பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தமிழ் நாட்டுப் பல பகுதிகளிலிருந்து மக்கள் பூம்புகார்க்கு வந்து விழாவில் கலந்து கொண்டனர். பல சமய வாதிகளும் புகார் நகரத்திற் கூடிச் சமயப் பிரசாரம் செய்தனர். நகரம் முழுவதும் கண் கொள்ளாக் காட்சியைத் தந்தது. விழாவின் கடை நாளில் நகரமாந்தர் அனைவரும் தத்தம் பரிவாரங்களுடன் கடலில் நீராடிச் சென்றனர்.

கடற்கரையில் பாட்டு

கோவலனும் மாதவியுடன் கடலாடச் சென்றான். இருவரும் நீராடித் தனி இடம் ஒன்றில் தங்கினர். அப்பொழுது கோவலன் யாழை எடுத்து இன்பப் பாடல் ஒன்றைப் பாடினான். அப்பாடல் காவிரியாற்றைப் பற்றியப்பாடல். காவிரி என்ற உன்னை மணந்த சோழன் கங்கை என்னும் வேறொருத்தியை மணந்தாலும், நீ அதற்காக அவனைக் கோபிப்பதில்லை. உனது கற்பின் சிறப்பே உன் மன அமைதிக்குக் காரணமாகும்” என்னும் பொருள் கொண்டது.அப்பாடல். மாதவி, ஊழ்வினை வசத்தால், இதனைத் தவறாகக் கருதினாள்; கோவலன் வேறொரு பெண்மீது அன்பு, கொண்டான் என்று எண்ணினாள். அதனால் அவள் யாழை வாங்கித் தான் ஒரு பாட்டுப் பாடினாள், காவிரி” என்னும் பெண்ணாகிய நீ சிறந்தவளாக இருப்பதற்குக் காரணம், உன் கணவனாகிய சோழனது சிறந்த ஒழுக்கமே காரணம். ஆதலின், உன் கணவனை வாழ்த்துகிறேன்.” என்னும் பொருள் கொண்டது அப்பாடல்.