பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறும் நாகரிகமும்

17


எகிப்திய நைல் ஆற்றங்கரையிலும், மெசபட்டோமியாவின் (இராக்) யூப்ரடீசு, டைக்ரீசு என்னும் ஈராற்றங்கரைகளிலும் (மெசபட்டோமியா என்பதற்கு, இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட இடம் என்பது பொருள்), இந்தியத் துணைக் கண்டத்தின் சிந்து ஆற்றங்கரை வெளியிலும் மாபெரும் வரலாற்றுப் புகழ்படைத்த நாகரிகங்கள் தோன்றியிருந்தமை உலகறிந்த உண்மையன்றோ? உலகின் பெரு நகரங்கள் பல ஆற்றங்கரைகளில் அமைந்திருப்பதும் ஈண்டு எண்ணத்தக்கது.

பிரிட்டிசுப் பேரரசின் முதல் பெரிய நகரும் தலைநகருமாகிய இலண்டன் நகரம், ‘தேம்சு’ (Thames) என்னும் ஆற்றின் கரையில்தானே உள்ளது! அதே பேரரசின் இரண்டாவது பெரிய நகரமாயிருந்ததும், பிரிட்டிழ்சு இந்தியாவின் முதல் தலைநகராய்த் திகழ்ந்ததும், இப்போது இந்தியப் பேரரசின் முதல் பெரிய நகருமாய் விளங்குவதுமாகிய கல்கத்தா நகரம், ‘ஃஊக்ளி’ (Hooghly) என்னும் ஆற்றின் கரையில்தானே அமைந்துள்ளது! ஆற்றல் அனைத்தும் படைத்துள்ள அமெரிக்கப் பேரரசின் முதல் தலைநகராயிருந்ததும் முதல் பெரிய நகராயிருப்பதுமாகிய நியூயார்க் நகரம் ‘பாசேயிக்’ (Passaic) என்னும் ஆற்றின் கரையில்தானே உள்ளது! இவை மட்டுமா? ‘சாங்காய்’ (சைனா), ‘ராட்டர் டாம்’ (ஃஆலந்து), ‘ஃஆம்பர்கு’ (செர்மனி), ‘நியூ ஆர்லியன்சு’ (லுய்சியானா), ‘போனசு அயர்சு’ (அர்சென்டினா) முதலிய பெரு நகரங்கள் பலவும் ஆற்றங்கரைகளில்தானே அமைந்து திகழ்கின்றன!

சோழர்களின் தலைநகராய்த் திகழ்ந்த உறையூரும் புகாரும் காவிரியாற்றங் கரையிலும், பாண்டியரின் தலைநகராய் விளங்கிய மதுரை வைகையாற்றங் கரையிலும் அமைந்திருப்பதும் ஈண்டு ஒப்பிட்டு எண்ணற்பாலது.

மேற்கூறிய கல்கத்தா, இலண்டன், நியூயார்க் முதலிய உலகப் புகழ்பெற்ற மாபெரு நகரங்கள் ஆற்றங்கரைகளில் அமைந் திருக்கும் ஒன்றினோடு அவற்றின் பெருமை நின்று விடவில்லை. அவை, மிகப் பெரிய ஆற்றங்கரைத் துறைமுகங்களும் உடையவை. இந்தியா பிற நாடுகளுடன் புரியும் வாணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு, ஆற்றங்கரையில் அமைந்துள்ள கல்கத்தா துறைமுகத்தின் வாயிலாகத்தான் நடக்கிறதாம். இலண்டன், நியூயார்க் முதலிய துறைமுகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

கெ.2.