பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

பொம்மைகளின் ஆட்டங்களையெல்லாம் ஆடிக் காண்பித்துக் கொண்டிருந்தது.

பொம்மைக்கூத்தைப்பற்றிப் பேசுவதிலும், ஜின்கா ஆடுவதைக் கண்டு களிப்பதிலும் இரண்டு நாள்கள் இன்பமாகக் கழிந்தன.

மூன்றாம் நாள் காலையிலே வடிவேல் அன்றையச் செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தார். சென்னைப் பொருட்காட்சி சாலைக்கு அருகிலிருக்கும் கலைக்கூடத்திலிருந்து வெண்கலச் சிலையொன்று இரவிலே களவு போய் விட்டதாம். திருடன் எப்படி உள்ளே நுழைந்தான், எப்படிக் களவாடினான் என்று ஒரு விவரமும் தெரிந்துகொள்ள முடிய வில்லையாம். அது போலீஸ் இலாகாவிற்கே பெரிய திகைப்பை உண்டாக்கிவிட்டது என்று கொட்டை எழுத்தில் காணப்பட்டது.

சில மாதங்களாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலே கோயில்களிலிருந்தும் கலைக்கூடங்களிலிருந்தும் இவ்வாறு சிலைகள் திருட்டுப் போய்க்கொண்டிருந்தன. இந்தச் சிலைகளை எப்படியோ அமெரிக்கா முதலிய வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்று, அங்கு நல்ல விலைக்கு யாரோ விற்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்திருந்தது.

இந்தியாவின் கலைப்பொருள்களுக்கு உலகத்திலுள்ள எந்த நாட்டிலும் மதிப்புண்டு. அமெரிக்கர்கள் ஏராளமான பொருள் கொடுத்து நமது நாட்டுப் பழங்காலச் சிற்பங்களையும் சிலைகளையும் செப்புப் பதுமைகளையும் வாங்க ஆவலோடிருக்கிறார்கள். சென்னைக் கலைக்கூடத்தில் இப்பொழுது களவு போன சிலையோ, உலகப்புகழ் பெற்ற நடராஜர் சிலையாகும். உலகிலேயே அதற்கு இணையான சிலை இல்லையென்றும் கூறுவார்கள். அதற்கு விலையே மதிக்க முடியாது. அது இப்பொழுது எப்படியோ மாயமாக மறைந்துபோய்விட்டது. போலீஸ் நாய்களாலும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிகத் திறமையாக இந்தத் திருட்டு நடந்திருக்கிறது. இப்படித் திருடக்கூடியவன் கொல்லிமலைக் குள்ளன் ஒருவனே என்று பொதுவாக அதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால், அவன் எங்கிருக்கிறான், எப்படி அவனைக் கண்டுபிடிப்பது, ஆளைக் கண்டுபிடித்தாலும் அவன்தான் திருடன் என்று எப்படி