வெற்றிவேற்கை

விக்கிமூலம் இலிருந்து

கடவுள் வாழ்த்து[தொகு]

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரணஅற் புதமலர் தலைக்கணி வோமே.

நூல்[தொகு]

1[தொகு]

எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்.

2[தொகு]

கல்விக் கழகு கசடற மொழிதல்.

3[தொகு]

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

4[தொகு]

வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்.

5[தொகு]

மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை.

6[தொகு]

வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல்.

7[தொகு]

உழவர்க் கழகுஏர் உழுதூண் விரும்பல்.

8[தொகு]

மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்.

9[தொகு]

தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை.

10[தொகு]

உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்.

11[தொகு]

பெண்டிர்க் கழகுஎதிர் பேசா திருத்தல்.

12[தொகு]

குலமகட் லழகுதன் கொழுநனைப் பேணுதல்.

13[தொகு]

விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்.

14[தொகு]

அறிஞற் கழகு கற்றுணர்ந் தடங்கல்.

15[தொகு]

வற்ஞர்க் கழகு வறுமையில் செம்மை.

16[தொகு]

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர் கிருக்க நிழலா காதே.

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

அதனால்,

பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்

சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்

பெற்றோ ரெல்லாம் பிள்ளை களல்லர்

உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்

கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.

17[தொகு]

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.

சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது.

அரைக்கினும் சந்தணம் தன்மணம் அறாது.

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.

அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய்.

ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது.

ஒருநாள் பழகினும் பெரியோர்க் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நிர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.

பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.

18[தொகு]

சிறியோர் செய்த சிறு பிழை யெல்லாம்

பெரியோ ராயின் பெறுப்பது கடனே.

சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின்

பெரியோரப் பிழை பொறுத்தலு மரிதே.

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.

19[தொகு]

கல்லா ஒருவன் குணநலம் பேசுதல்

நெல்லினுள் பிறந்த பதரா கும்மே.

நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன்

கற்றில னாயின் கீழிருப் பவனே

எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்

அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்

அற்வுடை ஒருவனை அரசைனும் விரும்பும்

அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக்

கொச்சை மக்களைப் பெருதலின் அக்குடி

எச்சமற் றேமான் திருக்கை நன்றே.

20[தொகு]

யானைக்கு இல்லை தானமும் தருமமும்

பூனைக்கு இல்லை தவமும் தயையும்

ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்


21[தொகு]

சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்

முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்

அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை

நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை

கேளும் கிளையும் கெட்டோர்க் கில்லை.


22[தொகு]

உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா

குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்

நடைமலிந் தோருர் நண்ணினும் ந ண்ணுவர்

சிறப்புஞ் செல்வமும் பெருமைய முடையோர்

அறக்கூழ்சாலை அடையினும் அடைவர்.

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்

அரசரோடி ருந்தர சாளினும் ஆளுவர்

குன்றத் தனைய இருநிதி படைத்தோர்

அன்றைப் பகலே அழியனும் அழிவர்

எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக்

கழுதை மேய்பாழா கினும் ஆகும்

பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும்

மணஅணி அணிந்த மகளி ராங்கே

பிணஅணி அணிந்துதம் கொழுநரைத் தழீஇ

உடுத்த ஆடை கோடியாக

முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்

இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே

இரந்தோர் கீவதும் யடையோர் கடனே.


23[தொகு]

நல்ல ஞானமும் வானமும் பெறினும்

எல்லாம இல்லை இல்லிலல் லோர்க்கே.


24[தொகு]

தறுகண் யானை தான்பெரி தாயினும்

சிறுகண் முங்கிற் கோற்கஞ் சும்மே.


25[தொகு]

குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்

புன்தலைப் புல்வாய் புலிக் கஞ்சும்மே

ஆரையும் பள்ளத் தூடே வாழினும்

தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்

கொடும் புலி வாழும் காடு நன்றே.


26[தொகு]

சான் றில்லாத் தொல்பதி யிருத்தலின்

தேன்தேர் குறவர்த் தேயம் நன்றே.


27[தொகு]

வித்தும் ஏரும் யுளவாய் இருப்ப

எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே.


28[தொகு]

காலையும் மாலையும் நான்மறை யோதா

அந்தணர் என்போர் அனைவரும் பதரே.


29[தொகு]

குடியலைந்து இரந்துவெங் கோலொடு நின்ற

முடியுடை இறைவனாம் முர்க்கனும் பதரே.


30[தொகு]

முதலுள பண்டம்கொண்டுவா ணிபம்செய்து

அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே.


31[தொகு]

தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்

பின்பவள் பாராப் பேதையும் பதரே.


32[தொகு]

தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி

பிறமனைக் கேகும் பேதையும் பதரே.


33[தொகு]

தன்னா யுதமும் தன்கைப் பொருளும்

பிறன்கைக் கொடுக்கும் பேதையும் பதரே.


34[தொகு]

வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவது ஒன்றைக் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்பொ லும்மே மெய்போ லும்மே

மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்

பொய்போ லும்மே பொய்போ லும்மே.

அதனால்

இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே

இருவரும் பொருந்த உரையா ராயின்

மனுமுறை நெறயின் வழக்கிழந் தவர்தாம்

மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்

முறையுறத் தேவர் மூவர் காக்கினும்

வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே

பழியா வருவது மொழியா தொழிவது

சுழியா வருபுனல் இழியா தொழிவது.


35[தொகு]

துணையோ டல்லது நெடுவழி போகேல்


36[தொகு]

புணையோ டல்லது நெடும்புன லேகேல்.


37[தொகு]

எழிலார் முலைவரி விழியார் தந்திரம்

இயலா தனகொடு முயல்வதா காதே.


38[தொகு]

வழியே ஏகுக வழியே மீளுக.


39[தொகு]

இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே.


40[தொகு]

வாழிய நலனே வாழிய நலனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=வெற்றிவேற்கை&oldid=1407189" இலிருந்து மீள்விக்கப்பட்டது