பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சங்ககாலத் தமிழ் மக்கள்

‘வேள்’ எனவும்,‘அரசு’ எனவும் சிறப்பெய்திய படைத்தலைவர்கள், தங்கள்பாற் பயிற்சி பெற்ற போர் வீரர்களுடன் போருக்குரிய இலக்குகளாகிய மலைப்பக்கங்களில் தங்கி, அந்நிலப் பகுதிகளைக் காவல் புரிந்தார்கள். பிற நாட்டார் தமிழகத்தின்மேற்படையெடுத்து நுழையாக படி அவர்களைத் தடுத்துப் பொருதழித்தற்குரிய படை வீரர், இம்மலைப் பகுதிகளில் வேந்தர்களின் ஆணையால் தங்கியிருந்தனர். பாரியின் முன்னோர் பறம்பு மலையையும், பேகனுடைய முன்னோர் பொதினி மலையையும், நள்ளியின் முன்னோர் தோட்டி மலையையும், ஆய் அண்டிரன் குடியினர் பொதிய மலையையும், காரியின் முன்னோர் முள்ளூர் மலையையும், ஓரியின் முன்னோர் கொல்லி மலையையும், அதியமான் குடியினர் குதிரை மலையையும், நன்னன் முன்னோர் நவிர மலையையும் தமக்குரிய தலைமை இடங்களாகக்கொண்டு படையொடு தங்கினமை உய்த்துணர்தற்கு உரியதாம்.

வேந்தரால் நன்கு மதிக்கப்பெற்ற இப்படைத்தலைவர்கள், வேந்தரது ஆணையால் தாங்கள் தங்கிய நிலப்பகுதிகளின் வருவாயைப் பெற்றுத் தங்களுக்குரிய சிறு நிலப்பகுதிகளை ஆளும் குறு கிலமன்னர்களாய் அமைந்து, மூவேந்தர் ஆணையின்கீழ் அடங்கி வாழ்ந்தார்கள். தமிழ் வேந்தர்க்குப் போர்க்காலங்களில் படைத்துணையாய் நின்று உற்றுழியுதவுவதே இக்குறுநிலமன்னர்களின் கடமையாகும். பெருநில வேந்தராகிய சேர சோழ பாண்டியர்களும், அவர்க்குப் படைத்துனே செய்யும் கடமை மேற்கொண்ட இக்குறுநிலமன்னர்களும் ஒற்றுமை உடையவர்களாய் நின்று தமிழகத்தைக் காவல் புரிந்து வந்தமையால், தமிழர் அரசியல் பிற நாட்டாரால் சிதைக்கப்படாது உரிமையோடு வளர்வதாயிற்று.