பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


பொதுமக்கள் சுவைக்கும் பிரபந்தங்கள்

கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாடு களப்பிரர் என்ற வேற்று மொழியார் ஆட்சியிலிருந்து கிட்டத்தட்ட மூன்றரை நூற்றாண்டுகள் பல்வேறு சீர்கேடுகளை அடைந்தது. இவர்கள் ஆண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் இருண்ட காலம் என்று குறிப்பிடுவர். இக்காலத்தில் தமிழ் மொழி தனித் தலைமையை இழந்து தளர்ச்சியுற்று இலக்கிய வளர்ச்சி பெறாது மங்கிக் கிடந்தது. பிறகு நாட்டில் ஏற்பட்ட பல்லவர், பாண்டியர்கள் ஆட்சியிலும் சோழர்களின் ஆட்சியிலும் தமிழ் மொழி ஏற்றம் பெற்றது. புலவர்கள் புத்துணர்ச்சி பெற்றுப் புதுப்புதுப் பிரபந்தங்களை இயற்றினர் ; பக்திப் பாடல்களும் பெருங் காப்பியங்களும் தோன்றத் தொடங்கின. காவியங்கள் கல்வியாளர்க்கென்றே இயற்றப் பெற்றன ; பக்தி இயக்கத்தின் விளைவாக எழுந்த பாடல்கள் பொதுமக்கள் மனத்தைக் கௌவும் நிலையில் அமைந்தன. வெற்றித் திறத்தால் நாட்டுப் பரப்பை பெருக்கிய அரசர்களையும் கொடையாலும் பிறவற்றாலும் புகழ் எய்திய வள்ளல்கள் வேளிர்கள் போன்றவர்களையும் புலவர்கள் கவிகளில் அமைத்துப் போற்றினர். கலம்பகம், பரணி போன்ற பிரபந்தங்கள் அவ்வகையைச் சார்ந்தவை. எனவே, அவர்கள் எளிதில் பொருள் உணரக்கூடிய ஒரு சீரிய நேர்மை அவற்றில் வாய்ந்திருந்தது. கற்றுவல்லோரும் புலவர்களும் நிரம்பிய அரசவையில் அவர்கள் அனைவரும் வியந்து போற்றும் முறையில் அப் பிரபந்தங்கள் பாடப்பெற்றன. கலிங்கத்துப் பரணியும் அங்ஙனம் பாடப்பெற்ற நூல்தான்.