பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

மாலையில் சாப்பிடுவதற்காகவும், பரிசலில் தங்களோடு எடுத்துச் செல்வதற்காகவும் போதுமான தேங்காய்களைத் தயார் செய்து கொண்டான். "கண்ணகி, இரண்டு மூன்று நாள்களுக்கு இந்தத் தேங்காயே போதுமா?" என்று அவன் தன் தங்கையைப் பார்த்துக் கேட்டான்.

“எங்களுக்கென்ன தாழிவயிறா?" என்று நகைத்தான் சுந்தரம்.

"இரண்டு மூன்று நாள்களுக்கு இந்தத் தேங்காயைத் தவிர வேறு உணவே கிடைக்காமல் போய்விடலாம். அதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும்" என்று யோசனையோடு தங்கமணி கூறினான்.

சுந்தரத்திற்கும் கண்ணகிக்கும் அவன் கூறுவது முற்றிலும் விளங்கவில்லை. அதனால் மௌனமாக இருந்தார்கள். ஜின்காமட்டும் தாழிவயிறனால் மட்டை உரிக்கப்பட்ட தேங்காய்களை ஓரிடத்தில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தது. அதற்குத் தங்கமணியின் யோசனைகள் புரிந்துவிட்டனவோ என்னவோ?

"வாடா சுந்தரம், தாழிவயிறன் இப்போது நம்மிடம் பிரியமாக இருப்பான். அவனைக்கொண்டு ஓரளவுக்கு நாம் பரிசல் தள்ளக் கற்றுக்கொள்ளலாம்" என்று கூறிக்கொண்டே தங்கமணி தாழிவயிறனை நோக்கி நடந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே தாழிவயிறன் அவர்களுக்குப் பரிசலில் ஏறித் துடுப்புப் போட்டு அதைச் செலுத்தக் கற்றுக்கொடுக்க இணங்கினான். தின்பதற்குத் தேங்காய் கிடைத்துவிட்டதல்லவா? தங்கமணியும் சுந்தரமும் ஆர்வத்தோடு துடுப்புப் போட்டுப் பழகலானார்கள். ஆனால், அதிக ஆழமான இடத்திற்கு அவர்களால் பரிசலைச் செலுத்த முடியவில்லை. தாழிவயிறன் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கினாலும் அந்தக் காட்டை விட்டுப் பரிசல் அதிக தூரம் செல்லாதவாறு கவனித்துக்கொண்டான், தங்கமணியும் சுந்தரமும் துடுப்புப் போடுவதை ஓரளவுதான் கற்றுக்கொள்ள முடிந்தது. சிலமணி நேரங்களில் அந்த வித்தையைக் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்குப் பல நாள்கள் பழக வேண்டியிருக்கும். இருந்தாலும், ஓரளவாவது கற்றுக்கொண்டால் உபயோகமாக இருக்கும் என்றுதான் தங்கமணி எண்ணியிருந்தான்.