பேராசிரியர் சரவண ஆறுமுக முதலியார்
பிற நாடுகளெல்லாம் அறியாமை இருளில் கிடந்து உழன்று கொண்டிருந்த பொழுது இருநில உலகின் பெருநிலப்பரப்பில் கல் தோன்றி மண் தோன்றாத, வரலாற்று ஆராய்ச்சிக்கு மிகமிக முற்பட்ட பழங்காலந்தொட்டே கல்வி, கலை, நாகரிகம், பண்பாடு முதலியவற்றில் தமிழ் மக்கள் மிக மேம்பாடெய்தியிருந்தனர் என்பது வரலாற்றறிஞர் கண்டறிந்த உண்மையாகும். அகம், புறம் என இரு கூறாக இயங்கும் தம் வாழ்க்கை முறைகளில் மிக உயர்ந்த கொள்கைகளையும், குறிக்கோள்களையும் கொண்டு விளங்கினர் தமிழ் மக்கள். அவ்விரு கூறுகளுள், முதன் முதல் வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவரை ஒருவர் களவிற்கண்டு ஒன்றுபட்ட களவியல், அதன் வழித்தாகிய கற்பியல், அதில் ஆற்றுப் படுத்தும் மணவியல், மணவாழ்க்கையின் நிலைக்களமாகிய இல்லறத்தின் நல்லறம் ஆகிய இன்னோரன்ன வாழ்க்கை முறைகளைச் சங்கத்துச் சான்றோரிலக்கியங்களிலும், அவற்றிற்கு முற்பட்டு ஒரே வழிக் காணலுறும் பாடல்களிலும்,