பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தோன்றுகிறது" என்று தங்கமணி தனது கருத்தை வெளியிட்டான்.

"எப்படியும் நாம் தப்பிவிட்டால் அந்தக் குள்ளனைப் பிடிக்க வகை செய்துவிடலாம். நெட்டைக்குள்ளனைப் பிடித்தே தீருவோம்" என்று சுந்தரம் உற்சாகத்தோடு கூறினான்.

“அவன் எதற்குக் குள்ளன் என்று பெயர் வைத்துக் கொண்டானோ?” என்று கேட்டாள் கண்ணகி.

"அதுவும் உலகத்தை ஏமாற்றத்தான். இவன் சாதாரணப் பேர்வழி அல்ல."

"இல்லாவிட்டால் துப்பறியும் சாம்பு இருக்கின்ற வீட்டிலேயே பழக வருவானா?" --இது சுந்தரத்தின் பேச்சு.

"நம் வீடு கலைப்பொருட்காட்சி சாலைக்கு அருகிலே இருக்கிறதல்லவா! அதை முன்பே தெரிந்திருக்கிறான். நம் வீட்டில் மேல்மாடி காலியாயிருப்பதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அப்பாவிடம் அவன் கேட்டதை நீங்கள் யாரும் கவனிக்கவில்லை. அருகில் இருந்துகொண்டே தன் திருட்டை நடத்த முயற்சி செய்திருக்கிறான். அதற்காகவே நம்முடன் வலிய வந்து பழகியிருக்கிறான்" என்று தங்கமணி விளக்கம் கூறிக்கொண்டே துடுப்பைப் போட்டான்.

பரிசல் கரை ஓரமாகவே ஆற்று வேகத்தோடு போய்க் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ 'தடதட' என்று தண்ணீர் வேகமாக விழுவது போலச் சத்தம் கேட்கலாயிற்று. நேரம் ஆக ஆக அது அதிகமாகக் கேட்டது. “நீர்வீழ்ச்சி ஏதாவது இருந்தால்...” என்று நடுங்கிக்கொண்டே கண்ணகி கேட்டாள்.

இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால், தங்கமணியும் சுந்தரமும் தைரியத்தை இழக்காமல் மாறிமாறித் துடுப்பு வலித்து, பரிசலைக் கரையின் ஓரமாகவே செலுத்த முயன்று கொண்டிருந்தனர். பேரிரைச்சல் அதிகப்பட்டுக்கொண்டேயிருந்தது.