பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழைப் பாட்டு

கும்பகோணத்துக்குத் திருக்குடந்தை என்ற பெயர் உண்டு; அது தமிழ்ப் பெயர். அந்த ஊருக்கு ஒரு முறை தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையார் வந்தார். ஒளவையாரைக் கலைமகளின் அவதாரம் என்று தமிழ் நாட்டினர் எண்ணி மதித்துப் பாராட்டி வந்தனர். அவரை எதிர்கொண்டு அழைத்துச் சென்று வேண்டிய உபசாரங்கள் செய்வதைப் பெரிய பேருக யாவரும் நினைத்தனர்.

ஒளவையார் எங்கேயாவது போனால் அவரைத் தனியே செல்லும்படி யார் விடுவார்கள்? எப்போதும் அவருடனே தமிழ்ப் புலவர்களும் தமிழ் மாணாக்கர்களும் தமிழ்ச் சுவை தேர்ந்து இன்புறுகிறவர்களும் இருப்பார்கள். ஒளவையார் பேசுகிற ஒவ்வொரு சொல்லும் அவருடைய கல்வித் திறமையைக் காட்டும் என்ற நினைவால் அவரிடம் பேச்சுக் கொடுத்து அவருடைய நல்லுரையை வருவிக்கச் சிலர் விரும்புவார்கள். அவர் உள்ளம் கனிந்து ஏதேனும் கவி பாடும்போது அதைக் கேட்டு இன்புற வேண்டும் என்ற ஆர்வத்தோடு சிலர் அவரைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். திருக் குடந்தை அப்போதும் பெரிய நகரமாக இருந்தது. ஆதலால் அந்த நகரத்துக்கு ஒளவையார் வந்தபோது ஒரு சிறிய கூட்டம் எப்போதும் அவருடனே இருந்து வந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.

பல அன்பர்கள் ஒளவையாரைத் தம்முடைய இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். யார் அன்போடு அழைத்தாலும் செல்லும் இயல்புடைய தமிழ் மூதாட்--