பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சங்ககாலத் தமிழ் மக்கள்

மக்கள் தங்கள் உள்ளத்து நடுவு நிலைமையுடன் தங்களுக்குரிய தொழில்களைப் பெருக்கித் திருந்திய வாழ்வு நடத்தற்குரிய நல்லறிவு வழங்கும் அறிவான் நிறைந்த பெரியோர் ‘அறிவர்’ எனப் போற்றப் பெறுவர். இவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் தொழில்களிற்றளராது உழைத்து வந்தமையால், தமிழர் வாழ்வு நாகரிக முறையில் நலம் பெற்று வளர்வதாயிற்று.

மக்கள் எல்லாரும் தங்களுடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு தொழில் செய்து வாழ்தற்குரிய முறையில் ஆட்சி முறை நிகழ்தல் வேண்டுமென்பது தமிழறிஞர் உட்கோளாகும். ‘ஒரு தொழிலுமின்றிப் பிறரிடம் கையேந்திப் பிச்சையேற்றுண்பதே ஒரு சிலருடைய தலையெழுத்தாகக் கருதும்படி ஒரு நாட்டின் அரசு முறை அமையுமானால், அம்முறையற்ற செயலை வகுத்தவனாகிய அரசியற்றலைவன் அழிந்தொழிவானாக! [1]’ என வையும் அறிவாற்றல் அக்காலத் தமிழ்ப் புலவர்பால் நிலைபெற்றிருந்தது. தொழிற்றிறமே மக்களது உயிராற்றலாகும். ஒரு தொழிலும் செய்யாத சோம்பர், உயிரற்ற பிணம் போல இழித்துரைக்கப்பட்டனர்.

பயிர்த்தொழிலும், நெசவு தச்சு முதலிய பிற கைத் தொழில்களும், வாணிகமும் ஆகிய இவையே பொருள் வருவாய்க்குரிய தொழில்களாம். உடல் உழைப்பினால் மேற்கொள்ளுதற்குரிய இத்தொழில்களில் ஈடுபட்டுப் பொருள் செய்ய விரும்பாது, உள்ளத்துணர்வால் மேற் கொள்ளுதற்குரிய அறிவுத் துறையில் ஈடுபட்டுழைப்பவர் புலவர், பாணர், பொருநர், விறலியர் முதலியோராவர்.


  1. ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்.’
    -குறள்