பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளர விடுக

17

இளமைப் பருவத்தில் எவ்வகையான உணவு கொடுக்கப்படுகிறதோ அதைப் பொறுத்துத்தான் அநேகமாகப் பிற்காலத்தில் குழந்தை திடகாத்திரமாகவோ அல்லது பலஹீனமாகவோ ஆகின்றது. ஆதலினலே இவ்விஷயத்தில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பது நன்கு தெரிகிறது. உடல் வளர்ச்சிக்கு வேண்டிய பலவகையான சத்துப் பொருள்களும் கலந்த ஆகாரம் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கவேண்டும். எதிர்கால மனித சமூகத்தின் பெயரால் அதற்கு இந்த உரிமை இருக்கின்றது.

குழந்தைப் பருவத்திலே பால் மிக இன்றியமையாத உணவு. அதைப் போன்று உடல் வளர்ச்சிக்கான பல வகைச் சத்துக்களையும் கொண்ட தனி ஆகாரம் வேறொன்றுமில்லை. தாய்ப்பாலில் சத்துப் பொருள்கள் எல்லாம் இருப்பதுடன் குழந்தைக்கு நோய் வராமல் தடுக்கும் சக்தியும் ஒரளவிற்கு இருக்கின்றது. அதனால்தான் குழந்தைக்கு ஆறு மாதமாகும் வரை தாய்ப்பாலுக்குச் சமானமான உணவு வேறில்லை என்று கூறப்படுகிறது. ஆறு மாதத்திற்குமேல் பசும்பாலையும், மற்ற லேசான உணவுகளையும் சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். ஆனால் ஒன்பது மாதம் வரையிலும் தாய்ப்பால் ஒரு அளவிற்காவது கொடுப்பது அவசியம். அதற்குமேல் வேண்டுவதில்லை.

குழந்தை வளர வளரக் காய் கறிகள் பழங்கள் அதன் உணவில் சேரவேண்டும். ஆரஞ்சு, தக்காளி முதலிய பழங்களில் நல்ல உணவுச் சத்திருக்கின்றது. அம்மாதிரி ஏற்ற உணவுப் பொருள்களே நாம் ஆராய்ந்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். ஆரஞ்சு போன்ற பழங்கள் விலை அதிகமாக இருப்பதால் அவற்றிற்குப் பதிலாகத் தக்காளி போன்ற மலிவானவற்றை நாம் தெரிந்து உபயோகிக்கலாம். உடல் அதன் பூரண வளர்ச்சியடையாமற் போவதற்கும், எலும்பு உறுதி பெறாமலிருப்பதற்கும், பற்களின்

கு-2