பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


நூலுள், அண்ணா பற்றிப் பல தலைப்புகள்! தந்துள்ள தலைப்புகளுக்கு ஏற்ப மிகப் பொருத்தமான அண்ணாவின் குணங்களை, ஆசிரியர் மிக அருமையாக இணைத்துக் காட்டுகிறார்.

நண்பர் கலைமணி,"எனது இணைப்பைச் சரியாகச் சொல்லுகிறேனா என்று என்னை நானே எண்ணிப் பார்க்கிறேன் - அஞ்சுகிறேன்” என்கிறார்!

அன்பர் கலைமணிக்கு இந்த அச்சம் வேண்டியதே இல்லை. இதைவிட யாரும் பொருத்தமாகச் செய்ய முடியாது என்ற அளவில் இணைப்பு போற்றத்தக்கதாக - ஏற்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.

"அண்ணா ஒரு காலம்” என எழுத முற்படும் கலைமணி, "அண்ணாவினுடைய குரல் மனித சமுதாயத்தற்காகக் கதறி அழுத குரல், காலத்தால் அது விழுங்கப்படுவதில்லை. ஆகவே, என்றும் காலமாக நிலைப்பார்” என அருமையாகப் பொருத்தி விளக்கிச் சொல்லுகிறார்.

அண்ணாவை நீர் வீழ்ச்சியாகக் கூறும்போது, "இது அறிவு மலையிலிருந்து விழுகின்ற நீர்வீழ்ச்சி! அதனுடைய இரைச்சல் எல்லா தேசத்தையும் செவிமடுக்கச் செய்தது” என அருமையாக இணைக்கிறார்.

நீர் வீழ்ச்சி என்று வெறுமனே சொல்வதோடு விட்டு விடாமல், நீர் வீழ்ச்சியின் ஒவ்வொரு செயலையும் அண்ணாவின் செயலோடு ஒப்பிட்டுக் காட்டி ஒன்று படுத்துகிறார்.

நீர்வீழ்ச்சி மேலே இருந்து கீழே விழும்போது, அடியில் சொரசொரப்பாக உள்ள பாறையை வழுவழுப்பாக்கி விடுகிறது. அதுபோல்தான் அண்ணாவும், "அரசியலில் முரடர்களை மிருதுவாக்கி, வழவழப்பாக்கிப் பக்குவப்படுத்தினார்' என அருவியின் பண்பை அண்ணாமேல் ஏற்றிச் சொல்கிறார்.

வானவில்லைக் கலைமணி காண்கிறார்.அதன் ஏழுவணங்ணங்கள் அவரைக் கவருகின்றன.அந்த ஏழு வண்ணங்களோடு அண்ணாவை ஒப்பிட்டு அவரைக் காலம் எழுதிய ஒரு வானவில்லாகக் கண்டு மகிழ்கிறார்.

12