பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

11

அருள்நெறி முழக்கம்


கொண்டுவரத்தான் நாளடைவில் அவர்கள் பல மாறுபட்ட செயல்களைக் கையாளத் தொடங்கினார்கள்.

தன்மானம்தான் நம்மையெல்லாம் ஒன்றுபட்டு இயங்காமல் செய்கிறது. தன்மானம்தான் கடவுள் நெறி என்ற ஒன்று நன்றாகத் தெரிந்தும் அவர்களை ஒத்துக்கொள்ள முடியாமல் செய்கிறது. எனவே, இந்தத் தன்மானம் நீடிக்கக்கூடியதன்று. நாளடைவில் காலமும் கருத்தும் ஒன்றுபட்டு இயங்குகின்ற காலத்து கடவுள் நெறியை அவர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். புரிந்து கொண்டுள்ள மக்கள்தொகை அதிகமாகின்ற காரணத்தால் நாட்டினின்றும் இந்த மாறுபட்ட கருத்துக்கள் தானாக அகன்று விடும். இந்தத் தன்மானத்தின் குணம் என்றாவது தணிந்துதான் ஆகும். தன்மானம் தலைகுனிந்து கடவுள் நெறியின் முன் மண்டியிருக்கின்ற காலத்தில் அருள்நெறி மக்களிடம் நல்லதொரு இடத்தைப் பெற்றுத்தான் தீரும் என்பதில் சந்தேகமில்லை. மனித சமுதாயத்தின் ஆசைகள் தேவைகள் பூர்த்தியாகின்ற வரை தன்மானமும் இருக்கத்தான் செய்யும். இது. உலகப் பெருமக்கள் கண்ட முடிவு.

கண்ணனுக்கு ஆபத்து என்று சிலர் கருதுகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இந்தப் பயம் மக்களுக்கு இருத்தல் வேண்டியதில்லை. தமிழ் மண்ணில் கடவுள் நம்பிக்கை ஊறிக்கிடக்கிறது. தமிழ்நாட்டுக் கற்களிலும் கூடக் கடவுள் நம்பிக்கை பொதிந்து விளங்குகிறது.

இந்த மதுரை மாநகரத்து மண்ணும் நீரும் நெருப்பும் தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களின் சுவையை நன்கு அறிந்து இருக்கின்றன. கல்லும் மண்ணும் அதன் சுவையை அறிந்திருந்தும் மனிதர்கள் மட்டும் அதன் சுவையை அறிய மறுக்கின்றனர். கருங்கற்களுக்கு இருக்கின்ற பண்பாடு கூட ஆறறிவு படைத்த மனித சமுதாயத்திற்கு இல்லையே என்றுதான் வருந்தவேண்டி இருக்கின்றது.