பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருச்சதகம் * 5


'கைதான் நெகிழவிடேன்' என்று அடிகளார் பாடுவது, அவனுடைய விரையார் கழல் உள்ளத்துள் பதிந்திருத்தலின் கையை நெகிழவிடமாட்டேன் என்ற கருத்தைக் கூறுவதாகும்.

இப்பாடல் பொய்தவிர்ந்த உள்ளத்தில் இறை உணர்வு தோன்றும்பொழுது நிகழ்கின்ற நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவதாகும். ஆழ்மனத்தில் திருவடி நிறைந்திருந்து, அதன் பயனாக உடலிலே மாறுபாடுகள் தோன்றினாலும் இந்த இறை அன்பர்கள், இந்த அனுபவம் எங்கே தம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாக, 'என்னைக் கண்டுகொள், என்னை விட்டு விடாதே' என்றெல்லாம் பேசுவார்கள்.

திருவாதவூரர் என்ற அமைச்சர், மாணிக்கவாசகராக மாறி, இறையனுபவத்தை முழுவதுமாகப் பெற்று, பின்னர் அந்த அனுபவம் நீங்கிய நிலையில் இப்பாடல்களைப் பாடுகின்றார். தாம் எதிர்பாராமல் இருக்கவும், குருநாதர் தாமே வந்து ஆட்கொண்டு தம்முடைய மனநிலையை மாற்றியதால் 'கைதான் நெகிழ விடேன்' என்கிறார். இத்தகைய உறுதிப்பாடு அவரிடம் தோன்றாத காலத்தில், தாமே வந்து ஆட்கொண்ட குருநாதர், இப்பொழுது உறுதிப்பாடு முழுவதுமாகக் கைவரப்பெற்ற நிலையில் மறைந்துவிட்டார். ஆதலால்தான், அடிகளார் இப்பொழுது குருநாதரிடம் ஒரு விண்ணப்பத்தைச் செய்கிறார். 'ஐயா! உன்னைச் சரணமடைந்து அதன் விளைவாகக் கை நெகிழவிடாமல் இருக்கின்றேன். எனவே, என்னைக் கண்டு கொள்வது உன் கடமை' என்ற கருத்தில் பேசுகின்றார்.

விரையார் கழல் என்ற சொற்கள், நாவரசர் பெருமானின் 'இன மலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடி' (திருமுறை: 6:14-1 என்ற தொடரை நினைவூட்டுகின்றன.