ்க்கை

இங்ஙனம் இப்பெருநகரில் வாழ்ந்த மக்கள் பயிர்த் தொழிலிலும் வாணிபத்திலும் சிறந்திருந்தனர்; கால் நடைகளை வளர்த்து வந்தனர்; பலவகைக் கலைகளை வளர்த்து வந்தனர்; சுகாதர முறையில் நகரங்களை அமைத்துப் பெருவாழ்வு வாழ்ந்து வந்தனர் பலவகை வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர்; ஆனால், அதே காலத்தில் ஒரே கடவுள் உணர்வையும் பெற்றிருந்தனர் என்பது பொருந்தும்); மறு பிறப்பைப் பற்றிய உணர்ச்சி பெற்றிருந்தனர்; யோகநிலையை உணர்ந்து இருந்தனர்; இவற்றையும் அறிந்திருந்தனர்; சக்தி வணக்கம், சிவ வணக்கம், மர வணக்கம், விலங்கு வணக்கம் முதலியவற்றைக் கொண்டிருந்தனர். சுருங்கக் கூறின், ‘அவர்களிடம் இன்றைய இந்து சமயத்தில் உள்ள பெரும்பாலனவும் இருந்தன’ எனல் முற்றும் பொருந்தும்.[5]

ஆரியர்

ஆரியர் என்று பெயரிடப்பட்ட மக்கள் ஐரோப்பா, பாரசீகம், இந்தியா முதலிய இடங்களிற் குடிபுகுந்தனர்; அவர்களுடைய மொழி முதலில் ஒன்றாக இருந்தது; பின்னர்க் குடிபுகுந்த இடத்தில் இருந்த பண்டை மக்கள் கலப்பாலும் உச்சரிப்பாலும் பிற காரணங்களாலும் நாளடைவில் சிற்சில: மாறுபாடுகளைப் பெற்றுவிட்டது; மொழி மாற்றத்துடன் மக்கட் கலப்பும் உண்டானது. இஃது உலக இயற்கை என்பது முன்னரே கூறப்பட்டது. இது நிற்க, இந்தியா புகுந்த ஆரிய மக்களின் காலம் பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளனர். ஆயினும், சிறந்த ஆராய்ச்சியாளர் பலரும் கி.மு. 1500க்குச் சிறிது முற்பட்ட காலத்தையே கூறுகின்றனர். பேராசிரியர் நிருபேந்திரகுமார டட் என்பவர், பலர் கூற்றுகளைத் திறம்பட ஆராய்ந்து, பல காரணங்களைக் காட்டி ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலம் ஏறக் குறையக் கி.மு.2500 ஆகலாம் என்றும், அவர் செய்த ரிக் வேதத்தின் காலம் கி.மு.2500 கி.மு1500 என்றும் விளக்கியுள்ளார்.[6]

இங்கனம் இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர்கள் உயரமான வர்கள்; ஒருவகை வெண்ணிறத்தார்; நீண்ட மூக்குடையர் குதிரை ஏற்றத்தில் வல்லவர்; இரும்பைப் பயன்படுத்தியவர் போருக்குரிய உயர்தரப்படைக்கலன்களைக் கொண்டவர் எரிவளர்த்துவேள்வி செய்தவர்கள்; இந்து-ஐரோப்பிய மொழியான சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள்; இந்திரன், வருணன் முதலிய தேவர்களை வழிபட்டவர்கள் உருவ வழிபாட்டை அறவே வெறுத்தவர்கள்; லிங்க வழிபாட்டை அறியாதவர்கள்.

ஆரியர் பஞ்சாப் மண்டலத்தில் தங்கியிருந்தபோதுதான்ரிக் வேதத்தின் பெரும் பகுதியைச் செய்தனராதல் வேண்டும். ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள இடங்களின் பெயர்களை நோக்க, ரிக்வேத ஆரியர்கள் - ஆப்கானிஸ்தானம், பஞ்சாப், காஷ்மீர், சிந்துவில் சில இடங்கள், இராஜபுதனத்தின் சில பகுதிகள், கங்கையாற்றின் மேற்கிடம் இவற்றையே அறிந்திருந்தனராதல் வேண்டும். கி.மு.1500க்கு பிற்பட்ட காலத்திற்றான் அவர்கள் கங்கைச் சமவெளியிற் புகலாயினர்.

ஆரியர் அல்லாதவர் (அநாரியர்)

பஞ்சாப் மண்டிலத்திற் குடிபுகுந்த ஆரியர், தமக்கு முன் அங்கு இருந்த மக்களைப்பற்றிப் பகைமை பாராட்டிக் கூறியிருக்கும் பல குறிப்புகளும் அவர்களோடு செய்த போர்களும் ரிக்வேதத்தில் அழகாகக் குறிக்கப்பட்டுள்ளன. அதாரியரான மக்கள் ‘தாசர், தாஸ்யு’ எனப்பட்டனர். ‘அநாரியர் தட்டை மூக்கினர் கருநிறத்தார்; மாறுபட்டவழிபாடு உடையவர் விநோத மொழியினர்; சிறந்த செல்வம் பெருக்குடன் வாழ்பவர்; கோட்டை களையுடைய நகரங்களில் வாழ்பவர்; போரில் பேரோசை இடுபவர்’ என்றெல்லாம் ரிக்வேதம் கூறுகின்றது. ரிக்வேதம் ‘பனிக், வனிக்’ என்று சிலரைக் குறிப்பிட்டுள்ளது. அவர்கள் தாசர் ஒநாய் போன்ற பேராசை உடையவர்; சுயநலமே உருக்கொண்டவர்; கறுப்பர், வேள்வி செய்யாதவர்; கொடிய மொழியினர்; பணக்காரர்; கால் நடைகளை வளர்ப்பவர்; ஆரியருடைய பசுக்களைக் களவாடுபவர்; அவர்கள் மேற்கு நோக்கி விரட்டப்பட்டனர். மேலும், ரிக்வேதம் குறிப்பிடும் தாசர் மரபினர் கீகதர், சிம்யூஸ், அஜஸ், யஷுஸ் (இயக்கர்), சிக்ருஸ்; அநாரிய அரசர்களாக இலிபிஷன், துனி, சுமுரி, சம்பரன், வர்ச்சினன், த்ரிபிகன், ருதிக்ரன், அதர்சனி, ஸ்ரிபிந்தன், பல்புதன், பிப்ரு, வங்க்ரிதன் முதலியோர் ஆவர். இவருள் வங்க்ரிதன் 100 நகரங்களைக் கொண்டவன் (பேரரசன்) என்றும், சம்பரன் 90 முதல் 100 வரைப்பட்ட நகரங்களை உடையவன் (பேரரசன்) என்றும் ரிக்வேதமே கூறுதல் காண்க. இவர்களில் பெரும்பாலோர் கங்கைச் சமவெளியில் ஆரியரோடு போரிட்டவர் ஆவர்.[7]

ஆரியர்-அநாரியர் போர்கள்

ஆரியர்-அநாரியர் போர்களைப் பற்றிய செய்திகள் ஒரளவு ரிக்வேதத்திலிருந்து நன்கு அறியலாம். “மாண்புமிக்க இந்திரன் பகைவரை அழிக்கின்றான்; நாம் செய்யும் தூய காரியங்களை அச் சிசின தேவர் (லிங்கவழிபாட்டினர்) அணுகா தொழிவாராக போருக்கு மீண்டும் சென்று, அவர்களை அடக்க ஆர்வங்கொண்டு, போக முடியாத இடங்கட்குப் போய், கொல்ல முடியாத சிசின தேவரைக் கொன்று, அவர்தம் நூறு கதவுகளைக் (Gates) கொண்ட நகரத்தின் செல்வத்தைக் கவர்ந்தவன் இந்திரன் _ கிருஷ்ணனுடைய (கறுப்பன்) வீரர்கள் 10,000 பேர் யமுனைக் கரையில் இருக்கின்றனர். இந்திரன் கிருஷ்ணனது ஆர்ப்பாட்டத்தை உணர்ந்தான். இந்திரன் அந்தக்கொடிய பகைவனை ஆரியர் நன்மைக்காக அழித்தான். இந்திரனே, ‘நான் யமுனைக்கரையில் கிருஷ்ணன் படையைக் கண்டேன். அவன் முகிற்படைக்குள் மறையும் பகலவன் போலக் காடுகளுக்குள் மறைந்துவிட்டான்’ என்று கூறினான்... இந்திரன் பிரஹஸ்பதியைத் துணைவனாகக் கொண்டு, அக்கடவுளற்ற படையை அழித்தான். இந்திரன் ரிஜஸ்வான் (ஆரியன்) உதவியைக் கொண்டு கிருஷ்ணனுடைய சூல்கொண்ட மகளிரைக் கொன்றான்... முதுமைப் பருவம் உடம்பை அழிப்பது போல இந்திரன் 50,000 கிருஷ்ணரைக் கொன்றான்....[8] “ஆரியர் இன்னவர்தாசர் இன்னவர் என்பதைப்பகுத்துணர்க.... ‘இந்திரனே, இடி முழக்கம் செய்பவனே, தாசரை அழி: ஆரியர்தம் வன்மையையும் பெருமையையும் மிகுதிப்படுத்து. இந்திரன் தாஸ்யுக்களை அழித்து, அவர் தம் நிலங்களை ஆரியர்க்குப் பங்கிட்டான். இந்திரன் ஆரியர்க்கு வலக்கையால் ஒளி காட்டி, இடக்கையால் தாஸ்யுக்களை அழுத்தினான்.... ஆரியர் இந்திரன் உதவியால் தாஸ்யுக்களை அழித்து, அவர்தம் செல்வத்தைப் பெறுகின்றனர்.... ‘நாங்கள் தாஸ்யுக்கள் நாற்புறமும் சூழ வசித்து வருகின்றோம். அவர்கள் வேள்வி செய்யாதவர்கள்; எதையும் நம்பாதவர்கள். அவர்கள் தமக்கென்றே உரிய பழக்க வழக்கத்தினர்; சமயக் கொள்கைகளை உடையவர்; அவர்கள், மனிதர்கள் என்று சொல்லத் தகுதியற்றவர்கள்; அவர்களை அழித்துவிடு’ (ஒரு ரிஷியின் சுலோகம்)..... இந்திரனும் அக்நியும் சேர்ந்து, தாசருடைய பாதுகாவல் மிகுந்த 90 நகரங்களை அழித்தனர்.... தாசர்கள், மாயச் செலவில் வல்லவர்கள்: மாயவர்கள்.....[9]

“இந்நிலம் தாசரைப் புதைக்கும் சவக்குழியாகும், ....இந்திரன் 30,000 தாசர்களைக் கொன்றான்; 50,000 கிருஷ்ணரைக் கொன்றான்..... கறுத்தவரை ஒழிக்க நடத்திய போரில் ‘யஜிஸ்வான்’ என்பவன், ‘வங்க்ரிதன் என்பவனுக்கு உரியனவாக இருந்த 100 நகரங்களைத் தாக்கினான்..... தாசர் தலைவனான சம்பரனுக்[10] குரிய 90 முதல் 100 வரைப்பட்ட நகரங்கள் அழிக்கப்பட்டன....”[11]

“குயவன் (Kuyava) ஆரியர் செல்வங்களை அறிந்து வந்து தனக்கு உரிமையாக்கிக் கொள்கிறான். அவன் தண்ணிரில் இருந்துகொண்டு அதனைத் தூய்மையற்ற தாக்குகிறான். அவனுடைய இரண்டு மனைவியர் ஆற்றில் நீராடுகின்றனர். அவர்களைச் ‘சிபா’ (Sifa) ஆற்று வெள்ளம் கொண்டுபோவதாக அயு (Ayu) என்பவன் தண்ணீரில் உறைகிறான். அவனை ஆஞ்சசீ, குலிசி, வீரபத்நீ என்னும் யாறுகள் காக்கின்றன எனவரும் சுலோகங்களால், ‘குயவன், அயு’ என்பவர் வன்மையுள்ள தாசர்கள் என்பதும், ஆரியர் கிராமங்களைக் கொள்ளையிட்டனர் என்பதும், யாறுகளால் சூழப்பட்ட கோட்டைகட்குள் இருந்தவர் என்பதும் அறியக் கிடக்கின்றன.... ‘இந்திரன், பகைவரது கறுப்புத் தோலை உரித்து, அவர்களைக் கொன்று சாம்பராக்குகிறான்.... இந்திரன் பகைவருடைய 150 படைகளை அழித்தான்... ஒ, அஸ்வணிகளே! நாய்களைப் போல விகார ஓசை யிட்டுக்கொண்டு எங்களை அழிக்க வரும் பகைவரை அழியுங்கள். இந்திரன் வித்ரனைக் கொன்று நகரங்களை அழித்துக் கறுப்புத் தாசர் படைகளையும் அழித்தான்... ஆரியருடைய போர்க் குதிரைகளைக் (ததிக்ரா) கண்டதும் தாசர் நடுங்குகின்றனர்; அக்குதிரைகள் ஆயிரக்கணக்கான தாசரை அழித்தன... இந்திரன் தாசர் மரபினரான நவவாஸ்த்வா என்பனையும் ப்ரிஹத்ரதனையும் கொன்றான்... ‘ஓ, கடவுளரே! நாங்கள் நெடுந்துரம் வந்து, கால் நட்ைகள் மேய்ச்சல் பெறாத இடத்தை அடைந்துவிட்டோம். இப்பரந்த இடம் தர்ஸ்யுக்கட்கே புகலிடமாக இருக்கின்றது, ஒ ப்ரஹஸ்பதி! எங்கள் கால்நடை களைத் தேடிச் செல்லும் நேர்வழியில் எங்களைச் செலுத்து. நாங்கள் வழி தவறிவிட்டோம்!.... இத்தகைய பலவாக்குகளை நோக்க, வந்தேறு குடிகளான ஆரியர், தொடக்கத்தில் பண்டை இந்திய மக்களால் பட்ட பாடு சிறிதன்று என்பதும், அவர்கள் பகைவரை மெல்ல மெல்ல வென்றே நாட்டைத் தமதாக்கிக் கொண்டனர் என்பதும், அவ்வேலைக்குப் பல நூற்றாண்டுகள் ஆகி இருத்தல் வேண்டும் என்பதும் அறியத்தகுவனவாம்”.[12]

“இந்திரன் தாசரைக் கொலை செய்து, அவர்களுடைய ஏழு பாசறைக் கோட்டைகளையும் அழித்து, அவர்கள செல்வத்தைப் புருகுத்ஸனுக்குக் கொடுத்தான்”.[13]

இந்து அநாரியர் சிந்துவெளி மக்களே

‘ஆரியர் திருவாக்குகளால் நாம் அறிவதென்ன? ஆரியர் அல்லாத தாசர்கள் வணிகர்களாக இருந்தனர்; செல்வர்களாக இருந்தனர்; பாதுகாப்பு மிகுந்த நகரங்களில் வாழ்ந்திருந்தனர்; தாச அரசர்கள் 100 நகரங்கள் வைத்துக்கொண்டு பேரரசு செலுத்தி வந்தனர், போதிய வன்மை பெற்ற ஆரியரையே எதிர்த்து நின்று போரிட்டனர்; (ஆரியர்க்கு) விளங்க முடியாத மொழி பேசினர்; மந்திர மாயங்களில் வல்லவர்கள்; தமக்கென்று அமைந்த வழிபாடுகளை உடையவர்கள்; கால் நடைகளை உடையவர்கள்; பணத்திற் கண்ணானவர்’ என்பனவே.

இக்குறிப்புகளைச் சிந்து வெளியிற் புதையுண்டு கிடக்கும் நூற்றுக்கு மேற்பட்ட நகரங்களைப் பற்றிப் புதை பொருள் ஆராய்ச்சியாளர் ஆண்டு தோறும் அறிவித்து வரும் அறிக்கைகளுடனும் - ஹரப்பா, மொஹெஞ்சொ-தரோ நகரங்களைப்பற்றிய விவரமான செய்திகளுடனும் ஒப்பிட்டுக் காண்க. மேலும், சிந்துவெளி நாகரிக காலம் கி.மு.3250 கி.மு.2750 என்பதனையும் ஆரியர் இந்தியா புகுந்த காலம் ஏறக்குறையக் கி.மு.2500 என்பதையும் நினைவிற் கொள்க. இக்குறிப்புகளால், ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்ட அநாரியர் சிந்துவெளி நாகரிகத்திற்கு உரியவர்களே - மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா முதலிய பண்டை நகரங்களில் வாழ்ந்தவர்களே என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாதல் காண்க.[14]

ரிக் வேதம் கூறும் மாயாசாலங்களில் வல்லவர் - வாணிகம் செய்தவர் - பெருஞ்செல்வர்- தம் பகைவரான ஆரியரினும் சிறந்த நாகரிகம் உடையவர் . ஆனால், ஆரியரை வெல்ல இயலாதவர் (போதிய படைக்கலங்கள் இல்லாதவர்) சிந்து வெளி மக்களே என்பது தெளிவாகின்றது."மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த எலும்புகளில் இரண்டிற்குத் தலைகள் இல்லை. படை யெடுப்பினால் தலைகள் வெட்டுண்டன போலும் ! அந்நாகரிக நகரம் இறுதியிற் பாழானது: மக்கள் உடலங்கள் நாய், நரி, கழுகுகட்கு இரையாக விடப்பட்டன. இக்காரணம் பற்றிப் போலும் அந்நகரம், ‘இறந்தார் இடம்’ என்னும் பொருள்பட மொஹெஞ்சொ-தரோ எனச் சிந்தி மொழியில் வழங்கலாயிற்று!”[15]

‘ஹரப்பாவில் ஒரு புதை குழியில் ஒரே குவியலாகப் பல எலும்புக் கூடுகள் அகப்பட்டதை நோக்க, ஆடவர் பெண்டிர் குழந்தைகள் முதலியோர் படையெடுப்பில் கொல்லப்பட்டிருக்கலாம், தற்செயலாகக் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது கொள்ளை நோயால் மடிந்திருக்கலாம். உண்மை தெரிந்திலது.[16]

மொஹெஞ்சொ-தரோவில் ஒரே இடத்தில் பல எலும்புக் கூடுகள் கிடைத்தன. அவை, எதிரிகளிடமிருந்து தப்பியோட முயன்ற மக்களுடையனவாக இருக்கலாம் என்று டாக்டர் மக்கே கருதுகிறார். அக்கருத்துப் பொருத்தமானதே என்று அவற்றை ஆராய்ந்த டாக்டர் பி.எஸ்.குஹா என்பவர் கூறுகின்றார். பல மண்டையோடுகள் பழைய சுமேரியர் மண்டை ஒடுகளோடு ஒருமைப்பாடு கொண்டவை”.[17]

“எலும்புக் கூடுகளைச் சோதித்தபோது, சில தலைகள் கூரிய கருவியால் வெட்டப்பட்டன என்பது தெரிகிறது. பகைவராற் படுகொலை நடந்ததென்று நினைக்க இடம் ஏற்படுகிறது”.[18]

“சிந்துவெளி மக்கள் இந்திர வணக்கத்தையும் அக்நி வணக்கத்தையும் அறியாதவர்: மர வணக்கம் உடையவர்: பகைவரை அடக்க மந்திர மாயங்களைக் கையாண்டவர்; இவை ஆரியர்களின் பழக்கங்கள் அல்ல. ஆனால், இவை ரிக், வேதத்திற்குப் பிற்பட்ட யசுர்-அதர்வு வேதங்களில் காணப்படுகின்றன. ஆதலின், சிந்துவெளி மக்களுடைய சமயப் பழக்கங்கள் சில வேதகால ஆரியரிடம் பரவின என்பது அங்கைக் கனி.[19]

“ஹர்ப்பா, மொஹெஞ்சொ-தரோ முதலிய நகரங்கள் இருத்தலைக் காணின், ரிக்வேத ஆரியர், அந்நியர் நகரங்களையும் ஊர்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும் என்பது வெளியாம். இந்நகரங்களில் வாழ்ந்த மக்கள் வேதத்தில் குறிப்பிடப்படும் ‘பணிக்’ (பணிஸ்-வணிக்) என்பவராக இருக்கலாம். அச்சொல் பணம், என்பதிலிருந்து வந்திருக்கலாம். நாம் ஆராய்ந்த அளவில், சிந்துவெளி மக்கள் சிறந்தி வணிகர் என்பது தெரிகின்றது. அவர்களது நாட்பட்ட நாகரிகம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஏஜியன் நாகரிகம் அழிந்ததுபோல, ஆரியர் படை யெடுப்பால் அழிந்துவிட்டது. இவ்வுலகத்தையே பற்றிய கலைகளில் (Material Culture) ஆரியர் சிந்துமக்கட்குக் குறைந்தவரே யாவர். அவர்கள் சிந்து மக்களின் நகரங்களை அழித்திருக்கலாம் அல்லது தாமாகவே அழிந்து போக விட்டிருக்கலாம்.”[20]

“ஹிந்து சமயத்தின் அடிப்படையான கொள்கைகள் பல இந்திய ஆரியர் மூலம் வந்தவை என்று கூறக்கூடவில்லை. அக்கொள்கைகளுட் சிறந்தவை-சிவ வணக்கம் சக்தி (தாய்) வணக்கம், கிருஷ்ண வணக்கம், நாக வணக்கம், யக்ஷர் வணக்கம், விலங்கு வணக்கம், மர வணக்கம், லிங்கயோனி வணக்கம், யோகம், ஒரு கடவுள் வணக்கங்கொண்ட பக்தி மார்க்கம் என்பன. ஆனால், இவற்றுள் கிருஷ்ண வணக்கம் ஒன்று தவிர், ஏனைய அனைத்தும் சிந்து வெளி நாகரிக மக்களிடம் இருந்தனவே ஆகும். எனவே, பிற்கால வேதங்கள் முதலிய அளவிறந்த நூல்களிற் பலபடியாகக் கூறப்பட்டுள்ள இவ் வநாரிய பழக்க வழக்கங்களும் வழிபாடுகளும் ஆரியர்க்குப் புறம்பானவையே ஆகும். ஆதலின் இவற்றைச் சிந்துவெளி மக்களிடமிருந்தே ஆரியர் பெற்றனர் என்பதில் ஐயமுண்டோ?[21]

சிந்துவெளி மக்கள் யாவர்?

இதுகாறும் கூறப்பட்ட பற்பல செய்திகளால், ரிக் வேத ஆரியர்க்கு முன் இந்தியாவில் சிறந்த நாகரிகங் கொண்ட வகுப்பார் இருந்தனர் என்பதையும், அந்த வகுப்பாருடன்றான் ஆரியர் போரிட்டனர் என்பதையும், அவ் வகுப்பாரே சிந்து வெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தவர் என்பதையும் தெளிவுற உணர்ந்தோம்.இங்கு அச் சிந்துவெளிமக்கள் யாவர் என்பதைக் காண்போம் :

“சிந்து - கங்கை வெளிகளில் ஆரியரை எதிர்த்து நின்றவர் திராவிடரே என்பதற்கு உறுதியான காரணங்கள் பல உண்டு :

(1) ரிக்வேத தாசர்கள் ‘கறுப்பர்கள், தட்டை மூக்கினர்’ என்பன இன்றுள்ள திராவிடர்பால் காணப்படும் பண்புகளே யாம்.

(2) ரிக் வேதம் கூறும் தாசர் சமய உணர்ச்சிகள் அனைத்தும், லிங்க-யோனி வழிபாடு முதல் மந்திர-வசியம் ஈறாக அனைத்தும் இன்றைய திராவிடரிடம் இருத்தல் கண்கூடு.

(3) அதர்வ வேதத்திற் குறிப்பிடப்பட்டுள்ள கடல் கோள் (Deluge) ஆரியர் சொத்தன்று. அது திராவிடர் கதையே ஆகும். அக்கதை, ஒரு சில சிறிய விவரங்கள் போகப் பெரிதும் சுமேரியர் கடல்கோட் கதையையே ஒத்துள்ளது. சுமேரியர் திராவிடர் இனத்தவர்-ஒட்டு மொழியினர்’ என்று டாக்டர் ஹால் போன்ற ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். அக்கடல்கோள் கதை குமரிக் கண்டத்தின் (லெமூரியா) அழிவைக் குறிப்பிட்டதாகலாம். அக்கதையைக் குறிக்கும் வடமொழிப் பகுதியில் மீன், நீர் (Mina, mira) என்னும் சொற்களே காணப்படுகின்றன. இவ்விரண்டு சொற்களும் திராவிடச் சொற்கள். ரிக்வேதம் முழுவதிலும் மீனைப் பற்றிய குறிப்பு ஒரிடத்திற்றான் காணப்படுகிறது. அங்கும் அது ‘மச்சம்’ என்னும் சொல்லாற்றான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மீன், சுமேரியர் வரலாறுகளில் பெரும் பங்கு கொண்டதாகக் காணப்படுகிறது; சிந்துவெளியிலும் அங்ஙனமே.[22] வடமொழியிற் கூறப்படும் கடல் கோட் கதையின் நாயகனான ‘சத்யவ்ரத மது’ என்பவன் ‘திராவிடபதி’ என்று பாகவதம் முதலிய புராணங்களிற் கூறப்பட்டுள்ளான். மேலும், மச்சபுராணம் கூறும் கதையில், சத்யவிரத மது பொதிய மலையில் இருந்து தவம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இக்குறிப்புகளால், அக் கடல்கோட் கதை திராவிடருடையதே என்பது வெளியாதல் காண்க

(4) ரிக்வேத ஆரியர் பெயர்கள் தந்தை பெயரைக் கூட்டிப் ‘புருகுத்ஸ- கெய்ரிக்ஷித், கக்க்ஷிவந்த்-அவுசிஜா, சுதஸபய்ஜவன’ - என்று சொல்லப்பட்டன. இங்ஙனம் கூறலே ஆரியர் முறை. ஆனால், பிற்கால பிராமணங்களில் (Brahmanas) தாயின் பெயரையும் கூட்டி, “சத்யகாம-ஜாபால, மஹிதள அயித்ரேயா, ப்ரஸ்னிபுத்ர-அசுரிவசின் சஞ்சீவி-புத்ர, கிருஷ்ண-தேவகி புத்ர என்று வழங்கப்பட்டுள்ளன. இங்ஙனம் தாய்க்கு உயர்வு தரல் திராவிடர் பழக்கமாகும். இது சுமேரியரிடமும் இருந்த பழக்கமே ஆகும். இவ்விருபாலரிடமும் குடும்பத்தின் தலைமைப் பதவி பெண்ணிடமே இருந்தது.[23] இப்பழக்கம் ஆரியர் கையாள லாயினர் என்பதை நோக்க, கங்கைச் சமவெளியில் திராவிடர் செல்வர்க்கு இருந்த நிலைமை நன்கு வெளியாகின்றது.

“ஆரியர்க்கு அடங்கிய திராவிடர் ஆரியர் பழக்க வழக்கங்களை ஒரளவு கைக்கொண்டாற் போல - திராவிடரால் அடக்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய (முண்டா-கோல்) இனத்தவர் திராவிடர் ஆக்கப்பட்டனர். அவர்தம் மொழிநாளடைவில் மறைப் புண்டது; பழக்க வழக்கங்கள் மாறுபட்டன. அவர்கள், அநாகரிகராதலின், அவரினும் பல படி உயர்ந்த திராவிடர் நாகரிகத்தில் கலப்புண்டனர்; திராவிட மொழிகளையே பேசலாயினர். இன்றும் அவர் மரபினராகவுள்ள கொண்டர், ஒராஓணர், இராஜ் மஹாலியர், கூயர் முதலியோர் ‘திராவிடரோ?’ என்று ஐயுறத்தக்க அளவு அவர் தம் மொழிகளில் பேரளவு திராவிடம் கலந்திருத்தல் காண்க. இந்நிலைமை, ஆரியர் வருதற்கு முன்னரே ஏற்பட்டதாதல் வேண்டும் அன்றோ? எனவே, ஆரியர் வருதற்கு முன்பே, முண்டர் முதலிய ஆஸ்ட்ரேலிய மக்கள் பெரும்பாலும் திராவிட சோதியிற் கலந்துவிட்டனர் என்பது தெளிவு ஆதலின், ஆரியர் கலையில் உண்டாகியுள்ள (ரிக்வேதத்திற்கு மாறுபட்ட இந்து ஐரோப்பி முறைக்கு மாறுபட்ட) மாற்றங்களுட் பெரும்பாலன திராவிடருடையனவே ஒழிய மங்கோலியருடையனவோ ஆஸ்ட்ரேலியருடையனவோ அல்ல அல்ல!!”[24]

“ஆரியர்க்கு முன் இந்தியாவில் இருந்த மக்களுள் திராவிடரே உயர்ந்த நாகரிகமுடையவர் என்று கருதப்படுகின்றனர். அவர்க்குள் பெண்களே குடும்பத்தலைவியர், திராவிட சங்கத்திலும் மதத்திலும் தாய்மையே பெரும் பங்கு கொண்டதாகும்”.[25]

“ரிக் வேதம் இழித்துக் கூறும் லிங்க-யோனி வழிபாடு இன்றும் திராவிடரிடமே சிறப்பாகக் காணப்படுவதாகும். இவ்வழிபாட்டுக் குறிப்பு ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ளதால், திராவிட மக்கள் பழைய காலத்தில் பலுசிஸ்தானம் உட்பட இந்தியா முழுவதும் இருந்தனராதல் வேண்டும்”.[26]

“ரிக்வேதத்திற் கூறப்படும், ‘தாசர், தாஸ்யுக்கள், வணிகர்’ என்பவர் தம் வருணனை இன்று அநாகரிய மக்களிடம் இருப்பதைக் கண்ட ஆராய்ச்சியாளர், அவர்களைத் ‘திராவிடர்’ என்று குறிப்பிட்டனர். இன்று அவர்கள் இழிநிலையில் இருப்பதைக் கொண்டு, அவர்களது பழம்பெருமையை அறிஞர்கள் அசட்டை செய்து விட்டனர். அவர்கள் அநாகரிகர்; காடுகளில் வசித்தவர்; கலைகள் அற்றவர்; ஆரியர் இந்தியா வந்த பின்னரே திருத்தம் பெற்றனர்; ஆரியர்க்கு முன் இந்தியா நாகரிக நாடன்று” என்றெல்லாம் சரித்திர ஆசிரியரால் இழித்துரைக்கப்பட்டனர். பிஷப் கால்ட்வெல் என்னும் பேரறிஞர் திராவிடமொழிக்ளைத் திறம்பட ஆராய்ந்து, ‘திராவிடர் நகரங்களில் வசித்தவர்கள்;. நாகரிகம் உடையவர்கள்; தமக்கென்று அமைந்த பழக்க வழக்கங் களை உடையவர்கள்; அரசர்களை உடையவர்கள், பல்வகைக் கருவிகளை உடையவர்கள் எழுத்து முறை பெற்றவர்கள்’ என்று எழுதியிருந்தும், அவ்வுண்மைகள் சரித்திராசிரியரால் புறக்கணிக்கப் பட்டிருந்தன. ஆனால், அறிஞர் அசட்டையை அவமதிப்பதே போல் சிந்துவெளிநாகரிகம் வெளிக் கிளம்பலாயிற்று ஹரப்பா, மொஹெஞ்சொ-தரோ முதலிய நாகரிகங்கள் ஆராய்ச்சியாளர் கண்களைக் கவர்ந்தன...”.[27]

மொழி ஆராய்ச்சி கூறும் உண்மை

“ஆரியரது கரடு முரடான வடமொழியைத் திராவிடரும் கோலேரியரும் பேசியதால் உண்டானவையே இன்றுள்ள வட இந்திய ஆரிய மொழிகள். இவர்கள் கூட்டுறவால் வேத மொழி இன்றைய மாறுதல் பெற்றதோடு, திராவிட முறைப்படி எளிமையாக்கவும் பட்டது. வேத கால ஆரியர் நாகரிகம் ஹெல்லென்ஸ், இத்தாலியர், ஜெர்மானியர் இவர்தம் நாகரிகத்தையே முதலில் ஒத்திருந்தது. ரிக்வேதத்தில் மறுபிறப்புப் பற்றிய பேச்சே இல்லை. ஆன்மவுணர்வுடைய அநாரியரிடமிருந்தே இதனை ஆரியர் பெற்றனராதல் வேண்டும். பஞ்ச பூதங்களைப் பற்றிய சில நினைவுகள் திராவிடருடையனவே. திராவிடக் கடவுளர் வழிபாட்டையும் ஆரியர் கைக்கொண்டனர். ரிக்வேத மொழி பல அம்சங்களில் இந்து-ஐரோப்பிய மொழிகளை ஒத்திருப்பினும், உச்சரிப்பில் மாறுதல் அடைந்துவிட்டது. ரிக் வேத மொழி திராவிடச் சொற்களையும் கோலேரியர் சொற்களையும் கடன் பெற்றது. அவற்றுள் சில வருமாறு :- அணு, அரணி, கபி, கர்மார (கருமான்) கால (காலம்), குட (குடி), கண, நானா (பல), நீல, புஷ்பம், பூசனை, பல (பழம்) பீஜ (விதை), மயூர (மயூரம்-மயில்), ராத்ரி (இரவு), ரூப(ம்).

“...மேற்சொன்ன உச்சரிப்பு, வாக்கிய அமைப்பு முறை, சாரியை உருபு முதலியவற்றைச் சேர்க்கு முறை இன்ன பிறவும் பழைய சம்ஸ்கிருதத்திலோ, இந்து-ஐரோப்பிய மொழிகளிலோ இல்லை. ஆனால், இவை அனைத்தும் இன்றுள்ள வடஇந்திய மொழிகளில் இருக்கின்றன. இவை எங்கனம் வந்தன? இவை அனைத்தும் திராவிட மொழிகளிற்றாம் உள்ளன. எனவே, திராவிட மொழிகளின் செல்வாக்கு எந்த அளவு வட இந்தியாவில் இருந்தது என்பதை விளக்க இதைவிடச் சிறந்த சான்று வேண்டுவதில்லை... வடமொழி இந்தியாவில் நுழைந்த காலம் முதலே திராவிடச்சொற்களைக் கடன் பெறலாயிற்று. பலுசிஸ்தானத்தில் உள்ள ‘ப்ராஹுயி’ மக்கள் திராவிடம் பேசுபவர். பாரசீகத்திலும் திராவிடம் பேசிய மக்கள் இருந்திருக்கலாம். ஆரியர் அத்திராவிடரோடும் பழக்கம் கொண்டிருக்கலாம்...

“ஆரியர் திராவிடரை எளிதில் விரட்டி நாட்டைக் கைப் பற்றக் கூடவில்லை. திராவிடர்கள் பலுசிஸ்தானத்திலிருந்து வங்காளம் வரை இருந்தனர். ஆரியர் அவர்களை மெதுவாகவும் படிப்படியாகவுமே வென்றனர் ஆயினும், திராவிடர் தங்கள் கலையையும் மொழியையும் ஆரியர் மீது தெளித்தனர் என்பது உண்மை.

“ரிக் வேத ஆராய்ச்சியால் ஆரிய மக்கள் தமக்கு முன் வட இந்தியாவில் இருந்த மக்களைப் போரில் வென்று குடி புக்கனர் என்பதையும், அவர்தம் மொழி கிரேக்கம் முதலிய இந்து-ஐரோப்பிய மொழிகளையே முதலில் ஒத்திருந்தது என்பதையும், ஆரியர் பழக்க வழக்கங்களையும் நன்குணரலாம். இம்மக்கட்கு முற்றும் மாறுபட்ட நாகரிகத்தையும் மொழியையும் கொண்டு, இம்மக்களோடு போரிட்ட திராவிடருடைய பழக்க வழக்கங்களையும் பிறவற்றையும் தூய முறையிலும் மிகப் பழைய வடிவத்திலும் பழந் (சங்கத்) தமிழ் நூல்களிற் காணலாம்”[28]

“ஆஸ்ட்ரேலிய மொழிகளாகிய முண்டா முதலிய மொழிகள் திராவிட மொழிகளாற் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளன. வட மொழியும் அங்ஙனமே திராவிட மொழிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று தென் இந்தியாவில் உள்ள திராவிடர், மிகப்பழையகாலத்தில் வடஇந்தியாவிலும் இருந்திருத்தல் வேண்டும் என்பது உறுதிப்படுகிறது”.[29]

“எ, ஒ என்பன பாலி மொழியிற் காணப்பட்டாலும், பல்லிடத்துப் பிறக்கும் எழுத்துகளை நாவிற் பிறப்பனவாக உச்சரித்தமையும் ஆரியர்க்கு முற்பட்ட மக்களுடைய மொழியையும் பழக்கத்தையும் காட்டுவன. இவை இன்றைத் திராவிட மொழிகளிற் காணப்படலால், இத்திராவிடர் முன்னோரே வட இந்தியாவிற் பாலி மொழி பேசினவராதல் வேண்டும்.[30]

கன்னட அகராதியைத் தொகுத்த டாக்டர் கிட்டெல் என்பார், வடமொழியிற் கலந்துள்ள நூற்றுக்கணக்கான திராவிடச் சொற்களைப் பட்டியலாகத் தந்துள்ளார். பஞ்சாபில் ஆரியர் இருந்தபோது செய்யப்பட்ட சாண்டோக்ய உபநிடதத்தில் மதசீ (Matachi) என்னும் சொல் காணப்படுகிறது. இச்சொல் இன்றும் குருநாட்டிலும் தார்வாரிலும் வழங்குகிறது. இது கன்னடத்தில் மிதிசெ (Midiche) என வழங்குகிறது. இது தூய திராவிடச் சொல் ஆகும். இத்தகைய பல சொற்கள் வடமொழியில் இருத்தலையும் பலுசிஸ் தான்த்தில் உள்ள ப்ராஹுயி மொழியிற் பேரளவு திராவிடம் இருத்தலையும் நோக்க, ஆரியர் வருமுன் வடஇந்தியாவில் திராவிடர் இருந்தனர் என் பதை நன்கறியலாம். வங்க மொழியும் திராவிட மொழிக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. கொகா (மகன்), குகீ (மகள்) என்னும் வங்கமொழிச் சொற்கள் ‘ஒராஒன்’ மொழியில் கொகா, கொகீ என்று வழங்குகின்றன. தெலா (தலை) நொலா (நாக்கு) என்பன தெலுங்கு மொழியில், ‘தல’, ‘நாலு’ என வழங்குகின்றன. தமிழில் உள்ள ‘கள்’ (Gul) விகுதியே வங்க மொழியில் குலீ (Guli), குலா (Gula) என்று வழங்குகின்றன. இவ்வாறு திராவிடத்திலிருந்து வந்துள்ள சொற்கள் பலவாகும். அவற்றைத் திரு பி.ஸி.மஜும்தார் என்பவர் ‘சாஹித்ய பரிஷத் பத்திரிகை’யில் (Vol.XX-Part I) விளக்கமாக வெளியிட்டுள்ளார். ...இன்ன பிற காரணங்களால், ஆரியர் வருகைக்கு முன் வடஇந்தியா முழுவதிலும் திராவிடர் இருந்தனர் என்பது உண்மையாதல் காண்க”.[31]

“வடமொழி இந்து-ஐரோப்பிய மொழி இனத்தைச் சேர்ந்தது. ஆனால், மற்ற இந்து ஐரோப்பிய மொழிகளில் இல்லாத மிகப் பல வினைப் பகுதிகளும் சொற்களும் வடமொழியிற் காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலன திராவிடரிடமிருந்து கடன் பெற்றனவே என்று கூறலாம். இதனால், வட இந்தியாவில் இன்றுள்ள மக்கள் தூய ஆரியர் அல்லர், ஆரியர், திராவிடர் முதலிய பல வகுப்பாருடன் கலந்து விட்டனர்; அப்பலருள்ளும் திராவிடருடனேயே மிகுந்த கலப்புக் கொண்டனராதல் வேண்டும் என்பது தெரிகிறது”.[32]

சிந்து மக்கள் மொழி ஆரியர்க்கு முற்பட்டது. அதற்கு உரிய மூன்று காரணங்களாவன:-(1) ஆரியர்க்கு முன் வட இந்தியாவில் சிறந்த நாகரிகத்தோடு வாழ்ந்தவர் திராவிடரே ஆவர்; (2) சிந்து வெளிக்கு அண்மையிலேயே இன்றளவும் திராவிட மொழிகள் ப்ராஹுயி மொழியிற் காணப்படலால், சிந்துவெளியில் ஆரியர்க்கு முன் பரவி, இருந்த மொழி திராவிடமே ஆகலாம்; (3) திராவிட மொழிகள் ஒட்டு மொழிகள் ஆதலின், அவற்றுக்கும் சுமேரியருடைய ஒட்டு மொழிக்கும் உள்ள தொடர்பை நன்கு சோதித்து உணரலாம்”.[33]

‘நாவிற் பிறக்கும் ‘ட், ண்’ என்பன திராவிட மொழிக்கே உரியவை. இவை எந்த இந்து-ஐரோப்பிய மொழியிலும் இல்லை. வடமொழி இந்தியா வந்தவுடன் இவற்றைக் கைக்கொண்டது. இவை ப்ராஹுயி மொழியிலும் இருக்கின்றன. பிற்கால ப்ராக்ருத மொழிகள் இவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளன. திராவிடர் இந்தியா முழுவதிலும் பரவியிருந்த அந்தப் பழங்காலத்தில், ஆரியர் இவற்றைத் திராவிடத்திலிருந்து பெற்றிருத்தல் வேண்டும்....

தன்மைப் பெயர் வேற்றுமை உருபை ஏற்கும் பொழுது பெறுகின்ற மாறுதல் கோண்ட், தமிழ் முதலிய மொழிகளில் ஒத்திருத்தல் காணத்தக்கது. கோண்ட், கூய் முதலிய மொழிகள் நெடுங்கலமாகத் தமிழ்-மலையாளம் முதலிய மொழிகளிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பினும், இவற்றினிடம் மேற்கூரிய ஒருமைப் பாடு இருத்தல் இன்றுள்ள பழைய தமிழ் நூல்கள் செய்யப்பட்ட பழைய காலத்தைப் போல மும்மடங்குள்ள பழைய காலத்தில்[34] வட இந்தியாவில் இன்றைய தமிழர் முன்னோரும் கொண்டர் முன்னோரும் கலந்திருந்த நிலைமையை நன்கு விளக்குவ தாகும்.பிரதி பன்மைப் பெயர்கட்கு ‘ம்’ சேர்க்கப்படல், கொண்டரும் தமிழ் மக்களும் ஒரிடத்தில் வாழ்ந்திருந்தபோது பிராக்ருத மொழி சிதைந்து இன்றுள்ள வட இந்திய மொழிகளாக மாறுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்திருத்தல் வேண்டும்.... திராவிடத்தில் உள்ள பல உயிர் நாடியான சொற்கள் ப்ராஹாயி மொழியில் வியத்தகு முறையில் அமைந்திருக்கின்றன. இத் திராவிடக் கலப்பு-ப்ராஹுயி மக்களோடு கலந்திருந்த பண்டைத் திராவிட வகுப்பாருடையதாகும் என்பது திண்ணம்”.[35]

“வடமொழி, பிராக்ருதம், திராவிடம், இம்மூன்றையும் சோதித்துப் பார்ப்பின், பண்டைக் காலத்தில் திராவிடம் வடஇந்தியாவில் இருந்ததென்பது தெளிவு. என்னை? ‘பாலி’ முதலிய பிராக்ருத மொழிகள் உருபுகளைச் சொற்களின் முற்கூட்டும் வடமொழி முறையை அறவே கைவிட்டு, திராவிட முறைப்படி சொற்களின் பின்னரே உருபுகளைக் கூட்டின. மையால் என்க.[36]

“புதிய கற்கால மக்கள் இந்தியா முழுவதும் திராவிட மொழிகளையே பேசிவந்தனர். விந்திய மலை முதலிய மலைப்பகுதிகளைச் சேர்ந்த இடங்களிற்றாம் ஆஸ்ட்ரேலிய (முண்டா) மொழிகள் பேசப்பட்டன. இன்று வட இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள் ஆரியர் வரவுக்கு முன் திராவிட மொழிகளாக இருந்தவையே ஆகும். அவை, வடமொழியின் பெருங்கலப்பால் தம் உண்மை வடிவை இழந்துவிட்டன. அவை - வடமொழியையோ பிராக்ருதத்தையோ சேர்ந்தவை அல்ல; அவ் விரண்டின் கூட்டுறவால் உருவம் கெட்டவை.பிராக்ருத மொழிகள் இன்றுள்ள வட இந்திய மொழிகளினின்றும் முற்றும் மாறுபட்டவை. பஞ்சாபிலிருந்து ஒரியாவரை பேசப்படுகின்ற பல்வேறு வட இந்திய மொழிகள் இலக்கண அமைப்பில் தென்னிந்திய மொழிகளையே ஒத்துள்ளன. பால், எண், வேற்றுமையுருபுகள் பெயர்களோடு பொருந்துதல், எச்சங்கள், வினைச்சொல்லின் பலவகைக் கூறுபாடுகள், வாக்கிய அமைப்பு, சொல் அலங்காரம் இன்ன பிற அம்சங்களில் வட இந்திய மொழிகள் திராவிட மொழிகளையே ஒத்துள்ளன. அம்மொழிகளில் உள்ள ஒரு வாக்கியத்தை எழுதி, அதில் உள்ள சொற்களுக்குப் பதிலாகத் தமிழ் முதலிய திராவிட மொழிச் சொற்களைப் பெய்தால், வாக்கியம் ஒழுங்காகவே காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கது’. இம்முறை வடமொழியிலோ பிற இந்து-ஐரோப்பிய மொழிகளிலோ இயலாத செயலாகும். ‘ஒரு மொழி பிற மொழியினின்றும் பெரும்பாலான சொற்களைக் கடனாகப் பெறலாம். ஆனால், அதன் இலக்கண அழைப்பு முறை ஒருபோதும் மாறாது’ என்பது ஒப்பிலக்கண ஆராய்ச்சியாற் போந்த உண்மையாகும். இவ்வுண்மைப்படியே இன்றுள்ள வட இந்திய மொழிகள் இருந்து வருகின்றன; அஃதாவது, அவை ஆரியர் வரவுக்கு முன் திராவிட மொழிகளாக இருந்தவை, இன்று ஆரியர் மொழியால், அடிப்படையில் திராவிடமாகவும், மற்றதில் ஆரியமாகவும் இருக்கின்றவை என்பதாம். ‘வடமொழி ஒருபோதும் பேசப்பட்ட மொழி (Vernacular) அன்று. அதனை ஒரு வகுப்பார் மொழி’ என்று டாக்டர் மாக்டொனெல் தாம் எழுதியுள்ள ‘வடமொழி இலக்கியம்’ என்னும் நூலில் கூறியுள்ளார். எனவே அது வடஇந்திய மொழிகளின் பிறப்புக்குரிய பேச்சு மொழியாக இருந்திரா தென்பது தெளிவு. வடமொழியோடு வடஇந்தியத் திராவிட மொழிகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்தமையால், அவை தம் பண்டை உருவை இழந்து, ஆரியம் பரவாமையால் பண்டை நிலையில் பேரளவு உள்ள தமிழ் முதலிய மொழிகளோடு வேறுபட்டனவாக மேற் போக்கில் காணப்படுகின்றன. இம்மேற்போக்கான நிலையை மட்டுமே கவனித்து, ‘வட இந்திய மொழிகள் வேறு-தென் இந்திய மொழிகள் வேறு’ என்று ஆழ்ந்த அறிவற்ற சிலர் (Superficial enquirers) நினைத்தனர். அவர் நினைப்புக்கு மாறாக இன்றுள்ள பேச்சு வழக்கில் உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் திராவிடக் கிளை மொழிகளே என்பது உண்மை ஆராய்ச்சியாளர்க்கு நன்கு விளங்கும்”.[37]

“திராவிடப் பகுதிகள் (Roots) மிகப் பழைய காலத்தில் ஒரசை உடையன (Mono syllabic) ஆகவே இருந்தன. பின்னர் அவை வேறு பல சொற்கள் சேர்ந்தமையால், நீண்ட சொற்கள் ஆயின; பல சொற்கள் சிதைந்து, இன்று ஒரு பகுதியாகத் தோற்றமளிப்பனவும் உள”.[38]

“வடமொழியும் பாலி மொழிகளும் அசோகனுக்கு (கி.மு.275க்கு) முன்னரே திராவிட ஒசைகளை ஏற்றுக் கொண்டு விட்டன. சிந்து வெளியிற் கிடைத்த முத்திரைகளில் உள்ளவை பெரும்பாலும் ஒரசைக் சொற்களாகவே (Mono syllabic) காணப்படுகின்றன. எனவே, இந்த ஓரசைச் சொற்களைக்கொண்ட மொழியே சிந்துவெளியில் பேசப்பட்டதாகும். அம்மொழி எதுவாயினும் சரி, வடமொழியாகவோ, செமைட்டிய மொழியாகவோ இருத்தல் இயலாது என்பது உண்மை”.[39]

(1) சிந்துவெளியை அடுத்த ப்ராஹுயி மொழியில் பேரளவு திராவிட மொழி கலந்துள்ளது; (2) ஹைதராபாத் சவக் குழிகளிற் கண்டறியப்பட்ட மட்பாண்டங்கள் மீது உள்ள எழுத்துக் குறிகள் சிந்து வெளியிற் கிடைத்தவற்றையே ஒத்துள்ளன; (3) சிந்து வெளியிற் கிடைத்த மண்டை ஒடுகளிற் பல மத்திய தரைக் கடலினரையே குறிக்கின்ற்ன. இக்காரணங்களால் ஆரியர் வந்த போது சிந்துவெளியில் இருந்தவர் திராவிடர் என்பதே தோன்று. கிறது. இத்திராவிடரே தமது சிந்து நாகரிகத்தை ஆரியர்டால் ஒப்படைத்தவர் ஆவர்”.[40]

“சிந்து வெளியிற் காணப்பட்ட எழுத்துக்களையும் மொழியையும் கொண்டிருந்த மக்களே பிற்காலத்தவூரான் ‘திராவிடர்’ எனப்பட்டனர்; அவர் தம்மொழி ‘திராவிடம்’ எனப்பட்டது. அவர்கள் மத்தியதரைக்கடற் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி வந்து சிந்து வெளியில் தங்கினர்; தமக்கு முன் சிந்துவெளியில் இருந்த ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலந்து நெடுங்காலம் ஆயினமையின், தம் வெண்மை நிறத்தையும் உருவ அமைப்பையும் இழந்து, இன்றுள்ள திராவிடரைப் போல ஆயினர். அவர் கொண்டுவந்த மொழியும் ஆஸ்ட்ரேலியர் கூட்டுறவினால் சிறிது மாறுபட்டிருக்கலாம். எனினும், சிந்துவெளி எழுத்துகளே பிற பண்டை நாகரிக நாட்டு மொழிகம் குத் தாய்மொழியாகும். மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த மக்களும் தென் இந்திய திராவிடரும் ஒர் இனத்தவரே. அவர்கள் இருபிரிவினரும் பேசியமொழி ஒன்றே.சிந்துவெளி மொழிதிராவிடம் என்பதில் ஐயமே.இல்லை. அதுதமிழையே பெரிதும் ஒத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம்”.[41]

“சுமேரியாவில் உள்ள ‘உருக்’ என்னும் இடத்திற் கிடைத்த பல் பொருள்களுக்கும் சிந்து வெளிப் பொருள்களுக்கும் மிகுதியான ஒருமைப்பாடு காணப்படுகிறது. இதனால், மிகப் பழைய காலத்தில் உருக்’ நாகரிகத்தைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த சுமேரியர் இனத்தவரே இந்தியா வந்து, இந்தியாவில் இருந்த பண்டை மக்களோடு கலந்து வாழ்ந்து வந்தனராதல் வேண்டும். அக்கலப்பினர் வழிவழி வந்தவரே சிந்துவெளி மக்களாதல் வேண்டும்”.[42]

“வடமொழியில் இராமாயணம் பாடிய வான்மீகி முனிவர் தமிழ்ப்புலமை உடையவர் என்பது பல காட்டுகளால் அறியக் கிடக்கிறது. அவர், இராமபிரான் வடிவழகைக் கூறும் மிகச்சிறிய பகுதி கொண்டு, பெரிய பகுதிக்குச் ‘சுந்தர காண்டம்’ எனப் பெயர் இட்டார்; (2) வடமொழிப்படி ‘செளந்தர்ய காண்டம்’ என்னாது, தமிழ் வழக்குப்படி ‘சுந்தர காண்டம்’ என்றே தம் வடமொழி நூலில் பெயரிட்டனர்; (3) வடமொழியில் இல்லாத பழமொழியைத் தமிழில் உள்ளவாறே ('பாம்பின் கால் பாம்பறியும்’ என்பதில், ‘கால்’ என்பது உறைவிடம் எனப் பொருள்படும்; ஆனால் வான்மீகியார் அதனைப் பாதம் என்றே) மொழி பெயர்த்தனர். இன்ன பிற காரணங்களால், அவர் தமிழ்ப் புலமை உடையவர் என்பதை உணரலாம்” எனவே, புறநானூற்றிற் காணப்படும் 358 - ஆம் செய்யுள் அடியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வான்மீகியார்’, இராமாயணத்தை வடமொழியிற் பாடிய வான்மீக முனிவரே என்னலாம்.

“அவர் அதுமான் சீதையிடம் பேசுமுன், (1) இலக்கண அமைதி பெற்ற மானுஷ வாக்கிற் பேசுவேன்; (2) தேவ பாஷையிற் (சம்ஸ்கிருதம்) பேசுவேன்; (3) பொருள் விளங்கத்தக்க மானுஷ பாஷையிற் பேசுவேன்; இறுதியிற் குறிப்பிட்டதிற் பேசினால் இவள் எளிதில் உணர்வாள்’ என்று முடிவுகொண்டு, மதுரமொழியிற் பேசினான்” என்று எழுதியுள்ளார்.

“அநுமன் குறிப்பிட்ட தேவமொழி வடமொழியே. மற்ற இரண்டும் தேவமொழிக்கு இணையான தமிழ் மொழியே ஆதல் வேண்டும். என்னை? அன்று தொட்டு இன்றளவும் ‘வடமொழி’ எனவும், ‘தென்மொழி’ எனவும் வழக்காறு கொண்டவை இரண்டே ஆகலான் என்க. மேலும், அது ‘மதுரவாக்’ (இனிய மொழி என்று கூறப்படுகிறது.அநுமன் குறிப்பிட்ட முதல் மொழி செய்யுள் நடையுடைய தமிழ்மொழி; மூன்றாவது,பேச்சுவழக்கில் உள்ள தமிழ் மொழி. இதைப்பற்றி, வான்மீகி உரையாசிரியர் கோசல தேசத்தார் பேசிய மொழி’ என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, அநுமன் சீதையிடம் அவளுக்கு நன்கு தெரிந்திருந்ததும் கோசல நாட்டு மொழியானதுமான தமிழிலேயே பேசினான் என்பது தெளிவாம்?....” என்று கூறி, இம்முடிபை நிலைநாட்டற்கு உரிய பல அரிய சான்றுகளைச் ‘செந்தமிழ்’ இதழாசிரியராகிய திரு. நாராயணையங்கார் அவர்கள் பலபடியாக விளக்கிச் செல்கின்றனர்.[43]

“இன்றைய தமிழ் மொழியும் தமிழ் நாடும் வேத கால நாகரிகத்திற்கு நெடுந் தொலைவில் இருக்கின்றன எனினும், தமிழின் பழைய மொழியான, திராவிடம் வேத காலத்தில் ஆரியர்க்கு அண்மையிலேயே இருந்து, வேத கால மொழியிலேயே மாற்றத்தை உண்டாக்கிப் பிற்காலப் பிராக்ருத மொழிகளையும் இன்றைய வட இந்தியா ஆரிய மொழிகளையும் உண்டாக்கிவிட்டதென்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியவராக இருக்கின்றோம்”

பிற சான்றுகள்

“சிந்துவெளி மக்கள் ஆரியர்க்கு முற்பட்டவரே (பெரும்பாலும் திராவிடராக இருக்கலாம்). ரிக்வேதம் குறிப்பிடும் ‘தாஸ்யுக்கள் அசுரர்’ என்பவர்கள் அவர்களே ஆவார்கள். அவர்கள் கலைகள் ஆரியரால் அழிவுண்டன. மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த யோகியர் படிவங்கள் அல்பைனரை ஒத்துள்ளன.... சிந்துவெளி நகரங்களிலும் பலுசிஸ்தானத்தில் உள்ள ‘நால்’ என்னும் இடத்திலும் கிடைத்த மண் பாண்டங்கள், கருவிகள், சித்திர எழுத்துகள் போன்றவை டெக்கானில் கிடைத்துள்ளன. டெக்கான் சவக்குழிகளிற் கிடைத்த பாண்டங்களின் மீது காணப்

2. Presidential Address (Telugu Section) of K.Ramakrishniah at the Tenth All-India Oriental Conference, Tirupadi. - The Annals of Sri Venkateswara Oriental Institute, Vol.I.Part 2, p.102. படும் சொந்தக்காரர் முத்திரை’ (Ownership Marks) எகிப்தில் அரச மரபினர் தோன்றுதற்கு முன்னர் இருந்த பாண்டங்கள் மீதுள்ள முத்திரைகளையே ஒத்துள்ளன. வேறு சில பாண்டங்கள்மீது கோப்பை அடையாளங்களும் கதிரவன் குறிகளும் காணப்படு கின்றன. இவையாவும் சிந்துவெளியிற் கிடைத்துள்ள சித்திரக் குறிகளிற் காணப்படுகின்றன. எனவே சிந்துவெளிக் கலை யுணர்வு டெக்கானுடன் உறவு கொண்டிருந்தது என்பது அறியத்தக்கது.[44]

மைசூர்ப் புதை பொருள் ஆராய்ச்சியின்போது 2 செம்பு நாணயங்கள் கிடைத்தன. அவை நீள் சதுரவடிவின.கோடுடைய யானை உருவம் பொறிக்கப்பட்டவை: யானையின் முதுகுக்கு மேற்புறம் சித்திர எழுத்துகளைக் கொண்டவை. இந்’ நாணயங்களில் ஸ்வஸ்திகா'தமருகம், பல வடிவச் சக்கரங்கள், செடியுடைய தொட்டி தாயித்து, சரிபாதி உருண்டை வடிவம், கேடயம், மணி, சதுரம், மீன், வளர்பிறை, எருது ஆகியவற்றின் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியுள்ளநாணயங்கள் பல திருநெல்வேலிக் கோட்டத்திலும் கிடைத்துள்ளன. இவற்றை நன்கு சோதித்ததில் கீழ்வருவன ஒருவாறு புலனாகின்றன: (1) இந்த எழுத்துக் குறிகள் பெரும்பாலும் சிந்துவெளியிற் கிடைத்துள்ள எழுத்துக் குறிகளையே ஒத்துள்ளன: (2) சில நாணயங்களில் எழுத்துக் குறிகள் ஒரு வரியிலும் சிலவற்றில் இரண்டு வரிகளிலும் உள்ளன; (3) இக் குறியீடுகள் சமயத் தொடர்புடையன மட்டும் அல்ல கதைகளைக்குறிப்பனவுமாகலாம். அவற்றை இப்பொழுது படிக்கக் கூடவில்லை.இவை கொற்கைப்பாண்டியர்பெயர்களோ? அல்லது, வேறு தென்னாட்டு அரசர் பெயர்களோ? (4) இவை எங்ஙனமாயினும், கி. மு. முதல் நூற்றாண்டிற்கு முற்பட்டனவே ஆகும். இவை, தொடக்க சாதவாஹனர் வெளியிட்ட யானை முத்திரையுடைய சதுர நாணயங்களைத் தோற்றுவிக்கக் காரணமானவையாகும். (5) இவை கிடைத்துள்ள இடங்களில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட நகரங்கள் இருத்தல் வேண்டும்.[45]

“இதிகாச காலத்தில் வட இந்தியாவில் காந்தாரர், மஹறிசர், மச்சர், நாகர், கருடர், பலிகர் முதலிய திராவிட இனத்தவர் இருந்திருக்கின்றனர். எனவே, அவர்தம் முன்னோரே, வடஇந்தியா முழுவதும் ஆரியர் வரும்பொழுது இருந்தவர் ஆவர். ஆகவே அத்திராவிடரே மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா முதலிய நகரங்களைக் கட்டியவர் ஆவர்.[46]

“சிந்து மாகாண ஹைதராபாத் நகரம் ஒரு காலத்தில் சிந்து மாகாணத்தின் தலைநகரமாக இருந்திருத்தல் வேண்டும். அது நாக அரசனான திராவிட வேந்தனது பெரிய நாட்டின் தலைநகரமாகும். அங்கிருந்தே வெளி நாடுகட்கு ‘மஸ்லின்’ சென்றது. அது சிறந்த வாணிபத் தலமாக இருந்து வந்தது... ஆரியர்க்கு முன், வடக்கிலும்... வடமேற்கிலும் இருந்த திராவிடர், தம் இனத்தவரான கமேரியரோடு சிறக்க வாணிபம் செய்து வந்தனர்...[47]

“இன்று இந்தியாவில் உள்ள மொழியினங்கள் மூன்று. அவை: (1) ஆசிய-ஆஸ்ட்ரிய மொழிகள் (2) திராவிட மொழிகள் (3) இந்திய-ஆரிய மொழிகள் என்பன. திராவிடர் ஆஸ்ட்ரேலியரை அடிமைப்படுத்தியோ, விரட்டியோ தம் மொழியைப் பரவச் செய்தனர். அவர்க்குப் பின்வந்த ஆரியர் திராவிட மொழிகளை அழுத்திவிட்டு ஆரிய மொழியைப் பரப்பினர்.... இன்றுள்ள திராவிடர், உயரத்திலும் உருவ அமைப்பிலும் மண்டை ஒட்டளவிலும் ஏறக்குறைய சுமேரியரையே ஒத்துள்ளனர். சுமேரியர் மொழியும் ஒட்டு மொழியே ஆகும். சிந்துவெளியிற் காணப்படும் மொழியும் ஒட்டு மொழியே யாகும். சிறப்பாகத் தமிழரிடம் அர்மீனியர் மத்தியதரைக் கடலினர் கலப்புக் காணப்படுகிறது; சுமேரியரும் இக்கலப்புடையவரே. மேலும், - சிந்துவெளி மக்கள் திராவிடரே என்பதை அறிவிப்பதுபோலப் பலுசிஸ்தானத்தில் உள்ள ப்ராஹுயி மொழியிற் பேரளவு திராவிடம் காணப்படுகிறது. இன்னபிற காரணங்களால், சிந்துவெளி மக்கள் திராவிடரே எனலாம். அத்திராவிடர் மத்தியதரைக்கடற் பகுதிகளிலிருந்து வந்தனராதல் வேண்டும். என்னை? அவர்கள் ஈரானிலும் மெசொபொட்டேமியாவிலும் இருந்த மக்கள் இனத்தவர் ஆவர்; மேலும், அங்குள்ள சில இடங்களின் பெயர்கள் திராவிட மூலத்தைக் கொண்டனவாக இருக்கின்றன: மெசொபொட்டேமியாவில் உள்ள மிட்டனி (கரியன்) என்னும் இடத்தில் பேசப்படுகின்ற மிகப் பழைய மொழியில் இன்றைய திராவிடச் சொற்கள் மிகப் பல இருக்கின்றன; ஆதலின் என்க..... எனவே, ‘ஆரியர் வருவதற்கு முன்பு இந்தியாவில் அநாகரிக ஆஸ்ட்ரேலிய இனத்தவர் தாம் இருந்தனர் என்று இதுகாறும் கூறி வந்த கூற்றெல்லாம் தவறு என்பதும், புகழ் பெற்ற மெசொபொட்டேமிய நாகரிகங்களுடன் தொடர்பு கொண்டிருந்த உயரிய திராவிட நாகரிகம் ஒன்று ஆரியர் வருகைக்கு முன்னரே இந்தியாவில் இருந்த தென்பதும், திராவிடரே இந்தியாவிற்குக் கலை உண்ர்வை ஊட்டினவர் என்பதும் அறியத்தக்கன”.[48]

“ப்ராஹுயி மக்கள் திராவிட மொழியைப் பேசுவதைக் கண்டு உடல்நூல் புலவர் திகைக்கின்றனர். கிசியெர்ஸன் முதலிய மொழிவல்லுநர் கூற்றுப்படி திராவிடம் தென் இந்தியாவிற்றான் பேரளவு பேசப்படுகின்றது; சிறிதளவு நடு மாகாணங்களிலும் வங்காளத்திலும் பேசப்படுகிறது. வடமேற்கு இந்தியாவில் பலுசிஸ் தானம் ஒன்றிலேதான் திராவிடம் ப்ராஹுயி மக்களால் பேசப்படுகிறது.இது வியப்புக்குரிய தன்றோ? அறிஞர் சி.ஆர்.ராய் என்பார் நூறு ப்ராஹுயி மக்களை அளந்து சோதித்துளர். பண்டைக் கால ப்ராஹுயி மக்கள் மத்தியதரைக் கடலினர் என்பதில் ஐயமே இல்லை. இம்முடிவையே அவர்தம் பழக்க வழக்கங்களும் ஆதரிக்கின்றன. ஆடவர் தம் குடும்பத்தைச் சேர்ந்த மிக நெருங்கிய பெண்ணையே (திராவிடரைப் போல மாமன் மகளையோ, அக்காள் மகளையோ) மணந்து கொள்கின்றனர். அவர்கள் தம்மைத் தூய சமூகத்தினர் என்று கூறுகின்றனர். ஆனால், சிறிது கலப்பு ஏற்பட்டுவிட்டதை நன்கறியலாம். எனினும், அவருள் உயர்ந்தவர் தூயவர் எனக் கூறலாம். அவர்களிடம் மொழித் தூய்மையும் பேரளவு காணப்படுகிறது. அத்தூய்மையாற்றான் அவர்கள் மத்தியதரைக் கடலினர் என்பதை நாம் அறிதல் முடிகிறது. இவற்றால், மத்தியதரைக் கடலினரும் பண்டை ப்ராஹுயி மக்களும் திராவிடரும் ஒரே இனத்தவர் என்னும் தடுக்க முடியாத முடிவுக்கு நாம் வர வேண்டுபவராக இருக்கின்றோம்.

“மத்தியதரைக் கடலினர்க்கும் திராவிடர்க்கும் தொடர்பை உண்டாக்கும் நிலையில் உள்ளவர் ப்ராஹுயி மக்களே ஆவர். மிகப் பழைய காலத்தில் மத்திய தரைக்கடலினர் வடமேற்குக் கணவாய்களின் வழியாக வந்த பொழுது ஒரு சாரார் பலுசிஸ்தானத்தில் தங்கிவிட்டனராதல் வேண்டும். அவர்கள், இன்று ஒரளவு மாறுதல் அடைந்திருப்பினும், தென் இந்தியா சென்ற தூய மத்தியதரைக் கடலினரைப் பல ஆம்சங்களில் இன்றும் ஒத்துள்ளனர். கூடை முடைதல் என்பது ப்ராஹுயி மக்களிடமும் திராவிடரிடமும் ஒரேவகைப் பயிற்சியில் இன்றும் இருந்து வருதல் அவ்வகைப் பயிற்சி பிற இந்தியப் பகுதிகளில் இல்லாதிருத்தல் - நன்கு கவனித்தற்கு உரியது. இருதிறத்தாரும் பயன்படுத்தும் கூடைகள் ஒரே மாதிரியாக இருத்தல் வியக்கத் தக்கது.

‘மொழி, உடற்கூறு. செய்வினை என்னும் மூன்றும், மொஹெஞ்சொ-தரோவில் அண்மையிற் காணப்பட்ட புதை பொருள்களும் ஆகிய அனைத்தும் ப்ராஹுயி மக்கள் திராவிட இனத்தவரே என்பதையும் திராவிடர் நாகரிகம் மிக உயர்ந்ததும் பழைமையானதும் ஆகும் என்பதையும் தெளிவுற விளக்குகின்றன.[49]

இந்திய மக்கள் பற்றிய அறிக்கை

1901இல் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் எண்ணிக்கை பற்றிய அறிக்கையில் கீழ்வருவன காணப்படுகின்றன:

(1) “திராவிடர்க்கு முற்பட்டவர் - குட்டை உருவமும் அகன்ற மூக்கும் உடையவர்; காடுகளில் வசிப்பவர்.

(2) திராவிடர் - குட்டை உருவமும் கறுப்பு நிறமும் அடர்ந்த மயிரும் நீண்ட தலையும் அகன்ற முக்கும் உடையவர். இவர்கள் ஐக்கிய மண்டிலத்திற்குத் தெற்கே அக்ஷ ரேகை 76 டிகிரிக்குக் கிழக்கே உள்ள நிலம் முழுவதிலும் இருப்பவர்.

(3) இந்து-ஆரியர்:- உயரமான உருவமும் அழகிய - தோற்றமும் முகத்தில் நிறைந்த மயிரும் நீண்ட தலையும் குறுகி நீண்ட மூக்கும் உடையவர். இவர்கள் காஷ்மீரிலும் பஞ்சாபிலும் இராஜபுதனத்தின் சில பகுதிகளிலும் இருக்கின்றனர்.

(4) சிதிய-திராவிடர்-சிந்து, கூர்ச்சரம், மேற்கு இந்தியா என்னும் பகுதிகளில் இருப்பவர் நீண்ட தலை, குட்டை உருவம், குறுகிய అయ్యే இவற்றை உடையவர்.

(5) ஆரிய-திராவிடர்-கிழக்குப் பஞ்சாப், ஐக்கிய மண்டிலம், பீஹார் மண்டிலம் இவற்றில் இருப்பவர் நீண்ட தலை, கறுமையும் பழுப்பு நிறமும் கலந்த தோற்றம், 157.5 செ. மீ. முதல் 162.5 செ. மீ. வரையுள்ள உயரம், நடுத்தரத்திலிருந்து அகன்ற நிலைவரை அமைந்துள்ள மூக்கு இவற்றைப் பெற்றவர்.

(6)மங்கோலிய-திராவிடர்-வங்காளத்திலும் ஒரிஸ்ஸாவிலும் இருப்பவர் அகன்ற தலை, கறுத்ததோற்றம், நடுத்தரமூக்கு உடையவர்.[50]

(1) “ஆரியர் - பஞ்சாப், காஷ்மீரம், இராஜபுதனத்தின் ஒரு பகுதி ஆகிய இவ்விடங்களில் காணப்படுகின்றனர்; (2) திராவிடர் தென்னிந்தியா முழுவதிலும் இருக்கின்றனா.: (3) மங்கோலியர் இமயமலை அடிவாரத்திலும் வடகிழக்கு எல்லைப்புறங்களிலும் இருக்கின்றனர். ஏனைய பகுதிகளில் இருப்பவர் இம்மூன்று வகுப்பினரால் உண்டான கலப்பு மக்களேயாவர்; அவர்கள் ஆரிய திராவிடர், மங்கோலிய-திராவிடர், சிதிய-திராவிடர் எனப்படுவர்.

(1) ஆரிய-திராவிடர் என்பவர் பீஹார், ஐக்கியமண்டிலங்களிலும் இராஜபுதனத்தின் ஒரு பகுதியிலும் இருக்கின்றனர்.

(2) மங்கோலிய-திராவிடர் என்பவர் ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மூன்று மண்டிலங்களிலும் இருக்கின்றனர்.

(3) சிதிய-திராவிடர் என்பவர் வடமேற்கு இந்தியா (சிந்து முதலிய பகுதிகள்), மஹாராஷ்டிர மண்டிலம், இராஜபுதனத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் இருக்கின்றனர்...[51]

இவ்விரண்டு கூற்றுக்களாலும் ஆரியர் சிதியர் மங்கோலியர் என்பவர் பண்டை வட இந்தியத் திராவிடருடன் கலந்தனர் என்பது நன்கு விளங்கும் விளங்கவே, வடஇந்தியா முழுவதிலும் (சிந்து முதல் அஸ்ஸாம் வரை) திராவிடர் பரவி இருந்தனர் என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாதல் காண்க.

நெடுங்காலம் வாழ்ந்த மக்கள்

சிந்துவெளி மக்கள் நாகரிகம் திடீரென ஏற்பட்டதன்று. அஃது, அவ்விடங்களில், நாம் கண்ட பொருள்களுக்கு உரிய காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்தே, இந்தியாவிற்றானோ இடம்-பொருள்-ஏவல்கட்கு ஏற்றபடி வளர்ச்சி பெற்று வந்ததாகும். நாம் இந்த உண்மையை ஒருபோதும் மறத்தல் ஆகாது.[52] திராவிடர் மத்தியதரைக் கடற்பகுதிகளிலிருந்து இந்தியா வந்தனர் என்பது பலர் கருத்து. அஃது உண்மையாயின் அவர்கள் இந்தியாவிற்கு வந்து, தங்கட்கு முற்பட்ட ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலந்து பல காலம் வாழ்ந்தனராதல் வேண்டும்; அவர்கள் கலப்பால் உருமாறினவராதல் வேண்டும். அதனாற்றான் சிந்து மண்டை ஓடுகள் சிறிது வேறுபட்டனவாக இருக்கின்றன. சுமேரியர் எழுத்துக் குறிகளைப் பல அம்சங்களில் ஒத்திருப்பினும், சிந்து வெளி எழுத்துக் குறிகள் இந்திய முறைக்கு ஏற்பச் சில மாறுதல்களைப் பெற்றுள்ளன. சமய வேறுபாடுகளும் சில காணப்படுகின்றன.[53]

“சிந்துவெளி எழுத்துக் குறிகள் சில, ஆஸ்ட்ரேலியர் மொழிகளில் உள்ள சில அம்சங்களைப் பெற்றுள்ளன என்பது தெளிவாகிறது”.[54]

“சிந்துவெளி மக்கள் பன்னெடுங்காலம் இந்தியாவிலேயே வாழ்ந்தவர் ஆவர். அவர்தம் ஒப்புயர்வற்ற நகரங்களும், பிற நாகரிக நாடுகளின் சமயங்களிற் காணப் பெறாத மரவணக்கம் விலங்கு வணக்கம் லிங்க வணக்கம் முதலியனவுமே இவ்வுண்மைக்குச் சான்றாகும்”.[55]

முடிவுரை

இதுகாறும் கூறிய பற்பல ஆராய்ச்சியாளர் முடிவுகளால், (1) ஆரியர் வருகைக்கு முன் சிந்து வெளியிலும் பிற இந்தியப் பகுதிகளிலும் பெருந் தொகையினராக இருந்த மக்கள் திராவிடரே என்பதும், (2) அவர்களே மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா முதலிய நூற்றுக்கணக்கான அழகிய நகரங்களை அமைத்துக் கொண்டு சிந்துவெளியிற் சிறப்புற வாழ்ந்து வந்தவர் என்பதும், (3) அத்திராவிடர், அக்காலத்திய எகிப்தியர்-சுமேரியர் முதலியவரை விட உயர் நாகரிகத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதும், (4) அவர்கள் மத்தியதரைக் கடற் பகுதியிலிருந்து பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவந்தவர் என்பதும்[56] (5) இந்தியாவில் இருந்த ஆஸ்ட்ரேலிய இனத்தவருடன் ஒரளவு கலப்புண்டு அவர் தம் சமயநிலை, மொழி முதலியவற்றிற் சிலவற்றைக் கொண்டினர் என்பதும், (6) திராவிடர்கள் சுமேரியர் இனத்தவர் என்பதும் பிறவும் நன்கு அறியலாம்.


  1. R.K.Mookerji’s ‘Hindu Civilization’ pp. 32-37
  2. ஆதிச்சநல்லூர் தமிழ்நாட்டுப் பகுதியாகும். இன்றுள்ள தமிழரிடம் அர்மீனியர், மத்தியதரைக் கடலினர் ஆஸ்ரேலியர் இவர் தம் கலப்பைக் காணலாம் என அறிஞர். அறைந்துள்ளதைக் காண்க. Hindu Civilization p. 37,39.
  3. Mohenjo-Daro, and The Indus Civilization, Vol.I. pp. 107,108
  4. Mackay’s ‘The Indus Civilization’ pp. 201, 202.
  5. Mohenjo-Daro, and The Indus Civilization, ‘Vol.I.p.77.
  6. Prof.N.K.Dutt’s ‘Aryanisation of India’, pp. 39, 65.
  7. Ibid p. 105 ‘வணிக + அர் = வணிகர்’. தொல்காப்பியத்தில் இப்பெயருடையவர் தம் இலக்கணம் கூறப்பட்டுள்ளதை இங்கு நினைவிற் கொள்ளற்பாலது. இவ்விலக்கணம் சிந்துவெளி மக்கட்குப் பொருத்தமாக இருத்தலையும் காண்க.
  8. P.T.S.Iyengar’s ‘The Stone Age in India’, pp. 49-51
  9. N.K.Dutt’s, ‘The Aryanisation of India’, pp.74-76.
  10. சம்பான் இந்திரனைத் தோற்றோடச் செய்தவன் எனவும் தசரதனால் வெல்லப்பட்டவன் எனவும் வரும் இராமாயணச் செய்தி இங்கு உணரத்தக்கது. - கையடைப்படலம், செ.8.
  11. R.K.Mookerji’s ‘Hindu Civilization’, p.72.
  12. R.C.Dutt’s ‘Civilization in Ancient India’, Vol. I. pp. 49,58.
  13. R.P.Chanda’s article on Survival of the Pre-historic Civilization of the I. Valley’ in ‘Memoirs of the A.S. of India’ No. 41, p.3
  14. Mookerji’s Hindu Civilization’, pp. 29-33.
  15. Patrick Carleton’s Buried Empires’, pp.162-166.
  16. M.S.Vats’ ‘Excavations at Harappa’, p.202.
  17. Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’, Vol.I. pp. 614, 615, 648.
  18. Sir John Marshall’s ‘Mohenjo-Daro and the I, C’, Vol.I.p.648.
  19. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the Indus Valley’, p.35.
  20. R.P.Chanda’s Article in ‘Memoirs of the A.S. of India’ No.31, pp.4, 5.
  21. Sir John Marshall’s, ‘mohenjo-Daro and the Indus Civilization’, Vol. Ipp. 77, 78.
  22. தமிழரசராய பாண்டியர் மீன்கொடி உடையவர் மீனவர் மதுரைப் பேரலவாயர்தம் மனைவியார் (உமாதேவியார்) பெயர் மீன் கண்ணி (மீனாக்ஷி) என்னும் செய்திகள் ஈண்டு உணர்தற்குரியன.
  23. தமிழில் இல்லாள் (வீட்டுக்கு உரியவள்) என்னும் சொல்லுக்குச் சரியான ஆண்பாற் சொல் இன்மையை உணர்க.
  24. N.K.Dutt’s ‘The Aryanisation of India’, pp.65, 76-84.
  25. E.B.Havell’s ‘The History of Aryan Rule in India’, pp.11-13.
  26. Babu Govinda Das’, Hinduism’, p.185.
  27. Patric Carleton’s ‘Burried Empires’, p.140
  28. Dr.S.K.Chatterji’s ‘Origin and Development of the Bengali Language’, Vol. H. pp. 28, 29, 41-45.
  29. ‘Pre-Aryan and Pre-Dravidian in India’, pp.49,86.
  30. Dr.R.G.Bhandarkar’s ‘Collected Works’, Vol.IV. p.293.
  31. Bhandarkar’s ‘Lectures on the Ancient History of India’ 1918, pp.25-28.
  32. Grierson’s ‘Linguistic Survey of India’, Vol IV. pp. 278-279.
  33. Sir John Marshall’s mohenjo-Daro and the Indus Civilization’, Vol. I. p.42.
  34. தமிழில் இன்றுள்ள பழைய நூல்கள் சங்க நூல்களே. அவற்றின் காலம் 2000 ஆண்டுகள் எனக் கூறலாம். அக்காலத்தைப் போல மும்மடங்கு காலம் எனக் கால்ட்வெல் கூறுவதால், 6000 ஆண்டுகள், அஃதாவது கி.மு.4000 ஆண்டுகட்கு முன் என்பது பெறப்படுகின்றது. இந்தக் காலம், சிந்துவெளி நாகரிக காலத்தை ஏறக்குறைய ஒத்துள்ளதைக் காண்க. ‘கொண்டர்’ ஆஸ்ட்ரேலிய இனத்தவர் என்பதும், திராவிடர் ஆதிக்கத்துக்கு அடங்கி அவரோடு வாழ்ந்தவர் என்பதும் முன்னமே குறிப்பிடப்பட்டமையும் ஈண்டு நினைவிற் கொள்ளல் தகும்.
  35. Dr.Caldwell’s ‘Comparative Grammar of the Dravidian Languages’, pp. 148, 368, 412, 633.
  36. ‘Dravidic Studies`, part III pp. 57, 61.
  37. P.T.S.Iyengar’s ‘The Stone Age in India’, pp. 1943-46.
  38. Dr.Caldwell’s ‘Comparative Grammarofthe DL, pp. 196-197.
  39. Dr.G.R.Hunter’s ‘The Script of Harappa and Mohenjo-Daro’ (1934) pp.51, 128.
  40. Dr.G.R.Hunter’s article in the ‘New Review, (1936) Vol. 1. pp.317,318.
  41. H.Heras’s article in the ‘New Review’, 1836. Vol. H. pp.I-16.
  42. Mackay’s Further Excavations at Mohenjo-Daro Vol. I. p.668.
  43. Vide his article in Sentamii (1939-1940) - Published by the Madura Tamil Sangam.
  44. P. Mitra’s Pre-historic India’, pp. 272, 273.
    Journal of the Hyderabad Archaeological Society (1917), p. 57
  45. ‘Archaeological Survey of Mysore’, (1935), pp. 67-71.
  46. R.D.Banerji’s ‘Pre-historic Ancient and Hindu India, p.10.
  47. Ragozin’s ‘Vedic India’, p.398.
  48. R.K.Mookerji’s Hindu Civilization’, pp. 36-39.
    N.K.Dutt’s ‘Aryanisation of India’, p.65.
  49. K. Subbarayan’s article on ‘The Brahuis’, Hindu (16-2-41).
  50. Sir Herbart Risly in the ‘Census Report’ for 1901.
  51. C.E.M.Joad’s ‘Indian Civilization’, pp.21-23.
  52. I should like to stress the point once again - that th: culture represented must have had a long antecedent history eu the soil of India, taking us back to an age that at present can only be dimly surmised” - Sir John Marshall’s ‘Mohenjo-Daro and the Indus Civilization, Vol.I.Preface, p. viii& p 106.
  53. Ibid. pp. 106 & 107.
  54. Dr.G.R.Hunter’s ‘The Script of Harappa & Mohenjo-Daro’, p.91.
  55. ‘Indus valley people lived for a considerable time in India. Not only do their exceptionally well built cities bear witness to this fact but fresh corroboration is also to be found in various aspects of their religion, which included tree and animal-worship and the use of phallic symbols, features, which do not appear in the contemporary civilizations to the west”, - Dr.Mackay’s ‘The Indus Civilization’, pp. 13, 14.
  56. இது துணிந்து கூறுவதற்கில்லை. திராவிடர் லெமூரியாக கண்டத்திலிருந்து இந்தியா, சுமேரியா முதலிய இடங்களிற் பரவினர் என்பது ஒருசார் ஆராய்ச்சியாளர் கூற்று. ஆதலின், திராவிடர் ‘இவ்விடத்திலிருந்து வந்தனர்’ என்று உறுதியாகக் கூறுவதற்கில்லை. இக்கூற்று ஆய்வுக்குரியது.