பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

செம்மொழிப் புதையல்


அதுவே அச்சம். பழந்தமிழ்ப் புலவர்களைப் போலவே அவர், அச்சம் அறியாத ஆண்மையர். அவையஞ்சாமை அவருக்குக் கருவிலே வாய்ந்த திருவாகும். தாம் உண்மை என்று கொண்டதை எவரிடையிலும் வன்மையோடு நிலைநிறுத்தும் உறுதியும், தவறு என்று கண்டதை அதற்குரியார் யாராயிருப்பினும் தயை தாட்சணியமின்றி அஞ்சாமல் அழுத்தமாக மறுத்துக் கூறும் துணிவும் உடையவர் அவர் வாதிடுவாரையும், வல்வழக்காடு வாரையும் வாயடங்கச் செய்யாமல் வணங்கிப் போனதை அவர் வாழ்வில் காண முடியாது. ஆயினும் மாறுபட்டோரிடம் பகைமை பாராட்டி மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளும் இழிகுணம் அவரிடம் இடம் பெற்றதில்லை. அவர்களிடம் அன்பு காட்டி நண்பு கொண்டு பண்பாகப் பழகும் பான்மை அவரது மேன்மையாகும்.

செய்ந்நன்றி மறவாச் சீர்மை

செய்ந்நன்றி மறவாது போற்றும் சீர்மையிலும் பிள்ளையவர்கள் பண்டைப்புலவர்களோடு ஒப்பவைத்து மதிக்கத்தக்க உயர்வுடையவர். அவர்பின் எய்திய உயர் நிலைக்கு அடிகோலிய ஆசிரியப் பெருமக்களாகிய நாவலர், நாட்டார், கரந்தைக் கவியரசு ஆகியோரிடம் அவர் கொண்டிருந்த பற்றும் வைத்திருந்த மதிப்பும் அளவிடற்கரியவை. அவர்களுடைய கல்விச் சிறப்பையும் பாடம் சொல்லும் திறத்தையும் அவர் உணர்ச்சி பொங்கப் பாராட்டிப் பேசியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவரிடம் தமிழ் பயின்ற மாணாக்கர்களை ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்கு முன், தொல்காப்பியர் முதலிய புலவர் பெருமக்கட்கு வணக்கம் கூறும் பாடல்களோடு அவர் தமிழ் பயின்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துக் கூறும் பாடலையும் சேர்த்துச் சொல்லுமாறு பணித்திருந்தது அவர் அந்நிறுவனத்தினிடம் கொண்டிருந்த நன்றியறிவுக்குச் சான்றாகும். கர்ந்தைத் தமிழ்ச் சங்கம் கண்ட உமாமகேசுரம் பிள்ளையை அவர் தம் நினைவில் நிலையான இடம் தந்து. மறவாது போற்றி வந்த மாண்பை அவர் நண்பர்கள் நன்கு அறிவர்.

புலமை நலம்

பிள்ளையவர்களின் புலமை பள்ள நீர்க்கடல் போன்று அளந்தறிதற்கரிய ஆழமுடையது; விரிந்தகன்ற வானம் போன்று