பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

31


தேர்ந்து தெளிவும் திறம்பெற அவர்கட்குப் பயிற்சியளிப்பதையே சிறப்புப் பணியாகக் கருதினார். ஒரு நூலில் தேர்வுக்குரிய பகுதியை மட்டும் படித்தறியச் செய்வதோடு அமையாது, மாணவர்களை அந்நூல் முழுவதையும், அதனோடு தொடர்புடைய பிற நூல்களையும் படித்தறியுமாறு வற்புறுத்துவது அவர் வழக்கம்.

பிள்ளையவர்கள் தம்மிடம் புதியராகப் பயிலவரும் இளமாணவர்கட்குத் தம்மிடம் பயின்றுவரும் முது மாணவர்களைக் கொண்டு பாடம் சொல்ல வைப்பார். அவர்கள் பாடம் சொல்லும் பொழுது உடனிருந்து கவனித்து, தவறும் இடங்களில் திருத்துவார். புதியனவாக வெளிவரும் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்களைப் படித்து, மாறுபட்ட கருத்துக் காணும் இடங்களைக் குறித்துவரச் செய்து, அவை பற்றி விரிவாக விவாதித்து, அவற்றிற்கு மறுப்புரை எழுதி வரப்பணிப்பார். அதனைத் திருத்திப் படி எடுப்பித்து இலக்கிய இதழில் வெளியிடச் செய்வார். அவர் இவ்வறு செய்வது அவ்வாசிரியர்களிடம் அழுக்காறு அல்லது பகைமை காரணமாகவோ, அவர்கள் கருத்தை மறுத்து அவர்கட்கு இழுக்கு உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டோ அன்று; பிறர் கருத்துகளை ஆயவும் ஆய்ந்து கண்டதை விளக்கி அழுத்தமாக எழுதவும் தம் மாணவர்கட்குப் பயிற்சியளிக்கும் அருள்நோக்கமே அதற்குக் காரணம் ஆகும். இதனால் அவரிடம் பயின்ற மாணவர்கள் பலரும் தன்னம்பிக்கையையும் தன் முயற்சியும் உடையராய், எந்நூலையும் தாமே பயின்றறியும் தனித்திறம் பெற்றதோடு தாம் அறிந்ததைப் பிறர் அறியுமாறு விளக்கிச் சொல்லும் சொல்வன்மையும், விரித்து எழுதும் எழுத்தாற்றலும், துணிவும் உடன் பெற்றனர்.

நூலாசிரியர்

பிள்ளையவர்கள் இணையற்ற போதகாசிரியர் மட்டுமல்லர்; ஈடற்ற நூலாசிரியருமாவர். தம் கோள் நிறுவவும், தம் பெயர் பரப்பவும், தம் வாழ்வுக்கு வசதி பெறவும் நூலியற்றுவோர் பலர். தமிழ் மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை நிறை செய்யவும், அதன் நூல்வளம் பெருக்கவும், நூலியற்றுவோர் ஒரு சிலரே. அவ்வொரு சிலருள் பிள்ளையவர்