பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

ஆயுதந்தரித்த மனிதனுக்கும் ஆயுதமற்ற மனிதனுக்கும் இடையிலே ஒப்புமை காட்டக்கூடிய விஷயம் ஒன்றுமேயில்லை. ஆயுதபாணியான ஒருவன் ஆயுதமற்ற ஒருவனுக்கு மனதாரக் கீழ்ப்படிந்து நடப்பான் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. ஆயுதமற்ற ஒருவன் ஆயுதபாணிகள் இடையில் பத்திரமாக இருப்பான் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமேயில்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட பல குறைபாடுகளோடு. இராணுவ அறிவும் இல்லாத அரசன் தன் படை வீரர்களால் மதிக்கப்படவும் மாட்டான்; அவர்களிடம் அவன் நம்பிக்கை வைத்திருக்கவும் முடியாது!

ஆகவே, எந்த அரசனும் என்றும் போர்ப் பழக்கத்தைத் தவிர வேறு எதிலும் நாட்டங் கொள்ளவே கூடாது. சமாதான காலத்திலும் கூட அவன் தன் போர்ப்பயிற்சியை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். செயல் மூலமாகவும், படிப்பின் மூலமாகவும் இதை அதிகப்படுத்திக் கொள்ளலாம். செயல் மூலமாகத் தன் பயிற்சியை நடத்துவதற்கு அவன் தன் படை வீரர்களைத் தினமும் பயிற்சிபெறச் செய்தும், ஒழுங்கு முறையுடன் இருக்கச் செய்தும் வருவதோடு அடிக்கடி வேட்டைக்குச் சென்று தன் உடலைக் சுடின உழைப்பிலே பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். வேட்டைக்குச் செல்வதால் அவன் நாட்டையும், நாட்டில் உள்ள காடு மலைகளின் அமைப்பையும் பற்றிய அறிவைப் பெறுகிறான். இவ்வாறு ஒரு நாட்டுப் புறத்தின் அமைப்பைப்பற்றிய இயற்கையறிவையறிந்த ஒருவன் புதிதாகக் காணக்கூடிய வேறொரு நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றி எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றிய அறிவு நிரம்பிய அரசன்தான் எதிரியை எவ்வாறு கண்டு பிடிப்பது. எவ்வாறு களம் அமைப்பது, எவ்வாறு படை நடத்துவது, எவ்வாறு போர்த்திட்டம் வகுப்பது, எவ்வாறு கோட்டை பிடிப்பது என்பன போன்ற விஷயங்களை நன்றாகத் தெரிந்து செயலாற்றுவான்.

ஓர் அரசன் தன் மனப்பயிற்சியை வளர்த்துக் கொள்வதற்கு சரித்திரமும் படிக்க வேண்டும். முற்காலத்துப் பெரும் வீரர்களின் செயல்களைப் பற்றியும், அவர்கள் போர்களில் நடந்து கொண்ட முறைகளைப் பற்றியும் அவர்களின் வெற்றி தோல்விகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து வெற்றி வீரர்களின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.