பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. ஆறுகளின் தோற்றமும் நீளமும்


மலைப்பகுதியில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் உருகுவதாலும், கீழிருந்து ஊற்று நீர் மேலெழுவதாலும், பெருமழை பெய்வதாலும் ஆங்காங்கே ஆறுகள் தோற்றம் எடுத்து, சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் சிறியனவும் பெரியனவுமாகிக் கடலை நோக்கி ஓடுகின்றன.

பெரும்பாலும், ஆங்காங்கே பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து ஆறுகளின் அகலமும் நீளமும் அமையும். அடுத்தபடியாக, தம்மொடு வந்து கலக்கும் அருவிகள், கால்வாய்கள், ஓடைகள், துணையாறுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும் உருவத்தையும் பொறுத்தும் ஆறுகளின் அகல நீளங்கள் அமைவதுண்டு.

ஓரிடத்திலிருந்து கடலை நோக்கிச் செல்லச் செல்ல தரை சரிவாயிருக்கும். அதனாலேயே கடலை நோக்கி ஆறுகள் ஓடுகின்றன. ‘பள்ளத்தைக் கண்ட வெள்ளம் போல....’ என்பது பழமொழியன்றோ? எனவே, கடலுக்கு அண்மையில் தோன்றும் ஆறுகள் நீளத்தில் குறைவாயிருப்பதும், கடலுக்கு மேலே வெகு தொலைவில் தோன்றும் ஆறுகள் நீளமாயிருப்பதும் இயல்பு ஐக்கிய அமெரிக்காவில் ஓடும் ‘மிசிசிப்பி’ என்னும் ஆறு [1] 4240) கல் நீளம் உள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆறு இதுதான். இந்தியாவில் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் பொருநை என அழைக்கப்படும் தாமிரவருணி ஆறு 75 கல் நீளமே உடையது. இவ்விரண்டு ஆறுகளின் நீளத்திலும் இவ்வளவு வேறுபாடு இருப்பதற்குக் காரணம் என்ன?

மிசிசிப்பி ஆறு அமெரிக்காவின் வடமேற்கில் ராக்கி மலைப் பகுதியிலிருந்து தோன்றி, தென் கிழக்கில் மெக்சிகோ வளைகுடாவில் வந்து விழுகிறது. அது தோன்றும் இடத்திற்கும் முடியும் இடத்திற்கும் இடையே உள்ள பகுதி மிகமிக நீளமானது. அவ்விடைப் பகுதியிலே ஐக்கிய அமெரிக்காவின் பல நாடுகள் உள்ளன. எனவே, மிசிசிப்பி ஆறு அனுமார் வால்போல் நீண்டு கொண்டே போகிறது.


  1. 1 கல் என்பதை 1.6 சிலோ மீட்டர் எனக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.