வேண்டும் விடுதலை/அரசியலை விட்டு விலகித் தமிழக விடுதலைக்குப்பாடுபடுங்கள்!

விக்கிமூலம் இலிருந்து

 
“அரசியலை விட்டு விலகித் தமிழக
விடுதலைக்குப் பாடுபடுங்கள்”
கலைஞர்க்கு நேரடி வேண்டுகோள்!


பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய கலைஞர் அருட்செல்வர்(கருணாநிதி) அவர்களுக்கு,

உங்கள் அரசியல் திறனில் நம்பிக்கையும், தமிழ். தமிழர் முன்னேற்றத்தின் மேல் நீங்கள் வைத்த அக்கறையில் உறுதியும்? கொண்ட அன்புள்ளம் எழுதிக்கொள்ளும், காலங்கருதி இடத்தால் விடுக்கும் நேரடி வேண்டுகோள்.

கலைஞர் அவர்களே! கடந்த தேர்தலில் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ, அல்லது மக்களெல்லாம் எதிர்பார்த்தோ எதிர்பாராமலோ, நேர்ந்த அரசியல் வீழ்ச்சி, உண்மையிலேயே தமிழர்தம் இன முன்னேற்றத்தில் ஏற்பட்ட சரிவே ஆகும். என்பதை நாங்கள் மனமார உணர்கின்றோம். அவ்வீழ்ச்சியின் அடிப்படையில், இனி நாம் மேற்கோள்ள வேண்டிய உறுதிப்பாடுகளை, நம் மன அடைப்புகளையெல்லாம் விட்டு விட்டுக் கூர்மையான வெளிப்படையான முறையில் சிந்தித்துப் பார்க்காமல், நாம் அடைந்த தோல்விக்கான கரணியங்களைப் பற்றி ஆராய்வதும், பேசுவதும், அயர்வு வர எழுதிக் கொண்டிருப்பதும், மேலும் தம்மை சிதைத்துக் கொள்கின்ற செயல்களாகும். என்பதை உங்களுக்குக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

தந்தை பெரியார் அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொண்ட இன எழுச்சிப் பாடமும், அறிஞர் அண்ணா அவர்கள் உங்களுக்குக் கற்றுத் தந்த அரசியல் அறிவுறுத்தங்களும் இன்னும் உங்கள் குருதி நாளங்களில் இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் என்று நம்புகின்றோம். ஆனால் கடந்தகால இடைவெளியில் நீங்கள் உங்களையே திரையிட்டுக் கொண்டு, உங்கள் மனச்சான்றுக்கு மாறான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்தீர்கள். அவற்றிலெல்லாம் உங்களுக்குரிய திறப்பாடுகள் வெளிக்குக் கொண்டு வரப்பெறவில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம். மாறாக, அப்பொழுதெல்லாம் வீசிய அரசியல் சூறாவளிகளில் சிக்கிக்கொண்டு, திக்கித் திணறிப் போனீர்கள். அவற்றிலிருந்தெல்லாம் இன்றுவரை உங்களை நீங்களே மீட்டுக்கொண்டு வெளியே வரமுடியவில்லை. அந்நிலையில் இறுதியாக உங்கள் அழியாத கொள்கையுணர்வுகளையும் புறத்தே வைத்துவிட்டு, உங்கள் போக்குக்கு, உள்ளுணர்வுகளுக்கு என்றும் மாறாகவே, வேறு வேறு திரிபுணர்வு கொண்டவர்களிடமெல்லாம் உங்களை நீங்கள் விரும்பாமலேயே இணைத்துக்கொண்டீர்கள். ஆனால் அந்நிலைகளில் எல்லாம் நீங்கள் தோல்வியே கண்டீர்கள். அத் தோல்வியின் வடுக்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், இன்னும் அரசியல் பட்டம் பதவிகளிலும் நாற்காலிகளிலுமே உங்கள் மனம் கிடந்து உழன்று கொண்டிருப்பது மிகவும் வருந்தத் தக்கதாகும்.

தமிழின முன்னேற்றத்தைப் பற்றியே எந்நாளும் எண்ணிக் கொண்டிருக்கும் திறமுடையவரே!

தங்களைச் சுற்றியிருக்கும் அன்பர்களைச் சற்றே விலக்கி விட்டுத் தங்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் பூசல்களை ஒருவாறு ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் கூறுகிற அன்புரைக்குச் சிறிதே செவிசாய்க்கும்படி, காலத்தின் கட்டாய அழுத்தத்தில் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.

உங்களை- உங்கள் அறிவாற்றலை- உங்கள் இனவுணர்வை உங்கள் தமிழார்வத்தை மூடி மறைத்திருக்கும் அந்த அரசியல் மாயையை பதவிப் புதைச்சேற்றை உதறி யெறிந்து விட்டு, உடனே உங்களை விடுவித்துக்கொண்டு வெளியே வாருங்கள். உங்களுக்கென்று ஒரு பெரிய விடிவு காத்திருக்கின்றது. உங்களுக்கென்று தமிழர் வரலாற்றில் ஒரு முன்னேற்ற ஊழி தன் கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றது. அதன் தொடக்கம் உங்கள் முடிவாக இருக்கட்டும். அதற்காக நீங்கள் செய்யப் போகும் பெரும்பணி தமிழரின் இன முன்னேற்ற வரலாற்றுப் பொத்தகத்தில் அகன்ற பொன்னேடுகளை உங்களுக்கு அமைத்துக்கொடுக்கட்டும்.

ஒரு பெரும் போராட்டம் இன்றி- பெரிய புரட்சியின்றி- காலச் சகதியில் உள்ளழுந்திக் கிடக்கும் இத் தமிழினம் முன்னேற முடியாது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் படுகுழியில் தள்ளப்பெற்றிருக்கும் அத் தமிழினத்திற்கு விடிவு காணும் வல்லமை, அரசியல் அங்காப்புகள், பொருள் நசைகள், பதவிப் படுகுழிகள் , விளம்பரத் தவிப்புகள் போன்றவற்றிலிருந்தெல்லாம் நம்மை மீட்டுக் கொள்ளும் ஒருவரிடந்தான் இருக்க முடியும். அத்தகைய ஒருவராய் இனி உங்களை நீங்களே ஈடேற்றிக் கொள்ளுங்கள். அத்தகுதியெல்லாம் உங்களிடம் உண்டு. கடந்தகால அரசியல் பாடங்களும் அதனை உங்களுக்கு நன்கு உணர்த்தியிருக்கின்றன.

தமிழின வரலாற்று வீழ்ச்சியை நீங்கள் உணராதவரல்லர், தமிழின மேம்பாட்டுக்காவே நெட்டுயிர்க்கும் உங்கள் உணர்வு இன்னும் சாம்பி விடவும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம், உங்களைச் சுற்றியிருக்கும் அரசியல் கட்டுகளினின்றும் பதவித் தளைகளினின்றும் உங்களை வேரறுத்துக் கொண்டு ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று குரல் கொடுப்பதுதான். இந்த ஒலி முழக்கம் உங்களுக்குப் புதியதன்று. நீங்கள் புறந்தள்ளியதுமன்று. ஏதோ ஒரு சட்ட உந்துதலால், காலத்தின் அழுத்தத்தால் , விலக்கி வைக்கப் பெற்ற, அன்றைய வாயொலி இன்றும் உங்கள் மன ஒலியாக - அடி மனத்தின் துடிப்பாக இருக்கவே இருக்கும். இருக்கத்தான் செய்யும். அதை முழுவதும் மூடி மறைத்துவிட உங்களால் முடியாது. பெரியாரும் அண்ணாவும் கண்டு கொண்டிருந்த கனவு அதுதான். இன்றைய நிலையில் உலகம் வாழ் தமிழரெல்லாரும் ஒரே யொரு தலைவராக உங்களை மதிக்கவும் போற்றவும் வைக்கும் தலையாய முழக்கமும் இதுதான். மற்றபடி, உங்களுக்கு இனி என்ன தேவையிருக்கின்றது? உங்களுக்கென்று எதனை நாடப் போகிறீர்கள்? நீங்கள் அமர்ந்த நாற்காலியின் சூட்டில் யார் வேண்டுமானாலும் வந்து குளிர்காய்ந்து கொள்ளட்டும். அவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள்; கருத்தழியாதீர்கள். நீண்ட நெடும் வரலாறு உங்களுக்காகக் காத்துக் கிடக்கின்றது. இன்றைய நிலையில் உலகத் தமிழர் விடிவுக்கென எழுச்சிக் குரல் கொடுக்கும் இன்னொரு தலைவரை நாங்கள் காணமுடியவில்லை.

எனவே , அன்புக் கலைஞரே , அருமைத் தலைவரே, நீங்கள் அரசியலை விட்டு உடனடியாக விலகுங்கள். உலகத் தமிழின விடிவுக்கென ஒரு விடுதலை வரலாற்றைத் தொடங்கி வையுங்கள். உங்களுடன் ஒத்துழைக்க ஒரு கோடித் தமிழர் முன்வருவர். உங்கள் தோளுக்குத் தோளாக, கைக்குக் கையாக தொண்டுக்குத் துணையாக, அடிநிலைத் தொண்டர்களாக, விடுதலை முழக்கமிட நாங்கள் காத்திருக்கின்றோம். நீங்கள் அரசியலில் ஈடுபட்டு செய்யவிருக்கும் அத்தனை மாற்றங்களுக்கும் ஒரே விடிவு தமிழக விடுதலைதான் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குரலிருந்து விடுதலை ஒலி கிளம்பும் அதே பொழுதில் உங்கள் மேலுள்ள கறைகளெல்லாம் கழுவப்பட்டு விடும்; உங்கள் மேல் வஞ்சகர்கள் சுமத்தும் பழிகளெல்லாம் துடைக்கப்பட்டுவிடும்; உலகத்தமிழினம் உடனே தன் இருகைகளாலும் உங்களை ஏந்திக்கொள்ளும்! உங்கள் வரலாறு விடுதலைக் கனவில் புடமிடப் பெற்றுப் பொன் போல் சுடர்விடும். இறுதியில், நீங்கள் உலகத் தலைவராகி விடுவீர்கள்! இல்லெனில் உங்களுக்கென ஓர் எதிர்காலம் இருக்காது; உங்கள் கனவெல்லாம் கானல் நீராகப் போய்விடும்! இஃது உறுதி! எனவே, எங்கே, குரல் கொடுங்கள். ‘தமிழ்நாடு தமிழர்க்கே!’ ‘மலர்க தமிழகம்’.

- தென்மொழி, சுவடி :16, ஓலை 12, 1980