பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் 7



மத்த மனம்-பித்து. ஒத்தன-விரும்பியவாறு.

இந்தப் பாடலுக்கு மரபு நிலையில் நின்று பொருள் கூறியவர்களும் உண்டு. சாதாரண உலகியலில் உள்ளவர்களுக்கு அறிவும் பொறி, புலன்களும் தொழிற்படுவது போல் இறை அனுபவ முதிர்ச்சியில் திளைப்பவர்களுக்கு இந்த அறிவும், பொறி, புலன்களும் தொழிற்படுவதில்லை. உணர்வுக்குக் கட்டுப்பட்ட நிலையில் அறிவு தன் தொழிலைச் செய்யாமல் அடங்கி விடுவதாலும், 'மீதுர்ந்து இன்னது செய்கிறோம்' என்று அறியும் வரம்பைக் கடந்து உணர்வு தொழிற்படுவதாலும் இந்த நிலையை இறைப் பிரேமை (divine ecstacy) என்று சொல்லுகிறோம்.

இருபத்து நான்கு மணி நேரமும் இவர்களுடைய பொறி, புலன்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அனைத்தும் இறையனுபவத்தில் மூழ்கி இருத்தலால் கால்கள் போனபடி நடப்பதும், தமக்குத் தாமே சிரித்துக் கொள்வதும், திடீரென்று கைகொட்டி ஆர்ப்பதும், திடீரென்று அழுவதும் இப்பெருமக்களுக்கு இயல்பாகும். இறையனுபவத்தில் மூழ்காமல், அறிவின் தொழிற்பாட்டை இழந்து வாழ்பவர்களை மனநிலை திரிந்தவர் (பயித்தியம்) என்று கூறுகிறோம். மேலே கூறிய செயல்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும். இவ் இருவரிடையே வேறுபாடு காண்பது எப்படி என்ற வினாவிற்கு, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி பாரதி விடை கூறுகின்றார். புதுவையில் வாழ்ந்த குள்ளச்சாமி என்ற சித்தரை, ஊரார் அனைவரும் பயித்தியம் என்றே கூறிக் கொண்டிருந்தனர்; பாரதியும் அதனையே நம்பியிருந்தார். ஒரு நாள் குள்ளச்சாமியின் கண்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு, பாரதிக்குக் கிடைத்தது. அக்கண்களின் கூரிய பார்வையைக் கண்ட பாரதி, உண்மையைப் புரிந்து கொண்டார்.