பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

27

அருள்நெறி முழக்கம்


“ஒன்று பட்டால் உண்டு வாழ்வே, நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே"

என்று அழகுபடவும் ஆணித்தரமாகவும் அதே நேரத்தில் கண்ணியமாகவும் எடுத்துக் கூறுகின்றார்.

ஒன்றுபட்டு இயங்குகின்ற நல்ல உள்ளங்கள் இல்லாதவரை நாம் நலங்காண முடியாது. தொழில் துறையில்தான் சமுதாயம் பிரிந்தியங்குகிறது. கடமையை உணர்ந்து நடக்கும் நல்லதொரு பண்பாடு நம்மிடம் வளரவேண்டும். வெறுப்பும் - வெறியும் சமுதாயத்தினின்றும் ஒதுக்கப்பட வேண்டியவை. அன்பும் அருளும்தான் நலம் பயப்பன. அன்றுதொட்டு இன்றுவரை மக்கட் சமுதாயத்தில் அன்பும் அருளுந்தான் நலம் தந்திருக்கின்றன. இதனை அறிவியல் காணவில்லை. அருளே காணும்.

நாய்கள் வாழ்கின்ற வாழ்க்கை வெறிவாழ்க்கை, காக்கைக் கூட்டங்கள் வாழ்கின்ற வாழ்வு அன்பு வாழ்வு - கூட்டுறவு வாழ்வு. மனித சமுதாயமும் அத்தகைய வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டும். இத்தகு உயரிய பண்பாட்டைப் பின்பற்றிச் சமுதாயத்தைக் காப்போம். அந்த உயரிய கொள்கையை ஒவ்வொருவரும் உறுதிப்பாடாக எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

அன்று காந்திஅடிகள் அருள் நெறியின் அடிப்படையில் அரசியல் புரட்சியை நடத்தி வெற்றி பெற்றார். இன்று வினோபாஜி அருள்நெறியின் அடிப்படையில் பொருளாதாரப் புரட்சி செய்து வருகின்றார். சமுதாயத்தின் தேவை அனைத்தும் அருள்நெறியின் அடிப்படையில் சரிசெய்ய முடியும். இந்தத் தத்துவம் உலகப் பெருமக்கள் கண்ட முடிவு. துன்பமும் தொல்லையும் வருவது உலக இயற்கை. அதற்காக நாம் மனந்தளரக்கூடாது. "துன்பத்தைக் கண்டு அஞ்சுபவன் மனிதனல்லன்” என்கிறார் சுவாமி விவேகாநந்தர். அருள்நெறி காட்டும் பாதையைப் பின்பற்றி வாழ்ந்தால் எல்லாம் இன்பமாக முடியும். இந்த எண்ணம் எல்லோர் உள்ளத்திலும் குடிகொள்ள வேண்டும். இதனைத் துணையாகக் கொண்டு உழைக்க முற்பட்டால் ஆண்டவன் நமக்கு நிச்சயமாக