பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காதல் கடவுள் கல்லுருவிலே

காதல் என்றால் என்ன? அது என்ன ஒரு பண்டமா? கடைச்சரக்கா! விலைக்குக் கிடைக்குமா? இல்லை விலை மதிக்க முடியாத ஓர் அற்புதப் பொருளா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை எளிதாகக் கூறி விட முடியுமா என்ன! அப்படி முடியாதுதான். ஒருத்தி ஆம், காதல் நோயால் தவிப்பவள் தான், தன் தோழிக்கு விளக்க முனைகின்றாள். அவனோ கட்டழகன் மதுரை வீரனிடத்து தணியாதக் காதல் கொண்டவள். அவன் அவளுக்குத் தந்த காதல் நோயை அழகாக வர்ணிக்க முற்படுகின்றான்.

மைக்கருங் கண் மாதரார்
மனங் கவர்ந்த மார வேள்
மதுரை வீர தஞ்சுகன்
மணந்து தந்த காதல் நோய்

என்று அழகான முன்னுரையோடு ஆரம்பிக்கிறாள். பின்னும் பேசுகிறாள், அந்தக் காதல் நோய்.

கைக்குள் வந்தகப்படாது
கண்முன் நிற்கும்;
ஒருவரால் காணொனாதது;
தானும் என்று காட்டொணானது

என்றெல்லாம் திணறித் திணறிச் சொல்லிவிட்டு பின்னும் சொல்கிறாள்.

அது அன்றியும்
ஒக்கும் என்றும் உரைக்கலான
உரையும் இல்லை .