27
வேரூன்றியவையாகவோ இருக்கின்றன. புதிதாக ஏற்படுத்தப்பட்ட அந்த முடியாட்சிகள் முற்றிலும் புதியனவாகவோ அல்லது, முந்திய பரம்பரைக்கு அடுத்த கிளைப் பரம்பரையைச் சேர்ந்தனவாகவோ உள்ளன. இப்படிப் புதிதாக ஏற்படுத்தப்பட்ட முடியாட்சிகள் ஏற்கெனவே ஓர் அரசனால் ஆளப்பட்டவையாகவோ, சுதந்திர அரசுகளாகவோ இருந்து, அரசனால் தானே நேரடியாகவோ, மற்றவர்களைக் கொண்டோ படையெடுத்துத் தன்னாட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவோ, அதிர்ஷ்டவசமாகவோ அல்லது அவனுடைய விசேஷத் திறமையின் காரணமாகவோ அவனடியில் வந்து வீழ்ந்ததாகவோ இருக்கும்.
பரம்பரை முடியாட்சி :
குடியரசுகளைப் பற்றி ஏற்கெனவே வேறொரு புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்து விட்டபடியால் இப்பொழுது அவற்றைப் பற்றிக் கூறப் போவதில்லை. இப்பொழுது முடியாட்சிகளைப் பற்றியும் அதன் வெவ்வேறு வகைகளைப் பற்றியும் அவை எவ்வாறு ஆளப்படலாம், நடத்தப்படலாம், என்பது பற்றியும் மட்டுமே ஆராயப் போகிறேன். புதிதாக ஏற்படுத்தப்பட்ட முடியாட்சிகளைக் காட்டிலும் ஒரே ராஜ குடும்பத்தினரால் பரம்பரையாக ஓர் ராஜ்யத்தை ஆண்டு வருவதில் உள்ள கஷ்டம் மிகவும் குறைவுதான். புழைய வழக்கங்களை மீறாமல் இருப்பதும், முன் கூட்டியே அறிய முடியாத சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி நடந்து கொள்வதும், ஓர் அரசன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போதுமான காரியங்களாகும். ஒரு வேளை தவிர்க்கப்பட வேண்டிய மிகுதியான நெருக்கடி ஒன்றினால் அவன் தன் நிலையிலிருந்து தாழ்த்தப்பட்டாலும், புதிதாக அவன் இடத்தில் இருக்கக் கூடியவனுடைய மிகச் சிறிய தவறுதலைக் கூடப் பயன்படுத்திக்கொண்டு அவன் திரும்பவும் தன் நிலைக்கு வந்து விடலாம்.
புதிய முடியாட்சிகள் !
புதிய முடியாட்சியில் தான் உண்மையான சங்கடங்கள் ஏற்படுகின்றன. முதலாவதாக அது முற்றிலும் புதிய ஆட்சியாக இல்லாமல் ஒன்றாகச் சேர்ந்து கலந்திருக்கிற பல ராஜ்யங்களில் ஒன்றாக இருந்தால் எல்லாப் புதிய அரசுகளிலும் ஏற்படக் கூடிய இயற்கையான கஷ்டங்களில்