பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

"போடா ரங்கப்பா! எல்லாம் அந்தக் குரங்கு பண்ணின வேலை" என்றான் தாழிவயிறன்.

"குரங்கு என்ன பண்ணிச்சாம்?" என்று உறுமினான் ரங்கப்பன்.

"அந்தப் பசங்க ஒரு குரங்கை வைச்சிருந்தானுங்க. அது தேங்காயைப் பறிச்சுப் பறிச்சுப் போட்டுக்கிட்டேயிருந்தது. நான் உடைச்சு உடைச்சுத் தின்னுக்கிட்டேயிருந்தேன். அப்படியே தூக்கம் வந்திட்டுது.”

“சரி சரி. துடுப்பை வேகமாகப் போடு. எப்படியும் அவங்களைக் கண்டுபிடிச்சு எசமாங்கிட்டே நல்ல பேரு வாங்கணும், இல்லாவிட்டால் அவர் கோபத்தைத் தாங்க முடியாது” என்றான் ரங்கப்பன்.

"அதோ ஒரு பரிசல் தெரியுது. அதன் பக்கமா தள்ளுங்கடா வேகமா" என்றான் மற்றொருவனான சொக்கன். மூன்று பேரும் பரிசலை வேகமாகச் செலுத்தினர். முன்னால் சென்ற பரிசலை விரைந்து நெருங்கிப் பிடித்தனர்.

"அட பசங்களா ! ஏமாத்திட்டுப் போகவா பாத்தீங்க?" என்று கூறிக்கொண்டே தாழிவயிறன் முன்னால் சென்ற பரிசலை எட்டிப் பிடித்தான். அதிலிருந்த மூன்று போலீஸ் வீரர்கள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

"யாரடா நீங்கள்? பிடியுங்கள் இவர்களை!” என்று அதட்டினான் ஒரு போலீஸ் வீரன், உடனே போலீஸ் வீரர்கள் தமது திறமையைக் காட்டலாயினர்.

"சாமி, நாங்க மீன் பிடிக்க வந்தவங்க, எங்களை விட்டு விடுங்க, சாமி" என்று கெஞ்சினான் தாழிவயிறன்.

"மீன் பிடிக்கவா வந்தீர்கள்? வலையெல்லாம் எங்கே? தூண்டிலைக்கூடக் காணோம்!"

தாழிவயிறனுக்குச் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. அவன் ஏதோ குளறிப் பேசலானான். "பசங்களா என்று பினாத்தினாயே, அந்தப் பசங்களைத் தேடியா வந்தீர்கள் ? சொல் உண்மையை” என்று அதட்டினான் ஒரு போலீஸ் வீரன்.

"இல்லை சாமி, அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க” என்று தாழிவயிறன் இழுத்து இழுத்துப் பேசலானான். ரங்கப்பனும்