பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கெடிலக்கரை நாகரிகம்


கருடன் பாறையின் கீழ்பால் உள்ள சுனை

இந்தப் படமும் சுனையின் கிழக்கே இருந்தபடி எடுத்தாகும். சுனை கருடன் பாறையின் கீழ்பால் இருக்கிறது. இந்தச் சுனை மிகவும் சிறியது ஏறக்குறைய 4 அடி நீளமும் 2 அடி அகலமும் 3 அடி ஆழமும் கொண்டது; தென்புறத்திலிருந்து வடபுறம் வரவரக் குறுகிக் குவிந்துள்ளது. சுனைநீர் முழுவதும் தெரியாதபடி மேலே செடி கொடி - புதர் குவிந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம். வறட்சி மிக்க நாளிலும் சுனையில் நீர் இருந்து கொண்டேயிருக்கும் என அங்குள்ளவர் கூறுகின்றனர். மழை நாளில் சுனையிலிருந்து ஊற்றுப்பெருக்கு வெளியேறிக் கொண்டிருக்குமாம். இந்தச் சுனைப் படம், கோடை நாளாகிய சித்திரைத் திங்களில் எடுத்தது.

இதில் நீர் வெளியேற்றம் தெரியவில்லை. மழை நாளில் நீர் வெளியேற்றம் தெரிந்து கோடை நாளில் தெரியாவிடினும், எந்த நாளிலுமே சுனையிலிருந்து தண்ணீர் தரைக்குக் கீழே உள் ஊற்றாகச் சரிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சுனைதான் கெடிலத்தின் தோற்றம் (மூலம்) ஆகும். சுனையிருக்கும் பகுதி தெய்வத் தன்மை உடையதாகப் போற்றி மதிக்கப்படுகிறது. கருடன் அலகால் கீறி உண்டாக்கிய சுனை என்று சொல்லப்படுவதிலும் ஏதோ தெய்வக் கற்பனை அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.