உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/7. தத்தளித்த தாமரை

விக்கிமூலம் இலிருந்து

7

தத்தளித்த தாமரை

ருங்கோவேள், மாளிகைக்குள்ளே சென்று ஆடை மாற்றிக் கொண்டு, மரமாளிகையின் முகப்புக்கு வந்தான். அவன் வருகையை அறிவிக்கக் கொம்பு வாத்தியம் முழங்கிற்று. எல்லா வீரர்களும் ஓடிவந்து அணிவகுத்து நின்றார்கள். அவர்களைக் கம்பீரமாகப் பார்த்து அவர்கள் அளித்த மரியாதை வணக்கத்திற்குப் பதில் தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்தான் வேளிர்குடி வேந்தன்.

"ம்! அழைத்து வாருங்கள் சிறைப்பட்டவர்களை?" என்று உத்தரவிட்டான் ஒரு சேனாதிபதி.

நாலைந்து வீரர்கள் ஓடினார்கள்.

பயங்கரமாக ஒரு மணி ஒலித்தது.

நூறு வீரர்கள் கொழுந்து விட்டெரியும் தீவட்டிகளைக் கையிலேந்தி வந்தார்கள். அந்தத் தீவட்டிகள் அங்கே பூமியில் செருகப்பட்டன. தூரத்திலேகூட நிற்க முடியாத அளவுக்குத் தீவட்டிகளின் ஜுவாலை வீசிக் கொண்டிருந்தது. சிறைப்பட்டவர்கள் பலர், கையில் விலங்கு மாட்டப்பட்டு இழுத்து வரப்பட்டார்கள்.

அவர்களில் செழியனும் ஒருவன். சோர்ந்து போய் நடக்க முடியாமல் நடந்து வந்தான். ஆனால் அந்த நடையிலும் வீரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது.

பூமியில் செருகப்பட்டிருந்த தீவட்டிகளுக்கு நடுவே சிறைப்பட்டவர்கள் நிறுத்தப்பட்டார்கள். தீ நாக்குகளைப் பல முனைகளிலும் சுழற்றிச் சுழற்றி எரிகின்ற அந்தப் பந்தங்கள் உமிழும் அனலை எப்படித்தான் அவ்வளவு அண்மையில் இருந்து தாங்கிக் கொள்ள முடியும்?

சிறைப்பட்டவர்கள் அனைவரும் சோழநாட்டுக்காரர்கள் என்பதைச் செழியன் புரிந்து கொண்டான். இத்தனை பேர் சோழ மண்டலத்திலே யிருந்து தூக்கி வரப்பட்டும் தன்னுடைய நாட்டுக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமல் இருக்கிறானே சோழன் என்று கோபங் கூட வந்தது செழியனுக்கு.

இவர்கள் எல்லாம் ஏன் சிறைப்பட்டார்கள்?

இவர்களுக்குச் சோழ நாட்டு அரண்மனையில் என்ன பதவி? வீரர்களா? பிரதானியரா? அல்லது நாட்டுப் பெருமக்களா?

செழியன் கேள்விகட்குப் பதில் கூற அங்கே யார் இருக்கிறார்கள்? அவர்களும் செழியனை ஆவலோடு பார்த்தார்கள்.

"யார் புது ஆள்?" என்ற வினாக் குறியை அத்தனை பேர் விழிகளும் எழுப்பிக் காட்டின.

இருங்கோவேள் பேச ஆரம்பித்தான். தவறு! தவறு! கர்ச்சிக்க ஆரம்பித்தான்.

"அடிமைகளே! எத்தனை நாளைக்கு இப்படித் தொல்லை அனுபவிக்கப் போகிறீர்கள்? நீங்களும் எப்படியும் விடுதலையாகப் போவதில்லை. சிறைப்பட்டிருக்கும் போதாவது கஷ்டமில்லாமல் வேதனைப்படாமல் இருக்க வேண்டுமானால், ஒழுங்காக உண்மையைச் சொல்லி விடுங்கள், ஏய், செழியா! முட்டாள் வாலிபனே! பாண்டிய நாட்டு வீரனே! நீயும் உனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லலாம். கரிகாற் சோழன் தன்னந்தனியாகச் சிந்திப்பதற்கென்று ஒரு ரகசிய இடத்திற்குப் போகிறானாமே! அந்த இடம் எது? இதோ இந்த முட்டாள்கள் அந்த உண்மையைச் சொல்லாமல் உயிர் வேதனை அடைகிறார்கள். செழியா! உனக்குத் தெரிந்தால் நீ சொல்லித் தப்பித்துக் கொள்!"

செழியன் இருங்கோவேளுக்குப் பதில் கூறினான்:

"சோழர் சிந்திக்கும் இடம். ரகசியமான இடம் என்று நீரே சொல்லுகிறீர்? அந்த ரகசியமான இடம் எனக்கும் இவர்களுக்கும் எப்படித் தெரியும்?"

"என்ன ஆணவம்! அடே? இங்கு சட்டம் என்ன தெரியுமா? சோழ நாட்டுக் கைதிகள் யாராவது வாய் திறந்தால் அவர்கள் கரிகாலனைப் பற்றிய உண்மைகளைச் சொல்வதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்படுவார்கள். அல்லாமல் 'அய்யோ அப்பா!' என்று கத்துவதற்குக் கூட இங்கு வாய் திறக்கக் கூடாது! தெரிந்து கொள்"

இப்படி ஆத்திரத்தோடு முழங்கிவிட்டு இருங்கோவேள் அதை விட்டு அகன்றான். தீப்பந்தங்களின் கொடிய அனலுக்கு நடுவே சோழநாட்டுக் கைதிகளும் செழியனும் துடித்தவாறு நின்றார்கள்.

இருங்கோவேள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அனலில் மயக்கமுற்றுச் சில கைதிகள் 'தடால் தடால்' எனத் தரையில் விழுந்தனர். அந்தக் கோரக் காட்சியைப் பார்த்தவாறு செழியன் எரிமலைபோல குமுறிக் கொண்டு நின்றான். ஆடவில்லை. அசையவில்லை, அவன். அக்கினி அவனுடலைத் தீய்த்தபோதிலும் வீரத்திரு நோக்குடன் அவன் நின்று கொண்டிருந்தான். மர மாளிகைக்குள்ளேயிருந்து அரசி பெருந்தேவியும் தாமரையும் மற்றவர்களும் அந்தக் கொடுமையான தண்டனைக் காட்சியைப் பலகணிகளின் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது உள்ளே மன்னன் இருங்கோவேள் நுழைந்தான். அரசி படுக்கையிலிருந்தவாறு கை நீட்டி மன்னனை அருகழைத்து மரியாதை செய்வித்தாள்.

"என்னம்மா தாமரை! என்ன மிகுந்த சோகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என வினவினான், தங்கையைப் பார்த்து இருங்கோவேள்.

"எல்லாம் சரிதான் அண்ணா! ஆனாலும் சோழ நாட்டுக் கைதிகளை இவ்வளவு கொடுமையாகத் தண்டிப்பது மனிதாபிமானத்தை மீறிய செயலாக எனக்குத் தோன்றுகிறது!" என்றாள், கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு தாமரை

"பைத்தியக்காரப் பெண்ணே! அந்தப் பாவிகளிடம் இரக்கம் வேறா உனக்கும்? நாடிழந்தோம், நலமிழந்தோம். நாடோடிகளைப் போல நடுக்காட்டில் மிருக வாழ்க்கை நடத்துகிறோம். இந்தநிலைக்கு நம்மை ஆளாக்கி விட்டவர்களை என்ன பாடுபடுத்தினாலும் தகும்!" என வெறி கொண்டவனைப் போலக் கத்தினான் இருங்கோவேள்.

தாமரை, அதற்குமேல் எதிர்த்துப்பேச விரும்பவில்லை. பலகணிப் பக்கம் போய்விட்டாள். அதன் வழியாக அந்தக் கைதிகளைப் பார்த்திடத் தொடங்கினாள். ஒவ்வொருவராகக் கீழே விழுந்து கொண்டிருந்தனர். அவளுக்குக் கண் கலங்கியது. அந்தக் காட்சியில் அப்படியே மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள்.

இருங்கோவேளிடம் அரசி மெதுவாகப் பேச ஆரம்பித்தாள், இடை இடையே இருமிக்கொண்டே.

"உங்கள் தங்கை காட்டோரத்தில் ஓர் ஊமை வாலிபனைப் பார்த்தாளாம்..."

"அப்படியா?.... ம்... அதற்கென்ன?"

"அந்த வாலிபன், கரிகாலனை பழி தீர்த்துக் கொள்வதற்காக அலைகிறானாம்..."

இருங்கோவேளின் உள்ளத்தில் முதல் ஐய வினா உருவாயிற்று.

"ஊமை வாலிபன்!"

"கரிகாலனைப் பழிவாங்க அலைகிறான்!"

மாறி மாறி ஒலித்தன அரசியின் வார்த்தைகள்.

"பிறகு!"

-என்று ஆவலுடன் பதில் தேடினான் மன்னன்.

"உங்கள் தங்கைக்கு அவன் மீது ஏதாவது அன்பு பிறந்து விட்டதோ என்னவோ? அதுவும் எத்தகைய அன்போ எனக்குத் தெரியவில்லை. அந்த வாலிபனுக்கு நல்ல மருத்துவ முறைகள் தெரியுமாம். அவனை அழைத்து வந்தால் எனக்கு மருத்துவமும் செய்வான்; உங்களுக்கு கரிகாலனைப் பழி தீர்க்கும் விஷயத்தில் உதவியாகவும் இருப்பான் என்று, தாமரை என்னிடம் கூறினாள். நான் அதெல்லாம் வேண்டாமென்று மறுத்து விட்டேன்."

"ஏன் மறுத்தாய்?... அந்த வாலிபன் பெயர் என்னவாம்?"

"முத்து என்று சொன்னாள்!"

"முத்து!" இருங்கோவேளின் உதடுகள் அசைந்தன.

"பெருந்தேவி! நல்ல மருத்துவன் என்றால் அழைத்து வரத் தடையேன் கூறினாய்?" என்று சொல்லிவிட்டுத் தங்கையைக் கூப்பிட்டு "தாமரை! தாமரை! இங்கே வாயேன்! பெருந்தேவியிடம் என்னவோ சொன்னாயாமே. நல்ல மருத்துவன் என்றால் அந்த ஊமை வாலிபனை அழைத்து வாயேன் - நல்லவன் தானே அவன்?" என்று பரபரப்புடன் கேட்டான் இருங்கோவேள்.

"ஆமண்ணா! நல்லவனாகத்தான் தெரிகிறது. அவனுக்குத் தெரியாத மூலிகைகளே இல்லையாம். நம்மைப் போல அவனும் சோழனுக்கு எதிரிதான்!"

என்றாள் தாமரை மகிழ்ச்சியுடன்!

"மிகவும் இளம் வாலிபனா?"

"வாலிபன் தான்!"

"மீசை முளைத்த வாலிபனா?"

"முளைத்ததோ என்னவோ தெரியாது: மீசையில்லை முகத்தில்!"

"பெயர்?"

"முத்து!"

"சிவப்பு நிறமா?... கறுப்பு நிறமா?"

"சிவப்புதான்! என்ன அண்ணா இப்படி கேள்வி போடுகிறாய்? உனக்கு முன்னமே தெரியுமா அந்த வாலிபனை?"

"ஊஹூம்- தெரியாது! தெரியாது! சந்தேகத்திற்குக் கேட்டேன். நீ அவனை அழைத்து வந்து, அரசிக்கு மருத்துவத்தைத் தொடங்கு. அதோடு ஒன்று- எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்போம். தப்பித்தவறி நான் இங்கேயிருப்பது அந்த ஊமை வாலிபனுக்குத் தெரிய வேண்டாம். இருங்கோவேள் மன்னன் எங்கேயோ ஓடி விட்டதாக அவனிடம் சொல்லி வையுங்கள். நான் இங்கு வருவதாக இருந்தால் முகத்தை மாற்றிக் கொண்டு தான் வருவேன், உங்களைப் பார்க்க!"

"முகத்தை மாற்றிக் கொண்டென்றால், வேறு யாருடைய முகத்தையாவது வாங்கி வைத்துக் கொண்டா?"- எனச் சிரித்துக் கேட்டவாறு இரும ஆரம்பித்தாள் அரசி.

அவளைத் தழுவியவாறு மன்னன் புன்னகை புரிந்தான். அதைப் பார்க்க வெட்கிப் பலகணி வழியே வெளியே பார்க்கலானாள் தாமரை. பாதிக் கைதிகளுக்கு மேல் மூர்ச்சித்துக் கீழே விழுந்து விட்டார்கள். மற்றவர்கள் துடித்துக் கொண்டு நின்றார்கள். செழியன் மட்டுமே ஆடாது அசையாது நின்ற காட்சி தாமரையின் கவனத்தைக் கவர்ந்தது.

"எவ்வளவு நெஞ்சுறுதி அந்த வாலிபனுக்கு ! தன்னைச் சுற்றிலும் சுழன்று தீ நாக்குகள் ஜுவாலையை உமிழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற நிலையிலும் அவன் கண்களில் அச்சத்தின் சாயல் அணுவளவும் இல்லையே; கல்தூணைப் போல் அவன் நிற்கும் கம்பீரமே கம்பீரம்! இப்படிப்பட்ட வீரர்கள் நிரம்பிய நாட்டை யார்தான் வெற்றிகொள்ள முடியும்? விழிகளிலே ஊசிகளைச் செருகினாலும் வீரத்தை விலை கூறிடமாட்டார்கள் உண்மைத் தமிழர்கள். என்பதைப் புரிந்திருந்தும் ஏனோ என் அண்ணன் இந்தக் கொடுமையான தண்டனைகளை வழங்குகிறாரோ தெரியவில்லை."

-எனத் தனக்குள்ளாக நினைத்துக் கவலைப்பட்டாள் தாமரை. அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அநேகமாக எல்லாக் கைதிகளும் மயக்கமுற்றுக் கீழே விழுந்து விட்டனர். செழியன் மட்டுமே நின்று கொண்டிருந்தான். நின்ற நிலையிலேயே அவனுக்கும் தலை சுற்ற ஆரம்பித்தது. அவனையறியாமல் கண்கள் மூடி மூடித் திறந்தன. வெகு விரைவில் அவனும் சாய்ந்து விடுவான் என்று தாமரை எதிர்பார்த்தாள். அவளையுமறியாத ஒரு பரபரப்பு இருதயத்தைப் படபடவென்று துடிக்கச் செய்தது. சொல்லவொண்ணா ஆவலுடன் அவனையே நோக்கியவாறு நின்றாள்.

அவனுக்கு நேரே இருங்கோவேள் சென்று அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வீர வாலிபனின் முகத்தில் எழுதப் பட்டது போல் ஒளி விட்டுக் கொண்டிருந்த உறுதி, இருங்கோவேளின் உள்ளத்தைத் தொட்டது. அருகே நின்ற வீரர்களைப் பார்த்து தீப்பந்தங்களை அணைக்குமாறு உத்தரவிட்டான். எல்லாத் தீப்பந்தங்களும் சில விநாடிகளில் அணைக்கப்பட்டன. கீழே விழுவதற்கு இருந்த செழியன் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு விழிகளை அகலத் திறந்து எதிரே பார்த்தான். இருங்கோவேள் புன்னகை புரிந்தவாறு காட்சி தந்தான். செழியன் சுற்றுப்புறங்களைப் பார்த்தான். சோழ மண்டலக் கைதிகள் மூர்ச்சித்துக் கிடந்த கொடுமை ஆவேசமுறச் செய்தது.

"நீயும் ஒரு வீரனா?" எனக் கத்தினான் இருங்கோவேளைப் பார்த்து.

"ஏன்? உனக்குச் சந்தேகமாயிருக்கிறதா?" - இருங்கோவேள் அமைதியாகக் கேட்டான்.

"நெஞ்சிலே ஈரம் இல்லாதவனுக்கு வீரன் என்று பெயரில்லை முரடன் என்று பெயர்; காட்டுமிராண்டி என்று பெயர். இதைவிட மோசமான பெயர்களும் உண்டு. ஆனால் அழகு தமிழ் அகராதியில் அந்தப் பெயர்களுக்கு இடமில்லை!"

"எனக்கு நெஞ்சிலே ஈரமில்லையென்று நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?"

"இதோ - இந்த அணைந்த தீவட்டிகளைக் கேள்! அவை சொல்லும் பதில்!"

"வாலிபனே! அணைந்தது தீவட்டியல்ல!.. என் நாட்டின் வாழ்வு அணைந்தது! வேளிர்குடியின் குன்றாத பெரும் புகழ் அணைந்தது! யாரால்? யாரால் தம்பி இந்த அலங்கோலம்? நீ காப்பாற்ற நினைத்தாயே, அந்தக் கொடுங்கோல் மன்னன் கரிகால் பெருவளத்தானால்!"

"ஆ! கரிகாலர், கொடுங்கோலரா? அவரது ஆட்சித் திறம் கண்டு வாழ்த்துப் பாடுகிறாள் காவேரி அன்னை! அவர் கருணை உள்ளம் கண்டு, பூம்புகாரே புகழ் வீணை மீட்டுகிறது! 'தென்னகத்துப் பெருவேந்தன் திருமாவளவன் கரிகாலனே' என்று திரைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகள் எல்லாம் பாராட்டுகின்றன. நீ சொல்லுகிறாய்; அவர் கொடுங் கோலர் என்று! இப்போது தான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன். வெள்ளையைக் கறுப்பு என்று விளக்கம் தரும் ஒரு விசித்திரத்தை!"

"எனது திருநாட்டை அபகரித்துக் கொண்டவன் கொடுங்கோலன் அல்லாமல் வேறு யார்?"

"போரில் தோற்ற பொருள்தானே உன் நாடு!"

"இளைஞனே! உன்னிடம் எனக்கென்ன பேச்சு? என்னையும் என் நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தி விட்டதாகக் கருதியிருக்கும் அந்தச் சோழனையும், அவனுக்குத் துணை நிற்கும் அந்தப் பாண்டியனையும் பழி வாங்காமல் ஓயப் போவதில்லை நான்!"

"எக்கேடாவது கெட்டுப் போ! எனக்கு நீ வழங்கியிருக்கும் தீர்ப்பு என்ன? அதைச் சீக்கிரம் கூறிவிடு!"

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதுவரை பொறுமையாயிருந்த இருங்கோவேளுக்குத் திடீரென ஆத்திரம் குமுறியது. அவனிடம் பேச்சுக் கொடுப்பதால் ஏதாவது பயன் ஏற்படும் எனக் கருதிய இருங்கோவேளுக்கு ஏமாற்றம் விளைந்தது மட்டுமல்ல, செழியனின் பதில்களால் அவன் எரிமலையாகவும் ஆகிவிட்டான். பற்களை நறநறவென்று கடித்தான்.

"தீர்ப்பா? திமிர் பிடித்தவனே! தீர்ப்பா? உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுவதற்குத் திட்டம் போட்டிருக்கிறேன்! உன் விழிகளை எடுத்து என் கையிலே வைத்துக் கொண்டு உன் அங்கங்களைச் சிறிது சிறிதாக - செதில் செதிலாக கிழிக்கும் காட்சியை அந்த விழிகளுக்குக் காட்டி மகிழ்வேன்! போதுமா தீர்ப்பு? இன்னும் ஏதாவது புது முறை வேண்டுமா?"

இருங்கோவள் சீறினான் புலிபோல்! செழியன் கலகலவென நகைக்கத் தொடங்கினான்.

"வேளிர்குடியின் மன்னன் மகாவீரன் என்கின்ற என் நினைப்பைத்தான் சிறிது சிறிதாகச் சித்ரவதை செய்கிறாய்!" என்று நகைத்துக் கொண்டே கேலி பேசினான்.

அவன் சிரிப்பு அடங்குமென்று இருங்கோவேள் எதிர்பார்த்தான். செழியனோ இருங்கோவேளைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தான். அப்படி அவன் சிரிப்பதைப் பெரும் அவமானமாகக் கருதிய இருங்கோவேள் வேகமாகப் பாய்ந்து செழியனின் கன்னத்தில் 'பளார் பளார்' என்று அறைந்திடத் தொடங்கினான். செழியன் அறைகளை வாங்கிக்கொண்டு அப்படியே நின்றான். அவனால் எதிர்க்க முடியாதபடி கைகள் விலங்கிடப் பட்டிருந்தன. கால்களிலும் இரும்புச் சங்கிலி! கைகள் வலியெடுக்கும் மட்டும் இருங்கோவேள் செழியனின் கன்னங்களில் மாறி மாறி அடித்துக் கொண்டேயிருந்தான். பிறகு அவனாகவே நிறுத்திவிட்டு, அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

இந்தப் பயங்கரமான காட்சிகளைத் தாமரை இமைகொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள். அண்ணன் அங்கிருந்து போனதும் மெதுவாக வெளியே வந்து வீரர்களில் ஒருவனை அழைத்துச் சாய்ந்து கிடக்கும் கைதிகளுக்கு மயக்கம் தெளிவித்து அவர்களுக்கு ஏதாவது உணவு அளிக்குமாறு உத்தரவிட்டாள். அவனும் தாமரையின் உத்தரவுக்குக் கீழ்படிந்து, வேறு சில வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, மயக்கமுற்றிருந்த கைதிகளுக்கெல்லாம் சிகிச்சை செய்யத் தொடங்கினான்.

பின்னர், செழியன் நிற்குமிடத்திற்கு மெல்ல வந்தாள். அவன் அவளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு தலையை வான் நோக்கி நிமிர்த்தியவாறு நின்றான். தாமரை, அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று கருதினாள். அப்படி உதவி செய்வது தன் அண்ணனுக்கு விரோதமில்லையென்றும் அவளே ஒரு முடிவுக்கு வந்தாள். கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்பது அவள் கொள்கையில்லாவிட்டாலும் அவர்களைக் கொடுமைப்படுத்துவது அவளுக்குச் சகிக்கவில்லை.

"தண்ணீர் வேண்டுமா?"

ஒரு பெண்ணின் குரல் கேட்டு செழியன் கண்விழித்துப் பார்த்தான். அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. எதிரே நிற்கும் இந்தப் பெண் யார்? இவளை எங்கே இதற்குமுன் பார்த்திருக்கிறேன்...?

பெருவழுதிப் பாண்டியன் அழைப்பதாகச் செழியனை ஒரு வீரன் வந்து அழைத்தான்; அவனும் உடனே புறப்பட்டான். அரண்மனைக்குள்ளே தனி மாளிகையில் பாண்டியன் ஆழ்ந்த சிந்தனையுடன் உலவிக் கொண்டிருந்தான். செழியனைக் கண்டதும் பாண்டியன் முகமலர்ச்சியுடன் உபசரித்தான்.

"உன்னை ஏன் அழைத்தேன் தெரியுமா"

"தெரியாதே மன்னா?"

"திருமணம் நடைபெறப் போகிறது செழியா!'

"யாருக்கு? எப்போது?"

"உனக்குத்தான் செழியா! பெண்ணெல்லாம் பார்த்து விட்டேன் இதோ பார் மணமகளின் படம்!"

பாண்டியன், அங்குள்ள ஏழெட்டுப் படங்களில் ஒரு படத்தைப் பொறுக்கி எடுத்துச் செழியனிடம் காட்டினான். அந்தப் படத்தைச் செழியன் பார்த்தான். அதில் சிரித்துச் செழித்துக் காணப்பட்ட அந்த அழகியின் உருவத்தை விட்டுக் கண்களை உடனே எடுக்க முடியாமல் அவன் தவித்தான்.

"இந்தப் பெண் யார்? எந்த ஊர்?"

"அதெல்லாம் கேட்காதே இப்போது! பெண் பிடித்திருக்கிறதா இல்லையா? அதை மட்டும் சொல்!'

...செழியனுக்கு ஏற்பட்ட வெட்கத்தின் மூலம் அவனுக்குச் சம்மதம் என்பதைப் பாண்டியன் உணர்ந்து கொண்டான்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நெடுநாட்கள் வரையில் செழியனின் திருமணம் பற்றிய பேச்சைப் பெருவழுதி எழுப்பவேயில்லை. ஓவியத்தில் தோன்றி தன் உள்ளத்தை நிலைகுலைத்த அந்த அழகி எங்கே இருக்கிறாள் என்ற ஆராய்ச்சியைச் செழியன் இன்னும் முடிக்கவில்லை. அதற்குள் எத்தனையோ சம்பவங்கள்! எந்தச் சம்பவமும் அவன் நெஞ்சில் ஒரு புதிய மாறுதலை ஏற்படுத்திய அந்தச் சித்திரத்துப்பாவை பற்றிய நினைப்பை அகற்றவில்லை.

'அப்படியொரு பெண் உலகில் இருக்கிறாளா? அல்லது ஓவியனின் கை வண்ணத்தால் உருப்பெற்ற கற்பனை அழகியா?' என்ற ஐயப்பாடு அவனை ஆட்டிப் படைத்ததுண்டு.

இப்போது அந்த வீண் சந்தேகம் நீங்கிவிட்டது. ஓவியத்துப் பெண்ணை உயிரோடு பார்த்துவிட்டான். எங்கே? எதிரியின் வீட்டில்! எந்த நிலையில்? கைகால்களில் விலங்கு மாட்டிக் கொண்டு வேதனை அனுபவிக்கும் நேரத்தில் அவளுக்கும் இருங்கோவேளுக்கும் என்ன தொடர்பு? என்ன உறவு? அவன் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் தேவை. ஆனால், முதலில் அவள் கேள்விக்குப் பதில் கூறிடக் கருதினான்.

"தண்ணீர் வேண்டும்!" என்றான்.

அவள் ஒரு வீரனைக் கூப்பிட்டு அவனுக்கு உடனே தண்ணீர் தருமாறு கூறினாள். அந்த வீரன் தண்ணீரைக் கொண்டு வந்து செழியனின் வாயில் ஊற்றினான். அதைக் குடித்துவிட்டுக் கொஞ்சம் தெம்பாகக் கனைத்துக் கொண்டான். அண்ணனின் முரட்டுக் கரங்கள் செழியனின் கன்னத்தில் ஏற்படுத்திய வீக்கத்தை அவள் கவனிக்காமல் இல்லை. தண்ணீர் கொடுத்தவளுக்கு நன்றி தெரிவித்தான் செழியன். அவளும் "பரவாயில்லை" என்று பதிலுக்குக் கூறினாள்.

"நீயும் இந்த இடத்தைச் சேர்ந்தவள்தானோ?"

செழியனின் கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.

'ஆமாம்' என்றால் அவன் தன்னையும் கொடுமைக்காரர்களின் பட்டியலில் சேர்த்து விடுவான் - 'இல்லை' என்றால் நம்புவானோ. மாட்டானோ? - தாமரைக்குப் பதில் கூற நாவெழவில்லை.

"சொல்ல மாட்டாயா?" என்று கேட்டான் அவன் துடிப்போடு.

"உனக்கேன் இந்தக் கேள்வியெல்லாம்?" என்று கூறிவிட்டுத் தாமரை விர்ரென்று அந்த இடத்தைவிட்டுப் போய் விட்டாள்.

சரியான பதில் கிடைக்காத செழியன், அவள் போவதைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றான். மயக்கமுற்று வீழ்ந்த கைதிகள் ஒவ்வொருவராக இழுத்துச் செல்லப்பட்டு மரக்கிடங்குகளில் அடைக்கப்பட்டனர். கடைசியாகச் செழியனையும் இழுத்துச் சென்று, 'சாவூருக்குப் போகும் வழி' என எழுதப்பட்ட சிறைக்குள் தள்ளி வெளியே காவலைப் பலமாக ஆக்கினர்.

செழியனிடம் பதில் கூறிவிட்டு அகன்ற தாமரை தொலைவில் நின்று, அவன் இழுத்துச் செல்லப்படுவதைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பூட்டுகிற வரையில் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுப் பிறகு மாளிகை வெளிப்புறத்தில் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவள் சிந்தனைக் கூடத்திற்கு முத்து வருகை தந்துவிட்டான். முத்துவை வீட்டுக்கு அழைத்துவர அண்ணனின் சம்மதம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்குமென்று அவள் எதிர்பார்க்க வில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் உடனடியாக முத்துவைச் சந்தித்து அழைத்துவரத் திட்டம் வகுக்க ஆரம்பித்தாள்.

தாமரை வந்து தன்னை அழைத்துப் போகும் வரையில் அருவிக்கரையிலேயே காத்திருப்பது என்று முடிவு செய்து கொண்டு இரவு முழுவதும் அங்கேயே உட்கார்ந்து கிடந்தாள் முத்துநகை. நட்சத்திரங்களைக் கூட வெளியே காட்டாமல் வானம் கறுப்புத் திரையிட்டிருந்தது. இடையிடையே சளி பிடித்தவன் இருமுவதுபோல இடியொலி வேறு! உலைக்கூடத்தில் எழுகின்ற நெருப்புக் கீற்றுப் போல மின்னல் ஒளியினால் இயற்கை அவளது உள்ளத்தைப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.

புலவர் காரிக்கண்ணனார் அவள் எதிரே வந்து நின்று 'உன்னைப் பிரிந்து நான் என்ன பாடுபடுகிறேனம்மா-ஏன் மகளே இப்படி என்னைச் சித்ரவதை செய்கிறாய்?' -என்று கண்ணீர் விடுவதுபோல் தோன்றும்! உடனே அதற்குப் பதிலும் பிறக்கும் அவள் நெஞ்சத்தில்.

"தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பது தந்தையாயிருந்தால் என்ன? யாராய் இருந்தால் என்ன? அவர்களை எதிர்த்து நிற்பதே உண்மையான நாட்டுப்பற்றுக்கொண்டவர்களின் கடமை!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

யவனக் கிழவன் வேடத்திலே - இருங்கோவேள் தன் தந்தையாருடன் நட்பு வைத்திருப்பதாக முடிவுகட்டி, வீட்டைவிட்டு வெளியேறிய அந்தப் பாவை, அதே இருங்கோவேளிடம் தன்னையறியாமல் தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள் என்பது வேடிக்கைதானே!

அவள் செய்து முடிக்க வேண்டிய கடமை உணர்வு வேறு அவளைத் துரத்திக்கொண்டே இருந்தது; பரிதாபத்துக்குரிய தாமரையோ அவளை ஆண் என்று நம்பிக் காதலுக்கு அடிமையாகி விட்டேன் என்று காலில் விழுகிறாள் - ஒன்றையொன்று முந்திக்கொண்டு சுழன்றடிக்கும் நினைவுச் சூறாவளியில் கண்களை மெல்ல மூடிக்கொண்டு மரத்தில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள் அந்தப் பூங்கொடி, பயமுறுத்திக் கொண்டிருக்கும் இடியும் மின்னலும் மரக்கிளையில் அமர்ந்திருந்த ஒரு சில பறவைகளின் அமைதியைக் குலைத்தன. அவைகள் குரலெழுப்பியவாறு, கிளைகளில் அங்குமிங்கும் நடைபோட்ட வண்ணமிருந்தன. முத்துநகை, பறவை களின் ஒலியைக் கூர்ந்து கவனித்தாள். அவளும் ஏதாவது வாய்விட்டுப் பேச வேண்டும் போல் தோன்றியது. ஊமைபோல் வாய் மூடிக் கிடப்பது அவளுக்கு வேதனையாக இருந்தது.வீட்டிலிருந்தால் புலவருடன் ஏதாவது உரையாடிக் கொண்டிருப்பாள். அவளது கேள்விகளுக்குப் பதில் கூறுவதென்றால் புலவருக்கும் தனி இன்பம்! அவர் எழுதுகிற பாட்டு ஒவ்வொன்றைப் பற்றியும் அவள் எழுப்புகிற ஐய வினாக்களும் அதற்குப் புலவர் தரும் விளக்கமும் நிறைந்து அந்தவீடே ஒரு தமிழ்ப் பூங்காவாகக் காட்சியளிக்கும். அப்படிப்பட்டவள் வாயை மூடிக்கொண்டு கிடப்பதென்றால்...?

அவள் ஆவலை அதிகப்படுத்தும் பறவைகளின் ஒலி! அந்தப் பறவைகளுக்கு பதில் கூறுவதுபோல் அவைகளைப் போலவே கத்தினாள். பறவைகளைப் போலக் குரலை மாற்றிக் கத்த முடிகிறது என்பதை உணர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தாள்! வகை வகையான பறவைகளின் ஒலிகளை நன்கு கவனித்து அவைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு கத்தினாள். அவள் கத்துவதைக் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த பறவைகளும் விழித்துக் கொண்டு கத்த ஆரம்பித்தன. அவளுக்கு அது ஒரே வேடிக்கையாக இருந்தது. இரவுப் பொழுதை இப்படியே கழிக்கலாம் என்று முடிவு கட்டிக் கொண்டாள்.

இந்தச் சத்தத்தைக் கேட்டு குதிரை வேறு கனைத்திடத் தொடங்கிற்று. அருகே சென்று அதைத் தட்டிக் கொடுத்து விட்டு மறுபடியும் மரத்தடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். கொஞ்சும் கிளியின் அச்சக்குரல்! அதே போல் அவளும் ஒலித்தாள். கோட்டானின் வறட்டுக் குரல்? அதிலும் ஜெயித்தாள். வில்லில் இருந்து கிளம்பும் அம்பு எழுப்பும் ஒலிபோலக் கருடன் எழுப்பும் 'ஙொய்' என்ற ஒலி! அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றாள். அவளது சிந்தனை பலமாக வேலை செய்யத் தொடங்கிற்று. சற்று நேரம் மெளனம்; குரலை எப்படி எப்படியோ மாற்றி ஒலித்துப் பார்த்தாள். பறவைகளுடன் நடந்த போட்டி நின்று விட்டது.

ஆண் குரலில் பேசிப் பழக வேண்டுமென்ற துடிப்பு அதிகமாயிற்று. தாமரையுடன் சென்றால் அங்கும் எழுதி எழுதிக் காட்டிக் கொண்டிருக்க முடியாது என்ற எண்ணம் மேலோங்கியது. பறவைகள்போல் கத்த முடிந்த பிறகு ஆண்களைப்போல் பேசப் பழகிக்கொள்ள முடியாதா என்ன? துணிவு பிறந்தது. பேச ஆரம்பித்தாள். எடுத்த எடுப்பில் வெற்றி கிட்டவில்லை. ஆனாலும் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உதயமாகியது. தன் தந்தையார் எழுதிய கவிதைகள் பலவற்றை மனப்பாடம் செய்து வைத்திருந்தாள். அவைகளையெல்லாம் ஆண் குரலில் முழக்கமிடத் தொடங்கினாள். இறுதியில் வெற்றிதான்!

இப்போது அவளால் ஆணைப்போலப் பேசமுடியும். ஆனால் கொஞ்சம் தொண்டை வலிக்கிறது. அதற்காக என்ன செய்வது? கடமையை நிறைவேற்றும் பொறுப்பைத் - தானே அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பியிருக்கிறாளே! திடீரென்று முத்துநகைக்கு ஒரு சந்தேகம். இயற்கையான பெண்குரல் இருக்கிறதா இல்லையா என்று! சொந்தக் குரலில் பேசிப் பார்த்தாள். என்ன பேசுவது? - என்று ஒரு கணம் திகைப்பு; பிறகு பேசினாள்.

"உங்களை அந்தப் பாழ்மண்டபத்தில் பார்த்ததுமே பறிகொடுத்து விட்டேன் என் உள்ளத்தை!"

பேசி முடித்ததும் தான் புரிந்தது, என்ன பேசினாள் என்று ! சொந்தக் குரல் இருக்கிறதா என்ற சோதனையில் புகுந்தவள், காதல் சோலையில் ஏன் நுழைந்தாள்? அப்படியானால் அவள் அந்த விறகு வெட்டியைக் காதலிக்கிறாளா?

அவளை நினைத்து அவளே வெட்கப்பட்டுக் கொண்டாள். அவள் தோள்மீது ஒரு கை பட்டதுபோன்ற உணர்ச்சி! அந்த உணர்வு கண்டு அவள் திடுக்கிட்டெழவில்லை. அப்படியே இருந்தாள். கை, அவள் தோளை அழுத்திப் பிடிப்பதுபோல் இருந்தது. அவளோ தோளை விடுவித்துக் கொள்ள முயலவில்லை. மாறாக, கையோடு பின்னுக்குச் சாய்ந்தாள். என்னவோ செய்தது அவளுக்கு. பலமான கரத்தின் அணைப்பில் இருப்பது போன்ற மயக்கம். கண்களை இலேசாக மூடிக் கொண்டு அந்த உணர்வைச் சுவைத்தாள். பிறகு அவள் கரம் அசைந்து தோளின் பக்கம் சென்றது. தன் தோளைப் பிடித்திருக்கும் முரட்டுக் கரத்தை விலக்குவது போல் தடவி ரசிக்க அவள் மென்கரம் ஊர்ந்தது. தோளின் பக்கம் உயர்ந்தது.