வார்த்தை வாசல்/008
கட்டில் வீணை
சினத்திலன்றி அமைதியிலே வீரத்தின்
வரலாறு தெரிவ தில்லை ;
மனத்திலன்றி விழிகளிலே எண்ணங்கள்
மலர்வதில்லை ; மங்கை மாதர்
தனத்திலன்றிச் சந்தனத்தில் பால்சுரந்து
விடுவதில்லை ; சத்தில் லாத
நுனிப்பாட்டு நூல்கற்றோர் புத்தகத்தில்
புதுமைகளே நுழைவ தில்லை.
மின்னிடத்தில் ஒளியுண்டு ; சுனைநீரில்
தெளிவுண்டு ; மேன்மை மிக்க
பொன்னிடத்தில் பொலிவுண்டு ; பூவிடத்தில்
மணமுண்டு ; புதுமை வாணன்
தன்னிடத்தில் என்திறமை சரிபாதி
உண்டென்பேன். தமிழ்நூல் கற்றோர்
என்னிடத்தில் எதிர்பார்க்கும் செய்யுள்நயம்
இக்கவிஞர் இடத்து முண்டு.
புதுக்குழந்தை பிறந்தாலும், புதுக்கவிதை
பிறந்தாலும் பொருத்த மென்னும்
அதற்குரிய உறுப்புநலன் அத்தனையும்
நன்றாக அமைதல் வேண்டும்.
முதற்கவிதை நூல்வழங்கும் இக்கவிஞர்
அதற்குரிய முறையில் இங்கே
கதைக்கவிதை புனைந்துள்ளார் கடைசிவரை
முழுத்திறனைக் காட்டி யுள்ளார்.
பங்கிட்டுத் தேன்முத்தம் தரும்பெண்ணைப்
பற்றியிவர் பாடும் பாடல்,
செங்கரும்புக் கொக்கோகம் அல்லாமல்
வேறென்ன? தெளிந்த சொற்கள்
அங்கங்கே அரும்பாகி அந்திமுல்லைப்
பூவாகி அதனுள் செந்தேன்
பொங்குவதைக் காணுகின்றேன் கவிக்கட்டில்
வீணையெனும் புத்த கத்தில்.
தொகைதொகையாய்ப் பாட்டெழுதி இந்நாட்டில்
சிலரிங்கே தோற்கும் நாளில்
வகைவகையாய்ப் பாட்டெழுதி வெற்றிமிகப்
பெறும்புதுமை வாணன் நூலில்,
புகழ்சேர்க்கும் எண்ணங்கள் இருப்பதனைக்
கண்டுள்ளம் பூரிக் கின்றேன்.
முகம்சேர்க்கும் முத்தங்கள் கசக்குமெனச்
சொல்லுதற்கு முடியா தன்றோ?
கவிஞர் புதுமை வாணன் அவர்கள் எழுதிய ‘கட்டில் வீணை’ என்னும் கவிதை நூலுக்கு 1975–இல் வழங்கிய அணிந்துரை.