பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


குடி பெருமையுடைத்து என்று கூறினார். அவர் கூறிய சோழர் குடி வரலாற்றைக் கரிகாலன் இமயத்தில் எழுதுவித்தான். அந்த வரலாற்றையே முதுபேய் காளிக்குக் கூறுகின்றது.

இனி, குலோத்துங்கன் சிறப்பைக் கூறுவதற்கு முன்பதாக பரணிப்போர் நிகழ்வதற்கான நிமித்தங்களைக் கூறுகிறார் ஆசிரியர். பேய்கள் தம் பசிக் கொடுமையைத் தேவியிடம் கூறி அதைப் போக்குமாறு அம்மையை வேண்டி நிற்கின்றன. அவ்வமயம் இமயத்திலிருந்து வந்த முதுபேய் கலிங்க நாட்டின் வழியாக வந்த பொழுது ஆங்குக் கண்ட சில தீநிமித்தங்களைக் கூறுகின்றன. காளி தேவி கணிதப்பேய் கண்ட கனவு நிலையையும் நனவில் கண்ட தீக்குறிகளையும் அவர்களுக்குக்கூறி 'மிக்க விரைவில் கலிங்கநாட்டில் பெரும் போர் நிகழும் உங்கள் பசி முற்றுந் தொலையும்," என்று உரைக்கின்றாள்.

குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு,முடிசூடல் முதலிய செய்திகள் காளி பேய்களுக்கு உரைப்பதாக அமைக்கப் பெற்றுள்ளன. அங்ஙனம் காளி உரைத்துக் கொண்டிருக்குங்கால் ஒருபேய் ஓடி வந்து கலிங்க நாட்டில் நிகழும் போரையுரைக்க, எல்லாப் பேய்களும் தாம் உணவு பெறப் போவதை நினைந்து மகிழ்ந்து கூத்தாடுகின்றன. கலிங்கப் போர்க் காரணத்தைக் கூறுமாறு காளி வினவ, இமயத்திலிருந்து வந்த முதுபேய் அக்காரணத்தை உரைக்கின்றது. குலோத்துங்கன் சோழ நாட்டை ஆண்ட பொழுது ஒரு நாள் பாலாற்றங் கரைக்குப் பரிவேட்டையாடச் செல்லுகின்றான், வேட்டை