பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

31


அந்த மனிதனால் தாங்க முடியாமல் போய்விட்டது. அவன் ஹார்மோனியப் பெட்டியைத் தொப்பென்று கீழேப்போட்டு விட்டு, “ஆண்டவனே! அல்லாவே” என்று கூச்சலிட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்தான். ரயில் வேலி, தண்டவாளம், அதனருகிலிருந்த வாய்க்கால் முதலியவற்றை அவன் சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரே தாண்டாக தாண்டி குதித்து ஓடினான். ஆனால் நானோ இந்த மகத்தான அற்புதக் காட்சியைப் பார்த்த வண்ணம் மந்திரத்தினால் கட்டுண்டவன் போல் உட்கார்ந்திருந்தேன். குரங்காட்டி ஓடிப்போனதும் ‘மாஜி குரங்கு திரும்பி பார்த்தது. மெதுவாக என்னை நோக்கி வந்தது. இப்போது காட்டுமிராண்டி மனிதனைப் போல் காணப்பட்டது. இதற்குள்ளாக சட்டை சுக்கு சுக்காகக் கிழிந்து கீழே விழுந்து விட்டபடியால் தலையில் குல்லாவைத் தவிர வேறொன்றும் இல்லை.

அந்த வினோதப் பிராணி என்னெதிரே வந்து உற்றுப் பார்த்தது. எப்படியேனும் அதை திருப்தி செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பக்கத்தில் இருந்த வாழைப்பழத்தை சீப்புடன் எடுத்து அதனிடம் கொடுத்தேன். அந்தக் குரங்கு “அப் அப் அப்” என்றது.

“அப்படியா! சந்தோஷம்!” என்றேன்நான். உள்ளுக்குள் எனக்கிருந்த திகிலைச் சொல்லி முடியாது.

குரங்கு மனிதன் எனக்கெதிரில் புல்லில் உட்கார்ந்து கொண்டான். “கிக்-கிக்-கிக்” என்றான். “எக்-எக்-எக்” என்றான். பின்னர் என்னை நோக்கி எதோ கேட்பவன் போல் “வ்க்-வக்-வக்!” என்றான்.

என் மூளை இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. இதென்ன விந்தை! இதென்ன அற்புதம்! எப்படி நிகழ்ந்திருக்கும்? கிழவனுடைய ஜீவரசம் செய்யும் வேலையா? ஜீவரசம் ஆயுளைத்தானே வளர்க்க முடியும். ஒரு லட்சம் உயிர்களின் வடிகட்டிய சத்து. ஒரு கோடி வருஷ ஆயுள், டார்வின் கொள்கை. பரிணாம வாதம் ஓஹோஹோ விளங்கிவிட்டது! கிழவன் பைத்தியக்காரனல்ல மகாசித்த புருஷன். வெறுமே உயிரைச் சாகாமல் வைத்திருக்கு ஜீவரசம் அன்று; உயிர் வளர்ச்சிக்கு தரும் ஜீவரசம். கால்மணி நேரத்தில் ஒருலட்சம் வருஷத்தின் வளர்ச்சி! ஆஹா! என்ன அற்புதம்!

ஆனால் இந்த அற்புதத்தில் உண்மையைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியை நான் அதிக நேரம் அனுபவிப்பதிற்கில்லை. ஏனெனில் நிமிஷத்துக்கு நிமிஷம் நிலைமை மாறி மேலும் மேலும் பிரமிப்பு உண்டாக்கி வந்தது. இப்போது அந்தக் குரங்கு மனிதன் பேசுவதற்கு முயல்கிறாதென்பதை அறிந்து கொண்டேன்.

“இன் இன் இன்” என்று சொல்லிக் கொண்டே அவன் ஜீவரசம் இருந்த புட்டியைச் சுட்டிக் காட்டினான்.