பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

இலங்கைக் காட்சிகள்

யைக் கண்ணிலே வைத்துக்கொண்டிருக்கும் ஏழைகள் சுற்றி நின்று கை நீட்டுகிறார்கள். அதைப் பிடுங்கிக்கொண்டு போகவும் தயாராக இருக்கிறார்கள்' என்றேன். அவர் அதைக் கேட்டு வருந்தினர். அன்று மாலைப் பத்திரிகையிலே அதைப்பற்றி அவர் எழுதி விட்டார்! தெய்வ பக்தி எப்படி இருக்கிறதென்று கேட்டார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப்பற்றி விசாரித்தார். தமிழ் மக்களைப்பற்றியும் தமிழ் மொழியைப்பற்றியும் தெரிந்துகொள்ள இலங்கைத் தமிழர்கள் எத்தனை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அவர் கேட்ட கேள்விகள் காட்டின. அவர் வீட்டுக்கு வந்து அன்றிரவு ஓய்வு எடுத்துக்கொண்டேன்.

மறு நாள் கொழும்பு மாநகரத்தைப் பார்க்கப் புறப்பட்டேன். கொழும்பில் உள்ள சட்டசபைக் கட்டிடத்தையும், கடற்கரையையும், பெரிய வீதிகளையும் பார்த்தேன். அழகிய நகரம். போக்கு வரத்து வசதிகள் உள்ள நகரம். பின்பு அங்குள்ள மியூசியத்தைப் பார்க்கப் போனேன்.