பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


பட்டுக் கலங்கிக் கிடந்த நேரத்தில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒரே உலகச் சமுதாயத் தத்துவத்தை தமிழ்ப் பண்பாட்டின் வாயிலாக, கொஞ்சு தமிழால் உலகுக்கு விளக்கிக் கொண்டிருந்த இனம் - தமிழ் இனம்.

காலக் கரையான்களால் அரிக்கப்படாத அந்தத் தமிழ் இனத்திலேதான் பரம்பரை பரம்பரையாகத் தமிழ் மேதைகள் தோன்றித் தெள்ளு தமிழை வளர்ப்பதற்காகச் சீரிய தொண்டாற்றி வந்தனர்.

நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்கு மேல் நின்ற தமிழ் நிலவாய், ஞானச் செந்தாமரை எழிலையும் தோற்கடிக்கும் திருக்குறள் தோற்றமாய், தமிழ்ப் பண்பாட்டிற்குத் தடம் புரளா அறிவூட்டும் சிந்தனையாளராய் நிலைத்து, அவர்களில் ஒருவராக இன்றும் உயிராக நிற்பவர்தான் அய்யன் திருவள்ளுவர் பெருமான்.

வாழ்க்கை வளையத்தில் குறுக்கும் நெடுக்குமாக வெல்டு கின்ற துன்பக் கோடுகள், அழிக்கப்பட்டாக வேண்டும் என்பது திருவள்ளுவப் பெருமானின் சீரிய சிந்தனை.

அதற்காகவே, இரவு, பகலென்று பாராது, அவர் விழிப்போடு, திருவள்ளுவத்தை எழுத ஆரம்பித்தார்.

மனிதன் வாய் திறந்த உடனேயே வந்த ஒலி, முதிராத இளம் பிஞ்சின் மழலையாகத்தான் இருக்கமுடியும்!

அந்த ஒலி, அவன் வாழ்க்கையை நல்லிடத்துக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.

காரணத்தோடும் - காரணமில்லாமலும், கண்ணீர்க் கடலில் - கவலைக் கணவாயில் - மனிதன் விழுந்து, விழுந்து மீண்டும் மீண்டும் எழத் தடுமாறித் திணறிக் கொண்டே இருந்தான்.

கண்கண்ட இடங்களில் எல்லாம் காட்சிகளை கையெடுத்து அவன் கும்பிட்ட நேரம், இதுவரையில் அளந்தறியாத காலம்.

தொழுதலும், வணங்கலும் மனித வாழ்க்கையில் நீண்ட பெருங்கதையாக - முடிவே காணப்படாத தொடர்கதையாக வளர்ந்து வருகிறது.

மனித வாழ்க்கையின் மணி மகுடத்தைத் துன்பம் தனது

36