பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

46

அருள்நெறி முழக்கம்


தத்துவங்கள் சடங்குகள் - சின்னங்கள் சம்பிரதாயங்கள். கடவுள் கொள்கைகள் முதலியனபற்றித் தெரிந்து கொள்ளாமலோ குறை கூறுவதனால் என்ன பயன்? அதனால் விபரீதங்கள்தான் விளைகின்றன.

கடவுள் என்பது ஆதி மனிதன் காலத்தில் கற்காலத்தில் - கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த தமிழ்க் குடியினர் கண்டது. கடவுள் நெறி - அன்பு நெறி - அருள் நெறி ஆதிமனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. அவன்தான் கண்டுபிடித்த அப்பாற்பட்ட சக்திக்குக் கடவுள் என்ற பெயர் கொடுத்தான். அதனை உருவத்தில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி வழிபட்டான்.

அந்த உயரிய தத்துவத்தை இன்று இருக்கின்ற புதுமை விரும்பி என்ற பெயர் கொண்டவர்கள் - தத்துவம் புரியாதவர்கள் - அழுக்கு மனம் படைத்தவர்கள் - குறுக்குப் புத்திக்காரர்கள் - மாற்றெண்ணம் கொண்டு வேற்றுருவில் நடமாடுகின்ற மனித உருவங்கள் குறைகூறுகின்றன. இயற்கையின் படைப்புக்கு மனிதனின் அறிவும் - கருத்தும் - சிந்தனையும் பெயர் கொடுத்ததே யன்றிப் புதிதாக இந்த உலகில் இதுவரை ஒன்றையும் காணவில்லை. அடிப்படைத் தத்துவத்தை “பழமை” என்ற பெயரால் பிரிவுபசாரப் பத்திரம் வாசித்து வெறுத்தொதுக்குவதேன்?

மனிதனின் அறிவு உயிரற்ற ஒன்றைத்தான் கண்டுபிடிக்க முடியும். ஆண்டவன் படைப்பில் உயிர் உள்ளதும் - உயிர் இல்லாததும் இருக்கின்றன. மனிதனின் அறிவிற்கும் ஆண்டவனின் படைப்பிற்கும் உள்ள வேறுபாடு இதுதான். பழமை இன்றிப் புதுமை இயங்க முடியாது. வேண்டாத ஒன்று என்று பழமையை வெறுத்தொதுக்குகின்றவர்கள் பழமை, புதுமையின் தாயகம் என்பதை நன்கு உணர வேண்டும். புதுமையின் தாயகமான பழமையை மறந்து விடக்கூடாது.