பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தவத்திரு குன்றக்குடி அடிகளார்

12

அருள்நெறி முழக்கம்


கோவில்களின் மண்டபங்களினுள் இருந்து ஒருமுறை பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனையின் பக்திப் பாடல்களைச் சிறிதளவும் ஒசை குறையாமல் அங்கு இருக்கின்ற கருங்கற்கள் திரும்ப ஒலிக்கின்றன. ஒருமுறை அல்ல பன்முறை எடுத்துக் கூறினாலும் அதனை உணர்ந்து கொள்ளும் சக்தி மனித சமுதாயத்திற்கு இல்லாது போய்விட்டதே என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது. சிலர் உணர்ந்திருந்தும் ஏதோ சில பிடிவாத குணத்தினால் அதன்வழி நடக்க மறுக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் உள்ளப்போக்கும் அறிவுத்திறனும் இத்தகு நிலைமைக்கு மாறிவிட்டதே என்றுதான் வருந்த வேண்டியிருக்கின்றது.

இன்று சிலர் கண்ணனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று கருதுகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கடவுள் நெறிக்கும் பக்திப்பாடல்களுக்கும் - ஏன் நன்மையான காரியங்கள் அனைத்திற்கும் ஆபத்து வருவதும் போவதும் இயற்கைதான்.

மக்கட்சமுதாயம் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்காலத்துச் சரிதைகளைப் படித்துப் பார்த்தால் இவர்கள் சொற்கள் அனைத்தும் போலிச் சொற்கள் என்று நன்றாகத் தெரியும். கம்சனைவிட இவர்கள் எல்லாம் பெரிய எதிர்ப்பாளர்கள் என்று கருதமுடியாது. கம்சன் செய்த கொடுமைகளை விடவா இவர்கள் இழிவான செயல்கள் செய்துவிட்டார்கள்? என்னைப் பொருத்தவரையில் கம்சனைவிட இந்தத் தன்மான இயக்கத்தினர்கள் நல்லவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

அன்பிற்கும் அறத்திற்கும் இலக்காக வாழ்ந்து உலகிற்கு உணர்த்தி வாழ்ந்தது - வாழ்வது தமிழினம்தான்் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அத்தகு பெருமைதரும் குலத்தில் பிறந்த நாம் உலகில் உண்டான அனைத்துயிர்களிடத்தும் அன்பாக இருந்தால் கண்ணன் கழல் இணைகள் என்றும் நம்மைக் காக்கும் என்பதில் சந்தேகமில்லை.