பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஆழ்கடலில்


ஒரு நாள் ஒரு விறகு வெட்டி ஆறுபணம் ஈட்டினானாம். அவற்றை அன்றைக்கே செலவழித்துவிட்டானாம். மெய்தானே! ஆறுபணம் எப்படிப் போதும் ஒரு குடும்பத்திற்கு! ஆனால் அவன் அன்றிரவு தன் பக்கத்து வீட்டுக்காரனிடம் பின்வருமாறு பகர்ந்தானாம். இன்றைக்கு நான் ஆறுபணம் ஈட்டினேன். அவற்றுள் இரண்டு பணத்தைப் பழைய கடனுக்காகக் கொடுத்து விட்டேன். இரண்டு பணத்தைக் குடும்பத்திற்காகச் செலவழித்துவிட்டேன், மீதி இரண்டு பணத்தைப் பின்னால் உதவுவதற்காக உண்டிப்பெட்டியில் போட்டுவைத்துள்ளேன் என்பது விறகு வெட்டியின் செலவு விளக்கம். கேட்டான் பக்கத்து வீட்டுக்காரன், வியப்புடன், இக்காலமான காலத்தில் ஆறுபணம் முழுவதுமே போதாதே! அப்படியிருக்க, கடன் எப்படித் தந்தாய்? மிச்சப்படுத்தியது எப்படி? என்று வினவினான். பின் விறகு வெட்டி பழைய கடனைக் கொடுத்தல் என்றால், இதற்குமுன் என்னைப் பெற்று வளர்த்துச் செலவு செய்து காப்பாற்றிய என் பெற்றோர்க்காக இரண்டு பணம் ஒதுக்குதல், குடும்பத்திற்குச் செலவழித்தல் என்றால், எனக்கும் என் மனைவிக்குமாக இரண்டு பணம் ஒதுக்குதல்; மிச்சப்படுத்துதல் என்றால், எதிர்காலத்தில் காப்பாற்றும் கடமைப்பட்டுள்ள பிள்ளைகட்காக இரண்டு பணம் ஒதுக்குதல் - என்று மேலும் விளக்கம் செய்தானாம். இப்போது விளங்குமே இக்குறட் கருத்து.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண - உரை) இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் (பிரமச் சாரி, வானப் பிரத்தன், சந்நியாசி என்னும்) இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின் கண்ணே நின்ற ஒரு துணை .