பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-26-

14 : 2: எல்லாவற்றிலும்‌ சரேலென எம்பிப்‌ பாயும்‌ மனவுணர்வு படைத்தவனே இலக்கியவாக்கத்தில்‌ வெற்றி பெறுகின்றான்‌. மேடுகளில்‌ மட்டுமின்றிப்‌ பள்ளங்களிலும்‌ அவன்‌ உணர்வு சடக்கெனத்‌ தாவிக்‌ குதிக்கின்றது. ஓர்‌ இலக்கியப்‌ புலவன்‌ காற்றைப்‌ போலும்‌ கடுகிய மனநிலை உள்ளவனாகவும்‌, நீரைப்‌ போல்‌ நெகிழ்ச்சியும்‌ பரந்துபட்டு ஒழுகும்தன்மையும்‌ உள்ளவனாகவும்‌, நெருப்பையொத்தபொது நோக்குடையவனாகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அவன்‌ கழுகுக்‌ கிருப்பதைப்போலும்‌ ஒரு கூர்மை இருக்கவேண்டும்‌. செவிகள்‌ வேட்டை நாய்களுக்கிருப்பதைப்‌ போல்‌ மிக்க நுண்ணுணர்வு உடையனவாகவிருத்தல்‌ வேண்டும்‌. மொழியோ அவனுக்கு ஒரு வேலைக்காரனைப்‌ போல்‌ பக்கத்தில்‌ நின்று அவன்‌ அழைக்காத முன்னமே வந்து உதவுதல்‌ வேண்டும்‌. சொற்களுக்காக இறவாணத்தைப்‌ பார்க்கும்‌ எந்த இலக்கியப்‌ புலவனும்‌ இலக்கிய வாக்கத்தில்‌ வெற்றி பெறுவதில்லை. அந்நிலையில்தான்‌ அவன்‌ உலக நடைமுறைகளை நன்றாகக்‌ கருத்தில்‌ வாங்கிக்‌ கொள்ளவும்‌, எழுத்தில்‌ உலவவிடவும்‌ முடியும்‌. அவ்வாறு செய்யவியலாதவனால்‌ பிறர்‌ உள்ளங்‌ களைப்‌ போய்த்‌ தொட்டு உலுக்கி, அங்கு தனக்கென ஓர்‌ இடத்தைப்‌ பிடித்துக்‌ கொள்ளும்‌ இலக்கியத்தைச்‌ செய்தல்‌ இயலாது. மொழியின்‌ சொல்‌ வண்ணங்களைக்‌ கொண்டு அறிவு என்னுந்‌ தூரிகையால்‌, மனம்‌ என்னும்‌ திரையில்‌ எழுதிக்‌ காட்டும்‌ எண்ணங்கள்‌ எனும்‌ ஓவியங்களே இலக்கியங்களாக மலர்கின்றன. எனவே, இலக்கியச்‌ சிறப்புக்கு மொழிச்‌ சிறப்பே வண்ணமாக அமைந்து நிறமாலைகளை உண்டாக்குகின்றது. மொழி வெளிர்‌ வாங்கும்பொழுது, இலக்கியமும்‌ வெளிர்‌ வாங்கி விடுகின்றது. எத்துணையாற்றல்‌ இருப்பினும்‌ மொழி யாற்றல்‌ இல்லையானால்‌ ஒருவன்‌ செய்யும்‌ இலக்கியத்தில்‌ எண்ண அடர்த்தி இடம்‌ பெறுவதில்லை.