பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தேங்காயை வயிறு புடைக்கத் தின்றதாலும், இரண்டு மூன்று மணி நேரம் பரிசல் தள்ளக் கற்றுக் கொடுத்ததாலும் தாழிவயிறன் பொழுது சாய்ந்ததும் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டான்.

இதைத்தான் தங்கமணி எதிர்பார்த்திருந்தான். தாழிவயிறன் குறட்டை போடத் தொடங்கியதும் அவன் தேங்காய்களைப் பரிசலில் எடுத்து வைத்தான். உடனே சுந்தரமும் கண்ணகியும் ஜின்காவும் அதே வேலையில் ஈடுபட்டார்கள். தேங்காய்களை உடைப்பதற்கு உதவியாக ஒரு கல்லையும் பரிசலில் வைத்துக்கொண்டார்கள். தங்கமணி தான் எழுதிய கற்றாழைக் கடிதத்தை ஜின்காவின் அடிவயிற்றில் ஒன்றும், முதுகில் ஒன்றுமாக வைத்து, கற்றாழை நாரையே கிழித்து நன்றாகக் கட்டினான். ஜின்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. “ஜின்கா, பரிசலில் ஏறு. அப்புறம் நான் சொல்லுகிறேன்” என்று தங்கமணி அதன் காதில் மெதுவாகக் கூறிவிட்டுச் சுந்தரத்திற்கும் கண்ணகிக்கும் சமிக்கை செய்தான். அனைவரும் பரிசலில் ஏறிக்கொண்டனர். மரத்தோடு பரிசலைக் கட்டி வைத்திருந்த நீண்ட கயிற்றை அவிழ்த்துவிட்டு, அதனையும் சுருணையாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு தங்கமணி பரிசலில் தாவி ஏறினான். பரிசல் ஆற்று வெள்ளத்தோடே கரை ஓரமாக