பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறும் நாகரிகமும்

21


இயற்கையான ஆற்றுப் பாதை மற்ற தரைப் பகுதிகளைப் போல் இல்லாமல், ஒழுங்காகவும் தூய்மையாகவும் உதவியாகவும் இருந்ததால், நன் மக்கள் புரியும் ஒழுங்கான - தூய்மையான - உதவியான அறச் செயல்களையும் ‘ஆறு’ என்னும் பெயராலேயே மக்கள் அழைத்தனர். நதி, நல்வழி, அறச்செயல் முதலியவை, ‘ஆறு’ என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடப்படுவதிலுள்ள உண்மை இதுவாகத்தான் இருக்கக் கூடும்.

மக்கள் மட்டுமா? இலக்கியப் புலவர்கள் எல்லாரும், நதியின் பெயராகிய ‘ஆறு’ என்னும் அழகு தமிழ்ச் சொல்லால் நல்வழியினையும் நல்லறத்தினையும் குறிப்பிடலாயினர். திருவள்ளுவப் பெருந்தகையார்,

‘அறத்து ஆறு இதுவென வேண்டா’ 37
‘ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை’ 43
‘அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்’ 46
‘ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா’ 48
‘அறிவறிந்து ஆற்றின் அடங்கப்பெறின்’ 123
‘அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து’ 130
‘ஒழுக்கு ஆறாக் கொள்க ஒருவன்’ 161
‘அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான்’ 176
நல் ஆறு எனினும் கொளல் தீது’ 222
‘நல் ஆற்றான் நாடி அருளாள்க’ 242
‘நல் ஆறு எனப்படுவது யாதெனின்’ 324
‘தான் வேண்டும் ஆற்றான் வரும்’ 367
‘பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு’ 465
‘ஆற்றின் வருந்தா வருத்தம்’ 468
‘ஆற்றின் அளவறிந்து ஈக’ 477
‘ஆகுஆறு அளவு இட்டிதாயினும் கேடில்லை
போகுஆறு அகலாக் கடை’
487
‘ஆற்றின் நிலை தளர்ந்தற்றே’ 716
‘ஆற்றின் அளவறிந்து கற்க’ 725
‘அழிவினவை நீக்கி ஆறு உய்த்து’ 787
‘நன்றெய்தி வாழ்வதோர் ஆறு’ 932
‘நெடிது உய்க்கும் ஆறு’ 943

என்றெல்லாம் எடுத்தாண்டிருப்பது காண்க. உலகப் பேரிலக்கிய மாகிய திருக்குறளிலிருந்து சான்று காட்டினாலே போதும் என்றாலும், பெரும்புலவர் கம்பர், ஓரிடத்தில் ஒரே பாட்டில் ஒரே அடியில் நதி, நல்லறவழி என்னும் பொருள்களில் ஆறு என்னும் சொல்லை எடுத்தாண்டு விளையாடியிருப்பதை இங்கே குறிப்பிடாமல் விடமுடியவில்லை.