வரலாற்றுக் காப்பியம்/பரசுராம பூமி

விக்கிமூலம் இலிருந்து

பரசுராம பூமி

தனுவில் பெரியவன் தானென்ற உணர்வில்
பரசுராமன் தசரத ராமனை
வழிமறித்து வலிய போருக்கு இழுத்தான்
சீதாராமன் இழுத்த நாணுக்கு இலக்காக
வடபுலத்தில் இனி இருப்பதில்லை என்று
உறுதி கொடுத்தான் உடன் நாடு கடந்தான்
தன்னோடு தன்குலத்து அறுபத்து நான்கு
குடிகளையும் தஞ்சமென்று கொண்டு வந்தான்
சேரன் கரையிருந்த தென்புலத்து மன்னவன்
பரிந்து அறுபத்து நான்குஊர் கொடுத்தான்
அன்று வந்த பரசுராம பரம்பரையே
இன்றுமுள்ள கேரளத்து நம்பூதிரிகளாவர்
துளுவில் தொடங்கி கொல்லம் கடந்து
அதங்கோடுவரை ஆரியமாக வளர்த்தார்.
பரசுராம பூமி ஆயிற்று
இன்னும் பின்னால் மயூரவர்மன்
எண்பத்து நான்கு அவீகப் பார்ப்பனக்
குடிகளை கொண்டு வந்து சேர்த்தான்
அவன் மகன் கங்க வர்மனும்
பலநூறு குடிகளுக்கு வழி வகுத்தான்
மேலைக் கரை ஆரியச் சேரியானது
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
வெற்றி நடை போடும் பதிற்றுப்பத்து
சாகாதிருக்கும் தமிழ் முதல் நூலென்று
தலை நிமிர்ந்து பேசும் தொல்காப்பியம்
இன்ன பலவற்றைப் பெற்றெடுத்த
சேரன் திருநாடு செந்தமிழ் இயல் பிழந்தது
முன்னை மரபிழந்து மொழியும் வழக்கிழந்து
மெல்ல மெல்லத் திரிந்து மலையாளமானது