பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


பகுதிகள். ஏனைய பல சிறப்புப் பகுதிகளாம்.

காந்தியடிகள் பற்றிய பகுதி எளிமையும், அருமையும் வாய்ந்த நல்ல பகுதி. குழந்தைகளும் காந்தியாரைப் பற்றிப் பொதுவாகவும், நன்றாகவும், போதுமான அளவிலும், எளிதாகத் தெரிந்து கொள்ள இது உதவும்.

பக்கம் 22 இல் வயிரம் உடையும் என்ற கருத்துடன் மர வயிரத்தின் உறுதியையும் சேர்த்துக் குறிப்பிட்டிருக்கலாம்.

பாவேந்தரைப் பற்றிய பகுதியில் கலைமணி ஒர் புரட்சிப் பாமணியாக மிளிர்வதைக் காண முடிகிறது.

கண்ணதாசனை வரவேற்று இவர் எழுதியுள்ள வரவேற்பு, சர். ஆர். கே. சண்முகத்தை வரவேற்று அண்ணா திராவிட நாட்டில் எழுதிய அரிய இலக்கியப் பகுதியை எமக்கு நினைவூட்டியது.

கலைமணியின் உள்ளத்தைப் பளிச்செனக் காட்டும் பகுதி கிருத்துவக் கலை இலக்கிய மன்றம் நடத்திய திருவள்ளுவர் கிருத்தவரா என்பது பற்றிய மாநாட்டு வரவேற்புரையாகும். தமிழக வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒரு நிகழ்ச்சியே அது.

திருவள்ளுவரைக் கிருத்துவராகக் காட்ட முயன்ற முயற்சி முறியடிக்கப்பட்டுச் சாம்பலாகவும் ஆக்கப்பட்ட மாநாடே அது.

அதில் யாமும் கலந்து கொண்டோ மாதலால் இதன் மெய்ம்மையை எம்மால் உறுதிப்படுத்த முடிகிறது. பாவாணர், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் போன்ற பெருமக்களே வழுக்கியும், நழுவியும் தப்பிய அந் நிகழ்ச்சிக்கு எம் உரை திருப்புமுனையாக அமைந்து, அம் மாநாட்டின் முடிவை தலைகீழாக மாற்றியமைத்தது.

அந்த வரவேற்புரை, நம் கலைமணியை நம் கலைமணியாகக் காட்டும் மணியான உரை என்பதோடு இக்கால இளைஞர்களைச் சரியான திசை நோக்கி வருமாறு அழைக்கும் வரவேற்புரையாகவும் அமைந்துள்ளது. ஆதலால் அம்மாநாட்டு வரவேற்புரையும் ‘அய்யன் திருவள்ளுவர்’ பற்றிய கட்டுரையும் இந் நூலுக்குக் கோபுரங்கள் போல் இலங்குகின்றன.

இந் நூலை வெளியிடுவதன் வாயிலாகக் கலைமணி மீண்டும் தமிழ் ஞாயிற்றின் ஒளிப் பகுதிக்கு வருகிறார் எனக் கூறி அவரை யாம் அன்புடன் அங்கு வரவேற்கிறோம்.

-மா. நன்னன்
சென்னை
4, 1, 2000

8