கொண்டே படிப்பதற்காகப் பயன்படுத்திய நூல்களில் மாக்கியவெல்லியின் அரசன் நூல் முக்கியமானது.
மாகிஸ் வேனர் என்ற பேராசிரியர் இந்த இரண்டு நூல்களுக்கும் தாம் எழுதியுள்ள அருமையான முன்னுரையில், லெனினும், ஸ்டாலினும் கூட மாக்கியவெல்லியைத் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெர்மானிய சரித்திரப் பேராசிரியர்களான ராங்கே, மெய்னிக்கே ஆகியோரும், இங்கிலாந்தின் வரலாற்றுத் துறை வல்லுனரான ஆக்டன் பிரபு அவர்களும் மாக்கியவெல்லி தான் புதிய அரசியல் விஞ்ஞானத்திற்கு அடிகோலிய முதல்வன் என்று ஒருமித்துப் பாராட்டுகிறார்கள்.
மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள "வின்ட்சரின் உல்லாச மனைவிகள்" (Merry wives of Windsor) என்ற நாடகத்தில் ஒரு பாத்திரம் “நான் சூது மனம் படைத்தவனா? நான் ஒரு மாக்கியவெல்லியா?” என்று கேட்பதாக ஒரு வரி வருகிறது. ஷேக்ஸ்பியர் இந்த இடத்தில் மாக்கியவெல்லியைச் சூது மனம் படைத்தவனுக்கு உவமையாகக் கூறுகிறார். இதிலிருந்து அவர் காலத்தில் மாக்கியவெல்லியைப் பற்றித் தவறான கருத்து பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.
இத்தாலியில் முசோலினியின் நேர் எதிரியாக விளங்கியவர் கவுண்ட் கார்லோஸ்போர்கா (Count Carlo Sforza) அவர் மாக்கியவெல்லியின் நூல்களைச் சுருக்கி "மாக்கியவெல்லியின் உயிருள்ள சிந்தனைகள்" (The Living Thoughts of Mackiavelli) என்ற பெயரில் ஒரு சிறு நூலை வெளியிட்டுள்ளார். இவ்வாறு, எதிரெதிர்ப் பாசறையில் உள்ளவர்களாலும் மாக்கியவெல்லி போற்றப்படுகிறான்.
இத்தாலியின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மாஜினி தன் கொள்கையைப் பொறுத்தமட்டில் மாக்கியவெல்லியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டானே தவிர, மற்ற கருத்துக்களைத் தீவிரமாக எதிர்த்தான்.
கார்ல்மார்க்ஸ் தம்முடைய மூலாதாரக் கருத்துக்களை மாக்கியவெல்லியிடமிருந்தே பெற்றுக் கொண்டார்.
மார்லோ, ஹாப்ஸ், ஸ்பினோகா போன்ற மேதைகளிடையே மாக்கியவெல்லியின் கருத்துக்கள் செல்வாக்குடன் நடமாடியிருக்கின்றன.