பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


கணினியின் வளர்ச்சிப் படிகள்

தொடக்கக் காலத்தில் கணினிகள் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் ஆய்வுப் பொருளாகவே இருந்து வந்தன. 1951இல் தான் கணினி விற்பனைக்கு வந்தது. ரேடிங்டன் நிறுவனம் யுனிவாக்-1 கணினியை அமெரிக்க அரசுக்கு விற்றது. மிகப் பெரிய கட்டிடத்தில் நிறுவப்பட்ட அக்கணினி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டது.

அதன் பிறகு பரவலாக விற்பனைக்கு வந்த கணினிகளும் பல நூறுபேர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய பெருமுகக் கணினிகள் (Main Frames) ஆகும். இவற்றை மிகப் பெரிய வணிக நிறுவனங்களே வாங்கிப் பயன்படுத்தி வந்தன. அடுத்து, நடுத்தர நிறுவனங்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அதைவிடச் சிறிய (Mini) கணினிகள் விற்பனைக்கு வந்தன. 1971ஆம் ஆண்டில் துண்செயலி (Micro Processor) கண்டுபிடிக்கப்பட்டபின், கணினியின் வளர்ச்சிப் படியில் திடீர் தாவல் ஏற்பட்டது.

1977ஆம் ஆண்டில் விலை குறைந்த மிகச் சிறிய (Micro) ஆப்பிள் கணினிகள் பெருமளவில் விற்பனைக்கு வந்தன. நிறுவனங்கள் மட்டுமே கணினியை நிறுவ முடியும் என்ற நிலைமாறி, தனியார் ஒருவர் தன் சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரு கணினியை வாங்க முடிந்தது. எனவே, அக்கணினி சொந்தக் கணினி (Personal Computer-PC) என்றழைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில் மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சொந்தக் கணினிகளை ஐபிஎம் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தபின் உலகெங்கிலும் கணினியின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. நுண்செயலி மற்றும் நினைவகச் சிப்புகளின் திரை, விசைப்பலகை, அச்சுப் பொறி போன்ற துணைச் சாதன உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி, மனிதனின் அன்றாடப் பணிகளை எளிமைப்படுத்தும் ஏராளமான மென்பொருள் தொகுப்புகளின் உருவாக்கம் காரணமாக, கணினித் துறையில் அதிகமாகப் பரிச்சயம் இல்லாதவர்களும் கணினியில் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.