பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

கோயில், (7) சந்திரன் கோயில், (8) புத்தர் கோயில், (9) அருக தேவன் (சமணர்) கோயில் என்பன. அக்கோயில்கட்கு அப்பால் அறச்சாலை களும் வேள்விச் சாலைகளும் கல்விச் சாலைகளும் அமைந்து விளங்கின. பொதுமக்கள் வந்து தங்கி யிருப்பதற்கும் அயல் ஊராரும் நாட்டாரும் வந்து தங்குவதற்கும் வசதியாகப் பல மன்றங்கள் (பொது இடங்கள்) இருந்தன. நகர மக்கள் மாலை வேளைகளில் இன்பமாகப் பொழுது போக்குவதற்காக உய்யான வனம், சம்பாபதி வனம், கவேர வனம், உவவனம என்ற மலர்ச் சோலைகள் இருந்தன.

புறநகர்

புறநகர் என்பது கடற்கரை ஓரத்தில் இருந்த நகரப் பிரிவாகும். அங்குப் பெரிய மாளிகைகள் பொலிவுற்று விளங்கின. அவற்றில் மான் கண்களைப் போன்ற சாளரங்கள் பல இருந்தன. திசை மயங்கிச் செல்லும் கப்பல்களுக்குத்திசை அறிவித்து நின்ற கலங்கரை விளக்கம் இருந்தது. பருத்தி நூல், பட்டு நூல், எலி மயிர், ஆட்டு மயிர் இவற்றால் ஆடை நெய்யும் சாலியர் தெருக்கள் இருந்தன. இரும்பு, வெண்கலம், பித்தளை, செம்பு, வெள்ளி இவற்றால் பலவகைப் பொருள்களைச் செய்யும் தொழிலாளர் தெருக்கள் இருந்தன. கட்டடம் கட்டுபவர், ஓவியம் தீட்டுபவர், சிற்ப வல்லுநர், தையற்காரர், பாய் முடைபவர், பந்தல் அலங் காரம் செய்பவர் முதலிய பலவகைத் தொழிலாளர் வாழும் வீதிகள் இருந்தன. பூ வாணிகர், இலை வாணிகர், பிட்டு வாணிகர், அப்ப வாணிகர்