இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
கொம்புத் தேனைப் போலின்பம்
கொட்டும் உன்றன் இணையடிகள்
நம்பித் தொழுது கிடக்குமெனை
நாளுங் காப்பாய் உன் நிழலில்!
38
செல்வ மிக்கார் பொருளொன்றே
தெய்வ மென்று கருதுகின்றார்
கல்வி வல்லார் தம்மறிவே
கடவு ளென்று பேசுகின்றார்
வல்ல உடலைப் பெற்றவர்தம்
வலிவை நம்பி வாழுகின்றார்
எல்லாம் வல்ல பெருமானே
எனக்கு நீயே பெருந்துணையாம்!
39
ஆடும் மாடும் தெய்வமென
ஆடிப் பாடித் தொழுவதில்லை
கூடு கட்டி வாழுமினக்
குருவி கூடத் தொழுவதில்லை
தேடும் அறிவும் ஆராயும்
திறனும் கொண்ட மனிதன்தான்
ஆடும் படிக்கிவ் வுலகத்தை
ஆட்டும் இறைவா தொழுகின்றேன்!
40
தொழுதால் என்ன பயனெனவே
தோழன் ஒருவன் எனைக்கேட்டான்
அழுதால் என்ன பயனெனவே
அழும்பிள் ளைதான் அறியாதோ?
எழுதா மறையை உலகிற்கே
ஈந்த பெருமா உனை நம்பித்
தொழுதால் வருமப் பயனெல்லாம்
சொல்லத் தெரிய விலையப்பா!
41