பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

எதிர்காலத்தில் நடக்கக் கூடிய குழப்படிகளையும் முன்னதாகவே அறிந்து, அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அவை வளர்ந்துவிட இடம் கொடுத்து விட்டால் பிறகு பரிகாரம் தேடுவது அரிது.

இராஜ்யங்களை ஆக்கிரமித்துக் கொள்ள விரும்புவது இயற்கையானது; சாதாரணமான விஷயமும் கூட! வெற்றிகரமாக இதைச் செய்யக் கூடியவர்கள் செய்து முடித்தால் அவர்கள் இகழப்படுவதில்லை; எப்போதும் புகழப்படுவதே வழக்கம்! ஆனால், ஆக்கிரமிக்க முடியாத நிலையில், எப்படியானாலும் சரியென்று ஆக்கிரமிக்க விரும்புபவர்கள் தாம் தவறு செய்கிறார்கள்; பெரும் பழிக்கும் ஆளாகிறார்கள்!

இருவகை ஆட்சிகள் :

சரித்திரத்தில் காணப்படுகின்ற அரசாங்கங்கள் இரண்டுவிதமாக ஆளப்பட்டிருக்கின்றன. ஒன்று, அரசனும் அவனுடைய வேலையாட்களும் சேர்ந்து அரசாளுவது; மற்றொன்று, அரசனும் பிரபுக்களும் சேர்ந்து ஆளுவது. முதல் வகையில் அரசனுக்கடங்கிய மந்திரி பிரதானிகள் இருந்து அரசனுக்காக நாட்டையாளுவதில் ஒத்தாசை புரிகிறார்கள். அரசனுக்கே சகல அதிகாரங்களும் அந்த ஆட்சியில் உண்டு. இரண்டாவது வகையில், பிரபுக்கள் தங்கள் குலப்பெருமையையும், இரத்தச் சிறப்பையும் கொண்டு ஆளுகிறார்கள். அவர்களுக்கென்று தனிக்குடி படைகள் இருக்கின்றன. அவை அவர்களுக்கே-அவர்களுக்கு மட்டுமே அடங்குவன.

அரசனும் வேலைக்காரர்களும் சேர்ந்து ஆளுவதற்கு உதாரணமாகத் துருக்க நாட்டாட்சியையும், அரசனும் பிரபுக்களும் சேர்ந்து ஆளுவதற்கு உதாரணமாகப் பிரெஞ்சு நாட்டாட்சியையும் எடுத்துக் காட்டலாம். துருக்கர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவது கஷ்டம். ஆனால் ஒரு முறை கைப்பற்றி விட்டால் அதை அடக்கியாள்வது மிக எளிது. பிரெஞ்சு ஆட்சியைக் கைப்பற்றுவது எளிது, ஆனால், கைப்பற்றிய பின் அரசாள்வது மிகவும் தொல்லை பிடித்த காரியம்.

துருக்க ஆட்சியில் அதிகாரிகள் எல்லோரும் அடிமைகள். எல்லோரும் அரசனைச் சார்ந்து இருப்பவர்கள். ஆகவே