விந்தன் கதைகள் 2/பிழைக்கத் தெரியாதவன்

விக்கிமூலம் இலிருந்து
பிழைக்கத் தெரியாதவன்

ள்ளிரவு; தங்களையும் கொன்று தின்னத் துணிந்து விட்ட சீனர்களுக்கு அஞ்சியோ என்னமோ, நாய்கள் கூடக் குரைப்பதை நிறுத்தி விட்டிருந்தன.

அந்த நிசப்தமான வேளையிலே, திடீரென்று ஓர் அலறல்;

"ஐயோ, போச்சே! ஒரு மாதச் சம்பளம் பூராவும் போச்சே!"

கேட்போரின் நெஞ்சைப் பிளக்கும் ஏழைத் தொழிலாளி ஒருவனின் இந்த அலறல் மாடி அறையில் உட்கார்ந்து, அடுத்தாற்போல் மந்திரி பதவியை அடைவதற்கான வழி வகைகளைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த தியாகி தீனதயாளரின் காதில் விழுந்தது - ஆம், அவர் இப்பொழுது எம்.எல்.ஏ அதாவது, மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதி!

"கத்தாதே! இதோ பார், கத்தி - குத்தி விடுவேன்"

வழிப்பறிக்காரனின் மிரட்டல் இது!

இந்த மிரட்டலைத் தொடர்ந்து என்ன கனவு கண்டாளோ என்னமோ, "ஐயோ! என்னைக் குத்துகிறானே!" என்று அலறி எழுந்தாள் அவருக்குப் பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருடைய மனைவி திலகம்.

"உன்னை யாரும் குத்தவில்லை; தெருவில் யாரையோ யாரோ குத்துகிறார்கள் - நீ தூங்கு!" என்று சொல்லிக் கொண்டே சென்று, மின்சார விசிறியின் 'ஸ்விட்'சைப் போட்டார் தீனதயாளர்.

"ரொம்ப அழகாய்த்தானிருக்கிறது! யாரையோ யாரோ குத்துகிறார்களாம். நாளைக்கு அவர்கள் நம்மையும் குத்த வந்து விட்டால்?"

"பைத்தியக்காரி! நாம் என்ன, நடந்தா வரப்போகிறோம்? நமக்குக் கார் இருக்கிறது; டிரைவர் இருக்கிறான்; போலீஸ் இருக்கிறது; போலீஸைக் கூப்பிடப் போன் இருக்கிறது....."

"அதையாவது செய்யுங்களேன், உங்களுக்குப் பக்கத்தில் தானே 'போன்' இருக்கிறது?"

"அதுதான் கூடாது! இந்தத் தெருவில் 'போன்' உள்ள வீடு நம் வீடு ஒன்று தான், இது அந்த வழிப்பறிக்காரர்களுக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். நாளைக்கு அவர்களால் நமக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்?"

"அதற்காக நம் கண்ணுக்கு முன்னால் ஒருவன் கொல்லப் படுவதை நாம் பார்த்துக் கொண்டா இருப்பது?"

"கவலைப்படாதே! இப்பொழுது தெல்லாம் குறைந்த பட்சம் ரூபாய் இரண்டாயிரத்துக்கு ஒவ்வொரு தொழிலாளியின் உயிரும் 'இன்ஷ்யூர்' செய்யப்படுகிறது!"

"எல்லாம் அந்த படுபாவியால் வந்தவினை! “உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே, உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே!" என்று அவன் ஓயாமல் எழுதுவதை விழுந்து விழுந்து படித்து விட்டு..."

"அது எந்தப் படுபாவி?"

"அவன்தான்! வள்ளுவனுக்குப் பின்னால் வந்த கிள்ளுவன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறானே, அவன்தான்!"

"பிழைப்பின் ரகசியத்தையே கண்டுபிடித்துவிட்ட பேராசிரியரல்லவா அவன்? அவருடைய வாக்கு வரப்பிரசாதம்; வாழ்வு வழிகாட்டி..."

"யாருக்கு? உணர்ச்சியைப் பொருட்படுத்தாத கொலைகாரர்களுக்கு; கொள்ளைக்காரர்களுக்கு; ஏமாற்றுக்காரர்களுக்கு!"

"அவர்களுக்காவது சட்டத்தைப் பற்றிய அச்சம் ஓரளவாவது இருக்கலாம்; நம்மைப் போன்றவர்களுக்கு அது கூட அவசியமில்லையே; அவருடைய அறிவுரைகளைக் கேட்டால்?"

"மகிழ்ச்சி; அவருடைய அறிவுரைகளைக் கேட்பதற்காக நீங்கள் அறிவில்லாமல் இருப்பது பற்றி?"

இந்தச் சமயத்தில் "ஏண்டா, சோம்பேறிப் பயல்களா? எவனாவது மாதம் பூராவும் உழைத்துச் சம்பளம் வாங்கிக் கொண்டு வர வேண்டியது. அதை நீங்கள் எந்த விதமான உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காமல் அடித்துப் பிடுங்கிக் கொள்ள வேண்டியது. இது ஒரு பிழைப்பா? உங்களுக்கு வெட்கமில்லை? மானமில்லை? மரியாதையாய் அவன் சம்பளத்தை அவனிடம் கொடுத்து விட்டு போங்கடா!" என்று யாரோ ஒரு மூன்றாவது மனிதன் குறுக்கிட்டு விரட்ட, "நீ யார் அதைக் கேட்க?" என்று வழிப்பறிக்காரர்களில் ஒருவன் அவன் மேல் பாய, இருவரும் கட்டிப் புரளும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தது.

அவ்வளவுதான்; அவசர அவசரமாக எழுந்து ஜன்னல் கதவுகள் அனைத்தையும் 'படார், படார்' என்று சாத்தி விட்டு, "அமைதியைக் குலைக்கிறார்கள்! எதையும் ஆற அமர யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டிய வேளையிலே அமைதியைக் குலைக்கிறார்கள்!" என்றார் அவர், நடுங்கிக் கொண்டே.

"அட, சிங்கத் தமிழா! நீயா சீறிப் பாயும் வேங்கையின் கொடியை இமயமலையின் சிகரத்திலே பறக்க விட்டாய்?" என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.

"சிரிக்காதே! இப்போது எனக்கு வேண்டியது உன்னுடைய சிரிப்பு அல்ல! அமைதி!" என்று கத்தினார் அவர்.

"அடுத்தவன் வீட்டில் அமைதி நிலவாத போது உங்களுடைய வீட்டில் மட்டும் எப்படி அமைதி நிலவுமாம்?"

"தனிப்பட்டவன் கவனிக்கவேண்டிய பிரச்சனை அல்ல;

"அது அரசாங்கம் கவனிக்க வேண்டிய பிரச்சனை!"

"அடியார்கள் தங்களுடைய தற்காப்புக்கு ஆண்டவனை இழுப்பதுபோல் நீங்கள் ஏன் உங்களுடைய தற்காப்புக்கு அரசாங்கத்தை இழுக்கிறீர்கள்? தனிப்பட்டவன் வேறு, அரசாங்கம் வேறா? அரசாங்கத்தின் ஒர் அங்கம் தானே தனிப்பட்டவன்? தனிப்பட்டவன் தனிப்பட்டவனாகவே இருந்து விட்டால் சமூகம் ஏது, சமுதாயம் ஏது? அரசியல் ஏது, அரசாங்கம் தான் ஏது?”

“பேசாதே, தனிப்பட்டவன் என்ன செய்ய முடியுமோ, அதை நான் செய்து கொண்டு இருக்கிறேன்!”

எதைச் சொல்கிறீர்கள்? மின்சார விசிறியைக் சுழல விட்டதையா, ஜன்னல் கதவுகள் அத்தனையையும் அடைத்து விட்டதையா?”

இந்தச் சமயத்தில் கீழே போராடிக் கொண்டிருந்த மூன்றாவது மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கச் சொன்னான்:

"இந்தாதம்பி, உன் சம்பளம்; எடுத்துக் கொண்டு போ சீக்கிரம்! ம், சீக்கிரம்!"

அதைப் பெற்றுக் கொண்டு அவன் நாத் தழுதழுக்கச் சொன்னான்:

"இன்றுதான் கடவுளைக் கண்ணாரக் காண்கின்றேன்; உங்களுக்கு என் நன்றி!”

இதைக் கேட்டதும் "நல்லவேளை எல்லோரும் உங்களைப் போல் இருந்து விட்டால் அந்த ஏழையின் கதி என்ன ஆவது?" என்றாள் திலகம்.

"நான் மட்டும் சும்மாவா இருந்து விடப்போகிறேன்!” என்றார் தியாகி தீனதயாளர்.

"வேறு என்ன செய்யப் போகிறீர்கள், சட்ட சபையில் கேள்வி கேட்பதைத் தவிர!” என்றாள் அவள்.

"அதை இப்போது சொல்வானேன்? நாளைக்குப் பார் பத்திரிக்கையை!” என்றார் அவர்.

மறுநாள் காலை...

"ஆசிரியர்க்குக் கடிதங்கள்" என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவதற்காக 'நகரவாசி' என்ற புனைப்பெயரில் நாளுக்கு நாள் நகரில் பெருகி வரும் வழிப்பறிக் கொள்ளையைப் பற்றியும், அவற்றைத் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடாமல் இருக்கும் போலீஸாரின் பொறுப்பற்ற தன்மைகளைப் பற்றியும் காரசாரமாக ஒரு கடிதம் எழுதி எடுத்துக் கொண்டு, அதைத் தபாலில் சேர்ப்பதற்காக டிரைவரைத் தேடிக் கொண்டு கீழே இறங்கி வந்தார் தீனதயாளர்.

'ஷெட்'டில் கார் இருந்தது; டிரைவர் இல்லை.

"கோபாலா, கோபாலா!"

எத்தனை குரல் கொடுத்துத் தான் என்ன பயன்? காணோம்; கோபாலனைக் காணவே காணோம்.

"பொழுது விடிந்ததோ இல்லையோ, டீ குடிக்கப் போய் விட்டான் போலிருக்கிறது, துரை!" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தார்.

வாசலில் அவர் கண்ட காட்சி...

"அட பாவி, அந்த மூன்றவாது மனிதன் நீதானா?”

'கிறிச்'சிட்டுக் கத்தினார் தீனதயாளர் - ரத்த வெள்ளத்திலே மார்பில் பாய்ந்த கத்தியுடன் கீழே விழுந்து கிடக்கும் கோபாலனின் உயிரற்ற உடலைப் பார்த்து.

"ஆம், நானேதான்!” என்பது போலிருந்தது, அந்த நிலையிலும் மலர்ந்திருந்த அவன் முகம்.

"பிழைக்கத் தெரியாதவன்; பிழைப்பின் ரகசியத்தை அறியாதவன்" என்றார் அவர் பெருமூச்சுடன்.

"ஏன், என்ன நடந்தது?" என்று கேட்டுக் கொண்டே வந்தார், 'இரும்பு பெர்மிட்'டுக்காக அவருடன் 'இரண்டறக் கலந்து' பேச வந்த இரும்பு வியாபாரி ஒருவர்.

நடந்ததைச் சொன்னார் தியாகி தீனதயாளர்.

"கிடக்கிறான் விடுங்கள்! இப்படி ஏதாவது செய்து விட்டால் இவனுக்காக யாராவது வெண்கலச் சிலை செய்து வைத்து விடுவார்களா என்ன? அப்படி ஏதாவது செய்து வைப்பதாயிருந்தால் தங்களைப் போன்ற தியாகி சிகரங்களுக்கல்லவா செய்து வைக்க வேண்டும்?" என்றார் அவர் வந்த அவசரத்தில் அவிழ்ந்து தொங்கிய தம் சிண்டைத் தட்டி முடிந்து கொண்டே!