பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

ஆழ்கடலில்



தமிழை ஆராய்ந்து இன்புறுதல் என்றால் என்ன? தமிழிலுள்ள தலைசிறந்த நூல்களை ஆராய்ந்து இன்புறல் தானே! அங்ஙனமெனின், தமிழ் நூல்களை ஆராய ஆராய இனிமை மிகும் என்பது போதருமன்றோ? முதல் பொய்யா மொழிப்புலவராகிய திருவள்ளுவரே கூறியுள்ளாரே! படிக்கப் படிக்க நூலின் நயம் இனிப்பதைப் போல, பழகப் பழகப் பண்புடையவரது நட்பு இனிக்கும், என்பது அவர் கருத்து.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”

என்பது அக்கருத்தமைந்த குறளாம்.

உண்மை அஃதெனில், ஆராய ஆராயத் தெவிட்டாது இனிக்கும் தமிழ் நூல்களுள் தலைசிறந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்து ஆராய்ந்து அவ்வின்பத்தைத் துய்க்கலாமே! இழப்பதேன்?

அத்தகைய தொரு தமிழ் நூலைத் தேர்ந்தெடுத்தல் அரிதன்று; எளிது, மிக எளிது. அவ்வேலையை உலகம் நமக்குத் தரவில்லை. அதனை முன்னமேயே அது செய்து முடித்து விட்டது. அந்த நாடறிந்த நூலை - ஏன், உலக மறிந்த அத்தலை நூலை ஏறக்குறைய ஒரீராயிரம் ஆண்டு கட்கு முன்பே, சங்கத் தமிழ்ப் புலவர்களே - பன்னூல்கள் எழுதிய தமிழ்ப் பாவாணர்களே விரும்பு வெறுப்பின்றி ஒரு முகமாய்த் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆம்; உள்ள உள்ள உள்ளம் உருக்கும் அந்தத் தமிழ் நூலை-ஆராய ஆராய அறிவு ஊற்றெடுக்கும் அந்தத் தமிழ் நூலை - சிந்திக்கும் சிந்தைக்கு இனிய, அது மட்டுமா, கேட்கும் செவிக்கும் இனிய, அம்மட்டுமா, சொல்லும் வாய்க்கும் இனிய அந்தத் தமிழ் நூலை அவர்கள் அப்போதே தேர்ந்தெடுத்து விட்டனர்.